மின் நூல்

Saturday, October 29, 2016

சில எழுத்தாளர்களும் சில பத்திரிகைகளும்

 எழுத்துலம்  சார்ந்த ஒரு சுவாரஸ்யமானத்  தொடர்:

பகுதி: 2

ந்தப் பகுதியை எழுத எடுத்துக் கொண்ட பொழுதே எனக்கு அந்த சந்தேகம் இருந்தது.   வழக்கம் போல பதிவைப் படிப்பவர்கள் (அல்லது பார்ப்பவர்கள்)  நிறையப் பேர் இருந்தாலும்  பின்னூட்டம் போட்டுத் தங்கள் கருத்தைச் சொல்லப் போகிறவர்கள்  குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.


இந்தத் தலைப்பிலான சென்ற பதிவைப் படித்தவர்கள் கிட்டத்தட்ட  500 பேர்கள்.  பின்னூட்டங்கள் எட்டே வந்திருக்கின்றன.  ஐநூறில் எட்டு நட்சத்திரங்கள்.  1.6%.   இந்த எட்டில்  ‘அருமை’ போன்ற மொக்கைப் பின்னூட்டத்தை யாரும் போடவில்லை என்பது ஓர் ஆறுதல்.

பின்னூட்டங்கள் வாசிப்பவர்களுடான உரையாடலைத் துவக்கி வைக்கின்றன என்பது உண்மை.  அத்தகைய உரையாடல்களின் மூலம் தான் ஒன்றை  வாசித்ததின் சகல பரிமாணங்களையும் அடைய முடியும் என்பது இணைய வாசிப்புகளில் நமக்குக் கிடைக்கும் செளகரியம்.  இருந்தாலும் 
பின்னூட்டங்களின் எண்ணிக்கை வைத்து பதிவை மதிப்பிட முடியாது  அல்லது பின்னூட்டங்களை எதிர்பார்த்து  விஷயச் செறிவுள்ள பதிவுகளை எழுதாமலும் இருக்க முடியாது..   பத்திரிகை படிக்கும் வாசகர்களிடையே  அந்தப் பத்திரிகைகளில்  படைப்பிலக்கியம் படைப்போரைப் பற்றிய மதிப்பீடுகள், படைப்போருக்கும் அவர்கள் எழுத்துக்களைப் பிரசுரிக்கும் அந்தப் பத்திரிகைகளுக்கும்  இருக்கும் ஏதோ புரிபடாத சம்பந்தத்தையும் வாசகர் உணர்வில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவுத் தொடரையே எழுதத் துணிந்தேன்.

பத்திரிகைகளுக்கும் படைப்புலகுக்கும்  உண்டான சம்பந்தம் ஒன்றில் ஒன்று கலந்தது.  படைப்பாளர்களின்  படைப்புகளை  வாசிப்போரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்  மகத்தான பணியைச் செய்பவை பத்திரிகைகள்.   எழுத்து என்பது வாசிப்பவனின்  உணர்வுகளில் செயல்பட்டு அவனிடம் மாற்றங்களை விளைவிக்கும்  சக்தி மிக்க ஆயுதம் என்பதினால்  நல்ல சிந்தனைகளை வாசிப்போர் மனசில்  பதியமிடவும்  அதன் விளைச்சலை மனித மனசுகளின்  பண்பட்ட  முன்னேற்றதுடன் இணைப்பதற்காகவும் படைப்பாளர்களின் ஆக்கபூர்வமான பணிகள் பெரிதும்  எல்லா தேசங்களிலும் உவந்தோதப்படுகின்றன.  பிரஞ்சுப் புரட்சியில் கூட எழுதுகோலின் பணி தான் புரட்சியின் எல்லாச் சிறப்புகளுக்கும் தலைமை வகித்தது. 

எல்லாக் கலைகளும் உணர்வு சம்பந்தப்பட்டவை.   அவைகளின் மதிப்பு என்பது அவற்றின் வினையாற்றலைப் பொருத்தது.   காசு, பணம் தொடர்பில் எடை போட முடியாதது.   அதனால்  படைப்புகளுக்கு  பொருளாதார ரீதியான மதிபீடுகள் நிர்ணயிக்க முடியாதாகையால்  பத்திரிகைகள் எழுதுவோருக்கு ஏதோ ஒரு தொகையை தங்கள் போக்கில் நிர்ணயித்து அவர்களின் படைப்புகளுக்கு சன்மானமாகக்  கொடுக்கின்றன.   தமிழ் பத்திரிகைகளில் ஆனந்தவிகடன்  ஆதிகாலத்திலிருந்தே  இந்த சன்மானம் வழங்குவதை ரொம்பவும் அடக்கத்துடன் தெரியப்படுத்தும் என்பதனையும் இங்கு  குறிப்பிட வேண்டும்.   படைப்புகளைப் பிரசுரிக்க இயலாத நேரத்தும்,
'தாங்கள் அன்புடன் அனுப்பி வைத்திருந்த கதையைப் பிரசுரிக்க இ;யலாமைக்கு வருந்துகிறோம்;  தங்கள் படைப்பின் தரத்தைப் பற்றிய தீர்ப்பாக இதை  எடுத்துக் கொள்ள வேண்டாம்.  தங்கள் படைப்புகளைத்  தொடர்ந்து விகடனுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்'  என்று எழுதுவோருடனான உறவை நெருக்கத்துடன் பகிர்ந்து  கொள்வார்கள்.  சில பிரபல பத்திரிகைகள் கூட  படைப்பாளியின் படைப்புக்கு ஏதோ ஒரு தொகை கொடுத்து விட்டு அந்தப் படைப்புகளுக்கு உரிமை கோரும் அவலங்களும் தமிழகப் பத்திரிகைகளில் உண்டு.  இத்தனைக்கும் இடையே  வளர்ந்து விட்ட  நிறைய பத்திரிகைகள் படைப்புகளை விஷய தானமாகவே பெறும்  அநியாயங்களும் நடக்கின்றன.  

சிறு பத்திரிகைகளைப் பொறுத்த மட்டில்  பெரும்பாலும் படைப்பாளிகளே ஒரு  இலட்சிய நோக்கில்  ‘தமது’ பத்திரிகையாக  தாம் வெளியிடும் பத்திரிகையை சுவீகரித்து அப்பத்திரிகைகளை  பெரும் பொருளாதார இடிபாடுகளை சமாளித்து   நடத்துகின்றனர்.   அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு  உன்னத நோக்கத்திற்காக வெளியிடுவதால்  அடுத்த இதழ் வெளிவந்தால் போதும் என்று  நித்ய கண்ட  பூர்ணாயுசில் தடுமாறிக் கொண்டிருப்பார்களே ஆதலால் அவர்கள் யாரிடத்திருந்தும் பொருளாதார சம்பந்த எதிர்பார்ப்புகள்  இருக்க  வழியே இல்லாது போகும்.   தங்கள்  பொருளாதார இழப்பைத் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளும் இலட்சியவாதிகள் அவர்கள்.

இப்படி பத்திரிகை உலகம்  என்பது  நிறைய வகைப்பாடுகளைக் கொண்டது.  பத்திரிகை வெளியிடுதல் என்ற வியாபாரத்திற்காக  ஒரு முதலீடை மூலதனமாகக் கொண்டு  அதனை பன்மடங்காக பெருக்குவதற்கான  வியாபாரம் இது.   ஒரு விலைக்காக விற்பனை செய்யப்படும் சரக்கு.  என்னதான் வியாபாரம் என்று வந்து விட்டாலும்,  மனித மேன்மைக்கும் அவனது மேலான உணர்வுகளுக்கும் தீனி போட வேண்டிய  வியாபாரம்  என்று வந்து விட்டதினால்   சில தார்மீக நெறிகளுக்கு உட்பட்டதாக இந்த வியாபாரம் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு  விற்பனை செய்வோர், விலை கொடுத்து வாங்குவோர் என்று எல்லா மட்டங்களிலும்   உண்டு.

விற்பனை என்று வந்து விட்டாலே  அதனை வாங்குவோர் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப  இருக்க வேண்டும் என்பதனை நிச்சயப்படுத்த வேண்டியதாகி விடுகிறது.   இல்லையென்றால்  இழப்பைச் சந்திக்க வேண்டும்.   கற்பனை சம்பந்தப்பட்ட உலகம் இதுவென்றாலும்  எல்லா மட்டங்களிலும் கற்பனையாகவே இருந்து விட முடியாது.  சரியாகச் சொல்லப் போனால், கதைப்  பத்திரிகை உலகம் என்பது  நிஜ உலக நிதர்சனத்தில் கற்பனை உலக நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

கதாசிரியர்களின் படைப்புகள் கற்பனையாக இருக்கலாம்.  அனால் அந்தக் கற்பனைகளை விலை வைத்து விற்கும் விஷயங்களில் கற்பனையாக இருக்க முடியாது.   தயாரிப்பு,  விளம்பரம், மக்கள் கையில் கொண்டு போய்ச் சேர்த்தல்,  அப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பதில்  இருக்கும் இடை  நிலை சமாச்சாரங்கள் என்ற ஏகப்பட்ட  நிஜங்களின் மத்தியில் தான் இந்தக் கற்பனை வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. 

வெத்துக் கற்பனை என்று  இல்லாமல்  மனித குல மேன்மைக்கான நல்ல விஷயங்களை  நோக்கியப் பயணமாக அந்த கற்பனை செயல்படும் பொழுது   அதுவே  இலட்சியமாகிறது.   அந்த  மாதிரியான  இலட்சியங்களுக்குத் தாலி கட்டிக் கொண்டவர்கள் தங்களுக்கான  இலட்சியங்களில்  தங்கள் எழுத்தைப் பதிக்கின்றனர்.  அதனால் தான் நல்ல இலக்கியங்களைப் படைப்போருக்கும்,  அவற்றை வாசிப்போருக்கும் இடையே  நேரிடையான அறிமுகம், பார்த்துப் பேசுதல் போன்ற நடைமுறை சடங்குகளுக்கு அவசியமில்லாமலேயே ஒரு பந்தம் ஏற்பட்டுப் போகிறது.

பத்திரிகைகள்-- எழுத்தாளர்கள்-- வாசகர்கள் என்ற முக்கூட்டில், தொடர்ந்து தமிழின் சில பிரபல எழுத்தாளர்களையும் அவர்களுக்கென்று அமைந்து போன பத்திரிகைகளையும் தொடர்ந்து பார்ப்போம்.


(தொடரும்)


நண்பர்கள் அனைவுருக்கும்  தீபாவளி  வாழ்த்துக்கள்..


Monday, October 24, 2016

சில எழுத்தாளர்களும், சில பத்திரிகைகளும்

எழுத்துலகம்  சார்ந்த ஒரு சுவாரஸ்யமான தொடர்:

மிழின் வார, மாத இதழ்களைப் பற்றி  நன்றாகவே நமக்குத்  தெரியும்.

சில பத்திரிகைகள் சில எழுத்தாளர்களுக்கென்றே அமைந்து விட்ட மாதிரி தோற்றம் கொடுக்கும்.   அவரவருக்கென்று அமைந்து போன பத்திரிகைகளில் அவர்கள் எழுதும் பொழுது அவை தனிக் கவனம் பெற்றவை போலவும்,  பாந்தமாகப் பிரசுரமாகி இருப்பது போலவும் நமக்குத் தோன்றும்.  அதே எழுத்தாளர்கள்  வேறு பத்திரிகைகளில் எழுதும் பொழுது அந்தப் பத்திரிகைக்காரர்கள் என்னதான் கவனம் கொண்டு அழகுபடுத்தி இருந்தாலும் சரி, வாசிக்கும் நமக்கு  அந்த எழுத்தாளருக்கென்று அமைந்த பத்திரிகை  என்று நாம் நினைக்கும் பத்திரிகை அளவுக்கு  சோபிக்காது.   

ஒரு எழுத்தாளர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் சரி,  வாசகர்களுக்கு  அவர் எழுதியதின் சிறப்பு ஒரே மாதிரி இருக்க வேண்டியது, தானே?..  அது தான் இல்லை.  சில எழுத்தாளர்களுக்கும் சில பத்திரிகைகளுக்கும்  அப்படி என்னதான் ராசிப்பொருத்தமோ தெரியவில்லை,  அவர்களுக்கு அமைந்து போன பத்திரிகைகளில் அவர்கள் எழுதும் பொழுது மட்டும் அந்தப் பத்திரிகைக்கு எழுதுவதற்கு அவர் தான் பொருத்தமானவர் மாதிரி ஒரு தோற்றம் கொள்வார்.   எழுத்தாளரின் கதைகளுக்கு அல்லது தொடருக்குப் போடும் சித்திரங்களினாலோ அல்லது முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும் முறைகளினாலோ   என்னவோ,  ஒரே எழுத்தாளரின் எழுத்தை  வெவ்வேறு பத்திரிகைகளில் வாசகர் ரசிக்கும் ரசனைகளிலும் மாற்றம் தெரியும்.   எல்லா வாசகர் உணர்வுகளும் ஒரே மாதிரி இருக்காது ஆதலால்  எந்த எந்த எழுத்தாளருக்கு எந்தந்த பத்திரிகை அவருக்காக அமைந்து போன பத்திரிகை என்று நாம் தீர்மானிக்கும்  பட்டியலிலும்  வித்தியாசங்கள் இருக்கலாம்.

கறாராகச் சொல்ல வேண்டுமானால்,  இது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களாலேயே  உணர  முடியாத ஒரு வாசக உணர்வு.  
வார, மாத பருவ இதழ்கள் வாசிக்கும் தேர்ந்த வாசகர்களாலேயே உணர முடிந்த ஒரு உணர்வு.

பத்திரிகை எழுத்து என்று வந்து விட்டால்,  பத்திரிகை--எழுத்தாளர் என்று இந்த இரண்டு நிலைகளையும் தவிர்த்து ஓவியர் எனறு ஓர் ஆசாமியும் இருக்கிறார்.   'பொன்னியின் செல்வனி'ல் கல்கி தம் எழுத்தால் கதை மாந்தர்களை வாசிப்பவர் உணர்வில் பதித்து வைத்ததற்கு  உருவம் கொடுத்த மாதிரி  ஓவியர் மணியம்  சித்திரங்கள் இருந்தன.   ஆழ்வார்க்கடியான்,  வந்தியத்தேவன், நந்தினி, பூங்குழலி, வானதி,  குந்தவை,  ஏன் அந்த ரவிதாசன் கூட இப்படித்தான்  இருந்திருப்பார்கள் என்று நாம் நம்பத் துவங்கினோம். அதனால் தான்  கல்கி  இதழிலேயே  பொன்னியின் செல்வன் பிற்காலத்து  மீள் பிரசுரங்களாக பல தடவைகள் பிரசுரமான போது, 
கதை மாந்தர் ஓவியங்களைப் பொறுத்தமட்டில்  ஆரம்பத்து நமது நம்பிக்கையை மாற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டோம்.   அந்தளவுக்கு 'பொன்னியின் செல்வனைப் பொறுத்த மட்டில் ஓவியரின் பங்களிபபு கல்கியின் எழுத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமான இருந்தது.   

 இந்த ஓவியர் ஆளுகை மீறி  (எந்த ஓவியர் சித்திரம் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி என்று)  தம் எழுத்தால் மட்டும் வாசிப்பவர் மனசை கவரந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.  இந்த லிஸ்டில் குமுதம்  எஸ்.ஏ. பி., லா.ச.ரா., ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன் போன்றவர்கள் வருவார்கள்.


தமிழின் சில பிரபல எழுத்தாளர்களுக்கென்றே  அமைந்து போன அவர்களுக்கான பத்திரிகைகளைச் சொல்கிறேன்.   இப்பொழுது நான் சொல்ல வரும் விஷயம் உங்களுக்கும் சுலபமாகப் புரியும்.
.
எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர்  பாஷ்யம் அய்யங்கார்.
சென்னை தி.நகரில்  சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரில் இருக்கும் மஹாலெஷ்மி  தெருவில் இவர் வசித்த பொழுது  நாலைந்து தடவைகள் நேரில் சென்று பேசிப் பழகியிருக்கிறேன்.   

அப்படி ஒரு தடவை அவரைச் சந்தித்த பொழுது இதே விஷயத்தை-- எழுத்தாளருக்கு அமைந்து போகிற பத்திரிகை 
விஷயத்தை-- அவரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது
“அப்படியா?..” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்  கொண்டார்.  வாசகர்களிடம் பந்தா காட்டாமல்  இனிமையாக  பழகுவதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன்  தான்.  

இப்படிப்பட்ட சாண்டில்யனுக்கு  அமைந்து போன  பத்திரிகை  ‘குமுதம்’ தான்.  அந்தப் பத்திரிகையில் அவர் சரித்திரத் தொடர் பிரசுரமாகும் பொழுது  அந்தத் தொடரே தனிக் களை கொண்டு பிரமாதமாக இருக்கும்.   சொல்லப் போனால்  குமுத்த்திற்கு எழுதுவதற்கு முன்னால்  அவர் ‘அமுதசுரபி’ பத்திரிகையில்  ஜீவபூமி, 
மலைவாசல்  போன்ற தொடர்களை எழுதியிருக்கிறார்.  இருந்தாலும்  குமுத்த்தில் அவர் கடல்புறா,  யவனராணி போன்ற தொடர்களை எழுதிய  காலம்   மறக்கமுடியாதது.    குமுத்த்தில் அவர் எழுதிய  முதல் சரித்திரத் தொடர்  கன்னிமாடம்.  இந்தக் கதைக்கு ஓவியர் ஸாகர் படம் வரைந்திருந்தார் என்று நினைவு.   இதைத் தவிர மற்ற தொடருக்கெல்லாம்  லதா தான் சாண்டில்யன் கதைகளுக்கு  ஓவியம் வரைந்தார்.   சாண்டியல்யன்  கதா பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டவர் லதா.   குமுதம், சாண்டில்யன், ஓவியர்  லதா  இதுவும் அமைந்து போய்விட்ட ஒரு வெற்றிகரமான  கூட்டணி.  ஆனாலும் நான் அழுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால் வேறொரு பத்திரிகையில் இதே சாண்டியல்யன் சரித்திரக் கதை எழுதி  லதா ஓவியம் வரைந்திருந்தாலும் குமுதத்தில் சாண்டில்யனைப் படித்த மாதிரி இருக்காது என்பது தான்!..  இதற்குக் காரணம் என்னவென்பதை  சாண்டியல்யனின் எழுத்துக்களில் தோய்ந்த  வாசகர்கள் தாம் சொல்ல வேண்டும்.

ஆக,  சாண்டில்யன்  ஒரு குமுத எழுத்தாளர் என்று அழுத்தமாகச் சொல்ல்லாம்.

ஜெயகாந்தனுக்கு  அமைந்து போன பத்திரிகை 'ஆனந்த விகடன்' தான்.
அவ்வளவு கச்சிதமாக அந்தப் பத்திரிகை அவருக்கு  இருந்தது.  ஆனந்த விகடனில் அவர் கதைகளுக்கான சித்திரங்களை வெவ்வேறு சித்திரக்காரரகள்
வரைந்திருந்தாலும்,  அவர் எழுத்து,  சித்திரங்களை வைத்துத் தீர்மானிக்கப்படாமல் அவரை வைத்தே தீர்க்கமாகத் தீர்மானிக்கப்பட்டதால்,  அவருக்கான எழுத்தின் வீச்சு அவர் ஒருவரையே சார்ந்திருந்தது.

எழுத்தாளர் சாவி ஆசிரியாக இருந்த காலத்து ‘தினமணிகதிரில்’  எழுதிய ஜெயகாந்தனின் கதைகளைப்  பற்றியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.   தினமணிகதிரில்  எழுதிய பொழுது  ஆனந்த விகடன் ஜெயகாந்தன் இல்லை. வாழ்க்கை அவருக்கு  சமூகம் சார்ந்த பிரச்னைகளில் மாற்றுக்  கருத்துக்களைக் கொடுத்திருந்தது.    அந்தக் கருத்துக்கள்  அவர் கதைகளில் பிரதிபலித்தமையால் தினமணிகதிரில்  எழுதும் பொழுது வேறொரு  ஜெயகாந்தனாவே  அவர் உருக்கொண்டார்.

ஜெயகாந்தனின் அந்தந்த காலத்து சிந்தனைககளுக்கு ஏற்ப அவர் எழுத்தும் மாற்றம்  கொண்டிருக்கிறது.   அவர் கொண்ட மாற்றங்களுக்கு  ஏற்ப அந்தந்த காலத்தில்  ஒரு பத்திரிகையும் அவருக்கு அமைந்தது தான் ஆச்சரியம்.  சரஸ்வதியில் எழுதிய  'போர்வை', 'சாளரம்' போன்ற கதைகளைப் பிற்காலத்து அவராலேயே எழுத முடியாது போனதும் இன்னொரு ஆச்சரியம். 

ஜெயகாந்தனின்  எழுத்து வாழ்க்கையை  சரஸ்வதி காலம்,  தாமரைக் காலம், ஆனந்த விகடன் காலம்,  தினமணிக்கதிர் காலம் என்று   நான்காகப் பிரிக்கலாம்.   இந்த நான்கிலும் திருப்தியுறாமல்  சமூகத்தின் சகலமட்ட பிரச்னைகள் மீதான தன் கருத்துக்களைப் பதிவதற்காகவே  ‘கல்பனா ‘  இதழுக்கும் ‘ஞானரதம்’ இதழுக்கும் அவர்  ஆசிரியராக இருந்த பொழுது அந்தப் பத்திரிகைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் சாவி பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர்.  தினமணிக்கதிருக்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்ற பொழுது,   கதிரின் விற்பனையை 7 லட்சமாக உயர்த்துவேன் என்று சபதம் போட்டு செயலாற்றியவர்.    அந்தக் காலத்தில் 7 லட்சம் என்பது குமுதம் விற்பனையைத் தாண்டிய ஒன்று.   அந்த இலக்கை அடைவதற்காக  எல்லாவித எழுத்துக்களும் கலந்த கதம்பமாக தினமணிக்கதிர்  தமிழ் பத்திரிகை உலகம் இதுவரைப் பார்த்திராத புத்தம் புது உருக்கொண்டது.  பத்திரிகையின் பெரிய சைஸ் ஒரு பக்கம் அழகான லேஅவுட்டுகளுக்கு வழிகொடுக்க,  இன்னொரு  பக்கம் ஜெயகாந்தனின்  ‘சமூகம் என்பது நான்கு பேர்',  ஸ்ரீ வேணுகோபாலனின்  'திருவரங்கன் உலா',  ஸ்ரீ வேணுகோபாலனே  புஷ்பா தங்கத்துரை என்ற பெயரில்  'சிவப்பு விளக்கு/ ஏரியா கதைகள்,  தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை அனுபவம்,  கோபலுவின் சித்திரங்களுடன் விந்தனின்  'பாட்டில் பாரதம்' என்று  வினோதமான கலவையுடன் அவரவருக்கு வேண்டியதைப் படித்துக் கொள்ளுங்கள் என்று பந்தி விரித்தது போல தூள் கிளப்பியது.

ஒரே தொடருக்கான கருவை மூன்று பத்திரிகைகளில் எழுதிய ஒரே தமிழ் 
எழுத்தாளர் ஜெயகாந்தனாகத் தான் இருக்க முடியும்.   அவர்  ஆனந்தவிக்டனில் எழுதிய ‘அக்னி பிரவேசம்’ சிறுகதையை,  தினமணிக்கதிரில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று தொடர்ந்து குமுதத்தில்  ‘கங்கை எங்கே போகிறாள்?’  என்று முடித்தார்.   ஒரே கதையை அந்தந்த நேரத்து தனது சமூகப் பார்வையோடு விரித்து மூன்று தொடர்களாக எழுதியிருக்கிறார்.  ஆனால்  குமுதத்தில் எழுதும் பொழுது, விகடன், தி.கதிர் அளவுக்கு  சோபிக்கவில்லை.   இதற்குக் காரணம் அந்தப் பத்திரிகைக்கென்று  அமைந்து போன வாசகர்கள் தாம்.   இதனால் ஜெயகாந்தன் ஜெயகாந்தனாகவே  எழுதினாலும், அவர் குமுதம் எழுத்தாளர் இல்லை என்று தெரிந்து போயிற்று.

இப்படி ஒவ்வொரு எழுத்தாலருக்கும்  ஒரு பத்திரிகை அமைகிறது என்று நீங்களும் உணர்ந்ததுண்டா ?..  சொல்லுங்கள்.

பெரும் பத்திரிகைகளுக்கு  எல்லாக் கோணங்களிலும் அதன் விற்பனை ஒன்று தான் குறிக்கோள்.  அந்த விற்பனைக்காக எந்த ஜகஜ்ஜால உத்திகளையும் மேற்கொள்ள அவை தயார்.   பெயர், புகழ் கிடைத்திட்ட எழுத்தாளர்களைத் தங்கள் இதழில் எழுத  வைத்து  அந்த எழுத்தாளர்களுக்கான வாசக அபிமானத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பத்திரிகை  விற்பனையைக் கூட்ட முயற்சிக்கும்.   ஆனால் அப்படி என்ன தான் முயற்சித்தாலும்  பத்திரிகைகளின் அந்த முயற்சிகளைத் தாண்டிக் கொண்டு எல்லா பத்திரிகைகளுக்கும்  எல்லா எழுத்தாளர்களும் பொருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாமல் போய்விடுகிறது.

இப்போதைக்கு இந்த இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்.  மற்ற  பிரபல எழுத்தாளர்கள்  தொடரும் கட்டுரையில் வரப்போகிறார்கள்.

'இந்த எழுத்தாளருக்கு இந்தப் பத்திரிகை தான்'  என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு வரும் பகுதிகளில் சரிபார்த்துக் கொள்ளவும் செய்யலாம்.   அந்தந்த பகுதி வரும் பொழுது பகிர்ந்து கொள்ளலாம்.  உங்களது மாறுபட்டத் தேர்வு என்றாலும்  அதைப் பகிர்ந்து கொண்டு உங்கள் தேர்வை நியாயப்படுத்தலாம்.

 ஆனால் உங்கள்  எல்லாத் தேர்வுகளையும் பின்னூட்டங்களில் இப்பொழுதே பதிய வேண்டாம்.  நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் பகுதி வரும் பொழுது  உங்கள் தேர்வு பொருந்தி வந்திருந்தாலும் வந்திருக்காவிட்டாலும்  அதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நம் தேர்வுப்படியே இங்கு வெளியாகும் குறிப்புகளும் அமைந்தாலும் அமையாவிட்டாலும்  முறச்சி செய்த நமக்கு  சந்தோஷம் தானே!...   

தனக்கென்று எந்தக் குறிக்கோளோ, சொந்தக் கருத்தோ இல்லாமல் பத்திரிகைகள் வெள்ளைக் காகிதங்களை கருப்பு மசியிட்டு போணி ஆக்குவதற்காக  அவற்றின் அபிலாஷைகளுக்கேற்ப எழுதிக் கொடுக்கிற எழுத்தாளர்களைப் பற்றி  இந்தத் தொடரில் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

(தொடரும்)

படங்கள்  உதவிய  நண்பர்களுக்கு நன்றி.
  


Tuesday, October 11, 2016

அழகிய தமிழ் மொழி இது!....

பகுதி—24

மயத்தில் வில் கொடி பொறித்த குடி சேரர் குடி.  அந்தக்குடிப் பெருமகன் சேர அரசன் செங்குட்டுவன்.  அத்தகைய சிறப்பு கொண்ட மாமன்னன் செங்குட்டுவன் தன் நாட்டு மலைவளம் காண விரும்பி பேரியாற்றங்கரையில் தன் படைவீரர்கள், அரசு அதிகாரிகள், ஆயமகளிர் புடைசூழ தண்டு அமைத்து தங்கியிருக்கிறான்.   செங்குட்டுவனின்  இளவல் இளங்கோவும்,  அரசியார் வேண்மாளும் உடனருந்தனர். அப்பொழுது மன்னனைப் பார்ந்து தங்கள் நலன் தெரிவிக்க பெருங்கூட்டமாக  குறவக்குடி பெருமக்கள் பெர்ளுமளவு பரிசல்களைத் தங்கள் தலையில் சுமந்து வந்தனர்.

மன்னனை வாழ்த்தி அவன் ஆட்சியில் தாங்கள் எந்தக் குறையும் இன்றி வளமொடு வாழும் பாங்கினைச் சொல்லும் பொழுது தாங்கள் கண்ட அந்த அதிசய நிகழ்வை மன்னனுக்கு வியப்புடன் விவரித்தனர்.  “வாழ்க நின் கொற்றம், மன்னா!  அன்று நாங்கள் கண்ட அந்தக் காட்சியை எம் முன்னோர் கூட தம் வாழ்நாளில் கண்டதில்லை!  காட்டு வேங்கை மர நிழலில் துயரமே வடிவாய்க் கொண்ட பெண் ஒருத்தியைக் கண்டோம்.  வானிலிருந்து அந்த தேவதை மீது மலர் மாரிப் பொழிந்தது.  சற்று நேரத்தில் வானோர் புடைசூழ்ந்து போற்றி வாழ்த்த  அவள் வானகம் சென்றதை எம் கண்களால் பார்த்தோம்..  அந்தப் பெண் எந்நாட்டைச் சேர்ந்தவளோ?..  யார் பெற்ற மகளோ?..  நின் நாட்டில் நிகழ்ந்த இந்த நிகழ்வை  நாங்கள் இதற்கு முன் எம் நினைப்பிலும் அறியோம்!” என்று செங்குட்டுவனுக்கு தாம் கண்ட காட்சியை வியப்போடு விவரித்தனர்.

அப்பொழுது அரசனோடு இருந்த தண் தமிழ் ஆசான் சீத்தலை சாத்தனார்,”அரசே!  கண்ணகிக்கு நேர்ந்ததெல்லாம் யான் அறிவேன்.. அதுப் பற்றிச் சொல்வேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார்.  “முற்பிறப்பில் செய்த தீவினை,  கண்ணகியின் காற்  சிலம்பைக் கருவியாக்கிக் கொண்டு  அவள் கணவன் கோவலனின் உயிரைப் பறிப்பதற்குக் காரணமாயிற்று.  கண்ணகி தன்  எஞ்சிய காற்சிலம்பை பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் மன்னன் முன் வழக்காடி உடைத்து உண்மையை நிலைநாட்டினாள்.  கோவலன் கள்ளவனல்ல என்றும் தன் பிழையே அவன் உயிர் பறிக்கக் காரணமாயிற்று என்றும் உணர்ந்தக் கணமே  பாண்டியன்  அரசுக் கட்டிலிலிருந்து  நிலைகுலைந்து விழுந்து தன் வளைந்த செங்கோலை நிமிர்த்தினான்.  அரசன் இறந்தக் கணமே  தன் உயிர் கொண்டு மன்னன் உயிரைத் தேடித் தொடர்ந்தாற் போல அரசர் தேவி கோப்பெருந்தேவி மன்னன் மார் மீது விழுந்து உயிர் துறந்தாள். ஊழ்வினையின் 
கோரத்தாண்டவமாய்  மதுரை மூதுர்  தீ வசப்பட்ட்தும்,  தனித்தவளாய் கண்ணகி தன் நாடு செல்லாமல் நின் நாட்டிற்கு வந்தனள்..” என்றார்.

“ஆராயாது செயல்பட்டதால் பாண்டியர்க்கு பழி வந்து சேர்ந்த்து. ஆனால் அப்பழிச்சொல் எம்மை போன்ற வேந்தர்க்குத் தெரியும் முன்னே, தான் உயிர் நீத்த செய்தி எல்லோரையும் வந்தடையுமாறு வல்வினை வளைத்த கோலை பாண்டியனின் செல் உயிர் நிமிர்ந்திச் செங்கோலாக்கியது..” என்ற செங்குட்டுவன் மிகுந்த யோசனை வயப்பட்டான். ”மழை பெய்யாது பொய்க்குமாயின்  அரசர்க்கு அதுவே மிகப்பெரிய அச்சமாகிப் போகிறது.. யாதொரு காரணத்தினாலும் பிறவியெடுத்த உயிர்கள் வருந்துமாயின் அதுவே அரசர்க்கும் பேரச்சம்..  குடிமக்கள்  அறம் சார்ந்து வாழுதலுக்கும், கொடுங்கோன்மை அறவே இல்லாது ஆட்சி நடத்துவதற்கும் பொறுப்பேற்கும் மன்னர் குடியில் பிறத்தல் துன்பமே அல்லாது  தொழுதற்கு ஏதுமில்லை..” என்று உணர்ந்து சொன்னான் சேர மன்னன்.  

தான் சொல்வதையெல்லாம் ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் தன் தேவியை நோக்கி,   “கணவன் உயிர் செல்வழி தன் உயிரையும் செலுத்திய மாண்பு பொருந்திய கோப்பெருந்தேவி -யும்  சினத்துடன் நம் நாடடைந்த சேயிழை கண்ணகியும் நம் போற்றுதலுக்குரியவர் ஆயினும் இவ்விருவருள் நீ வியக்கத்தக்கவர் யாரெனச் சொல்வாயாக..” என்றான்.

ஒரு கணமே யோசித்த சேரமாதேவி, “பாண்டிமாதேவி கோப்பெருந்தேவி தன் கணவனுடன் உடன்  உயிர் துறந்து வானுலகம் ஏகினாள் ஆதலின் அங்கு அவள் பெரும் சிறப்பை நிச்சயம் பெறுவாள்.  நாம் நம் நாட்டை அடைந்த பத்தினிக் கடவளை பரசல் வேண்டும்..(போற்றித் துதிக்க வேண்டும்)” என்று சொல்ல செங்குட்டுவன் முகம் மலர்ந்தான்.  ‘இது குறித்துச் செய்ய வேண்டுவன யாது?’  என்று குறிப்பால் உணர்த்துவது போன்று  நூலறி புலவரை மன்னன் நோக்கினான்.    

அவரோ, “ஒல்கா முறைமை பொருந்திய பொதிய மலையிலாயினும், வில் தலை கொண்ட வியன்  பேர் இமயத்தாயினும் கல்லினை எடுத்து வந்தால் அது கடவுள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும்.  பொதிய மலையிலிருந்து எடுத்து வருவோம் ஆயின் காவிரிப் புனலினும்,  இமயத்திலிருந்து எனில் கங்கைபேர் ஆற்றிலும்  எடுத்து வரும் கல்லை நீராட்டி தூய்மை செய்வித்தல் நலமுடையதாகும்..” என்றனர்.

அது கேட்ட செங்குட்டுவனின் முகத்தில் பெருமிதம் பொங்கியது. “பக்கத்திலிருக்கும்  பொதியக் குன்றத்து   கல்லெடுத்து வந்து முதுநீர் காவிரியில் நீராட்டுதல்,  வீரமும் வாளும் வேலும் கொண்ட சேரர் குடியோருக்கு சிறப்பாக அமையாது.  ஆதலின் இமையத்துக் கல் எடுத்து வருதலே சாலச்சிறக்கும்.  பெருமலையரசன், மாட்சிமை கொண்ட பத்தினிக் கடவுளுக்கு கல தாரான் எனில்  குடைநாள் கொள்ளும் வஞ்சியையும், அரசர்க்கு வெற்றிமாலையாகிப் போகும் கொற்ற வஞ்சியையும், வீரச்சிறப்பை அடையும் நெடுமாராய வஞ்சியையும், பகைவர் நாட்டை தீயிட்டுக்
கொளுத்தும் வியன்பெரு வஞ்சியையும்,  சிறப்புமிக்க பெருஞ்சோற்று வஞ்சியையும்,  குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், பகைவர் அஞ்ச பணதோட்டுடன் படைகளை அணியச் செய்து  பூவா வஞ்சியாம் நம் வஞ்சி நகரின்  புறத்தே பகைவருடன் பொருந்தக் காத்திருக்கும் எம் வாளுக்கு வஞ்சி மாலை சூடுவோம்..” என்றான்.

“பல்லாண்டு வாழ்க நின் கொற்றம்..” என்று வாழ்த்தி அமைச்சன் வில்லவன் கோதை சொல்லலூற்றான்.  “கொங்கர்தம் செங்களத்தில் சோழ—பாண்டியர் தோற்று  புலிக்கொடியையும் கயற்கொடியையும் இழந்து ஓடியமை எல்லாத் திக்கிலும் பரவிற்று.  கொங்கரும், கலிங்கரும், கருநாடகரும், வங்காளரும், கங்கரும்  வடவாரியருடன் சேர்ந்து உன்னை எதிர்கொண்ட பொழுது அவர்களின் யானைப்படையை தனி ஒருவனாக நீ துவம்சம் செய்த காட்சி  இன்னும் என் மனக்கண்ணில் பதிந்துள்ளது. கங்கை பேரியாற்று நீர் நிலையில் உனது தாயாரை நீராடச் செய்த அந்த நாள் மறக்கமுடியாத ஒன்று.   ஆரிய மன்னர் ஆயிரிருவரை நீ ஒருவனே எதிர்கொண்டு புறமுதுகிட்டு ஓடச்செய்த வெற்றியை யாராலும் மறக்கவே முடியாது.  இமிழ் கடல் சூழ் நிலப்பரப்பு பூராவையும் நீ தமிழ்நாடாக்க விரும்பினாலும் உன்னை எதிர்ப்போர் இந்தாளில் யாருமே இல்லை.  கடவுள் சிலையமைக்க ஒரு கல்லுக்காக இமையம் நீ செல்வாயாயின்,  வடதிசை வேந்தர்க்கெல்லாம்  தண்டமிழ் நாட்டின் இலச்சினைகளாகிய  வில்,கயல், புலி பொறித்த முடங்கல்களை வரைந்து அனுப்புவாயாக..” என்றான்.

அடுத்து அழும்பில் வேள் என்னும் அமைச்சன் எழுந்து தன் கருத்தைக் கூறலானான்:  “அரசர்க்கரசே!  நான் சுருக்கமாகவே சொல்கிறேன். இந் நாவலந் தீவில் பகைநாட்டு ஒன்றர் படை காவல் மிக்க நம் வஞ்சிக்கோட்டைப் புறத்தே அல்லும் பகலும் காத்து கிடப்பர்.  ஆதலான் உன் வடநாட்டு வழிப்பயணத்தைப் பற்றி பறையறிவித்து நம் நாட்டில் தெரிவித்தால் போதும்,  காத்துக் கிடக்கும் ஒற்றர் இதையே பெரும் சேதியாக தம் நாட்டில் கொண்டு சேர்ப்பர்.  ஆக  நம் பங்கில் அந்தக் காரியம் ஒன்றே போதும்!”  என்றான்.

அழும்பில் வேள் சொன்னதை அக்கணமே ஏற்றான் சேரன் செங்குட்டுவன்.  தன் வடநாட்டுப் பயணத்தை பறையறிவித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அறிவித்து தானும் வஞ்சி நகர் மீண்டான்.

“வாழ்க எம் மன்னவர் பெருந்தகை!.  ஊழிதோறும் ஊழி நம் மன்னனனே இவ்வுலகைக் காப்பானாக!  வில் தலை கொண்ட பேரிமையத்திலிருந்து பத்தினித் தெய்வத்திற்கு பெரும்சிலை அமைக்க கல் கொண்டு மீள்வான் நம் பேரரசன்!  ஆதலின் வடதிசை மன்னரெல்லாம் இடுதிறைச் செல்வத்தோடு வந்து எம்மன்னரை எதிர்நோக்கி அளிப்பீராக!..  அவ்வாறு செய்யாது போவீராயின்  கடல் நடுவே கடம்பினை வீழ்த்திய போரில் பெற்ற பெருமையையும், இமையத்தில் விற்கொடி பொறித்த வீரம் விளைந்த செயலையும் செவிமடுத்தாவது பணிந்து போவீராக!..  எம் மன்னரின் நாடு போற்றும் வீர பராக்கிரமங்களை கேட்டுப் பணிந்து போக விருப்பம் இல்லையாயின்,  நும் மனைவியரின் நெருக்கத்தைத் துறந்து மீதி வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் தவத்தினை மேற்கொண்டு பிழைத்துப்  போவீராக!   வீரக்கழல் தரித்த மாமன்னனின் திருமேனி வாழ்கவே!” 

--- பட்டத்து யானை பிடர்த்தலை முரசம் ஏற்றி இவ்வாறு அறையும் பறைஒலி வஞ்சி மாநகர் வீதியெங்கும் முழங்கி  மக்களை வெற்றிக் களிப்பில் எக்காளமிட வைத்தது...


(வளரும்..)
   
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி. 



Tuesday, October 4, 2016

நினைவில் நின்றவை

'தோழி'  இதழில் நிறைய எழுதுகிறார்  நம் பதிவுலக சகோதரி  ரஞ்சனி நாராயணன் அவர்கள்.

செப்டம்பர் 16--30  தேதியிட்ட 'தோழி' இதழில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று மனைதக் கவர்ந்தது.
'தோழி'க்கு  நன்றி.

வெளியில் அலுவலக வேலைக்குப் போவதைத் தான் சம்பாதிப்பு வேலையாகக் கருதும் உலகம்,  பெண்கள் வீட்டில் மாங்கு மாங்கு என்று உழைத்துக் களைப்பதும் அலுவலக வேலைக்கு எந்தவிதத்திலும் குறைச்சலில்லை என்கிறார்  இப்படியான  இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர் திரு. பில்கேட்ஸின் மனைவி திருமதி மிலிண்டா கேட்ஸின் குரலையும் தன் கோரிக்கைக்குத் துணையாகக் கொள்கிறார்.   சாதாரண துணை இல்லை, மிக விவரமாக திருமதி கேட்ஸின் குரலை இந்தக் கட்டுரையில் சொல்லிச் செல்கிறார்.

ஒவ்வொரு வருடமும் கேட்ஸ் தம்பதி தங்களது இணைய தளத்தில் தங்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து கடதம்  எழுதுகிறார்களாம்.  2016-ம் வருடம் திரு. பில்,  எரிபொருள் இல்லாத உலகத்தைப் பற்றியும் திருமதி கேட்ஸ்,  பெண்களின் நேரம் எப்படி சமையலறையிலேயே கழிகிறது என்பதைப் பற்றியும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.  திருமதி ரஞ்சனி அந்தக் கடிதங்களின் சாரத்தைத் தான் இக்கட்டுரையில் விவரிக்கிறார்.

வீட்டு வேலைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாமாம்.  1.  சமையல்  2.  சுத்தம் செய்தல்  3.  வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் பார்த்துக் கொள்வது.  இந்த மூன்றில் எதையெல்லாம் ஆண்களும் பங்கு போட்டுக் கொண்டு செய்ய முடியுமோ அப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வதால் பெண்களின் சக்தி கணிசமாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்.' என்று  கணக்குப் போட்டுச் சொல்லும் திருமதி பில் கேட்ஸின் குரலை நம் மொழிப் பத்திரியகையில் பதிவு செய்திருப்பது அற்புதமான விஷய்ம்.

அமெரிக்க  சமாச்சாரமே இப்படி என்றால்,  நம்மவர்களைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.   ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்று பென்ஷனும் வருகிறது என்றால் கேட்கவே வேண்டாம்.

அந்த வீட்டிற்கு அந்த ஆண்மகன் எத்தனை வயதானாலும் ராஜா  தான்.  ஈஸிச்சேர், இந்து பேப்பர்,  அரட்டை,  மாலை கோயில்-- குளம்,  சீட்டுக் கச்சேரி,  சங்கீத சபா என்று  நாளை 'குஷி'யாக கடத்துவதற்கு ஏகப்பட்ட பொழுது போக்குகள்!..

ஆனால் வீட்டு ராணிக்கு மட்டும் சாகும் வரை ஓய்வில்லை.  சமையல் அறை அவர் தாலி கட்டிக் கொண்ட  இன்னொரு புருஷன்!  .  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண்கள் விருப்பப்பட்டு இத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதே அவர்கள் பிறவி எடுத்த பயனாகக் கருதுகிறார்கள் என்று பட்டிமன்றத்திலிருந்து பலசரக்குக் கடை வரை ஆண்கள் பிரச்சாரம் பண்ணிக் கொண்டு திரிவது!

இவ்வளவு கடுமையாக ரஞ்சனி மேடம் சொல்ல வில்லை என்றாலும் அவர்
கட்டுரை  நம்மூர் படித்த வர்க்க  ஆண்களும், பெண்களும்  படித்தே ஆக வேண்டிய  கருத்துச் சுரங்கம்!  குறிப்பாக   வீட்டு வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றால்,  இந்த வேலைகளைச் செய்வதில் சமநிலை வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், பெண்கள் தங்கள் செயல்திறனைப் பயன்படுத்த முடியவில்லை என்றால்   நாம் எதிர்பார்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP-- Gross Domestic  Productivity)  எப்படி லாபத்தை அடைய முடியாமல் போகும் என்பதனை திருமதி மிலிண்டா கேட்ஸ் ஆணித்தரமாக நிருவியிருப்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

நம் நாடோ எதற்கும் சரிப்பட்டு வராத வினோதமான நாடு. போதாக்குறைக்கு  மகனும் மகள் போலவேயான காலம் இது.  மகனுக்குத் திருமணம் ஆனாலும் தனிக்குடித்தனம்.  இல்லையென்றால் வெளிநாடு அல்லது வெளியூர்.  ஒரே ஊரில் கூட மகனும் தந்தையும் ஏதாவது காரணத்திற்காக என்று தனித் தனியாக வாழ்கிறார்கள்.   எப்படிப்பார்த்தாலும் நியூக்ளியர் குடும்பமே  வாழ்க்கை  முறையாகியிருக்கும் காலம் இது.

இந்த மாதிரியான வாழ்க்கையில் அடுப்படி விஷயங்களை கணவனும் தெரிந்து கொண்டாக வேண்டிய காலக் கட்டாயம்.  இருவரில்  யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் இன்னொருத்தர் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.   தேவையின் கட்டாயம் ஒரு கஞ்சி போட,   சோறு பொங்க,  ரசம் வைக்கவாவது தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் காலி காஸ் சிலிண்டரையாவது மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.  அதற்கும் மனைவி தான் என்றால், நாடு பொறுக்காதுடா, சாமி!



பிடித்த கவிதை:

பள்ளி நுழைவாயில் முன்
மரமல்லி மர நிழலில்
கொண்டுபோன கொய்யாப் பழக் கூடையை
பக்கத்தில் இறக்கி வைத்து
நீள் செவ்வகச்  சாக்கு ஒன்றை                                                            
எதிரில் விரித்துப் போட்டு
பிள்ளைகள் வாங்கும் விலையில்
கூறு கட்டி வைத்து
இடைவேளை மணியடிக்கக் காத்திருக்கும்
இடைப்பட்ட வேளையில்
நட்சத்திரங்களென உதிரும்
மரமல்லிப் பூக்களை ஊசி நூல் கொண்டு
கோக்கத் தொடங்கும் அவள்
வீடு திரும்புகிறாள் மாலையில்
காத்திருக்கும் பேத்திக்கென
விற்று முடிந்த வெற்றுக்கூடைக்குள்
நட்சத்திர  சரமொன்றைச் சுமந்தபடி

==  பாப்பனப்பட்டு வ. முருகன்        நன்றி:  ஆனந்தவிகடன்   (இதழ்:   24-8-16)


 ம் பதிவுலக  நண்பர்  திரு. மோகன்ஜிக்கு  அறிமுகம் தேவை இல்லை.

அவர்  ஸ்ரீசாஸ்தாம்ருதம் என்றொரு தொகுப்பு நூலை சொந்தப் பொறுப்பில் வெளியிட்டிருக்கிறார்.   'சாஸ்தாம்ருதம்'   ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீ ஐயப்பன் ஸ்தோத்திரப் பாடல்களின் திரட்டு.    திரு. மோகன்ஜி - திருமதி ஜெயந்தி
மோகன் தம்பதியரின்   சஷ்டியப்த பூர்த்தி விழாவில் தனிச்சுற்றுயாய் பாராயணத்திற்காக
தயாரிக்கப்பட்டதாம்.  விற்பனைக்கல்லாத  அழகான கையடக்க நூலை நல்ல தாளில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.  நூலையும் வெகு  பொருத்தமாக மோகன்ஜி  தன் பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

மோகன்ஜி  குருஸ்வாமி நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பெருவழியில் சபரிமலைப் பயணம் மேற்கொண்டவராம்.   தன் சபரிமலை யாத்திரை அனுபவங்கள் துணையாயிருக்க  கிட்டத்தட்ட 58  ஸ்தோத்திரங்களின் திரட்டை திரட்டுப்பாலாய் அவர் திரட்டிய நூல் இது.. அத்தனை ஸ்தோத்திரங்களையும்  தேடித் தேடி தவமாயிருந்துத் தொகுத்திருக்கிறார்.   ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் ஸூப்ரபாதத்தில் ஆரம்பிக்கும் தொகுப்பு  நூல் மங்களத்துடன் நிறைவுறுகிறது.   ஐயப்ப பக்தர்களுக்கு  இந்த தொகுப்பு நூல் அருமையான ஒரு கையேடாக இருந்து திகட்டாத இன்பத்தைத் தரும் வகையில் பார்த்துப் பார்த்து நூல் தொகுக்கப் பட்டிருக்கிறது.

மோகன்ஜியின்  ஆன்மீகப்  பணிகள்  அதையொத்த சிந்தனை கொண்டவர்களுக்கு  நிச்சயம் உற்சாகமூட்டும்.




Related Posts with Thumbnails