மின் நூல்

Wednesday, April 7, 2010

ஆத்மாவைத் தேடி …. 40 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


40. மனத்தின் உணர்தல்.


தாவரவியல் அறிஞர் முத்துக்குமாரின் குரல் கரகரப்புக் கொண்டிருந்தாலும் உரக்க இல்லாது அதில் ஒரு மென்மைத்தன்மை இருந்தது. அவர் கேட்டார். "தேவதேவன் ஐயா! உங்கள் உரையில் பொதிந்துள்ள உள்ளார்ந்த செய்திகள் உண்மைதான். அறிவும், மனமும் புறவுலக நடவடிக்களுக்கேற்ப, வாழ நேரிட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக தங்களை வார்த்தெடுத்துக் கொண்டுள்ளன. 'இப்படி வாழ்ந்தால் தான் காலம் தள்ளமுடியும்' என்பதான ஒரு நிலை இது. இப்பொழுது இதைப் புரட்டிப் போட்ட மாதிரியான ஒரு மாறுதலுக்கு உட்படுத்தினால், புறவுலக வாழ்க்கை நிலைகுலைந்து போய்விடாதா--என்பதே என் கேள்வி.." என்று அவர் கேட்டு முடித்ததும், "நல்ல கேள்வி இது!" என்று தேவதேவன், முத்துக்குமார் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டார்.


"நல்ல கேள்வி மட்டுமல்ல.. யதார்த்தமானது கூட.." என்று அவர் யோசனையுடன் இழுத்தபோது, முத்துக்குமாரின் கேள்வியை உள்வாங்கிக் கொண்டு அதற்கான பதிலளிப்பதற்காக தன்னுள் சொற்களை உருவாக்கிக் கொள்வது போலிருந்தது.. "நீங்கள் சொல்வது சரியே. வாழ்க்கையை வாழ்வதற்காக அப்படிப்பட்ட ஒரு செயலுக்காக தங்களை தயார்நிலையில் வைத்துக் கொள்வதற் கேற்ப அறிவும், மனமும் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று இதைச் சொன்னால் கூடத தவறாகாது. முன்யோசனைகளுடன் கூடிய அறிவின் ஆளுகைக்கு ஆட்பட்ட மனத்திற்கு என்றைக்குமே இந்த தற்காப்பு உணர்வு உண்டு" என்று சொல்லிவிட்டு அவை முழுக்க ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார் தேவதேவன்.


"இப்பொழுது நாம் முன் சொன்னபடி, புறவுலக நடவடிக்களுக்கேற்ப சமனப்பட்டிருக்கும் அறிவை சீர்படுத்திக் கொண்டு, மனத்தைத் துலக்குவதற்கான வழிவகைகளைப் பார்ப்போம். அதற்காக அறிவை அக்கு அக்காக ஆராய வேண்டும் என்று சொன்னேன் அல்லவா?.. இந்த திசையில் தொடர்ந்து உரையாற்று கையில் நண்பர் முத்துக்குமாரின் மனத்தை வதைத்த கேள்விக்கும் நான் உணரும் பதிலை அளிக்கிற வகையில் இந்த உரையின் தொடர்ச்சியை வைத்துக் கொள்கிறேன். சரி தானே?" என்று தேவதேவன் கேட்டதும், முத்துக்குமார் எழுதிருந்து, "அப்படியே ஆகட்டும், ஐயா! தாங்கள் தொடர்ந்து உரையாற்றுங்கள்" என்று சொன்னார்.


தேவதேவன் தொடர்ந்தார். "ஒரு செய்தியைப் படிக்கும் பொழுதோ, அல்லது ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ, அந்த செய்தியைப் பற்றி அல்லது அந்தக் காட்சியைப் பற்றி, நாம் அறிந்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே அந்தச் செய்தியையும், காட்சியினையும் பற்றி அபிப்ராயம் கொள்கிறோம், அல்லவா?.. ரொம்ப சரி. இப்படி அந்தச் செய்தியை, காட்சியைப் பற்றி ஒரு அபிப்ராயம் நமக்கு ஏற்பட்டதற்கு அல்லது அதை நாம் நமக்கு விளக்கிக் கொண்டதற்கு அடிப்படை யாக இருந்தது நாம் ஏற்கனவே பெற்றிருந்த அது பற்றிய தகவல்கள். அதாவது நாம் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில், பார்த்த காட்சியையோ அல்லது படித்த செய்தியையோ சரிபார்த்து அதன் அடிப்படையில் அபிப்ராயம் கொள்கிறோம்."


அவையின் உன்னிப்பான கவனிப்பின் ஊடே தேவதேவனின் பேச்சு தொடர்ந்தது.
"இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, தகவல் பெட்டகமாக இருப்பது அறிவு. இரண்டு, அறிவு அறியப்படுத்தும் அபிப்ராயத்தை அனுபவித்து உணர்வது மனம். அதாவது, அறிவு தான் சேமித்து வைத்துள்ள தகவல்களை அளித்து, மனத்தை ஒரு அபிப்ராயத்தை மேற்கொள்ள வைக்கிறது. அந்த அபிப்ராயத்தின் அடிப்படையான உணர்வை மனம் உணர்கிறது. மனத்தின் அந்த உணர்விற்கேற்பவான, செயல்பாட்டினை நரம்பு மண்டலம் மேற்கொள்கிறது. இந்த இடத்தில் தான், நியாயமான ஒரு கேள்வி எழுகிறது" என்று தனது பேச்சைக் கொஞ்சம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்." இயல்பாக நம்முள் தோன்றும் கேள்வி இது தான். ஏன் அறிவே தான் சேமித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் காட்சியைப் பற்றி அபிப்ராயம் மேற்கொண்டதோடு அல்லாமல் அதை ரசிக்க, அதற்கேற்பவான உணர்வைக் கொள்ளக் கூடாதா என்று தோன்றுகிறது. இல்லையா?..

"இங்குதான் மனம் கொண்டிருக்கும் ஒரு தனித்துவமான சிறப்பு, மிளிர்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு. சிறப்பில்லாத, தேவையில்லாத, வேலையில்லாத ஒரு அணுத்துணுக்குக் கூட உடலில் கிடையாது. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து இதைவிட சிறப்பானது இன்னொன்று இல்லை என்று தேர்ந்து தெளிந்து படைக்கப்பட்ட உயிரியலின் உன்னதம். அந்த உன்னத சாத்திரப்படி, அறிவு என்பது வெறும் சேகரித்துள்ள தகவல்களைக் கொண்டுள்ள, சேகரிப்புகளைச் சரிபார்க்கிற பெட்டகம் மட்டுமே. அறிவு சரிபார்த்துத் தருகிற அந்தத் தகவல்களை, அதுபற்றிய அபிப்ராயங்களுக்கு ஏற்ப அனுபவித்து உணரும் சக்தி மனத்திற்கே உண்டு. அதனால் தான் அறிவு மனத்திடம் தகவல்களைச் சேர்ப்பிக்கின்றது. 'சரிபார்த்துத் தகவல்களைத் தந்திருக்கிறேன். அனுபவி; உணர்ந்து சொல்'. மனத்தின் அனுபவிப்பிற்கேற்ப, அதன் உணர்தலுக்கு ஏற்ப நரம்பு மண்டலம் செயல்படும்.


"இதில் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியம். மனம் உணரவில்லையெனில், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு இல்லை; உள்ளே போவதிலிருந்து வெளியே வரும வரை, 'A' to 'Z' நரம்பு மண்டலத்தின் இயக்கத்தையே எதிர்பார்த்திருக்கிறது.
அடுத்து அறிவின் தனித்தனி செயல்பாடுகளைப் பார்த்து விட்டு, அறிவிற்கும் மனத்திற்கும் உள்ள உறவைப் பார்ப்போம். பார்த்துவிட்டால், மனத்தைத் துலக்குவதின் முதல் படியை தொட்டவர்கள் நாமாவோம். இந்த அளவில் இன்றைய உரையை நிறைவுபடுத்திக் கொள்ளலாம். நமது எல்லாப் பணிகளுக்கும் இறைவன் துணையிருந்து காக்க வேண்டுகிறேன்.." என்று சொல்லிவிட்டு கைகுவித்து நிற்க, எல்லோரும் எழுந்து நின்று தேவதேவனுடன் சேர்ந்து இசையுடன் தாயுமான சுவாமிகளின் பாடலைப் பாடலாயினர்:

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன் வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதி அஞ் சலி செய்குவாம்.

(தேடல் தொடரும்)

                            இரண்டாம் பாகம் நிறைவு

               






Related Posts with Thumbnails