மின் நூல்

Monday, July 31, 2017

மீண்டும் சுஜாதா.... சுஜாதா...

'எப்படி எழுதக் கூடாது?'  என்ற சுஜாதாவின்  தொடரின் நான்காவது பகுதியை வாசிக்க நேர்ந்தது.

 பிற்காலத்து  சுஜாதா அல்லாத எழுத்தின் சாயல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை போலும்.   அதனால் தான் இந்தப் பகுதியின் முதல்  பகுதி போல் அல்லாமல் சுஜாதா எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து எடுத்து எழுதுவது போல ரொம்பவே  அந்தப் பகுதியைக் குறுக்கி விட்டார்கள்.

குறுக்கியது தெரியாமல் இருக்க,  சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதையான 'ஒரு    பெரிய மனிதரும், பிக்பாக்கெட்டும்'  கதையை அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள்.  1962-ஆம் வருடத்திய  டிசம்பர் 27
'குமுதம்' இதழில் பிரசுரமான கதை  இது.   'லதா'வின் அட்டைப்பட  குமுதம் இதழ் அது.                                                                                          

சுஜாதா தனது முதல் கதையான 'அதிர்ச்சி'யை  எஸ்.ஆர். ராஜன் என்ற பெயரில்  எழுதியிருந்தார் என்றால்,  இரண்டாவது கதையான ஒ.பெ.ம.பி. கதையை எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

ரொம்ப சாதாரணமான கதை.    ஆரம்ப கால ரங்கராஜன் எதிர்கால சுஜாதாவாக எப்படி வளர்ந்து உருவானவானார் என்று இந்தக் கதையைப் படித்து தாராளமாக வியக்கலாம்.    'எப்படி  எழுதக் கூடாது'   என்பதை விட 'எப்படியும் எழுதலாம்' என்பதைக் கற்றுக் கொடுப்பது தான் சுஜாதா விட்டுச் சென்ற எழுத்துப்  பாணி சாகசமாகத் தெரிகிறது.

முக்கியமாக  இந்தக் கதை சம்பந்தப்பட்ட விவரங்களிலிருந்து ஆச்சரியமான சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஹைதராபாத்திலிருந்து   கனமான  ஒரு பெட்டி  நிறைய விஸ்கி பாட்டில்களை  கடத்தி வர கதைநாயகன் ஒப்புக் கொள்கிறான்.

ஒரு சின்ன வெள்ளிக் கிண்ணியின்  விலை  வெறும் பத்து  ரூபாய்!

1962-ம் வருடத்திய குமுதம் இதழின் விலை  25  காசுகள்.  ஆக 40 குமுதம் இதழ்களின் விலை ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு சமம்.  அல்லது  40 குமுதம் இதழ்களை வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு வெள்ளிக் கிண்ணி வாங்கி விடலாம்!

கட்டக் கடைசியாக   வழக்கம்  போல  புதிர் இல்லாவிட்டால் எப்படி?..

இந்த வார 'எப்படி எழுதக் கூடாது?' தொடரை வைத்து ஒரு சின்ன புதிர்.


அன்றைக்கு ராத்திரியே அவசர அவசரமாய் 'ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும்' கதையை எழுதி காகிதம் உலர்வதற்குள் குமுதம் அலுவலகத்துக்கு  போஸ்ட் செய்தேன்.

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  அது கையில் கிடைத்தவுடனே,  கவரைக் கூடப் பிரிக்காமல்,  பரணில் தூக்கிக் கடாசி விட்டார்கள்.

                                                                                                   --  சுஜாதா

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  என்றால் என்ன?


இதான்,  புதிர்!   சொல்லுங்கள்,  பார்க்கலாம்.


இந்தப்  புதிரில் ஒரு மிஸ்ஸிங்கும்  உண்டு.   அதையும் சேர்த்துச் சொல்பவர்கள்  உண்மையில் தமிழ் பத்திரிகை வாசகர் உலகில் கில்லாடிகள் தாம்!...


Tuesday, July 18, 2017

வாழ்க்கை அழைக்கிறது !

         ஒரு வாழ்வியல் தொடர்


1.   இன்று புதிதாய்ப் பிறந்தோம்


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று வியந்து போற்றிப் புகழ்வார், பாரதியார்.


இன்பம் எப்பொழுதுமே இனிப்பான விஷயம். அது துய்ப்பதின்பால் பட்டது. எதையும் அனுபவிப்பதற்கு ஒரு அவா வேண்டும். மனது தான் அவா என்கிற ஓர் அற்புதத்தை சிந்தையில் ஏற்படுத்தி, இது வேண்டும் என்கிற ஆசையைக் கிளறிவிட்டு, அந்த இன்பத்தை அனுபவிக்க தூண்டுகோலாக இருக்கிறது. அந்த ஆசை இல்லையென்றால், பாரதியாரின் கண்ணுக்குக் கோடிகோடியாகத் தெரிந்த அந்த இன்பம் ஒன்று கூட நமக்குப் புலப்படாது. மனம் ஒத்துழைப்பில்லாத எதுவும் இன்பத்தைக் கொடுக்காது.

ஆசைப்படுவதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும்; ஒரு நியாயம் வேண்டும். ஆசைப்படுவதை அடைய, ஆசையை முன்னிருத்தி அதைப் படிப்படியாக அடைய உழைப்பு தேவை. எந்த உழைப்பும் உற்சாகத்தோடு கலந்து வந்தால் பன்மடங்கு வேகம் கிடைக்கும். ஈடுபாடு இருந்தால், உற்சாகம் தானே கதவைத்தட்டிக்கொண்டு வரும். தானே தனியாகக்கூட வராது; தன்னம்பிக்கையையும் தன் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.

எல்லா ஆசையும் ஆசையாகி விடாது. நியாயமான ஆசைகளுக்கு எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத ஒரு தார்மீக பலம் உண்டு.

நியாயமான ஆசையைத் தேர்ந்தெடுக்க நல்லறிவு வேண்டும்; குறைந்தபட்சம், நன்மை-தீமைகளை அலசுகின்ற மனசாவது வேண்டும்.

நந்தகோபால் என் நண்பர். போனவாரம் போன் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

அவரைப்பார்த்ததுமே  குழந்தைகளுக்கு ஏகப்பட்ட உற்சாகம். "அங்கிள்..அங்கிள்.." என்று சுற்றிக்கொண்டு விட்டன. ஆண்ட்டி அவர் கூட வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு இன்னும் நெருக்கம் காட்டினர்.

விஷயம் இதுதான். நந்தகோபால் மிமிக்ரி பண்ணுவதில் மன்னன். இன்னொரு பிரபலம் மாதிரி அவர் பேசுவது, நடிப்பது எல்லாம் அச்சு அசலாக இருக்கும். இதைத்தவிர, கைவிரல்களை, முட்டியை இப்படி அப்படி அசைத்து, கோணி, குவித்து, பிரித்து வெள்ளைச்சுவரில் மான், பாம்பு, குதிரை, முயல், யானை என்று ஏகப்பட்ட நிழலுருவங்களை அநாயசமாகப் போட்டுக் காண்பிப்பார்.

ஒருதடவை செய்தது இன்னொருதடவை இல்லை என்று அவர் வரும் பொழுதெல்லாம் விதம் விதமாக வெரைட்டியாக நந்தக்குமார் குழந்தைகளை  உற்சாகப்படுத்துவார். குழந்தைகள் சந்தோஷிப்பதில் அவரும் 'குஷி'யாகி, தானும் ஒரு குழந்தையாகி விடுவார். அது தான் விஷயம்.

இவர் செய்து காண்பிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தங்கள் நண்பர்களுக்கு, "பார்த்தாயா, இதை?" என்று வேடிக்கைக் காட்டுவதில்  குழந்தைகளுக்கும் உற்சாகம்.

ஒருதடவை வீட்டுக்கு வந்தபொழுது, பேச்சோடு பேச்சாக தனனையறியாமல் நந்தகோபால் சொன்னார்: "நான் இப்படி குழந்தைகளோடு விளையாடுவது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. 'என்னங்க, இது, குழந்தைகளோடு சரிக்குச் சமமாக?..உங்க வயசென்ன, அவங்க வயசென்ன? நாளைக்கு அதுகளுக்கு உங்க மேலே மரியாதை இல்லாமல் போய்விடும்!' என்று தன் மனைவி குறைப்பட்டுக் கொண்டதாகச் சொன்னார். அதிலிருந்து
'ஆண்ட்டி' அவர் கூட வரவில்லை என்றால், குழந்தைகளுக்கு நந்தகோபாலைப் பார்க்கையில் கூடுதல் சந்தோஷம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போனால், சில அன்பர்கள் பழம், பிஸ்கட், சாக்லெட் என்று ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். குழந்தைகள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து, கள்ளம் கபடறியாத அந்த பிஞ்சுகளின் முகம் மலர்வது கண்டு இவர்கள் மனமும் மலரும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ---இதில் ஒன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. மனசு மகிழ்கிறதே, மனசு மலர்கிறதே, அதுதான் விசேஷம். அதுதான் முக்கியம்.

மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.

அது போகட்டும். நந்தகோபால் எதற்கு வந்தார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே?.


(வளரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, July 12, 2017

சுஜாதா.. சுஜாதா.. சுஜாதா

'குமுதம்'  பத்திரிகையில் 'இதுவரை எதிலும் வெளிவராத சுஜாதா எழுதிய அமர்க்களத் தொடர்' என்று ஆவலைத் தூண்டும் பில்டப் கொடுத்து இந்த வாரத்திலிருந்து   சுஜாதாவின்  தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.

தொடரை வாசித்ததில் அந்த சாவகாச எழுத்தைப் பார்த்து சுஜாதாவின் எழுத்துப் பாணியா இது என்று ஆச்சரியம் ஏற்பட்டது.   அவரின் எழுத்து மயக்கத்தில் திளைத்த வாசக உள்ளங்களுக்குத் தான் வெளிச்சம்!..

இந்த வார அந்தத் தொடரை வைத்து சில சின்னச் சின்ன புதிர்கள்.

புதிர்--1:  நான் எழுதிப் போட்ட மூன்று கதைகள் சு.அ.ப.  போல உடனே திரும்பி வந்தன.

கேள்வி:   அது என்ன  சு.அ.ப.?..    

சு.அ.ப. போல  இன்னொன்று:

கி.போ.க.

(இதுவும் பத்திரிகை அலுவலங்களுக்கு
அனுப்பபடும் கதைகள் குறித்துத் தான்! )                    


புதிர்--2:  எஸ். ரங்கராஜனாகிய  நான் ஒரு தற்செயலாய்த் தான் சுஜாதா ஆனது போலத் தோன்றுகிறது.

கேள்வி:  மேலே கண்ட வாக்கிய அமைப்பில் ஒரு பிழை உள்ளது.  என்ன அது?..

தொடரின் இடுக்கில்  சுஜாதாவின் வாக்குமூலம் போல அவரது  அட்வைஸ் ஒன்று என்னைக் கவர்ந்தது.

அது இது:

"நான் பார்த்த வரைக்கும் என் திறமையெல்லாம்  -- திறமை என்று ஏதாவது இருந்ததென்றால்-- அவாய்டிங்  பேட் ரைட்டிங்!..  (தண்டமாய் எழுதுவதைத் தவிர்த்தல்)  என்னுடையது நல்ல எழுத்து (குட் ரைட்டிங்) என்று நான் சொல்ல மாட்டேன்.  நல்ல எழுத்துக்கு முயற்சி செய்கிறேன்.  அவ்வளவு தான்.  ஆனால் மோசமான எழுத்தைத் தவிர்க்கிறேன்.

த்திரிகைகள் நினைத்தால் எதையும் கவிதை என்று லேபிள் குத்தி உலா விடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.

எதுகை மோனை எல்லாம் கவிதையில் அநாவசியம் என்று சிலர் கருதுவது போலத் தெரிகிறது. ஆனால்  எனக்கென்னவோ -----

எதுகை மோனை 
இல்லையென்றால் 
ஏது கவிதை 
என்று தோன்றுகிறது.


இப்பொழுதெல்லாம் கவிதை
என்றால் இப்படித்தான் என்று
எழுதினாலும் என் பாணியில்
என் கவிதை ஒன்று:

ஒரு பார்வை:                                                                                        
                                                                                             
அய்யோடி!... இந்தக்  கிளிகளுக்குத் தான்
கொய்யா என்றால் எத்தனை ஆசை!
ஒரு கொத்து; ஒரு துளி கவ்வல்; நிமிர்ந்து
ஒரு பார்வை;  இப்படி அப்படி தலை திருப்பல்
அடுத்து அடுத்த கொத்தல்; கவ்வல்; தலை திருப்பல்
கெளசல்யாவுக்கு கொய்யான்னா பிடிக்காது அதனால்
கொய்யா சாப்பிடும் கிளிகளும் பிடிக்காது!
பாமினியே ஒரு சுதந்திரப் பறவை. அதனால்
பறக்கும் கிளி தான் அவளுக்குப் பிடிக்கும்;
கூண்டுக்கிளியைப்  பார்க்கவே சகிக்க மாட்டாள்.              
ரம்யாவிற்கோ கிளியைப் பிடிக்காவிடினும்  அதன்
கழுத்து வளையம் ரொம்பவும் பிடிக்கும்.
ஜெயத்திற்கோ ஓவியம் என்றால் உயிர்
கேட்டால் ஓவியக்கிளியின் ஒயில்
நிஜக்கிளிக்கு வருமா என்பாள்.
கிளியோ புலியோ எதுவோ ஒன்று;
அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே
அது தான் வேடிக்கை.


ழுத ஆரம்பித்து மூன்று தொடர்கள்  அப்படியே அரைகுறையாக நிற்பது வருத்தமாக இருக்கிறது.

1.  ஆத்மாவைத்  தேடி...

2.  இனி...

3.  அழகிய தமிழ் மொழி இது!


முதலில் சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் எழுத முயன்ற 'அழகிய தமிழ் மொழி இது' தொடரை  விரைவில் தொடர்ந்து முடித்து விடுவதாக   இருக்கிறேன்.

அதற்கு அடுத்து  இனி..  தொடரை தொடர ஆரம்பிக்க வேண்டும்.

கடைசியாகத் தான் 'ஆத்மாவைத் தேடி..'   ஆனால் 'ஆத்மாவைத் தேடி..க்காகத் தான் தேடித் தேடி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இந்த முப்பெரும் ப்ரொஜெக்ட்டும் ஒரு பக்கம்  மனசில் அலை பாய்ந்து கொண்டிருக்க   இடையில் தான் இந்தப் பதிவு மாதிரி ஜல்லியடித்தல் எல்லாம்..

பூவனம்  தளப் பதிவுகளை சலிக்காமல் வாசித்து பின்னூட்டம் இடும் பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றி.



படங்கள் உதவிய நண்பர்களுக்கும் நன்றி.



Thursday, July 6, 2017

என்றைக்கும் புதுசு தான்...


குக்கூ வென்றது கோழி அதன் எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.                                                        

                                                                                   (குறுந்தொகை- 157)

இரவில் கிடைத்ததாலோ என்னவோ
இன்னும் விடியவில்லை
                                                                 
                                                                        -யாரோ



              குதிரை வேதம்

1.
குதிரைகள் கடவுள் ஜாதி
கும்பிடுதல் உலக நீதி
புணர்ந்தபின் குதிரைகள்
ஒரு நாளும் தூங்கியதில்லை
தொட்டதும் சிலிர்க்கும் குதிரை
சவுக்குக்கா பணிந்து போகும்?

2.

குளம்படி ஓசை- கவிதை
குதிரையின் கனைப்பு - கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் நுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

3.
கூட்டமாய்ப் பறவை போல
குதிரைகள் பயணம் செய்யா..
இலக்குகள் குதிரைக்கில்லை...
முன் பின்னால் அலைவதைத் தவிர
இலக்கில்லா மனிதர் பெரியோர்.
உள்ளவர் அலைய மாட்டார்...
நிலம் பரவி கால்கள் நீட்டி
கன்னத்துப் பக்கம் அழுந்த
குதிரைகள் தூங்குவதில்லை..
ஏனைய உயிர்கள் போல....

5.

நீர் குடிக்கக் குனியும் குதிரை
நிழல் தெரியப் பின்னால் போகும்
மிரளுது மிருகம் என்பார்
சீர்குணம் அறிய மாட்டார்
வேறொன்று குடிக்கும் போது
தான் கலக்கல்  கூடாதென்று
குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை
மிருகத்தில்  குழந்தை ஜாதி!

6.

விருப்புடன்  பிறந்த குதிரை
கொம்பில்லை;  விஷமுமில்லை..
தர்மத்தைச் சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவார்?..

7.
குரங்குகள் மனிதர் போல
வளர்ந்தது உண்மையாயின்
குதிரைகள் மாறும்  ஒருநாள்

8.
குரங்குகள் மடியும் அன்று..
கதறிட  மறுக்கும் குதிரை
கல்லென்று நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும்
உலகத்தைக் குதிரை அறியும்

                                                                                  --  பாலகுமாரன்

தேடப் போய்
இருந்ததும்
தொலைந்தது.

                                                                                 --  மாமல்லன்


சமரச வேஷமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்                  

                                                                            -  அப்துல் ரகுமான்

கை ஓய இருளை விடியும் வரை
கடைந்த  இரவு
ஒரு துளி வெண்ணையாய் உயரத்தில்
அதை வைத்து விட்டு நகர்ந்தது

                                                                              --  தமிழன்பன்


'அகர முதலெழுத்தெல்லாம்' என்று ஆரம்பிக்கும் முதல் திருக்குறள் அனைவருக்கும் தெரியும்.

1330=வது கடைசிக் குறள்?..

'ஊடல், கூடல்' சம்பந்தப்பட்ட ஒப்பற்ற குறளும் என்றைக்கும் புதுசு தான்!..
Related Posts with Thumbnails