மின் நூல்

Sunday, January 17, 2010

ஆத்மாவைத் தேடி…. 33 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


33. கண்ட கனவு


"அப்பா! கிரிஜா பேசறேன்.. எப்படிப்பா இருக்கே?" என்று ஆதுரத்துடன் கிரிஜா தந்தையைக் கேட்டாள்.


"நன்னா இருக்கேம்மா.. நாட்டின் பல மூலைலேந்து வந்து இங்கே கூடியிருக்கற வித்வான்கள் மத்திலே நாமும் இருக்கறது மனசுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கறது, அம்மா! அதுவும் எப்படிப்பட்ட ஞானஸ்தாள்ங்கறே?.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துறைலே பண்டிட்கள். இத்தனை பேரையும் கூட்டி வைச்சு, பொதுமனுஷா மன ஆரோக்கியத்துக்காக, லோக க்ஷேமத்துக்காக ஒரு சதஸ்ஸை ஏற்பாடு பண்ணியிருக்கிறாரே, மனோகர்ஜி! அவரோட கைங்கரிய த்தை எத்தனை பாராட்டினாலும் தகும்."

"அவா பேசி விவாதிக்கறதிலே, நீயும் கலந்துக்கறயா, அப்பா?"

"அப்படிங்கறது, இல்லே! சரியாச் சொல்லணும்னா, புதுசு புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கறேன். அந்தந்தத் துறைலே கத்துத் தேர்ந்தவா கிட்டே நேரிடையா தெரிஞ்சிக்கறது மனசுக்கு சந்துஷ்டியைக் கொடுக்கும்னு இங்கே வந்து தான் தெரிஞ்சிண்டேன். சுருக்கமா சொல்லணும்னா, மனுஷப் பிறவி எடுத்தது எதுக்காகன்னு தெரிஞ்சிண்டேன்னு வைச்சுக்கோயேன்."

"ஓ! கிரேட்!"

"இத்தனை வயசு வாழ்ந்த வாழ்க்கைக்கு அப்புறம், இப்போத்தானா தெரிஞ்சிண்டே ன்னு நீ கேக்கலாம். நீ அப்படிக் கேக்கலேனாலும், நானே எனக்குள்ளேயே அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுண்டாலும், அதுக்குப் பதில் சொல்ல எனக்குத்தெரியலே ஸ்கூல் பைனல் வரை படிச்சேன். அதைத்தவிர, வேதம் படிச்சிருக்கேன். சின்ன வயசிலிருந்தே புராணக் கதைகள் கேக்கறதிலே ஆர்வம் அதிகமாகி, அந்த ஆர்வத்திலே தெரிஞ்சிண்டதை மத்தவாளுக்கும் சொல்ற பிரசங்கியாயிட்டேன். நிலையான வருமானம்னு ஒண்ணும் கிடையாது. இதுவரை யாரையும் நிர்பந்தப்படுத்தி எதுவும் வாங்கிண்டது இல்லேனாலும், அவா மனசொப்பி கொடுத்த சம்பாவனைதான் உங்களை வளர்த்து ஆளாக்கறத்துக்கும், குடும்ப அன்றாடத்தேவைக்கும் உபயோகப்பட்டதுங்கறதைச் சொல்லணும் இல்லையா?"
என்று சொல்லும் பொழுது அவர் குரல் நன்றி உணர்வுடன் தழுதழுத்தது.


"எதுக்கு நீ இதை தயங்கித் தயங்கிச் சொல்லணும்?.. எல்லாத் தொழிலும் அப்படித்தானே அப்பா?.... படிச்சுத் தெரிஞ்சிண்டதை உபயோகப்படுத்தி சம்பாதிக்கறது தானே?"


"ஒரேயடியா அப்படிச் சொல்லக் கூடாதும்மா. தான் படிச்சுத் தெரிஞ்சிண்டதை இன்னொருத்தருக்குத்தெரியப்படுத்தறத்துக்காக --அது மூலமா அதைக்கேக்கறவா அறிவு பெற்றாலும் சரி -- பணம்னு கைநீட்டி வாங்கக் கூடாதும்மா.. அந்தக் காலத்திலேலாம் திண்ணைப் பள்ளிக்கூடம்னு இருக்கும்.. வீட்டுக்கு நுழையற படிக்கட்டுக்குப் பக்கத்திலேயே வெளித்திண்ணை இருக்கும். பெரும்பாலும் திண்ணை இல்லாத வீடே இருக்காது. கல்வி சொல்லித் தர்ற வாத்தியார் வீட்டுத் திண்ணைதான் கல்விச்சாலையா மாறிப்போயிருக்கும். இல்லே, யாராவது பெரிய பணக்காரர் பள்ளிக்கூடம் நடத்தறத்துக்காக தனக்குச் சொந்தமான மனைலே சிமிண்ட் திண்ணையா பெரிசாக் கட்டிவிட்டிருப்பார். அந்த பக்கத்துக் குழந்தைகளை பெத்தவாளே அந்தத் திண்ணைக்குக் கொண்டு வந்து விட்டுட்டுப் போவா. அந்தக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தர்ற வாத்தியாருக்கு இத்தனை மரக்கால்னு நெல் போயிடும். இப்படித்தான் வழக்கம். ஏன்னா, வாத்தியார், கதை சொல்றவா இவாள்ளாம் சமூகத்துக்கு உதவறவாளாகவும், அப்படி அந்த சமூகத்துக்கு உதவறவாளை சமூகம் போஷிக்கணும்ங்கற கடப்பாடும் இருந்தது. கல்வி விலைகொடுத்து வாங்க முடியாத விஷயம் ஆனதாலே, அதுக்கு பணமா ஒரு கூலி கொடுத்து கொறைச்சு மதிச்சவாளா ஆயிடுவோமோன்னு குற்ற உணர்வும் இருந்தது.அதான் அவா ஜீவனம் நடத்தறக்கு நெல்லா அளந்து விட்டுறதுன்னு வழக்கம் இருந்தது. பொருளா தர்றதிலே சில அசெளகரியங்கள் பிற்காலத்திலே வந்ததினாலே எல்லாருக்கிட்டேயும் ஏதோ வாங்கி ஒண்ணாச் சேர்த்து சன்மானம்ங்கற பேர்லே தந்திடறதுன்னு பிற்காலப் பழக்கம் ஆனது."

"இதுலே இவ்வளவு விஷயம் இருக்காப்பா?.. தெரியாம தத்துபித்துன்னு உளறிட்டேன். சாரிப்பா.."

"நீ இந்த காலத்துலே வளர்ந்து ஆளாகின பொண்ணு இல்லையா?..
அதனாலே அந்தக்கால இந்த வழக்கமெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயம் இல்லை தான். போகட்டும்.நீங்கள்ளாம் டூர் போனேளே, அந்த இடத்திலேருந்து தானே பேசறே?.."

"ஆமாப்பா.. இன்னிக்கு இங்கிருந்து கிளம்பறோம். நாஷ்வெல் போய்ச் சேர ராத்திரி ஆயிடும்.. ஊருக்குப் போய் நாளைக்குப் பேசறேன்."

"உங்க ஊர் பேரைச் சொன்னாலே அந்த பெரிய பிள்ளையார் தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றார். பிள்ளையார் அனுகிரகம் எல்லாருக்கும் உண்டு. எல்லாத்துக்கும் அவர் துணையா இருப்பார். சந்தோஷமா இரு."

"சரிப்பா.."

"அர்ஜூன் கிட்டே பேசினேனா, அங்கே எல்லாரையும் விஜாரித்ததா சொல்லு. இந்த வாரக்கடைசிலே அவனும் பேசுவான்னு நெனைக்கறேன்."

"எப்பப்பா அங்கே அந்த சதஸ் ஆரம்பிக்கறது?"

"அடுத்த மாச மத்திலே. ஏற்பாடெல்லாம் பலமா நடந்திண்டிருக்கு.
வெளி தேசத்திலேந்தெல்லாம் டெலிகேட்ஸ் வர்றா."

"பிர்மாண்டமாத்தான் நடக்கப்போறதுன்னு சொல்லு."

"மனோகர்ஜியின் அப்பா கண்ட கனவு இது. பிள்ளை காலத்லே நிறைவேறப் போறது. சதஸ்லே சமர்ப்பிக்க வேண்டிய கட்டுரையையெல்லாம் ரொம்பத் தீர்மானமாத் தயாராயிண்டிருக்கு. ஆனா ஒண்ணு. எதுவும் நம்ம கையிலே இல்லே. நம்ம கையிலே இருக்கற மாதிரி நமக்கு போக்குக் காட்டி போக்கு காட்டி கனகச்சிதமா அவன் எல்லாத்தையும் முடிச்சுவைப்பான். அந்த ஒரு நம்பிக்கைலே தான் எல்லாம் ஓடிண்டிருக்கு."

"ரொம்ப நேரம் ஆயிருக்கும் உனக்கு. நான் அப்புறம் பேசறேன். உடம்பைப் பாத்துக்கோ, அப்பா! அம்மாகிட்டேயும் பேசறேன். சரியா?"

"சரிம்மா. குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோ. மாப்பிள்ளையை நான் விஜாரித்ததா சொல்லு. ஃபோனை வைச்சிடட்டுமா?.."

"சரிப்பா.." என்று கிரிஜாவிடமிருந்து குரல் தெளிவாக வந்ததும், ரிஸிவரை அதனிடத்தில் வைத்தார் கிருஷ்ணமூர்த்தி..


(தேடல் தொடரும்)







No comments:

Related Posts with Thumbnails