மின் நூல்

Saturday, January 16, 2010

ஆத்மாவைத் தேடி…32 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


32. "ஹலோ.. அப்பா!"


தொலைபேசி ரீஸீவரை நேராக நிமிர்த்தித் தூக்கி,"தமா! நான் அப்பா பேசறேம்மா" என்றார் சிவராமன்.

"ஹலோ, அப்பா! எப்படியிருக்கே?"

"நான் நன்னாத்தாம்மா இருக்கேன்! நீங்கள்ளாம் எப்படியிருக்கேள்? டூர்ல்லாம் முடிஞ்சதா?.. இப்போ எங்கிருந்து பேசறே?"

"இன்னிக்குத் தாம்பா, இந்த காபின்லேந்து செக்-அவுட். கிளம்பறத்துக்கு முன்னாடி உங்கிட்டேப் பேசிட்டு போலாம்னு.."

"ஓ.. ரொம்ப சந்தோஷம், தமா! குழந்தை நன்னா இருக்கானா?மாப்பிள்ளையைக் கேட்டதாச் சொல்லு.."

"மணிவண்ணன் ஃபைன் அப்பா.. இந்த வெகேஷனை நன்னா என்ஜாய் பண்ணினாம்பா.. அவர், கிரிஜா, அவ ஆத்துக்காரர், குழந்தை ரிஷி எல்லாரும் செளக்கியம் அப்பா... நான் இப்போ உன்னைக் கூப்பிட்டதே..." தமயந்தி எதுக்கோ தயங்குவது போல சிவராமனுக்குத் தோன்றியது.

உடனே யோசனையுடன், "என்னம்மா.. என்ன, விஷயம்?.. சொல்லு.." என்று ஆதுரத்துடன் கேட்டார்.

"ஒண்ணுமில்லே, அப்பா! உன்னை மாதிரி, அம்மா மாதிரி இங்கே பாத்தேன்னு நேத்திக்கு ஃபோன் பேசறத்தே நான் சொன்னேன்லே.. அவாளை நேர்லேயே பாத்தோம்பா.. அவா வேறே யாரோ.. "

"அப்படியா.. அப்பவே தான் அது தெரிஞ்சிடுத்தே, அம்மா.. நாங்கள்ளாம் குத்துக் கல்லாட்டம் இங்கே இருக்கறச்சே அவா வேறே யாரோவாத்தானே இருக்கணும்."

"என்னன்னா.. என்ன சொல்றா, அவ..?" என்று அம்மா அங்கே பதறியபடிக் கேட்பது இங்கே தமயந்திக்குக் கேட்டது.. கேட்டு, அப்பாவிடம் அவசரமாகச் சொன்னாள்:
"ஒண்ணுமில்லேப்பா.. அம்மா கிட்டே நான் பேசறேன்னு சொல்லு.. அவாளுக்குக் கோயம்புத்தூராம்.. எங்களை மாதிரி ஃபால்ஸ் சீசனுக்கு இங்கே வந்திருக்கா..
அவ்வளவு தான். எங்களுக்கெல்லாம் இன்னிக்கு லன்ச் அவா கேபின்லே தான்.
வேறே ஒண்ணும் இல்லே.. அம்மா கிட்டே குடு. நான் பேசிக்கறேன்.. ஓ.கே.வா?.." என்றாள் தமயந்தி.

"உங்கம்மாக்கு இப்படிச் சொன்னையானா தலையும் புரியாது, வாலும் புரியாது..
அன்னிக்கே அநாவசியமா அவளை நான் குழப்பலே.. நீ சொல்றதை அவ கிட்டே இப்பச் சொல்லிடு.. நான் அப்புறம் விவரமா அவளுக்குச் சொல்லிக்கறேன்."

"சரிப்பா.. அம்மா கிட்டே ரிஸீவரைக் கொடு."

ஒரு தயக்கத்திற்குப் பிறகு,"தமா.. என்னடி, என்ன சொல்றே?.. எல்லாரும் அங்கே செளக்கியம் தானே?" என்று கேட்டாள் மாலு.

"இங்கே எல்லாரும் செளக்கியம், அம்மா.. நீ ஏன் பதட்டப்படறே?"

"பதட்டப்படாம, எப்படிடீ?.. அப்பாவும், பொண்ணும் என்னன்னமோ பேசிக்கறேள்.
எனக்கு ஒண்ணும் புரியலே.. இந்த லட்சணத்திலே பதட்டப்படாம என்னடிம்மா செய்யறது?"

"ஒண்ணுமே இல்லேம்மா.. மேட்டர் ரொம்ப சிம்பிள். உன்னை மாதிரியும், அப்பா மாதிரியும் இங்கே தூரத்லே ரெண்டு பேரைப் பாத்தேன். . நீங்க எங்கடா இங்கேன்னு ஆச்சரியப்பட்டு, போன தடவை அப்பா கிட்டே பேசறத்தே அதைச் சொன்னேன். அவாளை நேரே இன்னிக்குப் பாத்தேன்.. நீங்க இல்லேன்னு தெரிஞ்ச்சிடுத்து.. அதான், அப்பா கிட்டே இப்போ அதைச் சொன்னேன்."

"நல்ல கூத்துடி அம்மா, இது?.. நாங்க இங்கே இருக்கறச்சே, அங்கே எப்படி?.. அதான் நாங்க உன்னோட நேத்திக்கு பேசறத்தேயே, நாங்க இல்லே அதுன்னு உனக்குத் தெரிஞ்ச்சிருக்குமே.."

"தெரிஞ்சிடுத்து, அம்மா! இப்போ நான் கால் போட்டுச் சொல்றது எதுக்குன்னா
அவாளை நேர்லேயே பாத்தோம்னு சொல்றதுக்காகத்தான்."

".........................."

"என்னம்மா, கம்முனு ஆயிட்டே.."

"நல்ல பொண்ணுடி, நீ.. சரி, மத்ததையும் சொல்லு.... கேட்டுக்கறேன்."

"உன்னை மாதிரி பாத்தேன்னு சொன்னேன்லே.. அவா நீ இல்லேன்னாலும், அசப்புலே உன்னை மாதிரியே நேர்லேயும் இருந்தாம்மா... ஒரு பத்து பதினஞ்சு வயசு கொறைச்சுக்கோயேன்.. பத்து பதினெஞ்ச்சு வருஷத்துக்கு முன்னாடி, என் கல்யாணத்துக்கு முன்னாடி, நீ எப்படி இருந்திருப்பையோ, அப்படி இருந்தான்னு வெச்சுக்கோயேன்!" என்று சொல்லிவிட்டு 'கலகல'வென்று சிரித்தாள் தமயந்தி.

"சிரிப்பைப் பாரு!.."

"பின்னே என்ன அம்மா?.. சீரியஸ்ஸா இருக்கற உன்னை சிரிப்பு மூட்டாம எப்படி சமனப்படுத்தறது.. அதுசரி.. என்னவோ, தியான வகுப்பெல்லாம் அங்கே நடக்கறதுன்னு கேள்விப்பட்டேன்.. என்ன பிரயோஜம்?.. இப்படியா எடுத்ததுக் கெல்லாம் பதட்டப்படுவா?"

"ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?.. உங்கப்பா தான் இங்கே தியான வகுப்பு கிளாஸ் எடுக்கறார்.."

"ஓ.. அப்பா! ஓ.கே.. அவர் தான் அதில்லே எக்ஸ்பர்ட் ஆச்சே?.. நீ அந்த கிளாஸூக்- கெல்லாம் போறது இல்லையா?"

"போகாம, பின்னே?.. முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்லேடி.
முந்தில்லாம் முணுக்குன்னா 'இப்படியோ, அப்படியோ'ந்னு முன்னூறு யோசனை வரும். இப்போ எவ்வளவோ பரவாயில்லே.. நிறைய நிதானம் வந்திருக்கு. நான் நெறைய விஷயங்கள்லே நேர்ப்பட்டதே, இங்கே வந்ததினாலேதான்னு நெனைக்கறேன். இங்கே நாங்க எப்படி இருக்கோம்ங்கறே?.. திவ்யமான சிவன் கோயில்.. அம்மாடி.. பெருமான், கொள்ளை அழகு. நேர்லே பேசறார்.. ஒரு நாளைக்கு ஜென்மசாபல்யம் மாதிரி எங்களை அனுகரிக்கவும் செஞ்சார்.. எந்த ஜென்மத்திலே யார் செஞ்ச புண்ணியமோ, தெரிலே! உங்கப்பா, நான், கிருஷ்ணா எல்லாரும் இங்கே தங்கி இதெல்லாம் பாத்து, கேட்டு, ரசிக்கப் பாக்கியம் செஞ்சிருக்கோம்னு சொல்லணும்.. வேதம், உபநிஷதம் எல்லாம் படிச்சு கரைகண்டவாளோட பரிச்சயம்.. சொன்னா அதெல்லாம் புரியாதுடி.. இங்கே இருந்து அனுபவிச்சுத்தான் இதையெல்லாம் புரிஞ்சிக்க முடியும்.."

"ஓ.. வெல்.. நிறையச் சொல்றேம்மா.. கேட்கக் கேட்க இன்னும் கேக்கணும்னு ஆசையா இருக்கு. நான் அப்புறம், எங்க ஊருக்குப் போயி பேசறேம்மா! பை.. டேக் கேர்.. கிருஷ்ணா மாமா கிட்டே போனைக் கொடு.. கிரிஜா பேசணும்ங்கறா!..

"ஓ.. உடம்பைப் பாத்துக்கோடி.. ஊருக்குப் போய் பேசு! இதோ, கிருஷ்ணா கிட்டே கொடுக்கறேன்." என்று சொல்லிவிட்டு, கிரிஜா லைன்லே வந்ததும் அவளிடம் செளக்கிய சமாச்சாரங்களை விசாரித்து விட்டு, மாலு, கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு அவரிடம் ரிஸிவரைக் கொடுத்தாள்.


(தேடல் தொடரும்)



No comments:

Related Posts with Thumbnails