மின் நூல்

Monday, August 28, 2017

வாழ்க்கை அழைக்கிறது

                                           ஒரு  வாழ்வியல்  தொடர்


முந்தைய பகுதி:    http://jeeveesblog.blogspot.in/2017/08/blog-post_7.html


3.   தன்னம்பிக்கை என்னும் யானை பலம்.


ம்பிக்கை கொள்ளுதல் என்பது வாழ்க்கையின் ஆதாரசுருதி. தன்மீது, தன் செயல்களின் மீது தனக்குத் தானே நம்பிக்கைக்கொள்ளுதல் தன்னம்பிக்கை எனலாம்.       இந்த நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைத்தேவை.

தன்னம்பிக்கையில்லாதவன் எதையும் சுயமாகச் செய்ய துணிவில்லாது போவான். எதற்கும் இன்னொருவரை எதிர்பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளபடுவான். தன்னால் இதைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியாமல், அதைச் செய்து முடிக்கவே இன்னொருவர் தயவை நாடுவது நாளாவட்டத்தில் எதுவென்றாலும் பிறரை எதிர்பார்க்கிற நிலைக்குக் கொண்டு போய்விடும்.

தனக்கு நெருங்கியவர்களிடம் ஏற்படும் பிரமிப்பும் சில நேரக்களில் ஒருவனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்.  பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது,  எவ்வளவு அருமையாக அவர்கள் நினைத்ததை எழுத்தில் வடித்து அதை வாசிக்கும் நமக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படும்.

பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.   வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும்.   பொதுவாக ஆரம்ப முயற்சிகள் அவ்வளவு சிறப்பாக அமையாது.   இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காமல் திருப்பித் திருப்பி முயற்சிக்கும் பொழுது  நாளாவட்டத்தில்  தானே மகிழும் அளவுக்கு எடுத்த முயற்சி அமையும் பொழுது அதுவே அலாதியான சந்தோஷத்தை இயல்பாகவே கொடுக்கிறது.

எனக்கு சாரங்கன் என்றொரு நண்பர் இருந்தார். இராணுவத்தில் 'ஹவில்தாராக' இருந்தவர். ஓய்வு பெற்று வந்துவிட்டார். வாழ்க்கைப் பாட்டிற்கு ராணுவ பென்ஷன் தான். எங்கள் நண்பர்
குழாமில் அவரை 'சவடால் சாரங்கன்' என்றே அழைப்போம். அப்பா....மனுஷன் என்ன பேச்சு பேசுவார், தெரியுமா?..அவர் செய்த ஒவ்வொரு காரியமும், ஷூக்கு பாலீஷ் போட்டார் என்றால் கூட, ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தோடு, யாருமே எதிர்கொள்ளாத பிரச்னைகளைத் தான் எதிர்கொண்டமாதிரி, அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் பேச்சில் பண்ணுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக நாளாவட்டத்தில் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவர் ஒரு ஹீரோ ஆகிவிட்டார். வீட்டு விசேஷத்திற்கு வாழைமரம் வாங்கிக் கட்டவேண்டுமா, கல்யாணச் சாப்பாட்டிற்கு அருமையான கேட்டரிங் ஏற்பாடு பண்ண வேண்டுமா, தாசில்தார் ஆபிஸில் மனுகொடுக்க வேண்டுமா, அடுத்த நாள் ரயிலுக்கு அவசர ரிசர்வேஷனா, பஸ் பாஸூக்கு ஏற்பாடா, பாஸ்போர்ட்டுக்கு அப்ளிகேஷனா---சாரங்கனிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் 'ஆச்சு காரியம்' என்பதில் ஆரம்பித்து,கிணற்றில் தோண்டி விழுந்துவிட்டால் எடுக்க சாரங்கன், வீட்டில் கரண்ட் சப்ளை போய்விட்டால் ப்யூஸ் ஒயர் போடக் கூட சாரங்கன் என்பது வரை தெருவே சாரங்கனைத் தேட ஆரம்பித்து விட்டது.


இதில் கோடிவீட்டு கோதண்டம் ரொம்ப மோசம்; பிளாஸ்டிக் மூடிதிறக்க அடம்பிடிக்கும் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தக்கூட சாரங்கனைத் தேடுவான். சாரங்கனும்,  'நான் ஆஜர்' என்று சொல்கிறமாதிரி காலையில் 'காப்பி' குடித்துவிட்டு வீட்டுத்திண்ணையில் 'ஹாயாக' உட்கார்ந்திருப்பான்.    யார் வீட்டில் எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று தெரியாது.


சின்னச் சின்ன வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த சாரங்கன் இப்பொழுது அயனாவரத்தில், 'A--Z' என்று 'அ'விலிருந்து 'ஒள'வரை எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுக்கும்  சேவைநிலையம் ஒன்றை ஆரம்பித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தில் உள்ள அத்தனை பேரும் அவனுக்குப் பழக்கம். அவனால், ஆகமுடியாத வேலை இல்லை. மீச்சுவல் பண்டிலிருந்து மைலாப்பூர் மியூசிக்கல் ஸ்டோர்களில் வயலின் வாங்குவது வரை பிட்டு பிட்டு வைத்து இலவச ஆலோசனை சொல்வான். அவன் சொன்னது எதுவும் சோடை போனதில்லை. எல்லாம் தன்னம்பிக்கை அவனுக்குக் கொடுத்த தைரியம்!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அவன் செய்த  உதவிகளின் அனுபவங்களை அஸ்திவாரமாகக் கொண்டது அவனது இன்றைய வளர்ச்சி என்பது அவனை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

எந்த வேலையிலும் சுயமாகத் தான் ஈடுபடுவதே தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரம். எந்தப் புதுவேலையும், செயலும் தொடங்குகையில பிரமிப்பாகத்தான் இருக்கும். சிக்கு விழுந்த நூல்கண்டு மாதிரி. நுனி கண்டுபிடித்து பொறுமையாக முயற்சித்தால், எல்லாம் வெற்றியோ வெற்றிதான்! ஆரம்பத்தில் உடனடியான வெற்றி இல்லையென்றாலும், இதற்கு இப்படி என்று ஒரு வழியாவது தெரியுமல்லவா?..

ஏதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டுமானால், 'இதுக்கெல்லாம் அவன் தான் லாயக்கு' என்று 'ரெடிமேடாக'   ஒரு  சிலர் பதில் வைத்திருப்பார்கள். இவர்கள் எதற்கும் லாயக்கில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.

எல்லா விஷயங்களையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம்.  ஆன்லைனில் பண பரிவர்த்தனை,    ஆதார் அட்டை எண்--  பான் அட்டை எண் இணைப்பு,  இவை இரண்டையும் வருமான வரிக் கணக்கோடு இணைப்பது என்று  தொடங்கி எந்த விஷயமும் நம்மிடமிருந்து அந்நியமாகிப் போய் விடாமல் வெகுதிரள் மக்களின் அன்றாட நடவடிக்கையாகிப் போயிருக்கிறது.

வங்கிகளில் பணம் எடுக்க செலுத்த வங்கி ஊழியர்கள் இருந்த காலம் மங்கி வருகிறது.   மனிதர்கள் போய் மிஷின்களோடு  உறவுப் பிணைப்பு ஏற்பட்டிருக்கும் காலம்  இது.   நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு  பாடமாகப் போதித்திருக்கிறது.

வாழ்க்கையின் இன்றைய அமைப்பும் வாழும் முறையும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு நாள்தோறும் வெவ்வேறான பயிற்சிகளைப் பெறுவதற்கு நம்மை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது.   இது தகவல் தொழில் நுட்ப உலகம்.   எந்த விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளாத தகவல் குறைச்சலும் நம்மைப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது.

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.   தன்னம்பிக்கை இழப்பு என்பது  ஒரு மனநோயாக உருவாகக் கூடிய சாத்திய கூறுகள் நிறைய உண்டு.  தன்னம்பிக்கை இழப்பு தாழ்வு மனப்பான்மையை நாளாவட்டத்தில் உள்ளத்தில் விதைத்துவிடும்.

எந்த உடல் உபாதையையும் விடக்கொடியது, இந்த உள்ள உபாதை. உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் மருந்து என்றால், இந்த உள்ள உபாதை ஒழிய மனப்பயிற்சி அவசியம்.  

நீந்த வேண்டுமானால், தண்ணீரில் இறங்குவதுதான் வழி.

வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவித்தவர்களெல்லாம், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்   பெரும்பாலும்.   வாழ நேரிட்ட வாழ்க்கையே அவர்களின்  வாழ்க்கை வெற்றிக்கான பாடத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து  வெற்றி வாகை சூட வைத்திருக்கிறது..

தளராத உழைப்பும், தடுமாறாத செயல்களுமே  வெற்றிக்கனி பறிக்க அவர்களை வல்லவர்களாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.


(வளரும்)


தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை அளித்த நண்பர்களுக்கு நன்றி.

Saturday, August 12, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

சென்ற பகுதி:

http://jeeveesblog.blogspot.in/2017/02/blog-post_63.html

பகுதி--26
ன்னன் செங்குட்டுவனின் கவனம் வாயிற்காவலர் மேல் படிந்தது.  'ஏது சேதி?'  என்று பார்வையிலேயே கேட்ட  மன்னனிடம் காவலன் ஒருவன் பணிந்து சொல்லத் தொடங்கினான்:

"மன்னர்கோவே!  பல்வேறு வகைப்பட்ட திறமையுடைய நாடக மகளிர் நூற்று இருவர்;  குயிலுவக் கருவியை கையாள்வோர் இருநூற்று எண்மர்;  தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தோர்;  நகை வேழம்பர்  நூற்றுவர்;    தேர்கள் நூறும்,  ஐந்நூறு யானைகளும், பிடரி மயிர் அலைபாயும் பதினாயிரம் புரவிகளும்,  வடபுலத்து விளையும் பொருள்கள் ஏற்றி வந்த இருபதினாயிரம் வண்டிகளும், தலைப்பாகையும் சட்டையும் இட்ட தங்கள் தலைவன்  தூதுவன் சஞ்சயனுடன் வந்திருக்கும் ஆயிரவரும் தலைவாயிலில் திரண்டிருக்கின்றனர்,  வில் கொடி செங்கோல் வேந்தே!" என்றான்.

"ஓ! நல்லது.  நாடக மகளிரும் குயலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு  இங்கு வர வழி காட்டுங்கள்.." என்று ஆணையிட்டான்  மன்னன்.

செங்கோல் வேந்தனின் திருவிளக்கு அவையத்து சஞ்சயன் வந்து தாழ்ந்து வணங்கி மன்னவனைப் போற்றித்  துதித்தான்.  தன்  கூட வந்திருந்த கலைஞர் பெருமக்களை மன்னவனுக்கு சஞ்சயன் இன்னார் இவர் என்று தெரிவித்து வணங்கினான்.  "தங்களுக்கு ஒரு சேதி சொல்ல வந்துள்ளேன் மன்னவா.." என்ற சஞ்சயன் அந்தச் சேதியை என்னவென்று கூறலானான்.

"மன்னாதி  மன்னா!  கடவுள் சிலை அமைக்க  கல் வேண்டி வடபுலம் நோக்கி செல்வது  தான் சேர மன்னனின் நோக்கம் எனில் ஓங்கிய இமயத்திலிருந்து  கல் எடுத்து அதனை கங்கை பேராற்றில் நீராட்டி, நின் நாட்டிற்கே கொண்டு வந்து தர சித்தமாக இருக்கிறோம் என்று நட்புச் சேதியை   நூற்றுவர் கன்னர் தகவலாக என் மூலம் அனுப்பியுள்ளனர், மன்னா!"  என்று சஞ்சயன் தான் தூதுவனாக வந்த காரணத்தைச் சொன்னான்.

"அப்படியா, சேதி!  **** நூற்றுவர் கன்னரின் நட்பு வாழ்க!" என்று வாழ்த்தித் தொடர்ந்தான் சேர மாமன்னன்.  "சஞ்சயரே!  கேட்டுக் கொள்ளவும்.. இப்பெரும் படை எழுச்சி  பெருந்தெய்வ உரு பொறிக்க இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வருவது மட்டுமல்ல!" என்று அவை அதிரச் சொன்னான். "காவா நா கொண்ட கனக, விஜயர் என்னும் இரு குறுநில மன்னர் தாம் கூட்டிய விருந்தொன்றில்  பிற மன்னருடன் கூடிக் குலவி அருதமிழாற்றல் அறியாது உளறியிருக்கின்றனர். அவர்கள் அறியாத தமிழர் தம் வீரத்தையும் பெருமையையும் அவருக்கு  நேரில் அறிவுறுத்தும் பொருட்டும் எம் வடபுலப் பயணம் ஏற்பாடு ஆகியிருக்கிறது, சஞ்சய!"  என்றான்.  "சஞ்சய!  நம் நட்பு பேணும் நூற்றுவர் கன்னருக்கும் என் சேதியாக ஒன்றைச் சொல்வாயாக!    கங்கை பேராற்றை யாமும் என் கூற்றுவப் படையினரும் கடந்து  செல்வதற்குத்  தேவையான பரிசில்களுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொல்வாயாக!" என்றான்.

"மன்னர்க்கு மன்னவா!  தங்கள் ஆணை எங்களின் பெருமிதம்!  அப்படியேச் சொல்கிறேன்.."என்று வணங்கி அவை நீங்கிச் சென்றான் சஞ்சயன்.

சஞ்சயன் சென்ற பின்,  ஆயிரம் கஞ்சுகர் சந்தன, முத்துக் குவியலையும் தென்னவர் இட திறைப் பொருட்களோடு கொண்டு வந்து சேர்த்தனர்.   சேர்த்த பொருட்களுக்கு   அவை சேர்ந்தமைக்கு அடையாளமாக         இலட்சினை இட்ட திருவோலைகளை திருமுகம் எழுதுவோர் திறைப் பொருள் தந்த மன்னர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு வழங்கினர்.  அப்படியான திருமுகங்களைப் பெற்றுக் கொண்டு கஞ்சுகர் அவை நீங்கினர்.

திரை கடல் தான் திரண்டதோ என்று வியக்கும் வண்ணம் பெரும் படையை வடபுலம் நோக்கி நடத்திச் சென்ற செங்குட்டுவன் நூற்றுவர்  கன்னர் ஏற்கனவே ஏற்பாடு  செய்திருந்த ஓடங்களை உபயோகித்து கங்கை பேராற்று வங்கப் பரப்பின்  வடகரையை அடைந்தனர்.  பின் பகைவரை எதிர் கொள்ள பாடி வீடு அமைத்துத்  தங்கினர்.

கனக விஜயருக்கும் சேதி போனது.   உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன்,  சித்திரன், சிங்கன்,  தனுத்திரன், சிவேதன் என்ற எட்டு வட நாட்டு அரசர்களுடன் கூட்டு கொண்டு "தென் தமிழ் ஆற்றலைக் காண்போம், நாம்"    என்ற இறுமாப்புடன்   சேரமாமன்னனுடன் மோதினர்.

ஞாயிறு தென்படவில்லை.  அதன் வெயில் கதிரை துகில்  கொடிப் பந்தல்கள் விழுங்கின.  பதப்படுத்தப் பட்ட தோலால் போர்த்திய வளைந்த போர்ப்பறை, வெண்மை உமிழும் சங்கு, நீண்ட கொம்பு,  இடி இடித்தாற் போல முழங்கும் போர்முரசு,  இழும் என்னும் ஒலி நாதம் கொண்ட கஞ்சதாளம் எல்லாம் ஒரு சேர முழங்கி உயிர்க் குலை நடுநடுங்க திசைகள் அதிர விநோதமான ஓசைகள் பிளந்தன.

தோளில் வில் தாங்கிய வீரர்,  அதிவேகமாக தேரைச் செலுத்தும்
திறமையாளர்,  யானை மத்தகத்தின் மேல் அமர்ந்து வரும் யானை மறவர், குதிரை வீரர் என்று வரிசை வரிசையாக வருவோரின் அதகள ஆர்ப்பாட்டத்தில் நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி யானைகள் தம் முதுகில் சுமந்த மணி நாவிலும்,   சங்குகளின் நாவிலும் நிரம்பி அவை தம் செய்தொழில் மறந்து ஓசை எழுப்ப முடியாது தவித்தன.

இரு பக்கப் படைகளும் ஒன்றில் ஒன்று மோதி ஒன்றாகின.  தோள்களும், தலைகளும் தனித்தனையாக சிதறுண்டு கிடந்த பிணக்குன்றின் மீதேறி  பேய்கள் கூத்தாடிக் களித்தன.   நிணம் பொருந்திய குறுதி ஆற்றில் பெண் பேய்கள் தம் கூந்தலை தாழத் தழைய விட்டு இரத்த குளியல் நிகழ்த்தின.

வலிமை கொண்ட தேர்ப்படை வடவரசர்களின் சிறப்பு.  வாளேந்திய சேர வீரப்படையினரின் கூர்வாள் தேர் மொட்டுக்களைக் கொய்தன.   கடுங்களிர்களின் பிடரியும்,  புரவிகளின் முதுகுகளும் பாழ்பட  கூற்றுவன் அந்தப் பகல் நேரத்திலேயே பல உயிர்களை நாசம் கொள்வான்  என்பதனை வடவரசர்கள் கண்கள் பிதுங்கக் கண்டனர்.  இறுதியில் போர்  ஓய்ந்து  வெற்றி வாகை சூடிய  செங்குட்டுவன் பனம் பூ தொடுத்த தும்பை வெளிர் மாலையை சுற்றியிருந்த படைவீரர்  ஆரவாரத்திற்கிடையே  தன் சென்னியில் சூட்டிக் கொண்டான்.


(தொடரும்)

========================================================================

****  நூற்றுவர்  கன்னர் என்ற மன்னன்,  கங்கையாற்றைக் கடந்து செங்குட்டுவன்   படைகள் செல்ல உதவினான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  சாதகர்ணி என்ற வடமொழிப்  பெயரே   நூற்றுவர் கன்னர் என்றாயிற்று என்பர் வரலாற்று ஆய்வாளர்கள்.

========================================================================


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Monday, August 7, 2017

வாழ்க்கை அழைக்கிறது

         ஒரு வாழ்வியல் தொடர்


முந்தைய  பகுதி:   http://jeeveesblog.blogspot.in/2017/07/blog-post_21.html

பகுதி--2

ந்தகோபாலுக்கு போன ஆண்டு தான் கல்யாணம் ஆயிற்று. முப்பது வயது வரைக் காத்திருந்து பிறகு செய்து கொண்டத் திருமணம். அதற்குள் குழந்தைக்கு அவர் அவசரப்படவில்லை போலிருக்கிறது. அவரே ஒரு குழந்தை என்பது வேறு விஷயம்.

சொந்தத்தில் ஒரு வீடு வாங்க வேண்டுமெனற ஆசை நந்தகோபாலுக்கு வந்திருக்கிறது. கையில் கொஞ்சம் சேமிப்பு இருப்பதாகச் சொன்னார். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார்.

நந்தகோபால் போன்றவர்களுக்கு ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற ஆசை வருவதற்கே அவருக்குள் ஆயிரம் யோசனைக்குப் பின்னால் தான் என்று எனக்குத் தெரியும். அதன் சாதக பாதகங்களை அவரும் அவர் மனைவியும் தங்களுக்குள் அலசிப் பார்த்து முடிவில், 'சரி, இதில் இறங்கலாம்' என்ற முடிவிற்கு வந்த பின்னரே, அடுத்தாற்போல் என்ன செயவது என்று என்னிடம் கேட்க வந்திருக்கிறார்.

சொந்தத்தில் வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை--மேலும் மேலும் அதுபற்றி யோசித்து 'நம்மால் முடியும்' என்று தீர்மானிக்கின்ற நம்பிக்கை--அந்த நம்பிக்கை ஏற்படுத்தும் செயல் வடிவத்திற்கான துடிப்பு= இதுதான் முதல்படி.

"வீடு வாங்க வேண்டுமென்று நீ தீர்மானித்தவுடனேயே 50% ஜாப் ஓவர்" என்று நான் சொன்னதைக் கேட்டு நந்தகோபால் சிரித்தார்.

"என்ன சார்! வீடு வாங்கி, கிரகப்பிரவேசமே பண்ணிவிட்ட மாதிரி முடித்து விட்டீர்கள்?..இப்போத்தானே அதுபற்றி முடிவு செய்து, அடுத்து என்ன செய்வது என்று கேட்க வந்திருக்கிறேன்..."

"அந்த எண்ணம் உங்கள் மனசில் வலுப்பெற்று தன்னம்பிக்கையும், இதுபற்றி மேலும் என்ன செய்யலாம் என்று இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க வந்த பொழுதே, பாதி வேலை முடிந்த மாதிரி தான்" என்று சொல்லி, "இனி என் வேலை சுலபம்" என்று நந்தகோபாலுக்கு விளக்கினேன். நகர்புறத்தில் வாங்கும் பிளாட், ஊருக்கு வெளியே வாங்கும் தனிவீடு அல்லது நிலம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வீடு, பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஒப்பந்தமுறையில் கட்டிக்கொள்ளும் வீடு, பிளாட் என்றால் எத்தனையாவது மாடி, கிரவுண்டு ப்ளோர்-உச்சி-சாதகபாதகங்கள், லிப்ட் வசதி இதையெல்லாம் சொல்லி, வள்ளுவர் கோட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கும் 'சொந்தத்தில் வீடு' பற்றிய கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு விஷயங்களைச் சேகரம் பண்ணச் சொன்னதுமே நந்தகோபால் முகத்தில் உற்சாகம்.

நான் ஐந்து லட்ச ரூபாய்    அட்வான்ஸ்  பணம் கொடுத்து உதவிய மாதிரியான சந்தோஷத்தில், "தேங்க்யூ சார்!..உங்க ஆலோசனைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, சார்!" என்று ஆயிரம் நன்றி சொல்லிப் புறப்பட்டார்.

ஒருத்தருக்கொருத்த்ர் பரிமாறிக் கொள்கின்ற சந்தோஷம் மிகமிக முக்கியமானது.

கருத்துக்களை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பொழுது,அல்லது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பொழுது புதுவிஷயங்களையும் அதே சமயத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிந்து கொள்கிறோம். ஒரு விஷயம் பற்றிய உண்மையான பிரச்னைகள், அவற்றை நாமே அணுகும் பொழுதுதான் புரிகிறது. சொந்த அவசியம் கருதி பிரச்னைகளைத்  தீர்க்கக்கூடிய சாத்தியகூறான வழிகளும் நமக்குப் புரிகின்றன.

நான் செய்தது, நந்தகோபால் குடும்பத்தில் ஊன்றிய விதைக்குத் தண்ணீர் ஊற்றி வெளிச்சம் கொடுத்தது தான்; இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

"O.K...go ahead....good luck.." என்று பிறரை  ஆசிர்வதிப்பது எவ்வளவு பெரிய சந்துஷ்டியையும், மன உற்சாகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது  என்பது லேசில் வெளித்தெரியாத விஷயம்.

நிச்சயம் நந்தகோபால் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்.  இன்னும் ஒரு வ்ருடத்தில் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேத்தில் கூட, "சார், எனக்குக் கொடுத்த நம்பிக்கை தான் நான் இந்த வீடு வாங்கக் காரணம்!" என்று முகம் பூரா சந்தோஷ்த்தோடு சொல்வார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடற்காற்று போல, இலவசமாகக் கிடைக்கின்ற இந்த சந்தோஷங்களை அனுபவிப்பதில் தயக்கமென்ன?..


(வளரும்)


வாழ்க்கையின் ஈடுபாட்டிற்காக அழழகனான பொன்மொழிகளைத் தந்த  நண்பர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails