மின் நூல்

Tuesday, November 24, 2009

ஆத்மாவைத்தேடி....17 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

17. பல்லுயிராய் நெடுவெளியாய் பரந்து நின்ற...

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு அவை மறுபடியும் கூடியது. கிடைத்த இந்த நேரத்தில், அத்தனைக் குழுக்களும் ஒன்று கூடி அமர்ந்து அடுத்தடுத்து வருபவனவற்றைப் பற்றி விவாதித்து வரிசைபடுத்திக் கொண்டனர். வரவிருக்கின்ற சதஸூக்கு முன்னான இந்த அமர்வுகளில், இனிக் கூடப்போகும் அமர்வுகளின் காலத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு இந்த வரிசைப்படுத்திக் கொள்ளல் அவசியமாக இருந்தது.

வேகமான விவரமான அலசலுக்குப் பின், மனம், அதைத் தொடர்ந்து ஆத்மா, பின் உபநிஷத்துக்களின் பார்வையில் மரணத்திற்கு பின்னான நிலைகள் என்று இவற்றைப் பற்றி விவரமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த முடிவாயிற்று.

அவரவர் மேற்கொள்ளும் தியானம் போன்ற சுயபயிற்சிகளால் மட்டுமே ஆத்மாவைத் தேடுதலான இந்த யக்ஞம் முழுமை பெறும் என்று மனோகர்ஜி அபிப்ராயப்பட்ட்தால் பேசுவதையும், விவாதிப்பதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்க பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வரக்கூடிய நாட்களில் தினமும் மாலை வேளை அமர்வுகளை பயிற்சி வ்குப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானைக்கப் பட்டது.

இந்த பயிற்சி வ்குப்புகளில் அனுபவபூர்வமாக அறியக்கூடிய பலன்களையே (Results) ஆதாரமாகக் கொள்ள வேண்டுமெனறும், இப்படிப் பெறக்கூடிய பலன்களுக்கு ஏற்ப விவாதங்களில் பெறக்கூடிய முடிவுகளை தேவையானால் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

எல்லோரும் தமது இருக்கைகளில் அமர்ந்து விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேகநாதன் தனது உரையைத் தொடர்ந்தார். "முன்னால் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்," என்றவர் கிருஷ்ண மூர்த்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தி விட்டுத் தொடர்ந்தார். "வாழும் வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். எல்லாவற்றிலும் தானும் வாழ்ந்து கொண்டு என்பதை விட, எல்லாமும் தானே ஆகி என்கிற வார்த்தைத் தொடர் தான் சரியென்று நினைக்கிறேன். இறைவனின் படைப்பு என்பதே, எண்ணிக்கையில் அடக்க முடியாத இலக்கங்களாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டது தான் போலும். எல்லாவற்றிலும் நீக்கமற தன்னை நிறைத்துக் கொண்ட அவனின் செயலே, அவன் படைப்பாகிப் போனது. அவன் படைப்பிலிருந்து படைப்புக் கூறுகளாய் வெவ்வேறாய் அவனே ஜென்மமெடுத்தது தான் அதிசயம்.

"ஒன்றே பலவாகி பல்கிப் பெருகிய பேரதிசயத்தில், ஒன்றுக்கொன்று முரண்படுகிறதாகவும், அணுகுகிறதாகவும், நெருங்கி நேசிப்பதாகவும், விலகுவதாகவும்---வெவ்வேறான உணர்வுகளைப் படைத்து உலவவிட்டது தான் படைப்பின் பேரதிசயம். ஆழ்ந்து யோசித்தால், உயிர் வாழ்தலுக்கு இதுவே ஒரு விஞ்ஞானத் தேவையாகும்.

பலத்த அமைதியில் மேகநாதனின் குரல் எடுப்பாகத் தெரிந்தது. "ஆணும் பெண்ணும் அவனே ஆயினும் இவையே இருவேறு சக்தியாய் இணைந்து, இன்னொன்றாய் வெளிப்பட்டது இன்னொரு அதிசயம்! இன்னொன்று அவனே ஆன இன்னொன்றுடன் கூடி வேறொன்றாய் வெளிப்பட்டது போல வெளிக்குக் காட்டிக்கொண்டு, அந்த இன்னொன்றிலும் அவனே வெளிப்பட்டது தான் சூட்சுமாய் போயிற்று! அந்த இன்ன்னொன்று இவனே ஆன இன்னொன்றுடன் இணைந்து வெளிக்கு வேறொன்றாய்க் காட்டிக்கொண்டு.... இதுவே படைப்பின் பெருக்கத்திற்கு அறிவியல் ஆயிற்று.

அவையின் உன்னிப்பான கவனிப்பில் மேகநாதன் தொடர்ந்தார்:
"ஆறறிவு மனிதனில் என்று மட்டுமல்ல, ஊர்வன-பறப்பன்-நீந்துவன-உலாவுவன- செடி, கொடி, பாசி, பச்சைப் பசேல் என்று---எதையும் விட்டு வைக்கவில்லை, இந்த ஒன்று பலபடல். விதவிதமாய் வெளிக்கு வெளிப்படுதலே அவன் திருவிளையாடலாய் ஆயிற்று.

"எல்லாம் அவன் ஆட்டமாய் போய் விட்டதில், இது இன்னதுக்காக என்று புரிபடாமலே போயிற்று. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் விளைவாய் ஒரு நோக்கம் இருந்தது தான் ஆச்சரியம்; கடைசியில் இந்த நோக்கங்களே வாழ்க்கையின் வண்ணப்பூச்சுகளாயிற்று.
வினைகளே விளைவுகளுக்கான, அவை கொடுக்கும் பலன்களுக்கான கேந்திரம் ஆயிற்று. இதுவும் அடிப்படையிலேயே ஒரு விஞ்ஞான உண்மைதான்.

"அவனே தானாகிப் போனதால், 'தானு'க்கு தன்னையே புரிந்து கொள்வது தான் இறுதி இலட்சியமாயிற்று. தன்னைப் புரிந்து கொள்ளலே, அவனைப் புரிந்து கொள்ளல் என்று வேதாந்தம் வியாக்கியானம் சொல்லிற்று.

மேகநாதனின் பார்வை அவையின் நட்டநடுவில் நிலைக்குத்தியது. "தோழியர் பூங்குழலி, நிவேதிதா குழுவினர் இதுபற்றி நிறைய குறிப்புகளைக் கொடுத்து அலசியிருக்கிறார்கள். எனது மனவியல் துறையினரும் அவர்களும் இந்தத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் ஒன்று சேர்ந்து உபநிஷத்துகள் காட்டும் வெளிச்சத்தில் இனி வரும் அமர்வுகளில் இவற்றைப் பார்ப்போம்.

"இன்று மாலை தனித்தனிக் குழுக்களாக ஒன்று கூடி எடுத்த முடிவுகளின் படி, இனி மாலை வகுப்புகள் தியானப் பயிற்சி வகுப்புகளாக அமையும். அதற்குப் பின் சிறிய இடைவேளைக்குப் பின்னான சிவன் கோயில் பின் மாலை தரிசனத்திற்கும் வசதியாக இது அமையும்" என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக அறிவித்துக் கொள்கிறேன்" என்று மேகநாதன் தனது உரையை முடித்துக் கொண்டார்.

மகிழ்ச்சி கலந்த கலகலப்புடன் அவை கலைந்தது.

(தேடல் தொடரும்)

Thursday, November 19, 2009

ஆத்மாவைத்தேடி....16 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

16. அலைகள் நான்கு

முந்தைய அமர்வின் தொடர்ச்சி உணவு இடைவெளிக்குப் பிறகு உற்சாகத்துடன்தொடர்ந்தது. பேராசிரியர் மேகநாதனின் உரையைத் தொடர்ந்து கேட்கும் ஆவலில், உணவு நேரம் முடிந்த் உடனேயே அவை நிரம்பிவிட்டது.

மேடையில் மேகநாதனும் ஆஜர். கிருஷ்ணமூர்த்தி மேடைக்கு வந்து தொடர்ச்சியை நினைவுறுகிற மாதிரி ஒரு சிற்றுரை ஆற்றினார்.

அவர் முடித்ததும் மேகநாதன் மைக்கைப் பற்றினார்: "மனிதனின் சுவாசத்திற்கும் அவனது எண்ண வேகத்திற்கும் சம்பந்தமிருக்கிறது என்று பார்த்தோம், அல்லவா?.. இப்பொழுது சுவாசத்தை சீராக்கி மனதை எப்படி அமைதிபடுத்தலாம் என்று பார்ப்போம்" என்று அவர் ஆரம்பிக்கும் பொழுதே சபையின் சுவாரஸ்யத்தைக் கவர்ந்து விட்டார்.

"மனித மூளையை ஆராய்ந்த உடற்கூறு இயல் அறிஞர்கள், உயிர்ப்புடன் இருக்கும் மனித மூளை வெளிப்படுத்தும் வீச்சைப் போன்ற அலைகளை (waves) கண்டு திகைத்துப் போனார்கள். அது பற்றி மேலும் ஆராய்ந்த பொழுது, மனித மனம் அந்தந்த நேரங்களில் இருக்கும் உணர்வு நிலைகளுக்கு ஏற்ப இந்த் அலைகளின் வீச்சுத் தன்மையும் இருப்பது தெரிய வ்ந்ததும், அதுவே மூளை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது,. மனவியல் துறையையும் பல மேம்பட்ட நிலைகளுக்கு எடுத்துச் செல்ல இந்தக் கண்டுபிடிப்பு பெரும் பங்காற்றியது. ரொம்பவுமே தான் யோசித்து அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த அலைகளுக்கு பெயரிட்டார்கள். அவர்களின் பெயர்த்தேர்வு, அவர்களின் கண்டுபிடிப்பைப் போலவே அருமையாக அமைந்து விட்டது.

"கோபத்திலும், பரபரப்பு டென்ஷனிலும் மனிதன் இருக்கும் பொழுது மூளைக்கு அதிகப் படியான ரத்தசப்ளை தேவைப்படும். இந்த நேரத்தில் மூளை வெளிப்படுத்தும் அலைவீச்சுக்கு பீட்டா (BETA) என்று பெயரிட்டனர். சிறிய சுற்றுகளாக அதே நேரத்தில் வேகத்துடன் வெளிப்பட்ட இந்த அலைவரிசை நிமிடத்திற்கு பன்னிரண்டு சுற்றுகளுக்கு மேலிருப்பது தெரியவந்தது.

"அடுத்து இதற்கு நேர்மாறான ஒரு நிலை. விழிப்பிலிருக்கும் மனிதன் அமைதியாக நிச்சலனமற்று இருக்கையில் எட்டிலிருந்து பதிமூன்று சைக்கிள் வேகத்தில் பெரியதாகவும், மெதுவாகவும் வெளிப்பட்ட அலைவரிசைக்கு ஆல்ஃபா (ALPHA) என்று பெயரிட்டனர்.

"அதற்கடுத்து வெளியுலகத் தொடர்புகள் அற்ற தூக்கநிலை. இந்த நேரத்தில் குறைந்த வேகத்தில் நான்கு முதல் ஏழு வரையிலான சைக்கிள் வேகத்தில் வெளிப்படுத்திய அலைகளுக்கு தீட்டா (THETA) என்று பெயரிட்டனர்.

"அதற்கும் அடுத்து மிகமிக அமைதியான மோனநிலையில்,வெளியுலக நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு அடி ஆழ தியானத்தில் இருப்பது போன்ற ஒரு நிலையில் வினாடிக்கு நான்கு சைக்கிளுக்கும் குறைவாக வெளிப்பட்ட அலைவரிசைக்கு டெல்டா (DELTA) என்று பெயரிட்டனர்.

"பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா.. எப்படிப் பெயர்த் தேர்வு?.. வெறும் பெயர் வைத்ததோடு வேலை முடியவில்லை. அதற்கு அடுத்த நிலையான கண்டுபிடிப்பு தான் முக்கியமானது" என்று சொல்லிவிட்டு, கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி, அவையை சுற்றிப் பார்த்தார்.

"பீட்டா நிலையில் எதையும் சரியாகச் செய்வதற்கோ, யோசிக்கவோ தகுதியற்று மனிதன் தத்தளிக்கிறான். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த நிலை ஏற்றதல்ல. இயல்பான நிலையில் ஒரு நிமிடத்திற்கு பதினாறிலிருந்து --பதினெட்டு முறை சுவாசிப்பதாகக் கொண்டால், ஒரு முறை சுவாசிப்பதற்கு நம் இதயம் நான்கு முறை துடிக்கிறது என்கிற கணக்கில் இயல்பான நிலையில் அப்பொழுது ஒரு நிமிடத்திற்கு அறுபத்து நான்கு முறை துடிப்பதாகக் கொள்ளலாம். இதுவே, மனம் படபடப்பான நிலையில் அவசர கதியிலான சுவாசம் அதிகரித்து அதே விகிதத்தில் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். ஆக, எல்லாவிதத்திலும் பீட்டா நிலை ஏற்புடையது அல்ல.

"இதுவா, அதுவா என்கிற குழப்பமான சூழ்நிலைகளில், யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தெரிகையில், யோசனைக்குத் தயாராகும் பொழுது ஆல்ஃபா நிலை ஏற்றது. வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட தியான நிலை அடைவதால் ஆழ்மனம் விழிப்புற்று சிந்தனை ஒருமுகப்படுத்தப் பட்ட நல்ல முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இயல்பான சாதாரண நிலையிலோ, பீட்டாவும் இல்லாமல் ஆல்ஃபாவும் இல்லாமல் இதற்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.

"அடித்துப் போட்டாற் போல் கனவற்ற தூக்க நேரங்களில் தீட்டா நிலை என்றால், யோகங்களால் சாத்தியப்படுகிற ஆழ்நிலை தியான சமயங்களில் டெல்டா நிலையும் இருக்கும்.

"உடற்கூறு சாத்திரம் ஓரளவுடன் நிறுத்திக் கொண்டதை மனவியல் சாத்திரம் நீட்டிக்கிறது. மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும், வழிநடத்துதலும் நம் கையில் இருப்பதால் வேலை சுலபமாயிற்று. பூட்டிய அறைக் கதவின் சாவி நம் கையில் கிடைத்த மாதிரி. வேண்டிய அலைகளுக்கேற்ப மன உணர்வுகளை வைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதனால் உடல் சம்பந்தப்பட்ட பல அறுவை சிகித்சைகளையும் தவிர்க்க முடியும் என்கிற ஞானம், மனவியல் கல்வியை மேலும் செழுமை படுத்த வேண்டும் என்கிற வாசல் கதவைத் திறந்து விட்டது.

"இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை அறிந்து கொள்ள பிரயத்தனப்பட்ட போது, அவர்கள் இதையெல்லாம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற முன் தகவல்களைத் திரட்டும் ஆர்வம் அதிகரித்தது.

(தேடல் தொடரும்)


Tuesday, November 10, 2009

ஆத்மாவைத்தேடி....15 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. எண்ணமும் அதன் விரிவும்.

"இப்பொழுது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்," என்று மேலும் பேசுவதற்கு விஸ்தாரமான தளத்தை அமைத்துக் கொண்ட மேகநாதன் தொடர்ந்தார்."சிக்கலாகி யிருக்கும் நூல்கண்டு போலத் தோற்றமளிப்பதை, நுனி என்று கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்திலிருந்து இழுத்துப் பார்க்கலாம். இப்பொழுது நம் கண்ணுக்கு தென்படும் ஒரு நுனி, 'எண்ணங்கள்" என்று தெரிவதால், இந்த எண்ண்ங்கள் என்றால் என்ன என்று யோசிப்போம்.

" மூளையின் செல்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்களே எண்ணங்கள் என்று சயின்ஸ் சொல்கிறது.. வழக்கிலோ, ஒரு விஷயத்தைப் பற்றிய தொடர்பான சிந்தனைகளை எண்ணங்கள் என்று சொல்கிறோம். இப்படிப்பார்த்தால், ஒன்று தெரிகிறது. ஒன்றின் தொடர்பான சிந்தனை விரிய விரிய எண்ணங்களின் நீட்சியும் அதிகரிப்பது தெரிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய நீட்சியை அதிகரிக்க அதுபற்றிய விவரங்களாகிய அறிவு தேவைப்படுகிறது. அது பற்றிய அறிவு அதிகமில்லாமலிருந்தால் எண்ண விரிவின் ஒரு ஸ்டேஜில் அது அறுந்து விடும். அப்படி அறுந்த இடத்தையே, அந்த விஷயத்தின் முடிவாகக் கொள்ளும். அந்த ஸ்டெஜூக்கு மேலும் அதுபற்றிச் சிந்திக்க முடிந்தவர், முந்தையவரை விட அந்த விஷயததில் அதிக அறிவு கொண்டிருப்பார். ஆக, ஒரு விஷயத்தில் ஒருவர் கொள்ளும் முடிவு என்பது, அவரைப் பொருத்தமட்டில், அவரவர் அதுபற்றிக் கொண்டிருக்கும் அறிவு பற்றியதாகிப்போகிறது... எப்பொழுது அது அறிவு பற்றியதாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுதே அதற்கு எல்லை--இதுதான் முடிவு-- என்ற ஒன்றில்லாமல் ஆகிவிடுகிறது.

மேகநாதன் முழு உற்சாகத்தோடு தான் சொல்ல நினைப்பதை விளக்க ஆரம்பித்தார். "நம்து உயர்நிலை வகுப்புகளில் கணக்குப் பாடத்தில் நேர்விகிதம், தலைகீழ்விகிதம் என்ற வகை கணக்குக்களைப் போட்டிருப்போம். உதாரணமாக, ஒரு வேலையை முடிக்க ஆகும் நாட்களும், அந்த வேலையைச் செய்ய அமர்த்தப்படும் ஆட்களும் தலைகீழ் விகிதமாகும். அதாவது வேலையைச் செய்யும் ஆட்களின் எண்ணிக்கைக் கூடினால், அந்தக் குறிப்பிட்ட
வேலையை முடிக்கக் கூடிய காலம் குறையும். ஆட்களின் எண்ணிக்கை குறைந்தால், அந்த வேலையை முடிக்கக்கூடிய காலம் அதிகமாகும். அதுபோல், ஒரு மோட்டார் வண்டி செல்லும் வேகத்திற்கு ஏற்ப, அது கடக்கும் தூரம் அமையும். வேகமாகச் சென்றால், ஒரு குறிப்பிட்ட காலஅளவில் அதிக தூரம் கடக்கும்; வேகம் குறைந்தால், அதே கால அளவுக்கு கடக்கும் தூரம் குறையும். ஆக வேகமும், தூரமும் நேர்விகிதமாகும்.

"இந்த மாதிரி ஒரு நேர்விகிதச் செயலாய் மனிதன் பரபரப்பாய் இருக்கும் சூழல்களில், சுவாசத்தின் வேகம் அதிகரித்து, எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். அதனால் ஒரு முடிவுக்கு வரமுடியாத ஒரு குழப்ப நிலையே நீடிக்கும். இந்த நேரங்களில் மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கினால் எண்ண வேகத்தை மட்டுப்படுத்தி ஒருமுகப் படுத்தலாம் என்று தெரிகிறது. அடுத்த கேள்வி, 'எதற்காக எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்' என்பது. இதற்கு ஒரே பதில் குழப்ப நிலையில் தறிகெட்டுத் திரியும் எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்துதல் மூலம் மனத்தை பரபரப்பிலிருந்து விடுவித்து அமைதி அடையச் செய்து தீர்மானமாகச் செயல்படலாம் என்பதே. புற நோக்கியான கண்களை மூடிக் கொண்டாலும், பல சமயங்க்களில் எண்ண ஓட்டத்தை அறவே கட்டுப்படுத்த முடியாதாகையால், மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மன்ம் அமைதி நிலையில் பரபரப்பில்லாமல் இருக்கையில், கண்கள் எதிலாவது நிலைக்குத்தி இருந்தாலும் பரவாயில்லை. அமைதியான நிலையில் மனத்தை வைத்துக் கொண்டு, எண்ணத்தை எது குறித்து நீங்கள் யோசிக்கிறீர்களோ, அதில் குவிமையப் படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.

"முடிவா என்னதான் சொல்றீங்க?"

"ம். யோசிக்கணும்."

"நானும் எத்தனை தடவை கேட்டுட்டேன்.. இன்னும் நீங்க சொல்லப்போறீங்க.."

"அதான் யோசிக்கணும்னு சொல்றேன்லே."

"அப்போ யோசிச்சுச் சொல்லலாம்லே."

"சொல்லலாம் தான்.. ஆனா, நீ எங்கே என்னை யோசிக்க விட்டே?"

"நான் என்ன செஞ்ச்சேன்?.. உங்களை யோசிக்க வேண்டாம்னு தடுத்தேனா?"

"தடுக்கலே.. ஆனா இப்படி 'என்ன சொல்றே ;என்ன சொல்றே'ன்னு பிடுங்கி எடுத்தா நா எப்படி யோசிக்க முடியும்?"

"நா கேக்கறது பிடுங்கலாப் படறதா?"

"படறதோ இல்லையோ, நிம்மதி இல்லாமப் பண்றது. ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள். இதுக்கு நடுவே சட்டுனு பதில் சொல்ல முடியறதா.. அதுவும், இது வாழ்க்கைப் பிரச்சனை. சுமதியோட எதிர்கால வாழ்வே இப்போ நாம எடுக்கற முடிவுலேதான் இருக்கு. கொஞ்சம் என்னைத் தனிமைலே விடறியா?.. சாதக பாதகங்களை யோசிச்சு, சாயந்தரத்துக்குள்ளே சொல்றேன்."

"---பெண்ணுக்கு வரன் தேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியருக்குள் நடந்த உரையாடல் இது. அமைதியாக யோசித்தால் ஆழ்ந்து யோசிக்கலாம் என்பது பெற்றவரின் எண்ணம்.

மேகநாதன் குரல், அவையில் அமர்ந்திருப்போரின் நிசப்தத்தில் எடுப்பாகக் கேட்டது. "ஆக, பலசமயங்களில் ஆழ்ந்து யோசிக்க, புறத்தொந்திரவுகள் இல்லாத ஒரு அமைதியான தனிமை தேவைப்படுகிறது என்று தெரிகிறது. இப்பொழுது சயின்ஸ்க்கு வருவோம்.

"மனித மூளையின் வலது பக்கமும் இடது பக்கமும் தனித்தனி செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

"இடது பக்கம், பார்த்தல், கேட்டல், உணர்வுகளை உணர்ச்சிகளாய் உணர்தல் என்று இப்படிப் பார்த்த, கேட்ட, உணர்ந்த செய்திகளைத் தொகுத்தல், தொகுத்தவ்ற்றை எண்ணங்களாக உருவாக்கிக் கொள்ளல் போன்ற செயல்பாடுகளின் நிலைக்களனாகத் திகழ்கிறது. உருக்கொண்ட எண்ணங்களை வலது பக்கத்திற்கு அனுப்புகிறது.

"இடது பக்கத்திலிருந்து பெற்ற முழுமையான எண்ணத்திரள்களைப் பதிவு செய்து கொள்கிற ஆற்றல் பெற்று அதுவே வலதுபக்க மூளையின் வேலையாகிப் போகிறது. இடதுபக்கத்திற்கு தேவைப்படும் பொழுதெல்லாம் அதற்குத் தேவையான தகவல்களை தான் பெற்ற சேமிப்புக் கிடங்கிலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கும் சிறப்பினையும் அது பெற்றிருக்கிறது. தகவல் கிடைக்கப் பெற்றதும், 'ஆ, ஞாபகம் வருதே' நிலை இதுதான்.

"இப்படிப்பட்ட ஒரு ஞாபகம் தான் ஆர்கிமிடிஸூக்கு குளிக்கும் பொழுது தண்ணீர்த் தொட்டியில் வந்தது.. வந்த அந்த ஞாபகம் தான், விஞ்ஞானத்தில் மிதப்புத் திறன் விதியாகிப் போனது.

(தேடல் தொடரும்)

Wednesday, November 4, 2009

ஆத்மாவைத் தேடி....14 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

14. யோசிப்பதற்கு முன்

மேகநாதனின் தொடர்ந்த உரைகள் எல்லோரிடமும் மிகுந்த ஆவலையும், ஈடுபாட்டினையும் ஏற்படுத்தியிருந்தது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற சந்தேகங்களை தனித்தனியான வினாக்களாக எழுப்பினால், ஒரு முழுமையானத் தெளிவை அடைய முடியாதென்று அவர்கள் உணர்ந்ததினால், கலந்து பேசி அதற்கான ஒரு வழியைக் கண்டார்கள். முதலில் தனித்தனிக் குழுக்காளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஏற்படும் சந்தேகங்களை தங்களுக்குள்ளேயே பேசி, விடைகாண முடியாத வினாக்களை ஒருமுகப்படுத்திக் கொண்டனர்.

தேர்ந்தெடுத்த வினாக்களாக அவற்றை உருவாக்கிக் கொண்டு எல்லாக் குழுக்களும் ஒன்று கூடி தெளிவடைய முடியுமா என்று பார்த்தனர். இப்படிப்பட்ட கலந்துரையாடலில் பல வினாக்கள் அடிபட்டுப் போயின. அதற்குப் பின்னும் விடைதெரியாமல் எஞ்சியவற்றை முறைப்படுத்தி வ்ரிசைப்படுத்திக் கொண்டனர். இந்த வினாக்களை மட்டும் கூடப்போகும் அவையில் வைத்தால், அடுத்த கட்டத்திற்குப் போக எளிமையாக இருக்கும் என்கிற தீர்மானத்துடன் அவைக்கு வந்தனர்.

இவர்கள் அவையில் கூடுமுன்பே மேகநாதன் அவையில் மேடையில் தயாராக இருந்தார். கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் அமர்ந்ததும் ஒரு அசாத்திய அமைதி நிலவியது.

முதல் கேள்வி சிற்பககலை வல்லுநர் சித்திரசேனனிடமிருந்து வந்தது. அவர் அவைக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு கேட்டார்: "ஐயா, மனம் என்பது ஒரு தொடர்புச் சாதனம் என்று சொன்னீர்கள். வெளிப்பிரபஞ்சத்து சக்தியை உள்வாங்கி, உள்காந்த சக்தியோடு கலக்க, மனம் ஒரு தொடர்புச் சாதனமாக செயலாற்றுவதாகப் புரிந்து கொண்டேன். இந்த உள்வாங்கலில் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை மேலும் விளக்க வேண்டும்" என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.

"ரொம்ப சரி" என்று மேகநாதன் முறுவலித்தார். "அது பற்றி விவரமாகச் சொல்லவில்லை என்பதை உணர்கிறேன். இனி மேற்கொண்டு தொடரவிருக்கும் செய்திகளை இந்தக் கேள்வி--பதில் முறையிலேயே கொஞ்சமே நீட்டி விவாதித்தாலும் மற்ற செய்திகளையும் திரட்ட அதுவும் துணையாகிப் போகும்" என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார். "மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத சில சமாச்சாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக இதயமோ, நுரையீரலோ, சுவாசமோ மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை. ஓ.கே.?.. இந்த விஷயங்களை மட்டும் பிரித்தெடுத்துத் தனியே வைத்துக் கொள்வோம். இவை செயல்படுவதற்கும் எதுவோ காரணமாக இருக்க வேண்டும், அல்லவா?.. அது என்னவென்றும் பார்ப்போம்.

"மூளையை முன்மூளை, சிறுமூளை, முகுளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருப்பது போலவே, மனத்தையும் நினைவு மனம், ஆழ்மனம், அதீத மனம் என்று மூன்று கூறுகளாகப் பிரித்திருக்கிறார்கள். உங்கள் சிந்தனையில் நியாயமான ஒரு சந்தேகம் வரலாம். 'மனது' என்கிற ஒன்றே ஸ்தூலமாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத போது, அதை எப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று. உங்களது இந்த சிந்தனை நியாயமானதே. எஸ்... இந்தப் பிரிப்பெல்லாம், சில செயல்பாடுகளை யோசித்துப் பார்ப்பதற்கான, நமது வசதிக்காக ஏற்படுத்திக் கொள்ளும் சில ஏற்பாடுகளே. மூள்ளைக்கும், மனத்திற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த மனம் என்ன, அதன் செய்ல்பாடு என்ன, அது செயல்படுதல் எப்படி என்பதையெல்லாம் அலசிப் பார்ப்பதற்கு, மூளையின் செயல்பாடாகிய யோசித்தல் அவசியம் இல்லையா?.. அதைத்தான் சொல்ல வந்தேன்.

"அடுத்து இந்த யோசித்தலுக்கு இன்னொன்றும் அவசியம். அது நாம் யோசிக்கும் விஷயம் பற்றி நாம் கொண்டிருக்கும் அறிவு; knowledge. நாம் சிந்திக்கும் எந்த விஷயம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், நாம் அந்த விஷயம் பற்றி சிந்திக்க முடியாது என்பது ஒரு அடிப்படை உண்மை. இன்னொன்று. ஒரு விஷயம் பற்றி குறைந்தபட்ச அறிவு ஏற்பட்ட பிறகே, அதுபற்றி மேலும் 'டெவலப்' செய்கிற மாதிரி, சிந்திக்க வேண்டும் என்கிற அவாவே நம்மிடம் ஏற்படுகிறது என்பதும் இன்னொரு உண்மை.

மேகநாதனின் பேச்சில் ஒரு தீஸிஸை விளக்குகிற அக்கறையும் ஆர்வமும் இருந்தது."ஆக, எதுபற்றியும் யோசிக்க அதுபற்றி குறைந்தபட்ச அறிவு வேண்டும். இந்த அறிவை புறத்தில் ந்டக்கும் நமது செயல்பாடுகளில் பெற்றுக்கொள்கிறோம். அதாவது படித்தல், கேட்டல், பார்த்தல் என்று நமக்கு ஏற்பட்டிருக்கின்ற வசதிகளினால். அதாவது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற தகவல்களைக் கொண்டு, அவற்றையே அடிப்படைகளாக வைத்துக் கொண்டு யோசிக்கிறோம்.

மேகநாதன் கைகளைப் பரக்க விரித்தார். "இதில் தான் விஷயம் இருக்கிறது. வழங்கப்பட்டத் தகவல்களின் மேல் நம்பிக்கை கொண்டு அல்லது அவற்றையே அடிப்படையாகக்கொண்டு பேசுவது , கிளிப்பிள்ளை பேசுகிற மாதிரி. பெற்ற தகவல்களின் தொடர்ச்சி; அவ்வளவுதான். இதில் புதுசாக ஒன்றும் இருக்காது. ஏனெனில் இது எங்காவது படித்து, கேட்டு, பார்த்துத் தெரிந்துகொண்டது தான். வேண்டுமானால், இந்தத் தகவலைக் கேட்காமல், படிக்காமல், பார்க்காமல், தெரிந்து கோளாமல் இருப்போருக்கு புதுசாக இருக்கலாம்.

ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்தது. இனி சொல்லப்போகிற விஷயங்களுக்கு முன்னோட்டம் தான்.." என்று சுவாரஸ்யத்துடன் தொடர்ந்தார் மேகநாதன்.

(தேடல் தொடரும்)

Related Posts with Thumbnails