மின் நூல்

Monday, April 11, 2011

ஆத்மாவைத் தேடி …. 5 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


5. மன மயக்கங்கள்

மயந்தி தான் வண்டியை செலுத்திக் கொண்டு வந்தாள். பக்கத்தில் ஸீட் பெல்ட் மாட்டிக் கொண்டு மணிவண்ணன். பின்னால் கிரிஜாவும், கார் ஸீட்டில் ரிஷியும். குன்றுப் பாதையில் இறங்கி மெயின் கேட்டைத் தாண்டுகையிலேயே ரிஷி தூங்கிவிட்டான். மணிவண்ணன் ஜிபிஎஸ்ஸில் போகும் வழித்தடத்தையும் அவ்வவ்போது மணி அடித்து எவ்வளவு தூரத்தில் எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்று சொல்லும் வழித்தட அறிவிப்புகளைக் கேட்டுக் கொண்டு சுற்றுப்புறங்களை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு வந்தான். வழிப்பூரா உயர உயர வளர்ந்திருந்த அத்தனை மரத்து இலைகளும் பழுப்பைப் பூசிக் கொண்டிருந்தது, பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தமயந்தியின் பக்கம் கொஞ்சம் முன்னால் வந்து சாய்ந்து, "தமா.." என்று அழைத்தாள் கிரிஜா.

ஆழ்ந்த யோசனையிலிருந்த தமயந்தி அந்த யோசனை கலையாமலேயே லேசாகத் தலையைச் சாய்த்து, "உம்.." என்றாள். அந்த நீண்ட ஹைவே பாதையில் பக்கத்து டிராக்கில் போய்க்கொண்டிருந்த அந்த பெரிய டிரக்கைத் தாண்டி வண்டி 70 மைல் வேகத்தில் போகையில் அவள் சொன்ன 'உம்..' கிரிஜாவிற்கு கேட்காமலேயே போனாலும் அவள் உதடுகள் மட்டும் அசைந்ததைப் பார்த்தாள்.

"என்ன அப்படி ஒரு யோசனை தமா?.. மாதுரியைப் பற்றியா?" என்று கேட்டாள், சற்று உரக்க்கவே. மாதுரியைப் பற்றித் தான் என்று அவளுக்கும் தெரியும். உண்மையிலேயே அவளும் அவளைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் ஒருவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு வரும் பொழுது இரண்டு பேருமே மெளனமாக இருந்தால் எப்படி, ஏதாவது பேசினால் இருவரின் எண்ணங்களையும் கலந்து கொள்ளலாமே என்கிற ஆசையில் தான் கிரிஜா அப்படி கேட்டாள். மறக்க முடியாமல் மாதுரி அப்படி அவர்கள் இருவர் நினைவுகளிலும் பதிந்து பயணிக்கையில் கூடவே வந்து கொண்டிருந்தாள்.

அரைமணி நேரத்திற்கு முன்னாலேயே மலைச்சரிவு பாதைகளில் இறங்கி காண்டன் சாலையில் பயணித்து ப்ளூ ரிட்ஜ் பார்க் வேயின் விஸிட்டர் சென்டர் தாண்டி ஆஷ்வெல்லுக்குள் நுழைந்து விட்டார்கள். பெண்கள், குழந்தைகள் ஒரு வண்டியில் முன்னே செல்ல, ஆண்கள் எல்லோரும் வந்த வண்டி பின்னால் அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது. 274 மைல்கள் நாலரை மணிப் பயணம் என்று ஜிபிஎஸ் சொல்லிற்று. இரவுக்குள் நாஷ்வெல் சென்று விட்டால் கிரிஜாவின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு தங்கள் ஊருக்குப் போக தமயந்தியின் குடும்பம் சம்மதித்திருந்தது.

"மாதுரிக்கு அந்த தெத்துப் பல் அழகா இருக்குல்லே?" என்று கிரிஜா கேள்வியை மாற்றிக் கேட்டபொழுது, தமாவினால் பதில் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

தமா எதையோ ரசித்து சிரிப்பது போலவே லேசாகச் சிரித்தாள். "மயிலுக்குத் தோகை, முயலுக்கு நிமிர்ந்து நிற்கும் ரெண்டு காதுகள், குயிலுக்கு அதன் குரல், சேவலுக்குக் கொண்டைங்கற மாதிரி மாதுரிக்கு அவளோட தெத்துப்பல், இல்லையா?" என்றாள் தமா.

"அடேடே! இதுவரை எனக்குத் தெரியாதே! என்னைக்கு கவிதாயினியாய் மாறினே? அந்த மாதுரியைப் பார்த்த பிறகா?" என்றாள் கிரிஜா, பேச்சைத் தொடரத் தூண்டில் போட்டவாறு.

"மாதுரியை பாத்த பின்னாடி இல்லே.. அவளோட பெரியப்பாவைப் பாத்தலிருந்து!" என்று சிரிக்காமல் சொன்னாள் தமா. கலகலத்துச் சிரித்தது கிரிஜா தான். புன்முறுவலுடன் தமா வண்டியை நிறுத்தி கொஞ்சம் காத்திருந்து, அனுமதி கிடைத்ததும் இடது பக்கம் திரும்பி நியூபோர்ட் செல்லும் I-40 மேற்கு ஹைவேயில் ஊர்ந்து வேகமெடுத்தாள். வழிப்பாதை குறிப்பைப் பார்த்து அவள் போவது சரியான பாதைதான் என்று நிச்சயத்துக் கொண்டான் மணிவண்ணன்.

"ஆமாமாம்! உன்னைப் பார்த்து நம்ம சுகுணா மாதிரி இல்லேன்னு ஆச்சரியத்தோட கேட்டாரே! அவர் சொன்னதும் மாதுரிக்குத் தான் என்ன சந்தோஷம்ங்கறே.. அவளும் அதைத்தான் நெனைச்சிருப்பா போலிருக்கு.. அதையே அவரும் சொன்னதிலே தலைகால் புரியலே, அவளுக்கு!" என்றாள்.

"இருக்காதா, பின்னே?.. அவ அம்மா இப்போ உயிரோட இல்லை; தன் அம்மாவைப் போலவே இன்னொருத்தரைப் பாக்கறச்சே-- அதுவும் கொஞ்ச குறைந்த வயசு அம்மாவை--எந்தப் பொண்ணுக்குத் தான் அப்படி இருக்காது?.."

"கரெக்ட், தமா.. உன்னைப் பாத்ததிலேந்து அதையே நெனைச்சிண்டிருந்திருக்கா. வெளிப்படையா இதை எப்படிச் சொல்றதுன்னு தயக்கம் வேறே. அதையே அவ பெரியப்பா சொன்னதும், சந்தோஷம் தாங்கலே.. அதான் அப்படிப் பூரிச்சுப் போயிட்டா!" என்றாள் கிரிஜா.

கிரிஜா சொன்னதை ரசித்த மாதிரி காட்டிக் கொண்டு, "அவங்க சொல்றது எவ்வளவு தூரம் சரியா இருக்கும்னு தெரியலே.. ஒண்ணு மட்டும் தெரியறது.." என்று சொல்லி நிறுத்தினாள் தமா.

"என்ன, அந்தத் தெத்துப்பல் சமாச்சாரம் தானே?.. அவ அம்மா சுகுணாவுக்கு தெத்துப்பல் இல்லேன்னு தெரியறது.. அதானே?"

"சரியான எமகாதகிடி நீ!" என்று ஸ்டீரிங்கிலிருந்து வலது கை எடுத்து மற்ற விரல்களைக் குவித்து கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி அசைத்துக் காட்டினாள் தமா. "நான் என்ன நெனைக்கறேனோ அதை டக்குடக்குன்னு சொல்லிடறியே!"

"ரொம்பப் பேருக்கு படிக்கறதுன்னா புஸ்தகத்தைப் படிக்கறது தான் தெரியும்; மனுஷாளைப் படிக்கறதுன்னு ஒண்ணு இருக்கு. அது தெரியுமா?"

"திருவள்ளுவர் கூட சொல்வாறே?.. முகத்தைப் படிக்கறது பத்தி.. அது மாதிரியா?"

"மனசில்ல இருக்கறதை அவங்களோட முகம் காட்டிடும்ங்கறத்துக்கு அவர் சொல்லுவார். இது வேறே மாதிரி.. அதை இன்னொரு நாளைக்கு உனக்குச் சொல்லித் தர்றேன். மாதுரின்னோம்; அவ அம்மா சுகுணான்னோம். அந்த சுகுணா மாதிரியே நீ இருக்கறதா, மாதுரி மட்டுமில்லே-- அவ பெரியப்பாவும் சொல்லியாச்சு. அம்மா மாதிரியே பொண்ணு இருக்காளா, ஓ.கே.! அதை அந்தப் பொண்ணுக்கும் அம்மா சாயல்னு சொல்லலாம். ஆனா, அவங்க குடும்பத்தோட சம்பந்தமில்லாத நீ, அவ அம்மா சுகுணா மாதிரியே இருக்கேன்னா.. இங்கே தாண்டி ஏதோ ஒண்ணு இடிக்கறது" என்ற கிரிஜா, "இந்த ஈக்குவேஷன்லாம் நேர்படுத்தணும்னா ஒண்ணு தெரிஞ்சாகணும்.. எஸ்.. அந்த மாதுரி பேச்சு வாக்கில் தன்னைப் பத்தி உங்கிட்டே ஏதாவது சொன்னாளா?.. அவ யாரு மாதிரி சாயலாம்?" என்று யோசனையோடு கேட்ட பொழுது, "அதான் அப்பவே நமக்குத் தெரிஞ்சது தானேடி.." என்று தமயந்தி ஸ்டிரிங்கை விரலால் செல்லமாகத் தட்டிக்கொண்டே சொன்னாள்: "அந்த மாதுரி கிட்டத்தட்ட எங்கம்மா மாலு மாதிரி இருக்கான்னு தான் ஆரம்பத்திலேந்தே சொல்லிண்டிருக்கோம்லே!"

'"இருக்கோம்தான். அன்னிக்கு அந்த மலைப்பாதைலே தூரத்திலேந்து பாக்கறச்சே அப்படி சொன்னோம். இப்போ அப்படிச் சொல்றையான்னு தான் கேள்வி. இத்தனை நேரம் அங்கே தானே அவங்க கூடத் தானே இருந்திட்டு வர்றோம்.. இப்போ சொல்லு. மாதுரி உங்கம்மா மாதிரியா இருக்கா?"

"இப்பவும் அப்படித்தாண்டி நெனைக்கத் தோண்றது.. ரொம்பப் பக்கத்லே தீர்க்கமா பாக்கறச்சே இல்லேனாலும் முக்காவாசி.. பேசறச்சே கண்ணை படபடத்திண்டே பேசறது, யார்கிட்டேயும் நெருக்கமா ஒரு சொந்தத்தோடு பழகறது, மனசிலே ஒண்ணும் வைச்சிக்காம வெகுளியா பேசறது.. இப்போ அந்த முகம் கூட பிடிபட்டுப் போச்சுடி.. அந்த தாடை வளைவு, கோணல் வகிடு, பிடிச்சு விட்ட மாதிரி தீர்க்கமான அந்த மூக்கு... வாவ்! அவளுக்கு எங்கம்மா சாயல் நிறைய இருக்குடி..."

மாதுரியின் அம்மா சுகுணா மாதிரி தோற்றச் சாயலில் தான் இருப்பதும், தன் அம்மா மாலு மாதிரி மாதுரி இருப்பதுமான ஒரு அதிசய ஒற்றுமையை தமயந்தி மிகவும் ரசித்து விரும்பவாதாகவே அவள் உற்சாகமாக பேசிய தோரணையிலிரு ந்து கிரிஜாக்கு பட்டது. இருந்தும் அதை இன்னும் நன்றாக நிச்சயம் பண்ணிக் கொள்ளும் பொருட்டு, சாலையைப் பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு நிமிடம் தாமதித்து விட்டுச் சொன்னாள்:

"ஒவ்வொண்ணா சரிபார்த்துச் சொன்னா நீ சொல்றதெல்லாம் பொருந்தித் தான் வர்றது.. ஆதிலேந்தே நானும் அப்படித் தான் நெனைச்சிண்டிருக்கேன். அவங்க காபினுக்கு போனதிலேந்தே இதான் என் மனசிலே ஓடிண்டிருக்கு.. என்ன, அவ டக்குனு எங்கம்மா மாதிரியே நீ இருக்கேன்னு உன்னைச் சொல்லிட்டா.. நீ தான் திருப்பி அவ கிட்டே, நீயும் கூடத்தான் எங்கம்மா மாதிரியே இருக்கேன்னு சொல்லலே.. அதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்."

"கிரிஜா! நீதான் சொல்லேன்.. அவ சொன்ன அதே மாதிரி என்னாலே அவகிட்டே ஏண்டி சொல்ல முடிலே?" என்று ரொம்பவும் மிருதுவாக தமயந்தி கேட்ட பொழுது, அந்த கேள்வி தட்டுத்தடுமாறி அவள் நெஞ்சத்தின் அடி ஆழத்திலிருந்து வருவது போலிருந்தது.. முன்னால் சென்று கொண்டிருந்த Fed-Ex வண்டி அவளுக்கு வழிவிட்டு அடுத்த டிராக்குக்கு மாறியது.

"ரொம்ப சிம்பிள்.. உனக்கு உங்கம்மா மேலே அவ்வளவு ஆசை. உங்கம்மா அவ்வளவு உசத்தி உனக்கு. இந்த உலகத்திலே உங்கம்மா மாதிரி வேறே யாரும் இருக்க மாட்டான்னு அடிச்சு நினைக்கற மனசு.. அதான் இன்னொருத்தர் உங்கம்மா மாதிரி இருந்தாலும் உன் மனசு சட்னுன்னு அதை ஏத்துக்கலே.. ஓரளவு ஏத்துண்டாலும், வெளிப்படையா அதைச் சொல்லி உனக்கும் உன் அம்மாவுக்கும் இருக்கற நெருக்கத்தை சாதாரணமாக்கி அதை இன்னொருவர் உருவத்திலே உன்னாலே பொருத்திப் பார்க்க முடியலே.. அவ்வளவு தான்" என்றாள்.

'"என்னடி, ஜட்ஜ் தீர்ப்புச் சொல்றமாதிரி படார்னு சொல்லிட்டே.. 'அம்மா, அசப்பிலே உன்னை மாதிரியே ஒருத்தரை இங்கே பாத்தேன்'னு போன்லே எங்கம்மாகிட்டேயே சொன்னேனடி.. அதுக்கு என்ன சொல்றே?"

"அதெல்லாம் ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தரை பார்த்த வேகத்லே பேசற பேச்சு. இந்தப் பெரியப்பாவை பாத்திட்டு கூடத் தான் உங்கப்பா மாதிரியே இருக்குன்னு நெனைச்சோம். நெருக்கத்லே பாக்கறச்சே வேறே மாதிரி தெரியலையா?.. அதுமாதிரி தான் உங்கம்மா மாதிரின்னு அப்போ உன் மனசு நெனைச்சதும்.."

"அப்போ, அப்போ நெனைச்சதும் இப்போ நான் நெனைக்கறதும் வேறே, வேறேங்கறையா?"

"அப்படின்னு இல்லே.. ஆனா அதை இப்படிச் சொல்லலாம். அப்போ ஒரே பார்வைலே அவசரத்லே நெனைச்சது, பேசினது எல்லாம் என்னவோ அதையேத் தான் இப்பவும் நெனைச்சிருக்கே.. நெனைப்புலே எந்த மாற்றமும் இல்லே. இருந்தாலும் உன்னோட உள்மனசு அதை ஒத்துக்காம இன்னும் முரண்டு பிடிக்கறது... உங்கம்மா கிட்டே உனக்கிருக்கிற பிடிப்பு அதை இப்பவும் அப்படி நெனைக்க முடியாம தடுத்திண்டு இருக்கு. அது தான் வெளிப்படையா எதையும் சொல்ல முடியாம உன்னைத் தடுக்கறது."

தமயந்தி பதிலே பேசவில்லை. வெறித்து வழவழ சாலையைப் பார்த்தவாறே வண்டியை செலுத்திக் கொண்டு வந்தாள். "அம்மா.. அறுபதிலே தானே போறே?.. " என்றான் மணிவண்ணன், சாலையோரத்தில் வேகத்தைக் குறைக்கச் சொன்ன அறிவிப்புப் பலகையைப் பார்த்தபடியே.

இப்பொழுது தான் மணிவண்ணனும் அந்த வண்டியில் இருக்கும் உணர்வே அவர்கள் இருவருக்கும் வந்தது.. மணிவண்ணனைப் பார்த்து புன்னகைத்த தமா, "ஸ்டீரிங்கைப் பிடிச்சிட்டா, உங்கம்மா அனிச்சையா எல்லாத்திலேயும் கவனமாத் தான் இருப்பாப்பா.." என்றாள்.

ரியர் வ்யூ ஆடியில் பார்த்த மணிவண்ணன், "என்னம்மா.. அப்பா வர்ற வண்டியையேக் காணோம்?.. எங்காவது சிக்னலே மாட்டிக்கிட்டாங்களா?" என்றான்.

அதே சமயம் சொல்லி வைத்தாற் போல அவர்கள் செல்போன் ரீங்கரிக்க, எடுத்துப் பார்த்த மணிவண்ணன், "அப்பாம்மா.." என்று சொல்லிவிட்டு, செல்லைக் காதில் பதித்து "என்னப்பா.. எங்கேயிருக்கே?" என்று கேட்டான்.


(தேடல் தொடரும்)




2 comments:

கோமதி அரசு said...

நாங்கள் அமெரிக்கா சென்ற போது எங்கள் பையன் ஜிபி எஸ்ஸின் உதவியோடுதான் எல்லா இடங்களுக்கும் அழைத்து சென்று காட்டினான்.

இங்கு நாம் காரை நிறுத்தி வழியில் போவோரிடம் வழி கேட்கலாம், அங்கு அது முடியாது அதற்கு ஜிபி எஸ் நல்ல உதவி.

ஆத்மாவைத் தேடி நல்ல விறு விறுப்பாய் போய் கொண்டு இருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம். ஜிபிஎஸ் ஒரு நல்ல வழித்துணைவன் தான். நம்பிப் போகலாம். Shortest route-ல் கூட்டிப் போகும் என்பது கூடுதல் சிறப்பு. போகிற பாதைகளில் என்னன்ன எங்கே இருக்கின்றன என்கிற தகவல் வேறு. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டு வியக்கத்தான் தோன்றுகிறது.
இந்த மாதிரியான ரசித்த அனுபவங்களை எழுதுகிற போக்கில் அங்கங்கே நுழைத்து சொல்லிவிட வேண்டுமென்கிற ஆவல்.

'ஆத்மாவைத் தேடி' குறித்தான தங்கள் ரசனைக்கு நன்றி.

Related Posts with Thumbnails