மின் நூல்

Monday, January 23, 2017

'எழுத்து' சி.சு. செல்லப்பா

(பொங்கல் திருநாள் வந்தாலே ஜல்லிக்கட்டின் நினைவும் வந்து விடும்.  ஜல்லிக்கட்டை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம்  பழம் பெரும் எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் நினைவும் கூடவே வராமல் இருக்காது.  அவரது 'வாடிவாசல்' நாவல் ஜல்லிக்கட்டு  வீர விளையாட்டை நிலைக்களனானக் கொண்ட தமிழின் குறிப்பிடத்தக்க புதினம்.   எனது  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூலிலிருந்து   அமரர் செல்லப்பாவின் நினைவாக இக்கட்டுரையை எடுத்துப் போட்டிருக்கிறேன்.) 
  து ஒரு எழுத்தாளனின் கதை.

எழுத்தாளன் என்கிற வார்த்தையை அதன் முழு அர்த்தத்தில் இங்கே உபயோகித்திருக்கிறேன். காணும் காட்சிகள் ஏற்படுத்தும் சலனத்தின் தேடலாய் நெஞ்சில் முகிழ்க்கும் கற்பனைப் பின்னல்களை சுவைபடக் கதைகளாய் எழுதுவோர் எழுத்தாளர், சரி. அந்த எழுத்தாளரைப் பற்றியே ஒரு கதையா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். இது அந்த எழுத்தாளரையும் அவரது எழுத்தைப் பற்றியதுமான கதை. தன் வாழ்க்கையின் சர்வ பரியந்தமும் எழுத்தே என்று எழுத்துக்காக வாழ்ந்த ஒரு எழுத்தாளரின் வாழ்க்கைக் கதை இது. அவர் வீம்புடன், மிகுந்த சிரமத்திற்கிடையே நடத்திய பத்திரிகையின் பெயரும் எழுத்து' என்று அமைந்து போனது தான் அதிசயம்.

அவர் தான் சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா. மதுரைக்கு அருகிலுள்ள வத்தலகுண்டில் பிறந்தவர். குடும்பத்தின் சொந்த ஊர் பக்கத்து சின்னமனூர். ஆகையால் சி.சு. செல்லப்பா ஆனார். சி.சு. செல்லப்பா மிகவும் நேசித்த பி.எஸ்.ராமையா வத்தலகுண்டுக்காரர் என்கிற நினைவும் மறக்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது.

செல்லப்பா தேச சுதந்திரத்திற்காக சிறையேகிய செம்மல்களில் ஒருவர். சிறையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைதி எண் பொறித்திருந்த பித்தளைத் தகட்டை ரொம்ப நாள் ஒரு நினைவுச்சின்னமாக தன்னோடையே வைத்திருந்தார் என்று படித்திருந்த நினைவு இருக்கிறது. யாருக்காகவோ, யாரின் நிர்பந்தத்தின் பேரிலோ, அல்லது எதையும் எதிர்பார்த்தோ அவர் சிறை செல்லாதினால் அந்த பித்தளைத் தகடே அவரது ஆத்மார்த்த நினைவுச் சின்னமாயிற்று, போலும்.

செல்லப்பாவுக்கு கல்லூரி வாழ்க்கை மதுரையில் அமைந்தது. கல்லூரியில் படிக்கும் பொழுதே தேசத்தந்தையின் மீது ஏற்பட்ட பற்றும் பாசமும் தேசத்தின் அடிமை விலங்கொடிக்கும் சுதந்திரப் போராட்ட வேள்வியில் இவரைக் குதிக்க வைத்தது. பிற்காலத்தில் தனது அந்தப் பழைய நினைவுகளைக் குவித்து 'சுதந்திர தாகம்' என்கிற நாவலை எழுதினார்; கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு பக்கங்களை மூன்று தொகுதிகளாகக் கொண்டது. பல அரிய செய்திகளை இந்நாவலில் நம்முடன் செல்லப்பா பகிர்ந்து கொள்கிறார்.

எழுத்தாளர் மெளனி அடிக்கடி சொல்கிற மாதிரி, அதுவும் ஒரு தற்செயலான நிகழ்வு தான். சுதேசமித்திரன் தீபாவளி மலர் ஒன்றில் செல்லப்பா அந்நாளைய தமிழ்ச் சிறுகதைகளின் சுணக்கம் குறித்து ஒரு கட்டுரை எழுதப் போக, அது பற்றிய உரத்த சிந்தனையாய் ஒரு விவாதகளம் உருவாயிற்று. அந்த விவாதத்திற்கு பதில் சொல்லும் விதமாக, எந்தப் பொருளாதார வசதியுமற்ற செல்லப்பா மனத்தில் ஏற்பட்ட ஒரு துணிவில் மனைவியின் கழுத்து நகையை அடகு வைத்து, ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார். கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கிற கதைதான் இது. இருந்தும் வழக்கமாகத் தனக்கு இருக்கும் உறுதி கலந்த துணிச்சலில் இந்தக் காரியத்தைச் செய்கிறார் செல்லப்பா. அப்படி அவர் ஆரம்பித்த பத்திரிகை தான் 'எழுத்து'.

1959 ஜனவரியில் திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து 'எழுத்து'வின் முதல் இதழ் வெளிவந்தது. அட்டையில் 'புதுமை இலக்கிய மாத ஏடு' என்று அச்சிட்ட அறிமுகத்தோடு, தலையங்கத்தில், ' இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களுக்குக் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத் தரமான புதுச் சோதனைகளுக்கு எழுத்து இடம் தரும்' என்கிற பிரகடனத்துடன் 'எழுத்து' வெளிவந்தது. முக்கியமாக ஆக்கபூர்வமான இலக்கிய விமரிசனங்களுக்கு, சிறுகதைகளுக்கு என்று குறிப்பிட்ட துவக்கம் கொண்ட எழுத்து, ந.பிச்சமூர்த்தியின் 'பெட்டிக்கடை நாரணன்' புதுக்கவிதையில் ஆரம்பித்து அதுவே எதிர்பாராத திசையில் பயணித்து புதுக்கவிதைகளுக்கு நிலைக்களனாக வும் ஆயிற்று. ஒவ்வொரு மாதமும் மிகுந்த சிரமத்திற்கிடையே 'எழுத்து' பத்திரிகையை சி.சு. செல்லப்பா வெளியிட்டு வந்தாலும், ஒரு துணிச்சலுடன் 'எழுத்து'வின் வெளியீடுகளுக்காக ஒரு பதிப்பகத்தையும் தொடங்கிய அதிசயத்தையும் செய்கிறார் அவர். தமிழின் முதல் புதுக்கவிதை நூலான பிச்சமுர்த்தியின் 'காட்டு வாத்து' இந்தப் பதிப்பகத்தின் மூலம் தான் வெளிவந்தது. பிரசுரமான 'எழுத்து' பிரதிகளை தானே சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து இலக்கிய ஆர்வலர்க்கிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திய செல்லப்பாவின் பணி பிரமிக்கத்தக்கது. கல்லூரிகளின் படிகளேறினார்; மாணவர்களிடையே தமிழ்ச் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று கொண்டு போய்ச் சேர்த்தார். எஸ். வைத்தீஸ்வரன், சி. மணி, ந.முத்துசாமி, பிரமிள், தர்மு சிவராமு, வெங்கட் சாமிநாதன் -- என்று பலரின் அறிமுகம் 'எழுத்து'வின் மூலமாகத் தான் கிட்டியது. டி.கே.துரைஸ்வாமி (நகுலன்) சுந்தர ராமசாமி (பசுவய்யா), க.நா.சு., ரா.ஸ்ரீ.தேசிகன், க. கைலாசபதி, கிருஷ்ணன் நம்பி என்று எல்லோரும் 'எழுத்து'வில் எழுதினர். எல்லோரையும் எழுத வைத்து படைதிரட்டிய பெருமை செல்லப்பாவுக்காயிற்று.

சி.சு. செல்லப்பா என்றால் சடாரென்று வெகு எளிமையான அவரின் தோற்றம் தான் முதலில் நினைவுக்கு வரும்; அதைத்தொடர்ந்து அவரது 'வாடிவாசல்' குறுநாவல் மனத்தில் பளீரிட்டு, மதுரை பக்க 'ஜல்லிக்கட்டு' வீரவிளையாட்டு பற்றிய நினைப்புகள் நினைவில் தேங்கிச் சிலிர்க்கச் செய்யும். எல்லா விளையாட்டுகளை யும் போலவே இந்த விளையாட்டும் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதபடி மனிதனும், மிருகமும் என்று ஆன விளையாட்டு இது. இதில் தான் எத்தனை நெறிமுறைகள் என்று யோசிக்கத் தோன்றும். எல்லாவற்றிற்கும் நடுவே அந்த காளை அணையும் விளையாட்டுக் களத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்துவார் செல்லப்பா. ஏற்கனவே இரு காளைகளை அடக்கி விட்டாலும், தன் தந்தை அம்புலியைக் காவு கொண்ட காரிக்காளையை புறம் கண்டுவிடவேண்டு மென்பது தான் வாலிபன் பிச்சியின் நோக்கம். அந்தக் காரிக்காளையின் உரிமையாளரான ஜமீன்தார், பிச்சியின் மைத்துனன் மருதன், பிச்சிக்கு நுணுக்கங்களை போதிக்கும் கிழவன் என்று ஒவ்வொருவரின் உணர்வுகளைக் கூறிக்கொண்டே கதையின் விறுவிறுப்பு கூடும். 'பார்த்துடலாம்' என்று பிச்சி கதையின் ஆரம்பத்தில் சொன்ன சொல்லைக் காப்பாற்றியது தான் கதை. 'ஏறு தழுவுதல்' என்னும் பழந்தமிழர் விளையாட்டை இவ்வளவு நுண்மையாய் யாரும் சொன்னதில்லை என்கிற பெருமை பெறுகிறது, 'வாடிவாசல்'.

பதட்டமே கதையாகிப் போன அவரது 'குருவிக்குஞ்சு' கதையைப் பற்றிச் சொல்ல வேண்டும். தனது ஆசை சின்னஞ்சிறு தங்கைக்கு என்று அண்ணன் குருவிக் கூட்டிலிருந்து குருவி இல்லாத நேரம் பார்த்து அதன் குஞ்சை விளையாட்டு காட்ட தூக்கி வந்து விடுகிறான். 'குருவியிடமிருந்து குஞ்சைப் பறிக்கலாகாது; எடுத்த இடத்தில் உடனே வைத்து விட்டு வந்து விடு' என்கிறாள் தாய். இதற்கிடையில் குருவிகள் கூட்டுக்குத் திரும்பி விட்டன. குஞ்சைக் காணாது அவை பதறுகின்றன. அம்மா சொல்படி குஞ்சை எடுத்த இடத்தில் வைக்க வந்தவனது கையில் இருக்கும் குஞ்சையும் அவை பார்த்து விடுகின்றன.. இவனுக்கோ பத்திரமாக குஞ்சை எப்படி வைப்பதுஎன்கிற பதட்டம்' என்று இனிமேல் என்ன நடக்கப் போகிறதோ என்கிற படிப்பவரின் எதிர்பார்ப்பைக் குறிவைத்து கதையை நகர்த்திக் கொண்டு போவார் செல்லப்பா.

கணவனை இழந்த ஒரு அபலைப் பெண்ணின் மன உளைச்சல்களைப் பற்றிப் பேசும் 'ஜீவனாம்சம்' நாவல், அதை எழுதிய முறைக்காக புதுமுயற்சியாக செல்லப்பாவை பாராட்டத் தோன்றும். செல்லப்பாவின் முதல் சிறுகதை சங்கு சுப்ரமணியன் அவர்கள் ஆசிரியராக இருந்த 'சுதந்திர சங்கு' இதழில் பிரசுரமானது. இவரது 'சரசாவின் பொம்மை', 'கைதியின் கர்வம்','மூடி இருந்தது', 'பந்தயம்' போன்ற சிறுகதைகள் சிறப்பானவை. இவரது சிறுகதைகள் ஏழு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. செல்லப்பாவின் படைப்புலகம் தனித்தன்மை வாய்ந்தது. எதையும் கூர்மையாகப் பார்த்த பார்வையும் அதைச் சுவையாகச் சொல்கின்ற நேர்த்தியும் அதிலிருக்கும்.

'எழுத்து' ஆரம்பிப்பதற்கு முன்னால், செல்லப்பா 'தினமணி கதிரி'ல் உதவி ஆசிரியராய் இருந்தார். அப்பொழுது கதிருக்கு துமிலன் தான் ஆசிரியர். முதலில் 'தினமணி கதிர்' தனிப்புத்தமாக இல்லை. 'சுடர்' என்று தினமணி செய்தித்தாளின் பெரியதொரு பக்கத்தை எட்டாக மடித்துக் கொடுக்கிற மாதிரி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினமணியுடன் தருகிற துணைப்பதிப்பாக இருந்தது. 'சுடரை'க் கதிராக மாற்றியதற்கும் ஆலோசனை சொன்னது செல்லப்பாதான் என்பார்கள். கதிரில் பெற்ற பயிற்சி தான் தனியாக ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிற துணிச்சலை செல்லப்பாவிற்கு தந்திருக்க வேண்டும்.

செல்லப்பாவுக்கென்று சில தனித்தன்மையான குணங்கள் இருந்தன. செல்லப்பாவை நினைத்தாலே, அவரது குணநலங்கள் நினைவுக்கு வருகிற அளவுக்கு, அத்தகைய குணநலன்களுக்கு உருகொடுத்து செல்லப்பா என்று பெயர் கொடுத்த மாதிரி இருக்கும். வாழ்க்கை நெடுக தன்னை இழந்து விடாமல் இதைக் காப்பாற்றி வந்திருக்கிறார் அவர்.அவருக்கென்று அவருக்குள்ளேயே இறுகிப் போன குணம் ஒன்று உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட நேரத்திலும் யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ள அவரது சுயகெளரவம் இடம் கொடுத்ததில்லை. நியாயமாக கிடைத்த விருதுகள் கூட இதில் அடக்கம் என்பது தான் ஆச்சரியம். ராஜராஜன் விருது, அக்னி அட்சரா விருது, இலக்கிய சிந்தனை அங்கீகாரம் என்று எதையும் ஏற்றுக் கொண்டதில்லை. கனடா வாழ் தமிழர்கள் நிறுவிய 'விளக்கு' அமைப்பு மிகவும் வற்புறுத்தி புதுமைப்பித்தன் விருதை வழங்கியபோது ஒரு நிபந்தையுடன் ஏற்றுக் கொண்டார். விருதுக்கான தொகை காசாக வேண்டாமென்றும் தன் புத்தகம் ஒன்றைப் பதிப்பித்துத் தருமாறு அவர் கேட்டுக் கொண்டாராம். அதற்கு இணங்க அவரது 'என் சிறுகதைப் பாணி' நூல் வெளிவந்தது. அவரது காலத்திற்குப் பிறகு தான் அவரது 'சுதந்திர தாகம்' நூலுக்கு சாகித்ய அகாதமியால் விருது கொடுக்க முடிந்திருக்கிறது.

சுறுசுறுப்புக்கும், கடுமையான உழைப்பிற்கும் பேர் பெற்றவர் செல்லப்பா. இவரது 'தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது' முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஓர் அலசல் நூல். அதே மாதிரி தேர்ந்தெடுத்த புதுக்கவிதைகளைத் தொகுத்து 'புதுக்குரல்கள்' என்கிற பெயரில் முதன்முதலாக புதுக்கவிதைகளுக்கான தொகுப்பு நூல் வெளியிட்டவர் அவரே. தமது இறுதிக் காலத்திலும் தளர்வுறாது நினைவுகளைத் திரட்டி நிறைய எழுதியிருக்கிறார். 'எழுத்து' பத்திரிகை பற்றி 'எழுத்துக் களம்' என்னும் நூல் வாரி வாரி நிறைய தகவல்களை வழங்குகிறது. கவிஞர் என்றால் அவருக்கு கடைசி வரை ந.பிச்சமூர்த்தி தான்; 'பிச்சமூர்த்தியின் கவித்துவம்', 'ஊதுவத்திப் புல்' ஆகிய நூல்கள் தமது கவிஞர் நண்பருக்காக செல்லப்பா எழுதினார்.

அதே மாதிரி சிறுகதை என்றால் அவருக்கு பி.எஸ். ராமையாதான். பி.எஸ். ராமையாவின் 400 சிறுகதைகளை அலசி ஆராய்ந்து அது பற்றி அவர் எழுதிய 'ராமையாவின் சிறுகதைக் களம்' என்னும் நூல், அவர் தன் நண்பரின் மேல் வைத்திருந்த பரிவையும் பாசத்தையும் என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.


--  'ந.பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா.  வரை'
     சந்தியா பதிப்பகம்.
     www.sandhyapublications.com
Related Posts with Thumbnails