மின் நூல்

Sunday, January 8, 2012

பார்வை (பகுதி-21)

                    அத்தியாயம்--21

ரியா மூணு வாரங்கள். ஓடிப்போனதே தெரியலே..

ஒருபக்கம் மாத்திரை, மருந்து, விழிச் சோதனைன்னும் இன்னொரு பக்கம் பாட்டு, அரட்டை, அளவலாவல்ன்னும் நாள் போனதே தெரியலே...

தினம் காலை பத்துக்கெல்லாம் சொல்லி வைச்சாற் போல புரொபசர் மித்ரா ஆஜர்.  புரொபசரின் மருத்துவ ஞானமும், அத்தனை பேரையும் ஆட்கொண்ட மருத்துவ உரைகளும் எங்களை மயக்கின.  அப்படிப்பட்ட அந்த புரொபசர் எங்க டீமில் கலந்துக்கறச்சே மட்டும் புல்லாங்குழல் வித்துவான் ஆகிடுவார்.  அவரது வாசிப்பு அற்புதமான வாசிப்பு.  அதே மாதிரி விவேகானந்தனின் அப்பா ஹரிஹரன் பிடிலைத் தொட்டாலே அது கொஞ்சியது. அதைக் கண்டு என் தம்பிக்கு ஏகப் பெருமை.  தந்தைக்கும் தனயனுக்கும் போட்டியாய் ஒருத்தரை ஒருத்தர் விஞ்ச வாசிக்கும் பொழுது, இடையில் என் தம்பி நுழைந்து புது சங்கதியுடன் இரண்டு பேரையும் ஓரம் கட்டுவான்.   மேடையில் சேர்ந்து பாடிப் பாடி சுசீலாவுக்கும் சங்கரிக்கும் ஏக ஒட்டுதல்.  இரண்டு பேர் சாரீரமும் இழைகையில், எங்கள் மனமெல்லாம் இளம் பாகாய் உருகும்.

எல்லா நாட்களும் தம்பி சம்சாரம், அவர் அம்மா என்று காலையிலேயே தம்பியுடன் வந்திருந்து அத்தனை பேருக்குமான சாப்பாட்டுத் தயாரிப்பு விஷயங்களில் ரொம்பவும் ஒத்தாசையாக இருக்காங்கங்கறதைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லணும்..  அவங்க மட்டும் இல்லைன்னா, சுசீலா ரொம்பவும் சிரமப்பட்டுப் போயிருப்பாள்.   எல்லாருக்குமான ஒரே கோரிக்கை எனக்கு எப்படியாவது பார்வை திரும்பிடணும்ங்கறத்தான் இருந்திருக்கணும்.  இல்லைன்னா இந்த அளவுக்கு ஒவ்வொரு காரியமும் எந்த தடங்கலும் இல்லாமல் அந்தந்த நேரத்தில் நடந்திருக்காது..  எனக்கோ இறைவனிடம் அதற்கு மேலான ஒரு கோரிக்கை இருந்தது.  பார்வை திரும்பி விவேகானந்தன்-சங்கரி திருமண வைபோகத்தை நான் கண்டு களித்து அவங்களை ஆசிர்வதிக்க வேண்டுங்கறது தான் அது.

எப்படி சங்கரி மேல எனக்கு இப்படி ஒரு பிடிப்பு வந்ததுன்னு தெரியலே.  அவள் என் தம்பி மகள்கறதாலயா?.. அதுவும் வாஸ்தவம்தான்னாலும் அதுக்கும் மேலே ஏதோ இருக்கறதாத் தோண்றது.  தன்னோட அப்பா-அம்மாகிட்டே இந்த மாதிரி காதல் சமாச்சாரங்களை நேரிடையாச் சொல்ல எந்தப் பொண்ணுக்கும் இருக்கறா தயக்கம் தான் சங்கரிக்கும் இருந்திருக்கு..  இந்த சமயத்திலே திடீரென்று கிடைசா பெரியம்மாவும், பெரியப்பாவும் அவள் மனசிலே நெருக்கமான ஒரு இடத்தைப் பிடிக்கவே, அவளுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இவர்கள் சொன்னால் அப்பா தன் விஷயத்தை அனுதாபத்து டன் கேட்டு முடித்து வைப்பார்ங்கற நம்பிக்கை.  அதனால தான் எனக்கும் எல்லா விஷயங்களையும் விட இந்த திருமணத்தை எப்படியாவது முடிச்சு வைக்கணும்கற நினைப்பே மனசில் உறுதியாய் உருக்கு போல வலிமை பெற்றது.

டாக்டர் சாந்தி ரூபத்தில் தெய்வம் தான் கருணை பொழிஞ்சிருக்கணும்..  இல்லைன்னா தனி ஒரு மனுஷிக்கு இத்தனை சக்தி கிடைச்சிருக்காது.  அவரிடம் இருக்கும் சக்தி, எல்லோருக்கும் பங்கிட்டு பகிர்ந்தாற் போல அத்தனை பேரிலும் பரிமளிக்கிறது.  எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் டாக்டர் சாந்தி வேண்டப்பட்டவராகவே இருக்கார்... ஒவ்வொரு நாளும் காலைலே வந்து கண் சோதனைகள் நடத்திட்டு மருத்துவ சம்பந்தமான வழிகாட்டல்களைச் சொல்வார்.  மருந்துகளை மாற்றித் தர வேண்டுமானால், சங்கரியிடம் அது பற்றி விவரமாகச் சொல்லி அவற்றை நான் உட்கொள்ளும் விஷயங்களில் உதவியாக இருக்க ஏற்பாடுகள் செய்வார்.  திரும்பவும் மாலை நான்கு மணி அளவில் வந்து, இரவு வரை எங்களுடன் இருந்து விட்டுத்தான் செல்வார்.  அவருக்காகத் தோன்றினால் ஏதாவது பாடுவார்.  பெரும்பாலும் அவை மெல்லிசைப் பாடல்களாக இருக்கும்.

டாக்டர் என்னிடம் சொல்லிவிட்டுப் போன அன்றைக்கு ராத்திரி சாப்பாடு ஆனதும் தம்பி என் அறைக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிண்டிருந்தான்.அப்போ யதேச்சையா விவேகானந்தனோட அப்பா ஹரிஹரனைப் பத்தி பேச்சு வந்தது.

"அந்த பையன் அப்பா தங்கமானவர்.  ஹரிஹரன்னுட்டு பேர்.  கொஞ்ச காலம் எங்கிட்டே தான் பிடில் வாசிக்கக் கத்திண்டார்.  அதைப் பத்தி உனக்குச் சொல்லிருக்கேனோ"ன்னு தம்பி கேட்டான்.

"இல்லை.  ஆனா, சுசீலா சொல்லிருக்கான்னு நெனைக்கறேன்.  என்னிக்கோ சாபாலே அந்தப் பையன் எங்கிட்டே வந்து 'நமஸ்காரம்'ன்னுட்டு ஆசிர்வாதம் வாங்கிண்டப்போ, அவன் அப்பாவைப் பத்தி சுசீலா சொன்னா.  அப்பத்தான் எனக்குத் தெரியும்"ன்னேன்.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்.  அந்தப் பையனும் ரொம்ப சூடிகை.  அதான் எனக்கும் அவனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு."

கொஞ்ச நேரம் நான் எதுவும் சொல்லலே.  தம்பியே தொடர்ந்து சொன்னான்:
"பாக்கறதுக்கு அழகாவும் இருப்பான்.   சங்கரிக்கு அவனையே முடிச்சிடலாம் -னுங்கற யோசனைலே இருக்கேன். ஆனா..."

"என்ன ஆனா?.. தேவிக்கு இந்த சம்பந்தம் பிடிக்கலையா?"

"நோ..நோ..  இப்படிச் செய்யலாம்னுட்டு முதல்லே எங்கிட்டே சொன்னதே அவ தான்."

"பின்னே என்ன தயக்கம்?.. சிஷ்யனா இருந்தவன் பையன்னுட்டு யோசிக்கறையா?"

"இல்லேண்ணா... அப்படில்லாம் இல்லே."

"பின்னே?"

"மனசிலே ஒரு வைராக்கியம்."

"என்னனுட்டு?"

"இந்த ட்ரீட்மெண்ட் உனக்கு இப்போ நடந்திண்டுருக்கு இல்லையா?.. இது முடிஞ்சு நமக்கு சாதகமா ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் தான் அவங்க கல்யாணம்."

"தத்துப்பித்துன்னு பேசாதே.. இதுக்கும் அதுக்கும் ஏன் முடிச்சு போடறே?..  ஏதோ சொல்வாளே;  'அலை ஓஞ்சப் பின்னாடி தான் குளிப்பேன்னுட்டு'-- அந்த மாதிரி தான் இதெல்லாம்.  இது பாட்டுக்க இது.  அது பாட்டுக்க அது.  நீங்க ரெண்டு பேரும் சேந்து ஒரு நல்ல காரியத்துக்கு முடிவெடுத்தா, அதை ஒத்திப் போடக் கூடாது.  முதல்லே அது விஷயமா அடுத்தாப்லே ஆகற காரியத்தைப் பாரு."

"இல்லேண்ணா.. உங்க வார்த்தைக்கு எதிர்ப்பா பேசறதா நெனைக்க வேண்டாம்.  நீங்க தான் எனக்கு எல்லாம். நீங்க இருந்து அவ கல்யாணத்தை..."

"நான் எங்கேடா போனேன்?.. முதல்லே அந்த நல்ல காரியத்தை ஜாம்ஜாம்ன்னு நடத்த ஆக வேண்டியதைப் பாரு. உன் மன்னியும் எட்டூருக்கு ஒத்தாசையா இருப்பா. ."

"இல்லேண்ணா..."

"என்ன, இல்லேண்ணா?.."

"இந்த ட்ரீட்மெண்ட்லே உங்களுக்கு பழையபடி பார்வை வரப்போறது.  அப்பறம் தான் சங்கரி கல்யாணம் நடக்கப் போறது.."

"எப்படி அப்படித் துல்லியமா சொல்றே?.."

"என் மனசிலே தோண்றது.."

"மனசிலே தோண்றதெல்லாம் நடந்துடுமா?"

"அப்படி ஒண்ணு ரெண்டு கரெக்டா நடந்திருக்கு.  அதனாலேத் தான் சொல்றேன்."

விஸ்வநாதனை அப்படியே தழுவிக்கணும் போல இருக்கு. இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்காம, "சங்கரிக்கு அவள் மனம் போல மாங்கல்யம் அமைஞ்சா எனக்கு அதை விட சந்தோஷம் கொடுக்கக் கூடியது வேறே ஒண்ணு இல்லைப்பா"ன்னேன்.

"என்னண்ணா! சங்கரி சொல்ற மாதிரியே சொல்றே..?"

"சங்கரியா? அவ என்ன சொன்னா?"

"பெரியப்பாக்கு பார்வை கிடைச்சா அதை விட சந்தோஷம் கொடுக்கக் கூடியது தனக்கு வேறே ஒண்ணும் இல்லேன்னு சொன்னா.."

அவன் சொல்றதைக் கேட்டு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. "அந்தக் குழந்தை அப்படியா சொன்னா?..   அந்த நல்ல மனசுக்கு எல்லாமே நன்னா நடக்கும்ப்பா..  எனக்கும் பார்வை கிடைச்சிடும்னு நம்பிக்கை இப்போ வந்திடுத்து.."ன்னு சொல்றச்சே என்னையறியாம குரல் தழுதழுத்தது..

"அந்த நம்பிக்கை தான் அண்ணா இப்போ உனக்கு வேணும்.  இதைத் தான் சாந்தி டாக்டரும் படிச்சு படிச்சு எங்கிட்டே சொன்னாங்க.."ன்னவன், திடீர்னு நெனைச்சிண்டது போல, " நேரமாச்சே?.. நீ படுத்துக்க வேணாமா?"ன்னான்.

"சரிப்பா.."ன்னு அவனுக்குச் சொன்னேனே தவிர, படுக்கையில் படுத்தும் லேசில் தூக்கம் வரலே.

அப்புறம் எப்போத் தூங்கினேனோ, எனக்கேத் தெரியலே.


காலை எப்போவும் போலத் விடிஞ்சதா எனக்குத் தோணினாலும், நடக்கறதெல்லாம் ஏதோ விறுவிறுன்னு வேகமாக நடக்கற மாதிரி இருக்கு..

இன்னிக்கு ரெண்டு டாக்டரும் சேர்ந்தே வந்திருக்கறது ஒரு அதிசயம்;  வேறே எங்கேயும் போகாம டாக்டர் சாந்தி இங்கேயே இருந்தது இன்னொரு அதிசயம்.  அதை விட அதிசயம், சுசீலா-சங்கரி கூடச் சேர்ந்திண்டு டாக்டர் நிறையப் பாட்டு பாடினாங்க..  இன்னிக்கு முழு செஷனுக்கும் புல்லாங்குழலை கீழேயே வைக்கப் போறதில்லைன்னு புரொபசர் வெளுத்துக் கட்டினார்.

ராத்திரி ரொம்ப நேரம் நாங்க ரெண்டு பேரும் பேசிண்டிருந்தது தம்பிக்கு ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்திருக்கு போல இருக்கு.  என்னமாய், அவன் பிடில் பேசித்துங்கறீங்க?.. விவேகானந்தனும், ஹரிஹரனும் இருக்கிற இடம் தெரிலே.  விஸ்வநாதன் வாசிக்கறதை மெய்மறந்து கேட்டிண்டிருப்பா போலிருக்கு.

புரந்தரதாசரின் 'கஜவதனா பேடுவே'யை ஹம்சத்வனியில் சுசீலா ஆரம்பித்ததுவே எடுப்பாக இருந்தது.  அடுத்து கோபாலகிருஷ்ண பாரதியின் 'வருவாரோ வரம் தருவாரோ'.வை ஸ்யாமாவில் சங்கரி பாடத் தொடங்கினது மே மனசிலே சிலிர்த்த அந்த சிலிர்ப்பு சடார்னு மூளைக்குத் தாவி அங்கேந்து நெற்றி மேட்டுக்கு இறங்கின மாதிரி இருந்தது.  அந்த இறங்கல் ஒரு வினாடி தான் அங்கே தங்கித்து.. அடுத்த சொடக்கிலேயே கொஞ்சம் பக்கவாட்டில் கீழ் இறங்கி அந்தப் பிரதேசம் முழுவதையும் தன் ஆளுகையில் எடுத்துண்ட மாதிரி இருந்தது.   என்ன நடக்கிறதுங்கறதைத் தெரிஞ்சிக்க முடியவில்லையே தவிர நான் என் வசத்தில் இல்லைங்கறது நன்னாத் தெரிஞ்சது.

இந்த சமயத்தில் தான், அது நடந்தது.  சுசீலாவா, சங்கரியா சரியாத் தெரிலே.
அந்தத் தேன் குரல் திவ்ய கானத்தில் குழைந்து என் செவிப்பறையில் வழிந்தது.  "மானஸ சஞ்சரரே.. ப்ரஹ்மனி.. மானஸ சஞ்சரரே..." என்று ஆரம்பிச்சப்போ அகிலமே சொக்கி என்னில் வசப்பட்டாற் போலிருந்தது.

'இந்த புத்தி தறிகெட்டுத் திரியறது.  அதை இங்கே அங்கே தாவ விடாம கட்டுக்குள் அடக்கி...   அடக்கி?.. பிரமத்தில், பிரமத்தைப் பத்தின விஷயங்களில் பொருத்தணும்ன்னு என்னையே இழுத்துண்டு போகிற சொக்கலில் அரைகுறை நினைவில் நான் தீர்மானிக்கும் முன், அடுத்த வரி
கானாமிர்தமாய் காற்றில் தவழ்ந்து தவழ்ந்து வர்றது.  "மனசிகி பின்ச்சா அலங்க்ருத சிகுரே.. மஹநீய கபோல விஜிய முகுதே.."

சாட்சாத் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரே எதிரே நிற்பது போல பிரமை. அந்த நினைவுத் தப்பலிலும் அந்த 'ஸ்யாமா'வை உணர்வு தப்பவிடலே. 'ஹரி காம்போதியின் ஜன்ய ராகம் தானே இது?'ன்னு எனக்குள் நானே கேட்டுண்ட மாதிரி இருக்கு.  இன்னொரு பக்க ஞாபகத்தில், 'ஹரிகாம்போதி 28-வது மேளகர்த்தா தானே?'ன்னு என்னையே கேட்டுக்கறது.

"ஸ்ரீ ரமணிகுச துர்க விஹாரே.. ஸேவக ஜன மந்திர மந்தாரே.." தம்பி தான்; இந்த குழைவு தம்பிக்குத் தான் வரும்ன்னு நினைவில் வயலினின் வழுக்கல் நர்த்தனமிடுகையில், பார்வையிலும் மேலே உயர்ந்து தாழ்ந்து படியற அந்த வில் பட்றது. அந்த வயலின், அந்த வில், மசமசன்னு தேசலா இங்கே அங்கே உட்கார்ந்திருக்கறவங்களோட நிழல் தரிசனம், ஆ! அதோ அங்கே..
அம்பது பைசா அளவில் நெற்றியில் வட்டமா பொட்டு இட்டுண்டு சுசீலா...
அம்மாடி.. கடவுளே.. பார்வை வந்தாச்சா..

"மானஸ சஞ்சரரே.. ப்ரஹ்மனி.. மானஸ சஞ்சரரே..." சங்கரியின் குரல் இழைகையில் என்னுள் எல்லாம் அடங்கிப் போன மாதிரி இருக்கு...

அதேசமயம் என் தோளை ஆதரவாத் தொடறவர் புரொபசராத் தான் இருக்கணும்.   மலங்க மலங்க அவரையே பாக்கறேன். அடுத்த வினாடி, டாக்டர் சாந்தியைத் தேடி என் கண்கள் அலைபாய்கின்றன.


(இன்னும் வரும்)




















15 comments:

இராஜராஜேஸ்வரி said...

அந்த வயலின், அந்த வில், மசமசன்னு தேசலா இங்கே அங்கே உட்கார்ந்திருக்கறவங்களோட நிழல் தரிசனம், ஆ! அதோ அங்கே..
அம்பது பைசா அளவில் நெற்றியில் வட்டமா பொட்டு இட்டுண்டு சுசீலா...
அம்மாடி.. கடவுளே.. பார்வை வந்தாச்சா..

கண்பெற்ற ஆனந்தம் நர்த்தனம் ஆடுகிறது.. பாராட்டுக்கள்..

Geetha Sambasivam said...

nalla parkattum. nalla sethiyoda thiruvathirai kali seyya poren. Heartiest Greetings and Regards

G.M Balasubramaniam said...

பார்வை வரும் நேரம் நடக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் ரசாயன மாற்றம் விவரித்த விதம் பேஷ் பேஷ்.!நினைப்பும் செயலும் நன்றாயிருந்தால் நம்பிக்கை பலிதமாகும். பாராட்டுக்கள் ஜீவி.

ஸ்ரீராம். said...

இசைப் பிரவாகமும் மனதில் புரளும் எண்ணப் புயல்களும் உங்கள் எழுத்தில் வயலினில் விளையாடும் விஸ்வநாதனின் கைவண்ணம் போல விளையாடி விட்டன. ஆலாபனை/நிரவலின் உச்ச கட்டம் போல பிரமை. 'மசமச வென்று பார்வை' என்று வரியைப் படிக்கத் தொடங்கியவுடன் "My God" என்று மனதுக்குள் சத்தம்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

//அடக்கி?.. பிரமத்தில், பிரமத்தைப் பத்தின விஷயங்களில் பொருத்தணும்ன்னு என்னையே இழுத்துண்டு போகிற சொக்கலில் அரைகுறை நினைவில் நான் தீர்மானிக்கும் முன், அடுத்த வரி
கானாமிர்தமாய் காற்றில் தவழ்ந்து தவழ்ந்து வர்றது. "மனசிகி பின்ச்சா அலங்க்ருத சிகுரே.. மஹநீய கபோல விஜிய முகுதே.."

சாட்சாத் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரே எதிரே நிற்பது போல பிரமை. அந்த நினைவுத் தப்பலிலும் அந்த 'ஸ்யாமா'வை உணர்வு தப்பவிடலே. 'ஹரி காம்போதியின் ஜன்ய ராகம் தானே இது?'ன்னு எனக்குள் நானே கேட்டுண்ட மாதிரி இருக்கு. இன்னொரு பக்க ஞாபகத்தில், 'ஹரிகாம்போதி 28-வது மேளகர்த்தா தானே?'ன்னு என்னையே கேட்டுக்கறது.

"ஸ்ரீ ரமணிகுச துர்க விஹாரே.. ஸேவக ஜன மந்திர மந்தாரே.." தம்பி தான்; இந்த குழைவு தம்பிக்குத் தான் வரும்ன்னு நினைவில் வயலினின் வழுக்கல் நர்த்தனமிடுகையில், பார்வையிலும் மேலே உயர்ந்து தாழ்ந்து படியற அந்த வில் பட்றது. அந்த வயலின், அந்த வில், மசமசன்னு தேசலா இங்கே அங்கே உட்கார்ந்திருக்கறவங்களோட நிழல் தரிசனம், ஆ! அதோ அங்கே..
//


எவ்வளவு ஆத்மார்த்தமான எழுத்து......கட்டிப்போட்டுவிட்டது. Complete postive charge இந்த பதிவு முழுவதும் ஆக்ரமிக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் நிறைந்துள்ள மனதின் நிலையை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலவில்லை....
அந்த வீட்டில் அந்தப் பாத்திரங்களுடன் எழுதிய நீங்கள், படிக்கின்ற நாங்கள் அனைவரும் உலவிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது...பார்வையின் மசமசப்பு நீங்கித் தெளியட்டும் சீக்கிரம்...

கோமதி அரசு said...

சங்கரி பாடத் தொடங்கினது மே மனசிலே சிலிர்த்த அந்த சிலிர்ப்பு சடார்னு மூளைக்குத் தாவி அங்கேந்து நெற்றி மேட்டுக்கு இறங்கின மாதிரி இருந்தது. அந்த இறங்கல் ஒரு வினாடி தான் அங்கே தங்கித்து.. அடுத்த சொடக்கிலேயே கொஞ்சம் பக்கவாட்டில் கீழ் இறங்கி அந்தப் பிரதேசம் முழுவதையும் தன் ஆளுகையில் எடுத்துண்ட மாதிரி இருந்தது. என்ன நடக்கிறதுங்கறதைத் தெரிஞ்சிக்க முடியவில்லையே தவிர நான் என் வசத்தில் இல்லைங்கறது நன்னாத் தெரிஞ்சது.//


நானும் கதையோடு ஐக்கியம் ஆகி விட்டேன்.

அந்த வயலின், அந்த வில், மசமசன்னு தேசலா இங்கே அங்கே உட்கார்ந்திருக்கறவங்களோட நிழல் தரிசனம், ஆ! அதோ அங்கே..
அம்பது பைசா அளவில் நெற்றியில் வட்டமா பொட்டு இட்டுண்டு சுசீலா...
அம்மாடி.. கடவுளே.. பார்வை வந்தாச்சா..//

கடவுளே பார்வை வந்து விட்டதா !
ஒ மகிழ்ச்சி.
கல்யாணம் இனிதே நடக்கும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

உங்கள் வாசிப்புக்குத் தான் காத்திருந்தேன்.

நான் வேறு மாதிரி இந்தக் கதையைக் கொண்டு போக யோசித்ததுண்டு. வேறு எந்த மாதிரி என்பதை அடுத்து நகர்கிற கதைத் தொடர்ச்சியில் சொல்கிறேன்) ஆனால் அப்படிப்பட்ட யோசனைக்கே இடம் கொடுக்க விடாமல் தொடர்ந்து உங்கள் பின்னூட்டங்களில் இந்த மாதிரியான ஒரு முடிவுக்கு வலியுறுத்திக் கொண்டே வந்தீர்கள். உங்கள் விருப்பத்தை என்னால் தட்ட முடியவில்லை. ஆக, இப்படியான முடிவு. 'கல்யாணம் இனிதே நடக்கும்' என்கிற உங்கள் ஆசிர்வாதமும் அடுத்த அத்தியாயத்தில் நிகழ்கிறது. எனக்கும் மனத்திற்கு நிறைவாக இருக்கிறது.

தொடர்ந்து வாசித்து, பின்னூட்டங்களின் மூலமாய் வழிநடத்திச் சென்றமைக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

ஒரே வரியில் நிறைவு தெறிக்கிறது.
தங்கள் மகிழ்ச்சியும் பாராட்டுகளாய் பொழிந்திருப்பதற்கு மிக்க நன்றிங்க.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தாமதமான எனது வருகைக்கு மன்னிக்கவும். திருவாதிரைக் களி செய்யப் போகிற இடுக்கில் கிடைத்த நேரத்தில் படித்தும் தவறாது பின்னூட்டமிட்டும் வாழ்த்தியும் மகிழ்ந்த தங்களுக்கு மிக்க நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ ஜிஎம்பி

தங்கள் மனத்திற்கு பிடித்த இடத்தை அடிக்கோடிட்டுச் சொல்லி மகிழ்ந்தமைக்கு நன்றி, சார்! 'நினைப்பும் செயலும் நன்றாயிருந்தால் நம்பிக்கை பலிதமாகும்' என்னும் வாக்கை மனத்தில் பதித்துக் கொள்கிறேன். தொடர்கதை எழுதுவதற்கு இடையிலும் தாங்கள் தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆஹா.. உணர்வுப் பிரவாகமாய் ஒரு பிரவேசம்! சத்தியமான அந்த உணர்வு உங்கள் மனத்தில் சப்தித்ததின் எதிரொலி வரிகளாய், வார்த்தைகளாய் வெளிப்பட்டதைப் படித்த பொழுது என் மனமும் பெருமிதத்தில் விம்மியது. தாங்கள் பெற்ற அனுபவத்திற்கும், பாராட்டிற்கும் சிரம் தாழ்த்திய நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ Shakthiprabha

உன்னத ரசனையில் ஒன்றிப்போய் விகசித்த மன வெளிப்பாடுகளுக்கு நன்றி, ஷக்தி.

விரைவில் விட்டதிலிருந்து தொடர்கிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்.

ஜீவி said...

@ பாசமலர்

ஆஹா.. எவ்வளவு உணர்வுபூர்வமான வரிகள்?.. மிக்க நன்றி, பாசமலர்!

பதிலளிக்க தாமதமாகி விட்டது. சில நாட்களில் தொடர்கிறேன். தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

//"மானஸ சஞ்சரரே.. ப்ரஹ்மனி.. மானஸ சஞ்சரரே..."//
சங்கராபரணம் படத்தில் அப்பாட்டை கேட்ட நெகிழ்வு இங்கும் உண்டாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails