மின் நூல்

Monday, January 29, 2018

படித்ததில் பகிர நினைத்தவை

புதிய பகுதி  ஆரம்பம்           

                                       1
விஷயம் நல்லதோ,  கெட்டதோ ஒரு அலசல் செய்யத் தோன்றுகிறது.

ரீ கலெக்ஷன் ஆஃப் தாட்ஸ் மனுஷனுடைய பெரிய சொத்து.  நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணத்  தன்னை பக்குவப் படுத்திக்கறது மனுஷனுக்கு மட்டுமே உண்டு.  மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ காமமோ வந்திடறதில்லே;  வாலை மிதிச்ச உடனே பாஞ்சிடறதில்லே.  கோபப்பட்டா என்னாகும்ன்னு நம்மாலே யோசிக்க முடியும்.  தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி.

முடியாதவன்  மிருகம்.  யோசனை பண்ணினதின் விளைவு, ஏன் என்ற கேள்வி  கேட்டதின் பதில் இன்றைய வாழ்க்கை வளர்ச்சி.  அன்றையிலிருந்து இன்று வரைக்கும் மிருகத்திற்கு பசி தான் பிரச்னை.  நமக்கு ஆயிரம்.  வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு.  இடைஞ்சலைத் தாண்டறது தான் வளர்ச்சி.                                                                                                     

நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு  முன்னாடி வச்சா என்ன  பண்ணும்?.. நக்கிப் பாத்துட்டு தின்ன முடியலேன்னு  போயிடும்.  மனுஷன் நின்னா, அடடா,  நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான்.  தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது.

நாய்க்குட்டிக்கோ இருப்பு  மட்டும் தான் முக்கியம்.   மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு.  தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேமிப்பும் அல்லது ஏதாவது ஒண்ணு வந்திடறது.  இதற்குண்டான  பிரச்னையும் வளர்ந்திடறது.  படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை. படர்ந்த இடம் மரமோ,  முள்ளுச் செடியோ,  மலையோ, தரையோ அந்த சூழ்நிலை பிரச்னை.

மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?..  தன்னைப் பிறரிடமிருந்து உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம்.   இந்தப் பகிர்தலின் பொருட்டே உறவும், உறவுக்கான சடங்கும்.  பகிர்ந்து கொள்ள மறுப்பவன்  பயமுள்ளவன்.

'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா'   என்கிற  த்வனியிலேயே ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.

                                                                                                                  --  பாலா

                                     2

ள்ளங்கையில் ஓர் அற்புதம்!

ஒருவனின் கைரேகையைப் போலவே மற்றொருவனின் கைரேகை இருக்காது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் சர் பிரான்ஸிஸ் கால்டன் என்பவர்.  ஆண்டு:  1892.                                                 
                                                                                                           
'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்பதை முதன்  முதலாக உலகத்துக்கு நிரூபித்துக் காட்டினார்.  கைரேகையைக் கொண்டே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறைஒயை சர் எட்வர்ட் ஹென்றி என்பார் பிரபலப்படுத்தினார்.

அப்பா மாதிரியே மூக்கு இருக்கலாம்  அம்மா மாதிரியே கண் இருக்கலாம். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் கூட ஒரே மாதிரி  இருக்கலாம்; ஆனால் கைரேகை மட்டும் இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணாக்கான மக்களுக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசித்தால் நல்லது.


                                    3
காதுகளின் மீது  மச்சம் இருப்பது மிகவும் நன்மையைத் தரும். இரண்டு  காதுகளின்  மீதும் மச்சம் இருந்தால், அவன் மிக்க செல்வ குடும்பத்தில் பிறந்தவன்.  தன் முயற்சியாலும் மென்மேலும் செல்வத்தை வளர்த்து மிகவும் பாக்கியசாலி என பாராட்டப் பெறுவான்.


செவிகளின்  பின்புறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கைக்குத்  தேவையான  சகல வசதிகளும் பெற்றவனாகவும், பித்ரார்ஜிதம், ஸ்வார்ஜிதம், இரண்டும் நிறைந்தவனாகவும்,  தனக்கு ஈடான  ரூபமும் , குணமும், செல்வமும் நிரம்பப் பெற்ற மனைவியை மணப்பவனாகவும் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் புகழுடன்  வாழ்வான்.

வலது செவி நுனியில் மச்சம் இருப்பவர்களுக்கு ஜலகண்டம் ஏற்படுமென்று சாஸ்திரம் கூறுகிறது.  மற்றும் இயற்கையாகவே இவர்களுக்குத் தண்ணீர் உள்ள இடங்களில் பயம் ஏற்படும்.

இடது செவி நுனியில் மச்சம் இருந்தால்---  இது வேண்டாம்.

வலது  செவியின் அடியில் மச்சம் இருந்தால் , அவனுக்கு வாழ்க்கைக்குரிய வசதிகள் இருந்தும் வீணாகப் பலவிடங்களில் கடன் வாங்கி கடன்காரர்களின் தொந்தரவுகளால் மனம் கலங்குவான்.

இடது செவியின் அடியில் மச்சம் இருந்தால்,  எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மையால் வருந்துவான்.

==  உடல் மச்சங்களும் உங்கள் வாழ்க்கை ரகசியங்களும் என்ற நூலிலிருந்து.
ஆசிரியர்:  கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார். வெளியீடு:  லிஃப்கோ.




                                    4     

எது எது எங்கும் இருந்தாலும் காணக்  கிடைக்காததோ

எது அறியப்படாவிட்டாலும் நம்மை அதைப்பற்றியே பேச வைக்கிறதோ அது கடவுள்.

எது உணர்வில் மட்டும் வசிக்கிறதோ எது உணர்வு மயமானதோ அது கடவுள்.

மனிதனை நேசிக்க கற்றுக் கொடுப்பது,  இந்த வாழ்க்கையை மேலானதாக மாற்றக் கற்றுக் கொடுப்பது கடவுள்.

இலக்கியமும் கடவுள் வடிவந்தான்.  மனிதனையே கடவுளாகப் பார்க்கச் செய்வது தான் இலக்கியம்.

                                                                                       
                                                                                                                                                 --- ஜெயகாந்தன்



                                       5

ஷியாம் பெனகல் நேதாஜி பற்றிப் படம் எடுத்தார்.  வடநாடு ஞான ராஜசேகரன் அவர்.  மிகப் பொருத்தமான தலைப்பு--  'BOSE FORGOTTEN HERO'.

இது பற்றிய 'ஹிந்து' விமரிசனம் வரிக்கு வரி நெஞ்சில் சுட்டது நினைவுக்கு வருகிறது.  நேதாஜியை இந்நாடு எவ்வளவுக்கு மறந்து விட்டது என்பதை அந்த விமர்சகர் அழகான வார்த்தைகளில் அங்கலாய்த்திருந்தார்.

போஸ் மட்டும் தானா?..'UNSUNG HEROS' என்கிற 'ரெடிமேட்' தலைப்பை இதற்காகவே தயாரித்திருந்தார்கள்.  காய்ந்த பனை மட்டைகள் எழுப்புகிற சலசலப்பு இங்கே ரொம்ப அதிகம்.  அந்தப் பெருங்கூச்சலில் இனிமை மிகு வீணை நாதங்கள் அமுங்கிப் போகின்றன.                               

நாட்டுக்காக சர்வ பரித் தியாகம் செய்து தங்களின் எல்லாவற்றையும் இழ்ந்தவர்கள் அடியோடு மறக்கப்பட்டாயிற்று.  இப்போது 'மேலே' இருக்கிற பலர், தகுதித் தராசிலும் 'மேலே' இருக்கிற தட்டுகள் தான்.

இளைய தலைமுறைக்கு நம் சுதந்திரப் போராட்ட வரலாறு உரிய முறையில் சொல்லப்படவே இல்லை.  சுதந்திரம் கிடைத்த கையோடு, பொறுப்பில் இருந்தவர்கள் இதைச் செய்யத் தவறி விட்டார்கள். இரண்டு மூன்று தலைமுறைகள் திசை திரும்பி விட்டதற்கு இதுவே முதற் காரணம்.  இந்தப் பெரும் குறை இனியாவது சரி செய்யப்பட வேண்டும்.  ஏற்கனவே சிலர் களத்தில் இருப்பது உண்மை தான்.  போதாது. இது ஒரு இயக்கமாகவே நடத்தப் பட வேண்டும்.  மூத்த--இளைய தலைமுறைகள் இணைந்து முனைய வேண்டும்.
                                                                   
                                                                                                               --  பாஹே
                                                                       


                                                                     6

னது முதலாவது ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது.  என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.  அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த கற்பனை தான்  'இன்று  புதிதாய்ப்  பிறந்தோம்' என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல் பரிசினைப் பெற்றது.  1967-ல் மலேசியா தின ஏடான தமிழ் நேசன் இதழில் ஓராண்டு வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.  எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பரின் அண்ணன் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம். அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் என் 'ஜமுனா' நாவலில் வடிவம் பெற்றன.

எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றிய பொழுது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் பதறிய அனுபவம் 'கன்னியராகி நிலவினிலாடி'   என்ற நாவலாக வெளிப்பட்டது.  அங்கு  சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் 'மணல்வெளி மான்கள்' நாவலில் கதாபாத்திரமானார்.                                           
                                               
                   
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு கதை உண்டு.  சொல்லிக் கொண்டே போகக் கூடிய கதை.  புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே என்று எனக்கு நான் போதித்துக் கொண்ட கதை புகழ் பொருளற்றுப் போகிறது.  போட்டி பொறாமையை வளர்த்து பொல்லாங்கி விடுகிறது. நான் கண்ட அனுபவம் இது.

பணம் அர்த்தமிழக்கிறது.  அர்த்தங்களை மேன்மையான மதிப்பீடுகளை அழிக்கிறது.  மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்ந்து மாய்த்து விடுகிறது.  இதுவும் கண்ணார நான் கண்ட அனுபவம்.  இதையெல்லாம் வெளியிட்டுக் கொண்டு போனால் பைத்தியக்காரன் என்றோ  போலிப் பாசாங்குக்காரன் என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது.  நல்லது.  அப்படிச் சொல்வதில் ஒரு நஷ்டமுமில்லை.  எல்லாக் காலங்களிலும் சில பைத்தியக்காரர்கள் இருந்து கொண்டே தான் வருகிறார்கள்.  ஒரு பாதிப்பும் இல்லை.  காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைக்க வேண்டியது தான் எனக்கு விதிக்கப்பட்ட பணி.  இந்த நெடிய அனுப்வங்களுக்குப் பின் எனக்கு விளங்கியது இது தான்.

வேதனைகளை வெளியேற்று.

பரவசங்களைப் பகிர்ந்து கொள்.

வெளிச்சத்தைச் சுட்டிக் காட்டு.

வேலையைப் பார்த்துக் கொண்டு போ.

-- இவை தான் எனக்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாலைத் திருப்பங்கள். ஆத்ம கெளரவம் என்ற பாதையை நோக்கி நடந்தது என் பயணம்.

ஆத்ம கெளரவம் என்ற சொல் மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.


                                                                                                            ----  வையவன்.



படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, January 24, 2018

றெக்கை கட்டிப் பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்!...

ம்ம தமிழ் பத்திரிகைகளின் இன்றைய நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம்.   சினிமாவையும்,  அரசியலையும் சுவாசமாகக் கொண்டவை.

இருந்தாலும் எதைச் செய்தாலும் சுவாரஸ்யமாகச் செய்வதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தமிழ்ப்  பத்திரிகைக்காரர்கள்.

இன்று காலையிலிருந்து மாலை வரை சில பத்திரிகைகளைப் படிப்பதிலேயே பொழுது போயிற்று.  படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இனிமேல் உங்கள் பாடு, அந்தப் பத்திரிகைகள் பாடு.

1.    'பின் காலனியத்துக்கு எதிரான குரல்' என்று தன் கவிதைகளை அடையாளப்படுத்திக்  கொள்ளும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள், மூலதனத்தின் வன்முறைகளைப் பேசுபவை;  காட்சிப் படிமங்களின் வழியே நம்மைப்  பல்வேறு உணர்வு நிலைகளுக்கு ஆட்படுத்துபவை. பூமிப்பந்தின் மீது விரிக்கப்பட்ட வணிகக் கம்பளமாய் உலகமயமாக்கல்,  ஆன்மிக வியாபார மத நிறுவனங்கள், மாண்பற்ற நுகர்வுக் கலாச்சாரம், பெருகி விட்ட அதீத தொழில் நுட்பச் சாகனங்களுக்கிடையேயான நெருக்கடி மிக்க அன்றாடம்,  பாலியல் ஒடுக்கு முறை.. என மனித வாழ்வின் அபத்தங்களை, அரசியலுடனும் அழகியலுடனும் பதிவு செய்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு,  இந்த ஆண்டின் முக்கியமான ஆக்கம்.

....  பக்கத்து வீட்டுப்  பெரியவர் "எங்க குடும்பப் பத்திரிகை இது.  இப்போலாம் என்ன எழுதறாங்கனே, படிச்சுத் தெரிஞ்சிக்க முடியலே, தம்பி..  உங்களுக்கு புரிஞ்சா,  சொல்லுங்களேன்" என்று  ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் சாதனைகள் பல நிகழ்த்திய   அந்தப் பத்திரிகையின் நடு பக்கம் ஒன்றில் எழுதியிருந்த மேற்கண்ட வாசகங்களை என்னிடம் காட்டினார்.  

படித்துப்  பார்த்து விட்டு, "ஒரு கவிதைத் தொகுப்புக்கு மதிப்பீடு மாதிரி எழுதியிருக்கிறது" என்றேன்.

"என்ன   மதிப்பீடு, தம்பி?..  வாசிச்சா புரியணுமிலே?.. அப்படி என்ன தான்     எழுதியிருக்காங்கன்னு சொல்லுங்களேன்.." என்று அவர் கேட்ட பொழுது தான் வாசித்ததைப் புரிந்து கொள்கிற சிரமம் எனக்குப் புரிந்தது.  "எனக்கும் சரியாப் புரிலே.." என்று அசட்டுச் சிரிப்புடன் கழண்டு கொண்டேன்.

உங்களுக்குப் புரிந்ததை விட்டுத் தள்ளுங்கள்..  எந்தப் பத்திரிகையாக இது இருக்கும் என்றாவது யூகிக்க முடிகிறதா?..


2.     குமுதம் பத்திரிகை 'ரஜினி கட்சிக்குப்  பெயர் சொல்லுங்கள்!  ஒரு லட்சம் பரிசு வெல்லுங்கள்!!'  என்று ஒரு போட்டியே வைத்திருக்கிறது.

ரஜினி மக்கள் கட்சி,  அகில இந்திய மக்கள் கட்சி,  தமிழக மக்கள் கட்சி
என்று அந்த பத்திரிகையே சில மாதிரிப் பெயர்களைக்  கொடுத்து உதவியிருக்கிறது..  எப்படியும் கட்சியின் பெயரிலேயே 'மக்கள்' என்ற வார்த்தை வருமாறு  பெயர் இருக்கும் என்று ஆருடமும் சொல்லியிருக்கிறது.


3.  ரஜினியை பற்றி எழுதிட்டு கமலைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் எப்படி?...  

ஆனந்த விகடனில் 'என்னுள் மையம் கொண்ட புயல்'ன்னு கமல்ஹாசன் ஒரு தொடர் எழுதுகிறார்.  

"அரசியல் அறிவிப்புக்கு என்னென்ன மாதிரியான எதிர்வினைகள் வருகின்றன?" என்கிறார்கள் என்று  குறிப்பிட்டு விட்டு அவர் மகள் ஸ்ருதி கேட்டவை என்று அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைச் சொல்கிறார்:

"அப்ப, அப்பா என்ன ஆவார்?" என்றாராம்  ஸ்ருதி..

"அவர் அப்படியேதாம்மா இருப்பார்.  கொஞ்சம் நரை கூடிட்டா அப்பா இல்லேனு சொல்லிடுவியா?" என்றேன்.   "என்னை உனக்கு  அப்பாவாகத்  தெரியுமா, உலக நாயகனாகத் தெரியுமா?  அதே அப்பாவாகத்தான் எப்பவுமே இருப்பேன்.." என்றதைத் தொடர்ந்து....

தமிழன்னா வேட்டி சட்டையுடன் தான் இருப்பான் என்பது கணியன்  பூங்குன்றானார் காலத்திலிருந்தே சொல்லிச் சொல்லிப் பழகிப்  போய் விட்டது போலும்.

வேட்டி சட்டையுடன் கமலின் போஸ்கள் மூன்று.  இளமை ஊஞ்சலாடுகிறது.

படங்கள்: ஜி.வெங்கட்ராம் என்று போட்டிருந்தது மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து போனது.

'குமுதம்'  லைஃப்  இணைப்பில்  'நம்ம ஊரு  டைட்டானிக் பயங்கரம்!' என்ற பரபர தொடர்  ஒன்று வருகிறது.

மலையாளத்தில் பி.ஜே. ஆப்ரஹாம்  எந்தக் காலத்திலோ எழுதியதை தமிழில் எந்தக் காலத்திலோ ஹேமா ஆனந்த தீர்த்தன் மொழி மாற்றம் செய்தது.

இதே குமுதத்தில்  இதே தொடர்  'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்று  எந்தக் காலத்திலோ வெளிவந்தது தான்.
                                                                                                                               
இப்ப எழுதறவங்களுக்கு   வாசகர்களைக்  கவர்கிற மாதிரி             சுவாரஸ்யமா எதையும் சொல்லத் தெரியாது போனது தான் ஏற்கனவே வெளிவந்த சரக்கையெல்லாம் இப்படி மடை மாற்றி மீண்டும் பிரசுரிக்கறதுக்குக்  காரணமோ?..

போகட்டும்.   நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டாம்.

 தமிழ் எழுத்துலகின் பொற்கால   'பொக்கிஷங்கள்'  இப்படியாவது  வாசிக்கக் கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட முடிகிறதே...  அது போதும்.

சின்ன வயசில் நிறைய தீப்பெட்டி லேபிள்களை சேகரித்திருக்கிறேன்.
அந்த வயதில் அதெல்லாம் ஒரு  பொழுது போக்கு.  லேபிள் சேமிப்புக்காக தீப்பெட்டிக்குக் கூட அலைய வேண்டாம்.   எங்கள் லேபிள் சேர்க்கும் ஆர்வத்தைத் தெரிந்து கொண்டோ என்னவோ  கத்தை கத்தையான வெவ்வேறு தீப்பெட்டி கம்பெனிகளின் லேபிள்களை தனியாக விற்பார்கள்.

குங்குமம் பத்திரிகையில்  தீப்பெட்டிகளை சேகரம் பண்ணும் ரோஹித் காஷ்யாப் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பொழுது எனது சின்ன வயசு அந்த ஞாபகம் தான் வந்தது.

திரு. ரோஹித்துக்கு சொந்த ஊர்  உத்திரப்பிரதேசத்து ஜான்சி கிராமமாம்.
சின்ன வயசில் ஆரம்பித்த தீப்பெட்டி சேகரிக்கும் பழக்கம் இன்றைய 40 வயசிலும் தொடர்கிறதாம்.  வெளிநாடுகளுக்கு போன போது கூட விடாமல் அந்த நாட்டு தீப்பெட்டி அட்டைகளை சேகரித்திருக்கிறார்.  கிட்டத்தட்ட 108  நாடுகளைச் சேர்ந்த 83 ஆயிரம் தீப்பெட்டிகள்  இது வரை சேர்ந்திருக்கிறதாம்.

இந்திய அளவிலே அதிக எண்ணிக்கைலே மேட்ச் பாக்ஸ் கலெக்ட் செய்திருப்பது இவர் தானாம்.  ஒரு மில்லியன் தீ.அட்டைகளைச் சேகரம் பண்ணியிருக்கும் இங்கிலாந்து நாட்டுக்காரர்  ஒருத்தர் தான் இந்த சமாச்சாரத்தில் டாப்பாம்.  அவரோட சாதனையை முறியடிக்கணும்ன்னு தன்னோட இலட்சிய கனவைச் சொல்கிறார் ரோஹித்.

லிம்கா லிம்கா என்று ஒன்றிருக்கிறதல்லவா?..  அது வேறு இவரது கனவுத்தீயை வளர்க்கிறதாம்.  அதற்குப்  பிறகு  இருக்கவே இருக்கிறது கின்னஸ் சாதனை.

விஷ் யூ பெஸ்ட் ஆஃப் லக், மிஸ்டர் ரோஹித்!


படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.


Friday, January 12, 2018

இது ஒரு தொடர்கதை

                                               அத்தியாயம்--6



பெண்டுலம் இணைத்த சுவர்க் கடியாரம் நான்கு  முறை  ஒலித்தது.

மரபீரோவைக் குடைந்ததில் நின்ற சீர் நெடுமாறனார் பற்றி உருப்படியான செய்திகள் எதுவும் தேறவில்லை.  பி.லிட்., பாடப்புத்தக பாடத்திட்டத்தில் நாயன்மார்களின் ஆக்கிரமிப்பு மேலோட்டமாகவே இருந்தது, இரண்டு மணி நேரத் தேடலுக்குப்  பிறகு தான் தெரிந்தது.  பொதுவாக  63 நாயன்மார்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களில் 50-ம் எண்ணிட்டு நின்றசீர் நெடுமாற நாயனார் குறிப்பிடப்பட்டிருந்தார். மற்றபடி அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றி மட்டும் விவரமான கட்டுரைகள் இருந்தன.

நீண்ட கொட்டாவி விட்டபடியே, "அவ்வளவு தானா?" என்றான் பாண்டியன்.  சித்திரங்கள் கூட இந்த மூன்று பேருக்கு மட்டுமே என்று வஞ்சித்திருந்தது அவனுக்கு எரிச்சலூட்டியது.  அந்த எரிச்சலுக்கு ஒரு வடிகால் வேண்டி, "நாயன்மார்கள்  சரி. ஆழ்வார்கள் விஷயம் எப்படி?" என்று தலைசாய்த்து மங்கையைக் கேட்டான்.

அவள் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, "அங்கே மூணுன்னா இங்கே கொஞ்சம் கூட.  அஞ்சு தேறும்.  எதுக்காகக் கேக்கறீங்க?.."

மையமாகப் புன்னகைத்தான் பாண்டியன். "அங்கே அப்படின்னா, இங்கே எப்படின்னு தெரிஞ்சிக்கறத்துக்காகத் தான்."

"தெரிஞ்சிக்கிட்டு என்ன ஆகப்போகுது?"

"ஒண்ணுமில்லே. ஒரு க்யூரியாசிடி. ரெண்டுக்கும் ஒரு கம்பாரிஸன் ஸ்டடின்னு வைச்சிக் கோயேன்."

"நல்ல கம்பாரிஸன்!  'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே.  ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணு  தான். தெரிஞ்சிக்கங்க..."

"ஒண்ணுதான்ங்கறது ஒருத்தர் கட்சி;  இல்லே, ரெண்டுங்கறது இன்னொருத்தர் கட்சி.."

"ஒண்ணு தான்னா அத்வைதம்;  ரெண்டுன்னா துவைதம்  இல்லியா?"
என்று ஆசைஆசையாகத் தமிழில் தத்துவம் படித்தது நினைவில் நின்று கேட்டாள் மங்கை.

"ஓ.. நீ அங்கே போறியா?.." என்று மலர்ந்து சிரித்தான் பாண்டியன்.  "அப்படித் தான் வைச்சிக்கோயேன்/.."

"அப்படிப் பாத்தா ரெண்டையும் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம்ன்னு சேர்த்திகிட்ட மூணாவதும் ஒண்ணு இருக்கில்லியா?.."

"கரெக்ட்! அதனால் தான் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்தா அந்தக் கலவைக் கல்வி அற்புதமா இருக்கும்ன்னு தோண்றது.. வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தா மாதிரி."

"அதுசரி.. ஆனா அப்படிச் செஞ்சா இந்த மூணும் அது அதோட ஐடண்ட்டிடியை இழந்திடுமில்லியா?"

"ஐடண்ட்டியா முக்கியம்?.."

"ஆமாம்.." என்று தீர்மானமாகச் சொன்னாள் மங்கை.

ந்தப் பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியை மூன்று உதவி  ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டார்கள்.  வைத்தீஸ்வரன், தேவதாஸ், கிருஷ்ணமூர்த்தி. கேள்வி-பதில் பகுதிக்கு அவர்கள்  பெயர்களின்  முதல் எழுத்தை மட்டும் எடுத்து ஒன்று சேர்த்து வைதேகி என்பவர் பதில் சொல்பவராகக்  குறிப்பிட்டிருந் தார்கள்.  வைதேகி என்கிற பெண் தான் இந்தப்  பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாராக்கும் என்று  மோகன் கூட எண்ணியிருந் தான்.  இந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு  தான் 'வைதேகி' பெயரின் கூட்டுச் சேர்க்கை ரகசியம் இவனுக்கும் தெரிய வந்தது.

பொதுவாக பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதியைக் கவனித்துக் கொள்பவர்கள் சகல மட்டத்திலும் விஷய ஞானம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.  இல்லை, அவசியத்தின்  அடிப்படையில் எல்லாத்தையும் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  அதுவும் இந்தப் பத்திரிகையில் அந்த 'எல்லாத்தை'யையும் ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் என்று நான்காக  வகைப்படுத்தியிரு ந்தார்கள். இந்த நான்கு தலைப்புகளில் 'எல்லாத்தை'யும் அடக்கிவிடலாமென்ற கணிப்பு ஆசிரியருக்கு இருந்தது.

ஆன்மிகத்தை வைத்தீஸ்வரனும், இலக்கியத்தை கிருஷ்ணமூர்த்தியும் கவனித்துக் கொண்டார்கள்.  அரசியலும் சினிமாவும் ஒன்றுக்குள்  ஒன்று புதைந்ததாக ஆகிப்போனதினால் தனி ஒருவராக தேவதாஸே இரண்டையும் கவனித்துக் கொண்டார்.  சினிமா ஸ்டூடியோவிற்கெல்லாம் போய் செய்தி திரட்டி வருவதற்காக தீபக் என்ற சுறுசுறுப்பான இளைஞன் தேவதாஸுக்கு வலது கையாக இருந்தான்.

நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி ஒரு நெடும்பார்வையில் மேலதிகத் தகவல்கள் திரட்டாவிட்டால் கதை மேற்கொண்டு நகராது போலிருந்தது மோகனுக்கு.

ஆசிரியர், பத்திரிகையின் நூலகப்  பிரிவு பற்றி சொல்லியிருந்தது  நினைவுக்கு வந்தது.  அங்கும் அரைமணி நேரத்திற்கு மேலாக மேலோட்டமாக மேய்ந்ததில் சலிப்பே மிஞ்சியது.  ஆனால் சேக்கிழாரின்  பெரிய புராணம் கிடைத்தது, இதை விட்டால் வேறு வழியில்லை என்பது போலத் தோன்றியது.  செய்யுள் வடிவில் இருந்ததினால், குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று மோகன் நினைத்தான்..  அங்கிருந்த ஒரு ரிஜிஸ்தரில் நூல் பற்றிய விவரங்களைக்  குறிப்பிட்டு கையெழுத்திட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக பத்திரப்படுத்திக் கொண்டான்.

மோகன் தன் இருக்கைக்கு வந்த பொழுது பொறுப்பாசிரியர் ஜி ஏதோ சிந்தனையில் இருந்தார்.  இவனைப்  பார்த்ததும் நிகழ் உலகத்திற்கு வந்தவர் போல தலையசைத்து, "மோகன், உன்னோட  'இது ஒரு தொடர்கதை..' ரொம்ப நன்னாப் போறதுப்பா... ஆசிரியர் கூட போன அத்தியாயத்தின் சில இடங்களை எடுத்துச் சொல்லி பாராட்டினார்.." என்றார்.

'ஆசிரியர் தன்னை கூப்பிட்டு அருகில் அமர்த்திக்  கொண்டு பாராட்டக்கூடாதா' என்று மோகனுக்குத் தோன்றியது.  'வேலைக்குச் சேர்ந்து இவ்வளவு சீக்கிரத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என்று அடுத்த நொடியே மனசில் நினைப்பு படர்ந்தது.  இருந்தாலும் சென்ற அத்தியாயத்தின் எந்த பகுதியை அவர் பாராட்டினார் என்று தெரிந்து  கொள்ளும் ஆவலில், "எந்த இடங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார், சார்?" என்று கேட்டு அவர் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான்.

"ரெண்டு மூணு எடத்லே சப்-டெக்ஸ்ட்டா எழுதியிருப்பியே.. அதெல்லாம் எடுத்துச் சொல்லி பாராட்டினார்" என்றார்.

"குறிப்பா ஒரு இடத்தைச் சொல்லுங்களேன், சார்.." என்றான்.

"அதான்.. அந்த பிறவிப் பெருங்கடல் நீந்தல் சமாச்சாரம்.  ஒரு வரிதான். அந்த ஒருவரிக்குள்ளேயே இன்னொரு வரி ஓடுது பார்.  மங்கை சொன்னது--பாண்டியன் சொன்னது ரெண்டும் வேறு வேறு அர்த்தம் கொடுக்கற மாதிரி நன்னா சொல்லிருக்கேன்னு சொன்னார்" என்றார்.

இவன் மெளனமாக அவர் சொல்வதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "ஆசிரியர் இன்னொன்றும் சொன்னார்" என்றார் ஜி.

"என்ன சார்?" என்று ஆவலோடு கேட்டான் இவன்.

"ஆரம்பத்திலே நாலஞ்சு அத்தியாயம் வந்தால் போதும்ன்னு நெனைச்சேன்.  கதை நன்னாப் போறதினாலே, வாசகர்களோட ரெஸ்பான்சும் இருக்கறதாலே இன்னும் கொஞ்சம் நீட்டலாமோன்னு தோண்றது.. இதை மோகன் கிட்டே சொல்லி முடியுமான்னு ஆசிரியர் கேக்கச் சொன்னார்" என்றார் ஜி.

மோகன் முகம் பிரகாசமடைந்தது. "இப்பத்தான் கதைக்கு பேஸ் போட்டிருக்கேன்.  அதுக்குள்ளே எப்படி முடிக்கறதுன்னு எனக்கும் யோசனையாய் தான் இருந்தது.. ஆசிரியரும் தொடர்ந்து எழுத அபிப்ராயப் படறதாலே, தொடர்ந்து எழுதலாம் சார்..  இன்னும் கொஞ்சம் ஆழமா ஒரு சோதனை முயற்சி மாதிரி இந்தக் கதையை எழுதலாம்ன்னு  தோண்றது. கதையைத் தொடர்ந்து எழுதறதுக்கு சில இடங்களுக்குப் பயணபட்டு சில சரித்திர குறிப்புகளைச் சேகரிக்கணும்.  பொதுவா சில செய்திகள் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவையா  இருக்கு.  அதையெல்லாம் திரட்டணும்.."

"அப்படியா, மோகன்?.. ஆசிரியர் இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்.  அதுக்கான எல்லா வசதிகளையும் செஞ்சு தருவார்.  என்னன்ன வேணும்ன்னு சொன்னேன்னா, அதுக்கான எல்லா ஏற்பாடையும்  செஞ்சுடலாம்" என்றார்.

"சொல்றேன், சார்.. இப்போதைக்கு நின்ற சீர் நெடுமாறனைப் பத்தி டீடெயில்டா சில தகவல்கள் வேணும்."

"நம்ம பத்திரிகை ஆபீஸ்லேயே பெரிய லைப்ரரி இருக்கே.. அங்கே பாத்தியா?.."

"ஓ.எஸ். பாத்திட்டேன். போதாது.  இன்னும் கொஞ்சம் விவரமா கிடைச்சா தேவலை." என்று சொன்னவன் லேசா சிரித்தான். "எனக்கு இது விஷயமா ஒண்ணு  தோணித்து, சார்...  சொன்னா சிரிக்க மாட்டீங்களே?"

"என்னப்பா இப்படி கண்டிஷன்  போட்டா எப்படி?.. வாழ்க்கைலே சிரிக்கறத்துக்கே இப்பலாம் சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேங்குது.  கிடைக்கற சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கூடாதுன்னா எப்படிப்பா?" என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ஜி கேட்டார்.

"சரி.. கண்டிஷனைத் தளர்த்திட்டேன்.. ஆனா, ஒண்ணு.  சிரிப்பு வந்தாத்தான்  சிரிக்கணும்.  நான் சொன்னேங்கறத்துக்காக சும்மாவானும் சிரிக்கக்கூடாது."

"சரி.. சொல்லு.."

"நான் என்ன நெனைச்சேன்னா, நம்ம பத்திரிகை கேள்வி-பதில் பகுதிக்கே நின்ற சீர்  நெடுமாறனைப் பத்தி கேட்டு எழுதிடலாம்ன்னு நெனைச்சேன், சார்.."

"ஹஹ்ஹஹ்ஹா.." என்று இயல்பாய் சிரித்தார் ஜி.  "குட் ஐடியா.. எழுதிக் கேப்பானேன்?.. நேர்லேயே கேட்டுட்டாப் போச்சு..  வைதேகிலே   நிச்சயம் 'தே' இல்லே. 'கி' கூட இப்போதைக்கு வேணாம். 'வை' கிட்டே கேட்டாப் போச்சு. வைத்தீஸ்வரன் விஷயகனம் உள்ள பெர்ஸன்.  எனக்கும் நி.சீ.நெ. பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆசையா இருக்கு.  வர்றையா, கேட்டுடலாம்" என்று ஜி தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தார்.

வைத்தீஸ்வரனிடம் மோகன் தான் கேட்டான். ஜி வெறும் பார்வையாளராக இருந்தார்.

தனது பட்டை கண்ணாடியை ஒரு தடவை வேஷ்டி நுனியில் துடைத்து போட்டுக் கொண்டு வைத்தீஸ்வரன் மோகனைப் பார்த்த பொழுது விஷய ஞானம் உள்ளவர் என்று அவர் கண்களே பளபளத்ததுச் சொன்னது..

"உங்களுக்கு ஒண்ணு ரெண்டு விவரம் சொன்னா பத்தாதில்லையா?..." என்று அவரே யோசனையுடன் இழுத்தார்.

"ஆமாம், வைத்தி சார்.."

"எது பத்தியும் முழுத் தகவல் வேணும்னா, நான் இங்கே தான் கேக்கறது.." என்று எழுந்திருந்தார். "சித்தே என்னோட வர்றேளா?" என்று லைப்ரரி இருக்குமிடம் திரும்பினார்.

"லைப்ரரிலே தானே?.. முழுசா அலசலே.  இருந்தாலும் ஓரளவு தேடிப் பாத்துட்டேன்.." என்று அவருடன் நகர்ந்தான் மோகன்.  லேசான புன்முறுவலுடன் அவர்களைத் தொடர்ந்தார் ஜி.

"நம்ம லைப்ரரிலே தான்.  ஆனா அதிலேயே ஒரு மகா லைப்ரரி இருக்கு பாருங்கோ.." என்று நூலகத்தின் பிரதான வாசல் தாண்டி வலதுப்பக்கம் இருந்த அறைக்குள் கூட்டிச் சென்றார்.  அங்கிருந்த மெஹா சைஸ் கணினி முன் அமர்ந்து ஸ்விட்சை அழுத்தி உயிர்ப்பித்தார்.

"ஏன் நிக்கறேள்? உக்காருங்கோ.." என்று கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு வாகாக தனக்கு இரண்டு பக்கமும் இருவரையும் அமரச் செய்தார்.

"இங்கே கூகுளாண்டவரிடம் கேட்டால், தகவலா கொட்டிடுவார்.." என்று தமிழ் உரு எழுத்துக்கு மாறி நின்ற சீர் நெடுமாறன் பற்றி கேட்டார்.

தேடிக் கண்டுபிடித்து குறித்துக் கொண்ட தகவல்கள் இன்னும் தேடச் சொன்னது.  ஒரே தகவலை பலபேர்  பங்கு போட்டுக்  கொண்ட ப்ளாட்டிங் பேப்பர் வேலையும் சலிப்பூட்டியது. "இது போதாதுன்னா 'அறுபத்து மூவர்'ன்னு தேடிப்பாக்கலாமா?" என்று தனக்குத் தானே முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்ட வைத்தீஸ்வரன்,  'அறுபத்து மூவர்' என்று தட்டச்சி அந்த வரிசையில் தேடிய பொழுது தான் புதையல் போல வேறு சில விவரங்கள் கிடைத்தன.

யதேச்சையாய் மழலைகள்.காம் என்கிற வலைத்தளத்தில் அவர் கிடைத்தார்.  புகைப்படம் போட்டு கீதா சாம்பசிவம் என்று பெயர் போட்டிருந்தது.  அறுபத்து மூவர் என்னும் தலைப்பில் நாயன்மார்களைப் பற்றி குழந்தைகளுக்கு  கதை சொல்கிற மாதிரி அழகாக கோர்வையாக எழுதியிருந்தார்.  அங்கங்கே படங்கள் வேறே. ஆனால் அவர் எழுதியிருந்த கட்டுரைகளில் நின்ற சீர் நெடுமாறனைக் கண்டு பிடிப்பதற்குள் தான் உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.

தேடிக் கண்டுபிடித்து படித்துப் பார்த்த பொழுது மோகனுக்கு நிறைவாக இருந்தாலும் "எல்லாரும் திருப்பி திருப்பி   நாலைஞ்சு பாயிண்டுகளையே சொல்றாங்க, இல்லை?" என்று பொதுவில் கேட்டான்.

"அந்த நாயனாரைப் பத்தி லோகத்திற்கு தெரிஞ்சிருக்கற தகவல்கள் அவ்வளவு தான் போலிருக்கு.." என்றார் ஜி.

"அப்படித்தான் இருக்கணும்... இருந்தாலும் வேறே எங்கையானும் இன்னும் இவர் பற்றித் தெரிஞ்சிக்க முடியுமான்னு பாக்கணும்.." என்றான் மோகன்.

"எங்கிட்டே சொல்லிட்டீங்கல்லே.. கொண்டு வந்து சேக்கறேன், பாருங்க.." என்று புது உற்சாகத்துடன் கணினியை கைவிட்டு எழுந்திருந்தார் வைத்தி.

அவர் சொன்ன தோரணை, நிச்சயம் செய்வார் போலிருந்தது மோகனுக்கு.





Friday, January 5, 2018

இது ஒரு தொடர்கதை

                                                                   அத்தியாயம்--5



"ஐயே!.. " என்றாள் மங்கை.

"மனசிலே ராஜாங்கற நெனைப்புத் தான்!" என்று முகம் தொட்டு கன்னம்  கிள்ளினாள்.  கிள்ளிய இடத்தில் வலித்தாலும் இன்னொரு  தடவை கிள்ள மாட்டாளா என்று பாண்டியனுக்கு இருந்தது. "நெஜமாலும் அப்படி இல்லை, மங்கை.." என்றான்.

"எப்படி  இல்லை?"

"ராஜாங்கற நெனைப்பு என்னிக்கும் இருந்ததில்லே..  அதுவும் அந்த ராஜா சிலைக்கு முன்னாடி நின்னப்போ,  நாம்பலாம் ராஜாங்கற நெனைப்பு எங்கேயாச்சும் வருமா?"

"வேறே என்ன நெனைப்பு வந்திச்சி?.."

"எந்த நெனைப்பும் இல்லே.  ஆனா மனசு மட்டும் என்னை விட்டுப் பிரிஞ்சி அவரோட ஒட்டிக்கிட்ட மாதிரி இருந்தது.  சிற்பி வடித்திருந்த சிலையை கண்ணைத் திறந்து   பார்த்ததுமே ஆச்சரியத்தோட இந்த நாயன்மார் யாருன்னு தெரிஞ்சிக்க மேலே எழுதியிருந்த பேரைப்  பார்த்தேன்."

'உம்' என்று  சுவாரஸ்யமாகக் கேட்கிற உணர்வில் 'உம்'கொட்டினாள் மங்கை.

"அங்கேயும் நெடுக்க தீபம் ஏத்தி வைச்சிருந்தாங்கன்னாலும், அரைகுறை இருட்லே சரியா தெரிலே..  உச்சிலே வேறே எழுதியிருந்தாங்களா, கழுத்தைச் சாய்ச்சு அண்ணாந்து பாக்க வேண்டிருந்தது..  லேசா அழிஞ்சிருந்தாலும் நின்ற சீர் நெடுமாற நாயனார்ன்னு எழுத்தைக் கூட்டி படிக்க முடிஞ்சது..  அவர்
நாயனார் ஆனாலும் மன்னராய் தான் இருப்பார்ன்னு பேரைக்  கொண்டு யூகிச்சேன்."

"நெடுமாறன்னதும் பாண்டிய ராஜான்னு தெரியறது..  ஐயே! பாண்டிய ராஜான்னா எவ்வளவு சந்தோஷம் பாரேன்!"

"மதுரைதான் நம்ப ஊரு.  அதனாலே பாண்டிய ராஜான்னா ஒரு இது! அதான்!" என்றான் பாண்டியன்.

"ஒங்க பேரும் பாண்டியங்கறதாலே தான் மனசிலே ராஜாங்கற நெனைப்பான்னு  கேட்டேன்.  இப்போ சொல்லுங்க.   கேட்டது நியாயம் தானே!"

"அரை நியாயம்.  அரை அநியாயம்."

"என்ன கணக்கிலே சொல்றீங்க?"

"பாண்டியன்ங்கறதாலே ராஜாவா நினைச்சது நியாயம்;  எல்லாரும்  இந்நாட்டு மன்னர்ன்னு நான்  நினைக்கறதாலே நான்  ஒருத்தன்  தான் ராஜாங்கறது அநியாயம்.."

"ஊருக்கு ராஜா இல்லேனாலும் என் ராஜ்யத்திற்கு நீங்க தானே ராஜா!"

"அப்ப நீ தான் என் ராஜ்ய ராணி.  சோழ ராணி.."

"சோழ ராணியா?" என்று கேட்டு விழி விரித்தாள் மங்கை.

"பின்னே, இல்லியா?  சோழ நாட்டுப் பெண் தானே நீ? அதனாலே சோழ ராணி."

"அத்தை மகளானாலும் பாண்டிய ராஜாவை திருமணம் முடித்த சோழ ராணிங்கறீங்க.. அப்படித் தானே?"

"சரிதான்.." என்று அவள் அருகே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தான் பாண்டியன்.  "சிவராத்ரிக்கு முழிக்கணும்னா சும்மா  இல்லே..  தெரிஞ்சிக்க.  பாதி ராத்திரி போக இதோ, இது!" என்று பக்கத்தில் மடக்கி வைத்திருந்த பரமபத
விளையாட்டு அட்டையை  எடுத்தான். பிரித்து வைத்து பிளாஸ்டிக் கவரில் இருந்த எண்கள் போட்ட  சதுர பகடையையும்,  இரண்டு பேருக்குமான  இரண்டு நிறங்களில் இருந்த அடையாள வில்லைகளையும் எடுத்து  வைத்துக் கொண்டான்.


"பரமபத விளையாட்டு விளையாட ஆரம்பிச்சா பாதிலே எழுந்திருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்கள்லே?" என்று நிமிர்ந்து பார்த்த மங்கையின் முகம் குழல் சுருட்டலுக்குப்  பின்னால் பளபளத்தது.

"அப்படியா?.. நான் கேள்விப்பட்டது இல்லே.  விளையாட ஆரம்பிச்சா எழுந்திருக்க  மனசும் வராது, இல்லியா?.. ஒரு ஆட்டமாவது போட்டுடலாம்.       ஓக்கேவா?"                                                                                              

"ஓ.." என்று உதடைக் குவித்தாள்  மங்கை.   கண்மூடி கைகுவித்து உதடசைத்து வேண்டிக்கொண்டாள்.  அடுத்த  வினாடி விழித்து,  "தாயம் போட்டுத் தானே விளையாட்டை ஆரம்பிக்கணும்?" என்று அவனிடம் கேட்டாள்.

"என்ன தெரியாத மாதிரி கேக்கறே?.. தாயம் போட்டாத்தான்.."என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயத்தைப் போட்டு விட்டு, "ஹையா.." என்று  ஒரு எம்பு  எம்பிக் குதித்தாள் மங்கை.

பாண்டியன் இதை எதிர்பார்க்கவில்லை."என்ன இவ்வளவு ஈஸியா தாயம்  போட்டுட்டே?" என்று முனகியவாறே அவளிடமிருந்த பிளாஸ்ட்டிக் சதுரப் பகடையை வாங்கி உருட்டினான்.  அட! அவனுக்கும் தாயம்!

"அப்பாடி.." என்று அவன்  சிரிக்க, அமர்த்தலாக "தாயம் போட்றதிலே என்ன  இருக்கு? அந்த அருகாஷன் பாம்பு கைலே மாட்டாம இருக்கணுமில்லே.. அதுக்குத் தான் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போதே வேண்டிக்கிட்டேன்." என்றாள் மங்கை.

"அப்படியா சமாச்சாரம்?.. மங்கை! பாம்பின்  கை  பாம்பறியும்ன்னு ஒரு  வழக்கு மொழி இருக்கு. தெரியுமிலே?"

"என்ன  கிண்டல் அடிக்கிறீங்களா-- எனக்கும் தெரியும், பாம்பின கால் பாம்பறியும்னுட்டு.."

"ஓ.. நீ தமிழ் பி.லிட்.லே?.. தெரியாம கேட்டுட்டேன்" என்றபடி 9 போட்டு 'கொக்கு'க்கு வந்திருந்தவன், ஒரு 7 போட்டு 16 எண் 'சகுனக் கட்ட'த்திற்கு வந்து அங்கிருந்த ஏணியில் ஏறி 28ம் எண் 'கடவுள் உடனுறை' கட்டத்திற்கு வந்து விட்டான்.  கடவுள் உடனுறை!  பெயரே தெய்வீகமாக இருந்தது;  அதனால் அந்த கட்டம் வந்ததில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.

மங்கையோ எட்டும் ஆறும்  போட்டு 14-வது கட்டத்திற்கு வந்திருந்தவள் இப்பொழுது ஒரு 5 போட்டு 'ஸ்தோத்திர கட்ட'த்திற்கு வந்து ஏணி ஏறும் அதிர்ஷ்டம் கிடைத்து 39 எண்ணிட்ட 'கோலோகம்'  கட்டத்திற்கு வந்து சேர்ந்தாள்.  பசுக்கூட்ட லோகம் கிடைத்ததில் அவளுக்கு  ஏகப்பட்ட மகிழ்ச்சி.

அந்த சந்தோஷத்தில், "அப்புறம் என்ன ஆச்சு?.. நாயன்மார்  பேரைப் படிச்சீங்க.  அதற்கப்புறம்?"

"அப்புறம் என்ன?.. உன்னை  மாதிரி பி.லிட்.டா இருந்திருந்தாலும் பேரைப் பாத்ததும் அவரு யாரு என்னன்னு தெரிஞ்சிருக்கும்.  சரித்திரத்திலும் அவ்வளவு பத்தாதில்லையா எனக்கு?.." என்று ஒரு 2 போட்டு 'தியானம்' வந்ததினால் அங்கிருந்த ஏணி ஏறி  50 எண்ணிட்ட 'தவக்கோலம்' அடைந்தான்.

"என்ன யார் முகத்லே முழிச்சீங்களோ, ஒரே  ஏணி ஏத்தமானா இருக்கு!" என்று கேட்டு மங்கை பகடையை உருட்ட அது 2 காட்டி 'யாகம்' கட்டம் அடைந்து அங்கிருந்த ஏணி ஏறி 61 'சுவர்லோகம்' அடைந்தாள்.

"உனக்கு மட்டும் என்னவாம்?.. ஏணி சவாரி இல்லியோ?"

"ரெண்டு பேருக்கும் தான் சொன்னேன்.  நீங்க என் முகத்லேயும் நான் உங்க முகத்லேயும் முழிச்சிருப்பேன்.  ரெண்டு பேரா இருந்தாலே இப்படித்தான். அதுக்குத் தான் மூணாவது ஒருத்தர் வேணுங்கறது.."

"சிவ சிவா.." என்று பாண்டியன் பகடையை உருட்டிப் போட்டான்.  ஒரு 2 விழ 52 அடைந்து அங்கிருந்த ஏணி ஏற்றிவிட 72 'கடவுளை நெருங்குதல்' கட்டம் வந்ததில் சந்தோஷமான சந்தோஷம் அவனுக்கு.

"அட, இதைப் பாரேன்.." என்று மங்கை பகடையை உருட்டினாள். என்ன ஆச்சரியம்! அவளூக்கும் அதே 2 தான்.  அது அவளை 63 'பக்தி'க்கு கூட்டிப்போக அங்கு தயாராயிருந்த ஏணி அவளை  83 'பிரம்ம லோக'த்தில் கொண்டு வந்து விட்டது.

"மறந்திட்டேன்.  நாயனார் பேரு என்ன சொன்னீங்க?.. நின்ற சீர் நெடுமாறன் இல்லியா?.. உம்?..  அவரு யாரு, என்னன்னு சட்டுனு ஞாபகத்துக்கு வரலே.  நாயன்மார்கள் பத்திலாம் படிச்சிருக்கேன்.  பரீட்சைலே அவங்களைப் பத்தி கேள்வி கூட வந்தது.. அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கு..  63 பேர் இல்லியா?அதான் யார் யார் என்ன என்னன்னு சட்டுனு  நெனைவுக்கு வரலே.. படிப்பு  முடிச்சும் மூணு வருஷம் ஆயிடிச்சில்லா?.. அதான்.  சுவத்து மர பீரோலே கவர் போட்டு பழசெல்லாம் கட்டி வைச்சிருக்கேன்.  எடுத்து பாத்துத் தான் சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே பகடையை  உருட்டியவள், 4 போட்டு 87 'வைராக்கியம்' வந்து ஏணி ஏறி 115வது கட்ட 'வைகுண்டம்' வந்து சேர்ந்தாள். சேர்ந்த மகிழ்ச்சியில் பூரித்தாள்.  அந்த பூரிப்பை அவளது கன்னக் கதுப்புக்கள் பளபளத்து புஷ்டியுடன்  வெளிப்படுத்தின..

"என்ன சரசரன்னு ஏறிட்டியே?" என்ற பாண்டியன்  அவளைப் பிடிக்கும் அவசரம் கலந்த ஆவலில் கை பகடையை உருட்ட 7 விழுந்து 79 'ஞானம்' வந்து ஏணி ஏற்றிக் கொண்டது;  117 'கைலாய'த்தில் கொண்டு வந்து விட்டது.

79 எங்கே 117 எங்கே?..  ஏணியே! ஆயிரம் நூற்றாண்டிரும்.  உமக்கு நன்றி.." என்று பாண்டியன் வெற்றிக் களிப்பில் அந்த சமயத்தில் மனசுக்குத் தோன்றிய வசனம் பேசினான்.  "மங்கை!  வைகுண்டத்துக்கும் கைலாயத்திற்கும் ஒரு கட்டம் தான் இடையே. ஒரு 2 போடு.  நீயும் கைலாயம் வந்து சேர்ந்திக்கலாம்.." என்று கும்மாளம் போட்டான்.

"வரேன்.." என்றாள் மங்கை.  வாயால் 'வரேன்..' என்று  உறுதி போலச் சொல்வதால் எங்கே அதற்கு நேர்மாறாக நடந்து விடுமோ என்கிற  பயமும் அவளுக்கு இருந்தது. அந்த பயம் தன்னைப் பாதிக்காமல் இருக்க வேறே ஒரு சந்தோஷத்தால் அதை மூடி மறைக்க வேண்டும் என்கிற உணர்வில்,  "ஒண்ணு தெரியுமா, உங்களுக்கு?.. ரெண்டு  பேருமே அருகாஷனை கடந்து வந்திட்டோம்.  பாத்தீங்களா?  நா வேண்டிக்கிட்டது வீண் போகலை." என்று பகடையை கையில் எடுத்தாள்.

"எதுக்கு வேண்டிகிட்டேன்னு  தெரியாது.  ஆனா, நீ வேண்டிக்கும் போதே உன்  கோரிக்கை நிறைவேறிடும்ன்னு நான் நெனைச்சேன்.."என்றவனை எட்டி குஷியில் புஜம் பற்றி இறுக்கினாள்.

"பாத்து.. பாத்து, மங்கை.. நாலோ ஆறோ போட்டுடாதே..  கர்வமும், அகங்காரமும் ரெண்டு பாம்பாக் காத்திருக்கு.  மாட்டினா அதுங்க நம்பளை கீழே இறக்கிவிட்டிட்டுத் தான் மறுவேலை பாக்கும்..  இவ்வளவு ஏணி ஏணியா ஏறினதெல்லாம் அம்போ ஆயிடும்..  பாத்து.. பாத்து.. ஜாக்கிரதையா உருட்டு" என்று எச்சரித்தான் பாண்டியன்.

"நம்ம கையிலே என்னங்க, இருக்கு.. எல்லாம், அந்த.." பயத்தை வெளிக்குக் காட்டாமல் ஆனால் பயப்பீதியோடையே மங்கை பகடையை உருட்டி விட, 3 விழுந்து "அம்மாடி--" என்று தன் மார் தொட்டாள் மங்கை.  மூன்று கட்டம் தாண்டி பத்திரமாக 120 எண்ணிட்ட 'கோயில்' அடந்தாள்.  பாண்டியனோ தன் பங்குக்கு பயந்தபடியே உருட்ட தாயம் விழுந்து அவன் 118 எண்ணிட்ட இன்னொரு  கோயில் அடைந்தான்.

தாயம் விழுந்தால் போச்சு.  மங்கை இருந்த இடத்திற்கு அடுத்த கட்டம் அகங்காரம் பாம்பு.  அதனிடம் மாட்டினால் ஒரே இழுப்பாக இழுத்து 99-க்கு இறக்கி விட்டு விடும்.   சாமியே, தாயம் விழக்கூடாது என்று பிரார்த்தித்தபடி வேக வேகமாக அவனிடம் பகடையை வாங்கி மங்கை உருட்ட 2 விழுந்து 122 'மறுபிறவி இல்லை' கட்டம் அடைந்து பிரமிப்பில் தத்தளித்தாள். பாண்டியனுக் கும்  நடுக்கம் தான். தாயமும் விழக்கூடாது; மூன்றும் விழக்கூடாது. தாயம்ன்னா 'கர்வ'ப் பாம்பு.  மூணுன்னா 'அகங்காரம்' பாம்பு.  இந்த இரண்டைத் தவிர எதுவானும் விழட்டும் என்று உருட்ட நினைக்கையிலேயே வியர்வையில் வழுக்கி தாயக்கட்டை அவன் கைவிட்டு நழுவியது.  நழுவியது நிமிர்ந்து 4 காட்டியது.  இவர்களின் இரண்டு அடையாள வில்லைகளும் 'மறுபிறவி இல்லை' கட்டத்தில் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு இழைந்தன. அதைப் பார்த்து மங்கை கலகலவென்று சிரித்தாள்.

"அப்பாடி!  இனி பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய அவசியம்  இல்லை" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஏன் அப்படி சொல்லிட்டே?.. ஜோடி கிடைச்சிடுச்சி.  வேண்டியமட்டும் நீந்தலாம்ன்னு நான் நெனைச்சிக்கிட்டிருந்தா?.."

"க்குங்.. ஆளைப் பாரு!"

"ஓக்கே.  ஓக்கே.. விளையாட்டு மத்திலே விளையாட்டுக்காகச் சொல்றதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கக் கூடாது, இல்லியா?"

"ஆட்டத்தைப் பாத்து விளையாடுங்க..  கும்மாளம் போட்டீங்கன்னா சமயம் பாத்துக் காலை வாரி விட்டுடும்.. ஜாக்கிரதை!" என்று அவனை எச்சரித்தாள்.

122-லிருந்து 132 வரை உல்லாசம் தான்.  தீண்ட பாம்பும் கிடையாது; ஏற்றி விட ஏணியும் கிடையாது.  அந்த சுதந்திரத்தில் எப்படி வந்தோம் என்று  தெரியாத சுகத்தில்  இரண்டு பேருமே 132 'பராசக்தி' கட்டம் அடைந்தனர்.

"பரமபதம் அடையற வரை இனிமே தாயம் போட்டுத் தானே, ஒவ்வொரு கட்டமாக் கடக்கணும்?" என்று பாண்டியன்  கேட்டான்.

"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தாயம் போட்டால் தான்.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயம் போட்டு பாண்டியன் கெக்கலிக்க மங்கை தனக்கு  என்னவாகப் போகிறோ என்ற ஐயப்பாடில் பகடையை உருட்டினாள்.  அதிர்ஷ்ட்டம் அவள் பக்கத்தில் இருந்தது..  அவளுக்கும் தாயம் தான்!

"இப்போ  சொல்லுங்க.. அதுக்கப்புறம் கோயில்லே என்ன நடந்ததுன்னு.." பகடையை அவனிடம் தந்து விட்டுக் கேட்டாள் மங்கை.

"நீ என்னவோ விளையாட்டு நடுவே டைம்பாஸ் மாதிரி அந்த கோயில் சமாச்சாரத்தைக் கேட்டினா, நான் நெனைச்சிப் பாத்து நெனைச்சிப்  பாத்து சொல்லணும்ங்கறியா?" என்று பொய்க்கோபம் கொண்டான்.

"ஐயோ, அப்படில்லீங்க...  மனசு அதிலே தான் இருக்கு.  விளையாட்டுனாலும் இதுவும் முக்கியம் இல்லியா?.. சிவராத்திரியும் அதுவுமா பரமபதம் அடைஞ்சா எவ்வளவு புண்ணியம்!  அதுக்குத் தான்.  இதோ கிட்டக்  கிட்ட வந்தாச்சு.. இன்னும் நாலு தாயம் தான்.  தாயம் தாயமா போட்டு பரமபதம் அடைஞ்சு ஆட்டம் முடிஞ்சதும், மரபீரோவைத் திறந்து புஸ்தகமெல்லாம் எடுத்து அலசிப் பார்த்திட வேண்டியது தான்." என்று நிமிர்ந்தவள் கடியாரத்தைப் பார்த்தாள்.
"அட! மணி ரெண்டுங்க..."

இரண்டரை மணியளவில் ஆட்டம் முடிந்தது.  இரண்டு பேரும் சிவராத்திரி திருநாளில் பரமபதம் அடைந்த பெருமையில் எழுந்திருந்தார்கள்.

"ஒரு சின்ன டீ..  குடித்த பின்னாடி மர பீரோவைத் திறக்கலாமா?" என்றான் பாண்டியன்.

"டீ தானே?.. நீங்க கேப்பீங்கன்னு  தெரியும்.. ரெடியா பிளாஸ்க்கிலே போட்டு வைச்சிருக்கேன்  பாருங்க.."

டேபிளின் மேலிருந்த பிளாஸ்க்கை நாடிப் போனான் பாண்டியன்.  அப்படிப் போனவன் என்ன நினைத்துக் கொண்டானோ, சடாரென்று திரும்பி,  "ஏன், மங்கை!  நாயன்மார்களைப் பத்தி புஸ்தகம் பார்த்து விவரம் தெரிஞ்சிக்கலாம். சரி.  அதோட அவங்க படங்கள்லாம் போட்டிருப்பாங்களா?" என்று ஆவலோடு கேட்டான்.

"எதுக்குக் கேக்குறீங்க?" என்றாள் மங்கை, அவளுக்கும் தொற்றிக் கொண்ட  உற்சாகத்தில்.


(வளரும்)



குறிப்பு:  படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


Related Posts with Thumbnails