மின் நூல்

Saturday, January 30, 2016

'ஜன்னல்' பத்திரிகை

மிழில் நமக்கு வெகுவாகப் பழக்கமான பழைய பத்திரிகைகளின் எழுத்துப் பொலிவு மங்க, புதுசாக சந்தைக்கு வந்திருக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் புதுப்பொலிவு பெறும் காலம் இது.  அந்த வரிசையில் 'ஜன்னல்' ஒரு வரமாய் 'சமூகத்தின்  சாரளம்' என்று  தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வெளிவருகிறது.

விற்பனைக்காக பெரும் பத்திரிகைகளின் சாயலிலும், பெரும் பத்திரிகைகள் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கிற முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தும் பாங்கிலும் இந்தப் புதுப்பத்திரிகைகளின் வரவு இன்றைய தமிழ் பத்திரிகைகள் சூழலில் பாலைவனச் சோலையாய் மனசுக்கு  இதம் அளிக்கின்றன..

இதில் ஆக்கபூர்வமான விஷயம் என்னவென்றால் பழம் பெரும் பத்திரிகைகள் மறந்தே போய்விட்ட அல்லது ஒரு பக்கம்-அரைப்பக்கம் என்று அழித்தே விட்ட சிறுகதை பிரசுர முயற்சிகளில் இந்தப் புதுப்பத்திரிகைகள் மிகுந்த கவனம் கொள்கின்றன.  இது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய  ஒன்று. மிதமான சினிமா, அரசியல் செய்திகள்... பெரும் பத்திரிகைகளின் சலித்துப் போன உள்ளடக்கங்களுக்கு மாற்றாக இவை அமைவதால் இதன் வெற்றியான வாசகர் ஆதரவு பெரும் பத்திரிகைகளையும் கவர்ந்து  இந்தப் பக்கம் திரும்பச் செய்யும். ஆக தமிழ் பத்திரிகை உலகில் ஒரு சுழற்சி ஏற்பட்டு மீண்டும் பெரும் பத்திரிகைகள் உருப்படியான உள்ளடகங்களுக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.  இதுவே 'ஜன்னல்' போன்ற புதுப்  பத்திரிகைகளின் வெற்றியாகவும் தமிழ் பத்திரிகை உலகை பெருமைபடுத்தும் கைங்கரியமாகவும் எதிர்காலத்தில் கவனம் கொள்ளப்படும்,

நான்  பார்த்த ஜன்னல் இதழில் 'இயல்பான தவறு' என்ற எஸ்.ரா.வின் சிறுகதை காணக்கிடைத்தது.. தலைப்பிற்கேற்பவான வெகு இயல்பான கதை. அரசாங்க இயந்திரத்தின் உதிரி பாகம் போன்ற இலாகாவொன்றில் வேலை செய்யும் அப்பாவி ராமசுப்புவிற்கு '12-ம் தேதி காலை பத்து  மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆஜராக வேண்டும்' என்று சென்னை தலைமையகத்திலிருந்து கடிதம் ஒன்று வருகிறது.  கடிதத்தைப்  பிரித்துப் படித்த நிமிடத்திலிருந்து  ராமசுப்புவின்  நிம்மதி தொலைகிறது.  அவன்
மனைவியின் நிம்மதியும் கூடத் தொலைகிறது.  சென்னை செல்லவும் அங்கே எதிர்ப்பார்க்கிற பிற செலவுகளுக்காகவும் அவளின் கழுத்துச் செயின் அடமானம் வைக்கப்படுகிறது.  எல்லா துன்பங்களுக்கும் காரணமான காரணத்தை வெகு சாதாரணமாக இதெல்லாம் இயல்பு தான் என்று தலைமை அலுவலகத்தில் வியாக்கியானம் செய்யப்படும் பொழுது ராமசுப்புவுடன் சேர்ந்து  நாமும்  கொதித்துப்  போகிறோம்.  எஸ்.ரா.வின் இயல்பான  நடையில் கதையும் நம் கவனத்தைக் கவர்கிறது. 'இதெல்லாம் இயல்பு தான்  சார்!' என்று பல சமயங்களில் நாமும் பிறரால் சமாதானப் படுத்தப்பட்டிருப்போம். அப்படியான நிகழ்வுகள் எல்லாம் கதையை வாசித்து முடித்ததும்  நம் நினைவில் படிந்து ராமசுப்புவும் நாமும் மனசளவில் ஒன்றாய்க்  கலப்பது தான் எஸ்.ரா.வின்  எழுத்துக்குக் கிடைத்த  வெற்றி.  கார்த்திக் புகழேந்தியின் வெட்டும் பெருமாள் இன்னொரு குறிப்பிட வேண்டிய சிறுகதை.

ஜெயமோகன் 'ஜன்னல்' பத்திரிகையில் 'தெய்வங்கள், தேவர்கள், பேய்கள்' என்று ஒரு தொடர் எழுதி வருகிறார்.   ஜன்னலின் பொங்கல் சிறப்பிதழில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆந்திரமுடையார் கோயில் பற்றியும் கிராமிய சிறு தெய்வமான  ஆந்திரமுடையாரின் வரலாறு பற்றியும் எழுதியிருப்பதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  பதினாறு பதினேழாம் நூற்றாண்டு தமிழகத்தின் அமைதியற்ற சூழலகளில் திக்கற்றவர்களுக்கு ஆதரவாக  செயல்பட்ட காவல் தெய்வங்களைப்  பற்றிய அவரது அலசல் எதிலும் தீர்க்கமாகப்  பார்க்கும் அவர் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது.

ராஜ்சிவாவின் 'அவர்கள்' தொடர் புதுசாக ஆரம்பித்த  ஒன்று. அறிவியல் பார்வையில் அட்டகாசமாக செல்கிறது இந்தத் தொடர்.  விண்வெளியில் நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்களில் ஒன்றான ஓஐஇ 8462852 பற்றி ராஜ்சிவா சொல்லும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.  சுஜாதா 'கற்றதும் பெற்றதுமில்' செய்த  மாதிரி ஊறுகாயாய் அறிவியல் தகவல்களைத்
தொட்டுக்  கொள்ளாமல் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அர்ப்பணிப்பு உணர்வுடன் அதிலேயே ஆழ்ந்து விளக்குகிறார் ராஜ்சிவா.  இறந்த காலத்திற்கு பயணிப்பது பற்றிய சாத்திய கூறுகளை இவர் அலசும் விதமும், ஓஐஇ 8462852 கோளில் வசிக்கும் அதிபுத்திசாலியான ஏலியன்கள்  நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியை பிர்மாண்டமான கட்டமைப்பு ஒன்றின் மூலம் தடுத்து, மகத்தான சக்தியை உள்வாங்கிக்  கொள்ளும் அதிசயம் போன்ற வியத்தகு விஞ்ஞான தகவல்களை உள்ளடக்கி தன்  கட்டுரைக்கு சுவையூட்டுகிறார் ராஜ்சிவா.

காற்றையும் காசு கொடுத்து வாங்கும் காலம் வந்து விட்டதை நினைத்து மலைக்கிறோம்.  சீனாவின் பெய்ஜிங்கில் குடுவையில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை   வாங்கி சுவாசிக்கிறார்கள் என்று சில வாரங்களுக்கு முன் செய்திகள் பரபரத்தன.  .சென்னையிலேயே சுத்தமான காற்று பத்து லிட்டர் பாட்டிலிருந்து நமது வசதிக்கேற்ப கிடைக்கிறது என்று ஜன்னலின் கட்டுரை ஒன்றிலிருந்து தெரிய வந்தது.  செயற்கை  சுவாசம் தேவைப்படுவோர், கடுமையான உடல் நலக்குறைவால் அவதிப்படுவோர் மருத்துவர் அறிவுரையுடன் ஆக்ஸிஜன்  பாட்டில்களை பயன்படுத்தாலாமே தவிர மற்றவர்களுக்கு தேவையில்லை. இந்த மாதிரியான உபயோகம் நுரையீரலுக்குத்  தீங்கிழைக்கும்' என்று  மருத்துவதுறை சார்ந்த நிபுணரின் குறிப்பும் அறிவுரையாய் கட்டுரையில்  காணப்படுகிறது.

'மதன்டூன்' என்று மதனின் கார்ட்டூன், ம.செ.,இளைய பாரதி, க.ரோ-- போன்ற ஓவியர்களின் உயிரோவியங்கள் பத்திரிகைக்கு தனிக் களையூட்டுகின்றன. ,

புதிய பகுதிகள், மக்கள் நலம் சார்ந்த செய்திகள் என்று  ஜன்னலின் உள்ளாக பார்வையில் படுவது--  அளவுக்கு மீறிய சினிமாச் செய்திகள், அரசியல் என்று ஆகிப்போன தமிழ்ப்பத்திரிகைகளின் போக்குக்கு மாற்றாக இருக்கிறது..

'ஜன்னல்' மேலும் மேலும் சிறப்புகளை தனதாக்கிக் கொள்கிற வேகத்திலேயே மற்ற பிரபல பத்திரிகைகளையும் தன் பாதையில் இழுத்து  வசப்படுத்துகிற சாகசமாய் தமிழ்ப் பத்திரிகையுலகம் புதுப்பாதையில் பயணிக்க ஆசை கொண்டு வாழ்த்துகிறோம்.



படங்களைத் தந்தவர்களுக்கு நன்றி.

Monday, January 25, 2016

'தி இந்து'வின் பொங்கல் மலர் --2016-- ஒரு பார்வை


முதலில் ஒன்றைச்  சொல்லி விட வேண்டும். மலரைப் பகுதி பகுதியாகப்  பிரித்திருக்கும் விதமே அதன்  வெற்றிக்குக்  கட்டியம் கூறிவிடுகிறது.

முதல் பகுதியான அறியப்படாத திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் அருமை. இந்தப்  பகுதிக்காக சலித்து தேர்ந்தெடுத்த திருவிழாக்கள் பெரும்பாலோரால் அறியப்படாத  அதிசயத்  திருவிழாக்களாக இருக்க வேண்டும் என்பதற்கு  அதிக முக்கியத்வம் கொடுத்திருக்கிறார்கள்.. ஆரம்பமே, வாழ்வின் நிலையாமையை நிதர்சனத்தில் எதிர்கொள்ளும் மயானக் கொள்ளை பற்றி. அடுத்து தேனி மாவட்டம் பாலார் பட்டி கிராமத்தில் முல்லைப்  பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குய்க் அவர்களுக்கு எடுக்கும் விழா.  ஜனவரி 15-ம் தேதி பென்னி குயிக் பிறந்த நாள் ஆதலால்  ஜனவரி 15-ம் தேதி தான் எல்லா ஆண்டும் பொங்கலைக் கொண்டாடுவது தேனி--மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு விசேஷ நன்றித் திருவிழாகிப் போன சரிதம். அதற்கடுத்து திருச்சி மாவட்டத்து மணப்பாறை வீரப்பூரில் நடைபெறும் பெரிய காண்டியம்மன் கோயில் மாசித் திருவிழா. இப்பகுதியில் ஆட்சி புரிந்த வரலாற்று நாயகர்கள் பொன்னர்—சங்கர் வாழ்ந்த இடத்து படுகளம் திடலில் நூற்றுக்கணக்கான மேடைகளில் பொன்னர்—சங்கர் நாடகம் ஒரே நேரத்தில் நடப்பது இந்தத் திருவிழாவின் ஹை-லைட்டான சமாசாரம். அதற்கடுத்து சிவகங்கை நாட்டரசன்  கோட்டை நகரத்தாரின் செவ்வாய் பொங்கல் திருவிழா பற்றி. அதற்கடுத்து திருவிழாவுக்கு மட்டும் திறக்கப்படும் ஒரு கோயிலைப் பற்றி. நீலகிரி மாவட்டத்து கோத்தர் மக்கள் கொண்டாடும் கம்பட் ராயர் திருவிழா பற்றி. அதற்கடுத்து மறவப்பட்டியில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான  விளக்கமாற்றடித் திருவிழா. வந்தவாசி அம்மையப்பட்டு ஊரணிப்  பொங்கல் விழா என்று தெரியாதோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆவலில் அறியப்படாத திருவிழாக்களின் லிஸ்ட் நீ..ள்..கி..ற..து.  தாவரங்களின் கொண்டாட்டத் திருவிழா என்று தைப்பொங்கல் திருவிழா பற்றி தனியே வேறே. .                                        

அடுத்து ஆலய தரிசனம் பகுதி,  நாமக்கல் ஆஞ்சநேயர், காரமடை ரங்கநாதர், இஞ்சிமேடு ஸ்ரீ வரதராஜ பெருமாள், சிறுவந்தாடு  ஸ்ரீ லட்சுமிநாராயண பெருமாள் என்று முழுப்பக்க கடவுளரின் திருவுருவ தரிசனங்கள்.  திருக்கோயில்கள் பற்றிய விவரங்களோடு, தரிசன நேரங்கள் பற்றிய குறிப்புகள் கொடுத்திருப்பதும் சிறப்பு. 

மூன்றே கதைகள்.மூன்றும் இதிகாச நிகழ்வுகளை நினைவுபடுத்துகிற கதைகளாய் அமைந்திருப்பது ஆச்சரியம்.  எஸ்.ரா.வும், வாஸந்தியும் மகாபாரத பாஞ்சாலியை அவரவர் கோணத்தில்  பார்க்க விமலாதித்த மாமல்லனோ இராமாயண ஸ்ரீராமன்-- அனுமன் உறவுக்கு நடுவே பிரயத்தனப்பட்டு கதைக்காக ஒரு கோடு போடுகிறார்.

வாஸந்தி ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார். மஹாபாரத பாஞ்சாலியின் நிழலில் இந்தக் கதையின் நாயகி பாஞ்சாலி படிய வேண்டும் என்பதற்காகவே கதையின் போக்கிலேயே அந்த நாவல் பழக்கதை உள்கதையாக வருகிறது. வாஸந்தியின் எண்பதுகளின் வழக்கமான விவரிப்புகள் ஒன்றில் ஒன்று புதைந்து கொள்கின்றன. கதையின் முடிவுச் சீற்றத்திற்காக பம்மிப்  பதுங்குகின்றன. சரியான தருணம் வந்ததும் கதையின் நாயகி பாஞ்சாலி வெகுண்டு எழுகிறாள். அந்த வெகுளலுக்கு சரியான தீர்வைச் சொல்லாமல் பாஞ்சாலியின் அக்னி பிரவேசமுடிவாக கதையை முடித்துக் கொண்டது தான் ‘பொசுக்’கென்று போய்விட்டது.  இதற்கா அத்தனைப்  பக்க ஆயாசம் என்று மனம் தகிக்கிறது.

'உப பாண்டவம்' எழுதிய எஸ்.ரா.விற்கு இந்த சப்ஜெக்ட் வெல்லக்கட்டி. மஹாபாரதத்தின் உபகதைகள் நிறையவே கைகொடுத்திருக்கின்றன. வெகு இயல்பான நடையில் எஸ்.ரா.விற்கே உரித்தான கதை சொல்லலில் கதை கொடிகட்டிப் பறக்க அவரது வாசிப்பு அனுபவத்தில் விளைந்தது நம் வாசிப்பு அனுபவமாய் பெருமிதமடைகிறது. கடைசியில் கதை இப்படி முடிகிறது::

பாஞ்சாலி மெளனமாக நின்று கொண்டிருந்தாள். பாண்டவர்கள் அவள் முன்பாக மண்டியிட்டுச் சொன்னார்கள்.  “பாஞ்சாலி! உன்னை புரிந்து  கொண்டோம். நீ மஹாசக்தி. தவறு எங்களுடையது.  எங்களின் சுயநலம் உன்னைப் பந்தயம் வைத்தது.  மன்னித்து விடு. இனி எங்கள் வாழ்வும் சாவும் உனக்கானது. எங்களை வழிநடத்து”.

பாஞ்சாலி விடுவிடுவென்று தனியே நடக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் அவளின் ஐந்து நிழல்களைப்  போலப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள்.  அதன் பிறகு குருஷேத்ர யுத்தத்தில் வெல்லும் வரை பாண்டவர்களின் விதியைப் பாஞ்சாலியே தீர்மானித்தாள்—என்று கதை முடிகிறது.. ‘ஐந்து நிழல்கள்’ என்று எஸ்.ரா. சூட்டிய கதைத் தலைப்பும் வெகு பொருத்தம்..

மலரில் எஸ்.ரா.வின் கதைக்குப் பின் வாஸந்தியின்  கதையைப்  பிரசுரித்திருக்கிறார்கள்.  இதையே வாஸந்தியின் கதையைப் படித்த பிறகு எஸ்.ரா.வின் கதையை படிக்கிற மாதிரி, அமைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

கோடு போட முயன்றது அழகான ரோடாகவே ஆகியிருக்கிறது  விமலாதித்த  மாமல்லனுக்கு.. கதையைக் கச்சிதமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக்  கொண்டு  பிரமாதப்படுத்துகிறார். அந்த கதாகாலட்சேப பகுதி நல்ல உத்தி என்றாலும் சில திரைப்பட காலட்சேப காட்சிகளை நினைவு  படுத்துவதைத்  தவிர்த்திருக்கலாம். இன்னும் நுணுகிப் பார்க்கின் கதை காவியமாகியிருக்கலாம்.

ஒரு கதைக்கான சகல அம்சங்களும்  பொருந்தியதாய் அந்தக் காலப்  பெண்களின் அவலஉண்மைகளைக் கதை போலச் சொல்லியிருக்கிறார் பாரததேவி.  தாலி கட்டிய கணவனைத் தவிர வேறே நாதியில்லா சூழ்நிலைகளும்,  நாதியிருக்கிற நேரங்களிலும் ஊரார் பழிக்கு அஞ்சி ஒடுங்கும் அந்தக்கால பெண்மனதையும் படம் பிடித்துக்  காட்டியிருக்கும் உண்மைகள் சூட்டுக்கோலாய் சுடுகின்றன.

சினிமா இல்லாமல் தமிழ்ப் பத்திரிகை உலகம் இல்லை.  இந்த மலரில் திரையுலகம் குறித்து எட்டு கட்டுரைகள்.  ‘பாரதிராஜா என்ற குல(ச்)சாமி’ என்கிற புதுமைத் தலைப்பில் ஆர்.எஸ்.அந்தணன் தெரிந்த விவரங்கள், தெரியாத  விவரங்கள் என்று  கலந்து கட்டி நிறைய எழுதியிருக்கின்றார். ஆரம்ப காலங்களில் அல்லி நகரில்  பாரதிராஜா மலேரியா இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் என்பது அதில்  ஒரு தகவல். சினிமாவை விட சுவாரஸ்யமானது  அந்த சினிமா உருவான பின்னணி என்று நிறையச் செய்திகள். 

எண்பதுகளின் நடிகைகள் பற்றி சுரேஷ் கண்ணனின் ‘நெஞ்சில் நிறைந்த நாயகிகள்’ என்று ஒரு கட்டுரை.  உணர்வு பூர்வமாக அமைந்திருக்க வேண்டிய விஷயங்கள் வெறும்  விவரக்குறிப்புகளாகி விட்டன. ‘பொதுவாக பாக்கியராஜின் திரைப்படங்கள் அசட்டுத்தனமான மெலிதான ஆபாசமும் கூடிய நகைச்சுவையைக் கொண்டிருப்பவையாகக் கருதப்பட்டாலும்'’—என்பது போன்ற அர்த்தபூர்வ சொல்லாடல்களை புன்னகையுடன் ரசிக்கலாம்.

நாயகிகள் பற்றி சுரேஷ் கண்ணன் என்றால் படைப்பூக்க நாயகன் என்று மணிரத்னம் பற்றி அஜயன் பாலா. கமல்-ரஜினி பற்றி  கருந்தேள் ராஜேஷ், நடன நடிகைகள் பற்றி ஆர்.பி.ராஜநாயகம். திரை இசை பற்றிக் கதை போலச் சொல்லும் சுகா, இயக்குனர்களின் நெருக்கடிக் காலம் என்று ஜெய், முடிசூடா மன்னர்கள், புன்னகைப் பேரரசர்கள் என்று திரைப்பட ரசிகர்களுக்காக நிறைய நிறைய. நம் மனசில் தமிழ் சினிமா பற்றிய தகவல் களஞ்சியம் யாத்த அறந்தை நாராயணனின் நினைவுகள் வேறே!

‘அரண்மனை உலா’ என்று ஒரு பகுதி.  அட்டகாசமான புகைப்படங்களால் திணறுகிறது. திருமலை நாயக்கர் மஹால், புதுமைக் கோட்டையாம்  புதுக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்பனை, தஞ்சாவூர் அரண்மனை என்று ஒரு நீண்ட உலா.  விவரங்கள்.. சுருக்கமாக ‘பளிச்’சென்று மனசில் பதியாமல் பள்ளிப் பாடப்புத்தகங்கள் மாதிரி தகவல் நெரிசலாகிப் போனது ஒரு குறை. காட்சிப் படப்பிடிப்பு புகைப்படங்கள் என்றால் கருத்துப்  பிரதிபலிப்பு பிரசன்டேஷன் ஜாலம்.    
....
தங்கள் ஊர் பொங்கலைப் பற்றி சில பிரபலங்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது தம் நினைவுகளை ஓவிய உலா போலப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  இந்த வரிசையில் மணாவின் கட்டுரையும்  குறிப்பிடத்தக்க ஒன்று. 

இந்த மலரின் ஸ்பெஷலான ஒரு ஐட்டம் பற்றிச் சொல்ல வேண்டும். ‘ஓர் அடவியின் அந்திமக் காலம்’ என்று சூழலியளாளர் நக்கீரன் கட்டுரை அது. ‘மழை என்பது உலகின் உயிர்த்துளி.  காடு என்பது மானுடத்தின் உயிர்மூச்சு. இவை இரண்டும் இணைந்த மழைக்காடு ஏராளமான வியப்பையும் திகைப்பையும் தனக்குள் குவியல் குவியலாகக் கொட்டி வைத்திருக்கும் ஓர் உயிர்மப் புதையல்’ என்ற ஆரம்பமே வாசிக்க உள்ளிழுத்துக் கொண்டு போகிறது.  உலகின் எட்டாவது கண்டமான கவிகை (Canopy) பற்றி சத்தியமாகத் தெரியாது. லோகத்தின் பதினான்கு லட்சம் உயிரின வகைகள் இன்றைக்கும் காட்டின் கூரையாகிய இந்த மரக்கவிகைகளில் வசிக்கின்றன என்பதும் புதிய  செய்தி.  ஐந்தடுக்குள் கொண்ட போர்னியோ காட்டில் உலா வரும் உணர்வு சாத்தியமாகியிருக்கிறது.  அந்த உணர்வைத் தந்தமைக்கு  ரொம்பவும் நன்றி, நக்கீரன் ஐயா! புகைப்படக் கலைஞர் கல்யாண் வர்மாவின் படங்கள் உயிரெடுத்து சேதி  சொல்கின்றன.  திறமைமிக்க அந்த இளைஞருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

எம்.எஸ். பற்றி ‘இசை அரசியின் ஏழு ஸ்வரங்கள்’ என்று வி.எஸ்.வி. ரமணன் எழுதியிருக்கிறார், ஓவியம், சிற்பம், கால்நடை மருத்துவம் என்று பன்முகம் கொண்ட டாக்டர் ராமநாதனை நேர்கண்ட கட்டுரையும், அக்கால சமூக நாடகங்களைப் பற்றிய குள. சண்முகத்தின் கட்டுரையும், கேவ்லாதேவ் தேசிய பூங்கா பற்றிய வினோத்குமாரின் விவரக் கட்டுரையும் மனசில் நிற்பவை. சிறுவர்களுக்கான சித்திரக்கதையும் ஒன்று உண்டு.

இவ்வளவு விஷயங்களை ஒரு மலரில் அடைத்தும் ‘பண்டைய இலக்கியச் சுவைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் எப்படி?’ என்று பூமணியின் கட்டுரை ஒன்றையும் விட்டு விடாமல் சேர்த்திருக்கிறார்கள்.  எந்தப் பூமணி என்று தெரிய அவரின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம்.

மலரில் பழமையும் நவீனமும் கைகோர்த்துக்  கொண்டு உலா வருகின்றன.  அதுவே இந்த மலருக்கான சிறப்பம்சம்.

நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்த ஆசிரியர் குழாமிற்கும் மலரின் தயாரிப்பு குழுவிற்கும் மனமார்ந்த  பாராட்டுகள்.. நேர்த்தியான வாசிப்பு அனுபவம் சித்தித்தமைக்கு நன்றிகள்..






Tuesday, January 19, 2016

என்ன சேதி?..


புத்தகத்தைப் படிப்பது ஒரு தளம் என்றால், அதைப் பற்றிப் பேசுவதும், விவாதிப்பதும், மக்களிடையே எடுத்துச் சொல்வதும் அவசியமான  இன்னொரு தளம்.   ஒரு திரைப்படம் வெளியாகும் பொழுது குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது அதற்கு இணையத்தில் விமரிசனம் எழுதுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பகிர்ந்து  கொள்கிறார்கள்.  ஆனால் சிறந்த  கவிதை, நாவலகள் பற்றிப் பேசுவதற்கு ஒரு சதவீதம் பேர் கூட முன் வருவதில்லை..
                                        --- எஸ். ராமகிருஷ்ணன்.

ஆனந்தவிகடனில் ‘இந்திய வானம்’ என்று எஸ்.ரா.வின் தொடர்
ஆரம்பித்திருக்கிறது.  அந்தத் தொடரில் தான்  மேற்கண்ட தன் எண்ணத்தைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்.      

எஸ்.ரா. செம பிஸி. புத்தகச் சந்தையா, புத்தக வெளியீடா, புத்தகம் குறித்த எந்த பொதுவிழாக்களிலும் எஸ்.ரா.வைப் பார்க்க முடிகிறது.. அங்கு தன் எண்ணங்களை மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார். வாசிப்பு  உலகத்திலிருந்து எழுதும் உலகிற்கு வந்தவர் எஸ்./ரா. அவரது வாசிப்பு பொழுதுகளுக்கு பங்கம் நேர்ந்து விடாமல் தம்மை அழைக்கும் எந்த விழாவிற்கும் எஸ்.ரா. தவறாமல் கலந்து  கொள்வதாகவே நமக்குத் தெரிகிறது.  இன்னொரு விஷயம்.  அன்றைக்குப் பார்த்த எஸ்.ராமகிருஷணன் தான் இன்றைக்கும். இப்பொழுதெல்லாம் அச்சு ஊடகங்களில் அவரை நிறையவே பார்க்க முடிந்தாலும் அவரில் எந்த மாற்றமும் இல்லை.  பேச்சில், கருத்தில், அவற்றை எடுத்துரைப்பதில் இன்னும் மெருகு கூடியிருப்பதை சொல்லியே ஆகவேண்டும். 

ழக்கமாக சாகித்ய அகாதமி  விருது என்றால் தமிழகத்தில் சலசலப்புக்கு பஞ்சமே  இல்லாதிருக்கும். ‘இவருக்கு ஏன்  இல்லை, அவருக்கு ஏன் இல்லை’ என்ற வாக்கு வாதங்கள் காலம் போய், நாலைந்து வருடங்களுக்கு முன் சாகித்ய அகாதமி விருது பெற்றவரே தனக்கு அந்த விருது என்றோ தந்திருக்க வேண்டும், தாமதமாகத் தந்து விட்டார்கள்’ என்று குறைப்பட்டுக் கொண்டார்.

இந்தத் தடவையும் சாகித்ய அகாதமியில் தமிழுக்கான  விருது அறிவித்து ரொம்ப நாளாகி விட்டது.  எல்லா தடவைகளும் மாதிரி இல்லாமல் இந்தத் தடவை விருதை யார் பெற்றார்கள் என்பதே தெரியாத அளவுக்கு பாராட்டு விழா எடுப்பதோ, பலபடப் பேசுவதோ எல்லாமே மிஸ்ஸிங்.  

இந்தத் தடவை தமிழுக்காக 2014-ம் ஆண்டு அகாதமி விருது பெற்றவர் பழம் தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன். திருவனந்தபுரம் சாலை கடைத்தெருவில் 'செல்வி ஸ்டோர்ஸ்' என்றோரு பாத்திரக்கடை இருக்கும். அந்தக் கடைக்கு உரிமையாளர். அந்த சாலை கடைத்தெருவிற்கு உயிர் கொடுத்து தமிழில் உயிர்ப்பித்தவர். எழுத்து  பிர்மாக்கள் வட்டத்தில் ‘சாலைத்தெருவின் கதைசொல்லி’ என்றே அழைக்கப்படுபவர். ‘கடைத்தெருவின் கலைஞன்’ என்று ஜெயமோகன் இவரைப்  பற்றி எழுதியிருக்கிறார்.   நம் பதிவுலக சகபதிவர் கிருத்திகா இவரைப் பற்றி எழுதியிருந்ததும் நினைவுக்கு வருகிறது.

‘கிருஷ்ணப்பருந்து’ ஆ.மாதவன் என்றால் அந்தக்  காலத்தில் பிரசித்தம். அந்தக் காலத்து மனுஷருக்கு இந்தக் காலத்தில் விருது கொடுத்ததால் அது ஒரு காலம் தப்பிய செயலாகப் போய்விட்டதோ என்னவோ.? மனிதர் தான்  உண்டு; தன் எழுத்து உண்டு என்று இருந்ததும் ஒரு காரணமாகப் போனதுவோ?.. குடத்திலிட்ட விளக்கு குன்றேற வில்லை. கொண்டாட்டமும் இல்லை..

விருது கிடைத்ததை அடுத்து ஒரு பேட்டியில் மாதவன் சார் மனந்திறந்து  ஒன்றைச் சொன்னார். “தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ளுக்கு அப்புறம் தமிழில் நாவலே இல்லை!” என்று ஒரே போடாகப் போட்டார். இருந்தும் தமிழ் எழுத்துலகம் அசைந்து  கொடுக்கவில்லை. பொருட்படுத்துகிற அளவுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று இருந்துவிட்டது போலும்.  அவர்களுக்கு ஆயிரம் வேலைகள்.

‘கல்கி’ இதழில் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் ‘அருளே, அறிவே, அமுதே’ என்று தான் காஞ்சிப் பெரியவர் திருவருள் பெற்ற பேறு குறித்து தொடராக எழுத ஆரம்பித்திருக்கிறார். ‘திருநெல்வேலி  மண்ணை சேர்ந்த  நான் வில்லுப்பாட்டு நடத்தி அதனால் ஓரளவுக்குப்  பெயரும் புகழும் பெற்றிருந்தேன்.  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திரைப்படங்களில் காமெடி எழுதிக் கொண்டிருந்தேன்..” என்று தனது ஐம்பதாண்டு வாழ்க்கைக்கு அப்புறமான தனது வாழ்க்கைத் தேடலைப்  பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த மாதிரியான பொருளில் வாசிப்பு விருப்பமுள்ளவர்களுக்கு இந்தத் தொடர் விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

ழுத்தாளர் வீரபாண்டியன் ‘பருக்கை’ என்கிற ஒரே ஒரு புதினத்தை தமிழில் படைத்தவர். தமிழ் எழுத்துலகில் அறியப்பட வேண்டியவர். அவர் எழுதிய அந்த ஒரு புதினமே அவருக்குப் பெரும் புகழைச் சேர்த்திருக்கிறது. அந்தப் புதினத்திற்கு சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது கிடைத்திருக்கிறது. கல்வி கற்றலோடு சமகால தேவைகளுக்காக கேட்டரிங் பணியை பகுதி நேரப்பணியாகச் செய்யும் இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டமும் வாழ்வியல் அனுபவங்களும் நாவலாகியிருக்கிறது. இதுவரை யாரும் கையாளாத சப்ஜெக்ட். நாம் நினைத்தே பார்த்திருக்காத துயரங்கள். எழுத்துகளாக உயிர்ப்பு கொண்டிருக்கின்றன.

வீரபாண்டியன் இந்த நாவலுக்கு முதலில் 'சாம்பார்' என்று தான்  பெயர் வைத்திருந்தாராம்.  எங்கே அது சமையல்  குறிப்பு  சம்பந்தமான புத்தகமாக ஆகிவிடுமோ என்ற பயத்தில் 'பருக்கை' என்று பெயர் மாற்றம் செய்தாராம்.

‘தில்லி அழைத்தது, மனம் நெகிழ்ந்தது என்று தாம் விருது பெற்ற அனுபவத்தை நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் ‘கல்கி’ பொங்கல் சிறப்பிதழில் வீரபாண்டியன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  வீரபாண்டியன் பெற்ற விருது, வாழ்க்கையினுடனான போராட்டங்களை அனுபவக் கதைகளாக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும்.

ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்னும் நூலிருந்து:

‘நான் மவுண்ட் ரோடில் பத்திரிகை விற்றுக் கொண்டிருக்கிறேன்.  ரவுண்ட்டாணாவுக்கு எதிரில் ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ வாசலில் Gandhiji Shot Dead என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.  எனக்கு அப்போது ஆங்கிலம் சரிவரத் தெரியாது.  அதுவுமில்லாமல், காந்திஜியை ஒருவன் சுட முடியும் என்றும் அவர் சாவாரென்றும் அது சாத்தியம் என்கிற எண்ணமும் எனக்கு அப்போது இல்லை. எனவே, அந்தக் கூட்டத்திலும் நான் பத்திரிகை விற்கப் போனேன்.

அப்போது யாரோ ஓர் ஆள் என்னிடம் போஸ்டர் படித்து, “ஓ! காந்திஜி ஷாட் டெட்” என்று சொல்லி விட்டுப் போனான். 

“அப்படீன்னா என்ன அர்த்தம்?” என்று அவரிடம் கேட்டேன்.
  
அவர் பதில் சொல்லவில்லை. சரி, என்னவோ விபரீதம் என்று புரிந்து  கொண்டேன்.   ஜனங்கள் எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாக நின்று பொருமுகிறார்கள்.  கடைகளையெல்லாம் மூடுகிறார்கள். நானும் புத்தகங்களை மூட்டை கட்டிக் கொண்டு டிராமில் ஏறினேன்.

டிராமில் ஏறியதும் என் பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர் ஆங்கிலத்தில் கேட்டார்: “வாட் இஸ் தி கிரவுட்?”

நானும் எனக்குப் புரியாத விஷயத்தை  அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன்: “காந்திஜி ஷாட் டெட்.”

“வாட்?.. காந்திஜி?.. ஷாட்?.. டெட்?” என்று நான்கு கேள்விகளாக நான் சொன்னதையே என்னிடம் திருப்பிக் கேட்டார் அவர்.

நானும் ஆங்கிலத்தில் “எஸ்!” என்றேன். 

அவர் அடுத்த ஸ்டாப்பிங்கில் அழுது கொண்டே இறங்கினார்.  என் புத்தியில் அப்போதும் காந்திஜி சுட்டுக்  கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி உறைக்கவில்லை’.

--- என்று ஜே.கே. தன் நினைவுகளை எழுதியிருக்கிறார்.

நினைத்தாலே கண்களை நீர் முட்டுகிறது.

ஜனவரி-30 தேசப்பிதாவின் நினைவு தினம். 
 
  
 
  , .
சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கும்
படங்களை உதவியோருக்கும் நன்றி.

                

Wednesday, January 13, 2016

இப்போ என்ன புதுசு?

வெகு திரள் பத்திரிகைகளில் ஜெயமோகன் எழுதாதது ஒரு குறையாக இருந்தது.  ஆனந்த விகடனில் 2002- வாக்கில் 'சங்கச் சித்திரங்கள்' என்று அருமையான தொடர் எழுதினார்.  சமீப காலங்களில் 'ஜன்னலில்' அவரைப் பார்த்த நினைவிருக்கிறது.  ஜெயமோகன் வழக்கமாக பெரும் பத்திரிகைகளில் எழுதுவதில்லை.  சிறு பத்திரிகைகளும், அவரது வலைத்தளமுமே அவரது தாயகம்.

இப்பொழுது   'குங்குமம்' பத்திரிகையின் 18-1-'16  இதழில் அவரைப் பார்த்தது பேரானந்தமாய் இருந்தது.  ஜெயமோகனின் 'முகங்களின் தேசம்' என்கிற தொடர் இந்த இதழிலிருந்து துவங்கியிருக்கிறது.

"நான்  2012-ல் ஆறு நண்பர்களுடன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டேன்" என்று கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது.   "ஈரோட்டின் அரச்சலூரிலிருந்து ஒரு காரில் கிளம்பி கர்நாடகத்தின் சாம்ராஜ்பேட் அருகே உள்ள கனககிரி வழியாக மகாராஷ்டிரம், குஜராத் என வடக்கு நோக்கிச் சென்று,
ராஜஸ்தானிலுள்ள லொதுர்வா என்னும் சிற்றூரை அடைந்து மத்திய பிரதேசம் வழியாகத் திரும்பினோம்.   கிட்டதட்ட 12000 கிலோ மீட்டர்" என்று ஜெயமோகன் குறிப்பிடும் பொழுது அவரது அலாதியான முயற்சி வியப்பாக இருக்கிறது. . இந்தியாவின் தொன்மை வாய்ந்த சமண வணிகப்பாதை இன்னும் இருக்கிறதா என்பதைக் கண்டறிவது தான் பயணத்தின்  நோக்கமாம்.

தென் இந்தியாவின் தக்காண பீடபூமியின் விளிம்பிலிருந்து வட இந்திய  பெருநிலம் நோக்கி 2500 அடி ஆழத்திற்கு செங்குத்தாக இறங்கிச் செல்லும் மெய்சிலிருக்கும் அனுபவம் பற்றி அவர் விவரிக்கும் பொழுது 'த்ரில்'னான உணர்வு..  ஜெயமோகனின் எழுத்து நடையில் அழகியலுக்கு இடமில்லை எனினும் வரிசை வரிசையாக அவர் அடுக்கும் விவரங்களுக்குக் குறைச்சலிருக்காது.  அந்த விவரங்களினூடே  உண்மையின் ஒளிக்கீற்று பளிச்சிடும்.  இந்தக் கோணத்தில் அவரைப் படிப்பதே ஒரு அனுபவமாகிப் போகிறது.  இவர் பெற்ற அனுபவங்களே நம் அனுபவங்களாகிப் போகும் வித்தை இவர் எழுத்தில் நிகழும்.

ஷிண்டேயின் உணவு உபசாரத்தை அவர் வர்ணிக்கையில் கண் கலங்கிப் போகிறது. 'எனக்கு என் தேசம், மனித உள்ளங்க்ளில்  குடியிருக்கும் அன்னபூரணி' என்று பூரித்த நெஞ்சுடன் அவர் சொல்லும் பொழுது விரிந்த பாரத தேசத்து வேரின் தொன்மை வாய்ந்த சிறப்புகள் இன்றும் மங்காது உயிருடன் இருப்பது நாம் அன்றாடம் சந்திக்கும் சின்னச் சின்ன நெருடல்களை மறக்க வைக்கிறது.


குமுதம் 'பக்தி' புத்தாண்டு சிறப்பிதழில் 'பிருந்தாவன யாத்திரை' என்றோரு தொடர் ஆரம்பித்திருக்கிறது.  இந்தத் தொடரை எழுதுபவர் மதிப்பிற்குரிய ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் சார்ந்த பெரியவர் சுவாமி கமலாத்மானந்தர்.

டைரியில் எழுதுவது போலவான குறிப்புகளுடன் தொடரின் ஆரம்பமே சுவாரஸ்யமாக இருக்கிறது.

நந்தகுமாரர் ஆடிக்களித்த இடம் பிருந்தாவனம்.  இங்கு 1907-ல் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் கிளை ஒன்று துவக்கப்பட்டது.   அதன் நூற்றாண்டு விழாவின் நிகழ்ச்சிகள் தொடர்பாக 2007-ம் ஆண்டு தாம் பிருந்தாவனம் சென்ற நினைவுகளைத் தொடராக எழுதுகிறார் சுவாமி கமலாத்மானந்தர்.

ஆக்ராவிலிருந்து மதுரா 55 கி.மீ. தூரத்திலும், மதுராவிலிருந்து 10 கி.மீ. அருகாமையிலும் இருக்கிறது பிருந்தாவனம்.  மதுராவிலிருந்து பிருந்தாவனம் செல்ல 125 இருக்கைகள் கொண்ட இரண்டு பஸ்களை இணைத்தது போன்ற தோற்றம் கொண்ட ரயில் வசதியும் இருக்கிறதாம்.

பிருந்தாவனத்தை ஜப பூமி என்கிறார்கள்.   அங்கு எல்லா நாட்களிலும்  எல்லா நேரங்களிலும் ஜப யக்ஞம் நடக்குமாம்.  வழி நெடுக ஜபமாலை பையில் ஜபமாலையை வைத்து ஜபம் செய்தபடியே செல்பவர்களை சாதாரணமாகப் பார்க்கலாமாம்.  'நாள் பூராவும் நாம சங்கீர்த்தனம் நடந்து கொண்டிருக்கிற திருத்தலம் இது' என்கிறார் சுவாமி கமலாத்மானந்தர்.

கம்சனின் கொடூரங்களிலிருந்து  குழந்தைக் கண்ணனைக் காப்பாற்ற நந்தகோபன் கோகுலத்திலிருந்து குடிபெயர்ந்து வேறிடம் சென்றார்.  நந்தகோபன் குடியிருந்த இடம் என்பதால் அந்த இடம் 'நந்தகாம்' (நந்தனின் கிராமம்) என்று அழைக்கப் படுகிறதாம்.  இந்த நந்த காம் செல்ல புறப்பட்டது வரை இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தை சுவாமிஜி நிறைவு செய்திருக்கிறார்.

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இப்பொழுதே ஆவலாக இருக்கிறது.


'தி இந்து' தமிழ்ப் பத்திரிகையின் பொங்கல் மலர் வெளிவந்து விட்டது.

இன்னும் படித்து முடிக்கவில்லை.  வாசித்து முடித்நதும் இந்த பொங்கல் மலர் குறித்த கறாரான விமர்சனம்  'பூவனம்' தளத்தில் வரவிருக்கிறது என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.



அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!






Related Posts with Thumbnails