மின் நூல்

Wednesday, July 15, 2009

ஆத்மாவைத் தேடி....7 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

7. கனவும் நிஜமும்

தவைத் திறந்தால் கிருஷ்ணமூர்த்தி தான் நின்று கொண்டிருந்தார்.
"நாங்களும் ரெடியாயிட்டோம், கிருஷ்ணா.." என்றபடியே மாலு, சிவராமனைப் பார்க்க, "இதோ--" என்றபடியே சிவராமன் வெளிவந்தார்.

கதவைப் பூட்டி வெளிக்கிளம்புகையில் சுவர் பெண்டுலம் கடியாரம் ஐந்து முறை ஒலியெழுப்பி அவர்களை வெளியனுப்பி வைத்தது.

மாடிப்படி இறங்கி தரைத்தள கீழ்ப்படி அடையும் வரை யாருமே பேசவில்லை. கீழ் வராண்டா படி தாண்டி வரிசையாக குரோட்டன்ஸ் பாத்தி. அதைத் தாண்டியதும், "கிருஷ்ணா! இன்னிக்கு அதிகாலையில் ஓர் ஆச்சரிய அனுபவம்.." என்று ஆரம்பித்தாள் மாலு.

'என்ன?' என்கிற மாதிரி மாலுவை வியப்புடன் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

"அதிகாலைக் கனவு பலிக்கும்னு சொல்வார்களில்லையா?.." என்று பீடிகையுடன் ஆரம்பித்து, தான் கண்ட கனவை விவரித்து விட்டு, "'படபட'வென்று அந்தப் புறாக்காள் பறந்து போனது இன்னும் நினைவில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது, கிருஷ்ணா!" என்று முடித்தாள் மாலு.

கிருஷ்ணமூர்த்தி யோசனையுடன் அவளைப்பார்த்து விட்டுச் சொன்னார்: "மாலு! அந்தப் புறாக்கள் இந்த மஹாதேவ் நிவாஸில் சுற்றிக் கொண்டிருந்தவை தான். நான் இங்கே வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் அடிக்கடி அந்த ஜோடிப்புறாக்களைப் பார்த்திருக்கிறேன்... ஆனா, திடீர்னு கொஞ்ச காலமா அதுகளைக் காணோம். இப்போ வந்திருக்கு போல இருக்கு" என்றார்.

"புறாக்கள் வருவதும், போவதும் சகஜம், கிருஷ்ணா! ஆனால், இந்த புறாக்களின் கதையே வேறே.. நான் அரியலூர்லே நம்பாத்திலே இதேப் புறாக்களைப் பார்த்தேன். முத்தத்திலே இறகுகளை உதிர்க்கறதுகளேன்னு சலிச்சிண்டு விரட்டினேன். அப்படி விரட்டினத்துக்காகப் பின்னாடி வருந்தினேன். என்னோட வருத்தத்தைப் போக்கறத்துக்காகவே இங்கே தரிசனம் கொடுத்திருக்கிறதா நெனைக்கிறேன்," என்று மூச்சு வாங்கப் பேசினாள்.

"எதுக்கு மாலு, இப்படிப் படபடக்கிறே?.." என்று அவளை ஆசுவாசப்படுத்தினார் சிவராமன். "கிருஷ்ணா.. இந்தப் புறாக்கள் டெல்லிலேந்து தான் அரியலூருக்கு வந்ததாகவும், இப்படி வருஷாவருஷம் வர்றது வழக்கம் தான்னும் எனக்குத் தகவல் கிடைச்சது," என்றார் சிவராமன்.

"அப்படியா?" என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

"இதை யார் எனக்குச் சொன்னதுன்னு கேட்டா இன்னும் ஆச்சரியப்படுவே. அரியலூர்லே நம்பாத்துலேந்து பஸ் ஸடாண்ட்டுக்குப் போற வழிலே, ஒரு குட்டி சந்து திரும்புமே, அதுலே முதல் வீடு. அந்த வீட்லே இருப்பவர் புறா வளர்க்கறதா கேள்விப்பட்டுப் போனேன். அவர் சொன்னது தான் இது."

"ஓ..." என்று உதட்டைக் குவித்தார் கிருஷ்ணமூர்த்தி. "ஓ, அவர் நம்ம சதாசிவம்னா!.. எங்க தாத்தா காலத்லே அவர் அப்பா ராமலிங்கம் நம்ம நிலத்தை எல்லாம் பாத்திண்டிருந்த பண்ணைக் காரியஸ்தர்னா.."

"அப்படியா.. இந்த விஷயம் எனக்குத் தெரியாதே.." என்று ஆச்சரியப்பட்டார் சிவராமன்.

இத்தனை நேரம் ஏதோ யோசனையில் இருந்தது போலவே இவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மாலு, நிதானமாகச் சொன்னாள். "கிருஷ்ணா! பெரியவாள்லாம் ஒண்ணு சொல்லுவா. மனுஷ யத்தனத்தில் புரிஞ்சிக்க முடியாததையெல்லாம், ரொம்ப தோண்டித் தோண்டி யோசிச்சுப் பாக்கக் கூடாதுன்னு சொல்லுவா. அதெல்லாம் தெய்வ சங்கல்பம்ன்னு எடுத்துக்கணுமாம்... இருந்தாலும் நினைச்ச ஒண்ணைச் சொல்லிடறேன்.. பகவான் ஷமிக்கணும்.. நீ இருக்கற இந்த இடம், அடுத்தாப்பலே உன்னோட
அரியலூர் அகம், அங்கே இந்தப் புறாக்களைப் பாத்த நாங்க, உங்க தாத்தா காலத்து பண்ணை காரியஸ்தர் ராமலிங்கம் வீடு, அவர் வீட்டுக்கு இந்த புறாக்கள் வருஷா வருஷம் ஒரு குறிப்பிட்ட காலத்லே டெல்லிலேந்து வர்றதுன்னு அவர்சொன்னது... நீ இங்கே பார்த்த பொழுது காணாமப் போனது, அதே நேரத்லே நாங்க அரியலூர்லே இருந்த போது அங்கே வந்தது, நாங்க இங்கே வந்ததும் இங்கே வந்தது... இந்த எல்லாத்துக்கும் ஏதோ நூல் சரட்லே கோத்த மாதிரி... ஐ மீன், ஒரு லிங்க்... இருக்கற மாதிரித் தெரியலே?.." என்று திகைத்தாள்.

"'அந்தப் புறாக்களை விரட்டி விட்டோமே' என்கிற ஒரு குற்ற உணர்வோடேயே நீ இருந்ததாலே, உன்னைச் சாந்தப்படுத்த அதே புறாக்கள் பிரதட்சயமாயிருக்கின்றன' என்று எடுத்துக் கொள்ளலாமில்லையா?.." என்று கேட்டார் சிவராமன்.

"லாம். ஆனால் அந்த குற்ற உணர்வு, என்னை அரித்துக் கொண்டிருந்ததால், மனத்தின் ஆழத்தில் தைத்த அந்த உணர்வு, என்ன சமனபடுத்துவதற்காக கனவாகியிருக்கலாம். அறிவு பூர்வமாக இதுவரைப் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் கனவில் கண்டது, நிஜத்திலும் நிதர்சனமாகக் காண முடிகிறதென்றால்... ஓ! இட் இஸ் ஸம்திங் கிரேட்!.." என்று புளகாங்கித மடைந்து போனாள், மாலு.

அவர்கள் பேசிக் கொண்டே நடந்து வந்ததில், மஹாதேவ் நிவாஸையே நீண்ட ஒரு சுற்றாகச் சுற்றி வந்து, சிவன் கோயிலின் வெளிப்பிராகாரம் வரை வந்து விட்டார்கள்.

வெளிப்பிராகாரத்தின் நுழைவு வாயில் பக்கம் நுழைவதற்கு முன் தலைநிமிர்ந்து கோபுரம் பார்த்தவர்கள் திகைத்து அப்படியே நின்று விட்டார்கள்.

(தேடல் தொடரும்)

Sunday, July 5, 2009

ஆத்மாவைத் தேடி....6 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


6. படபடத்தப் புறாக்கள்

சிவராமனும், மாலுவும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தாங்கள் விளையாடித் திரிந்த அழகை அவர்கள் பார்க்க வேண்டித்தான் அங்கு வந்து அவர்களை எழுப்பி காணச்செய்து அவர்கள் பார்த்துக் களித்ததும் தங்கள் வேலை முடிந்த மாதிரி அந்த ஜோடிப்புறாக்கள் இவ்ர்கள் கண்முன்னாலேயே பறந்து பறந்து காணாமல் போயின.

தாங்க முடியாத சோகத்தில் தொய்ந்து போன மாலுவைக் காணப் பரிதாபமாக இருந்தது, சிவராமனுக்கு.

"இத்தனை நேரமும் இங்கே விளையாடித் திரிந்து நான் பார்த்ததும் பறந்து போயிடுத்தேன்னா.." என்று வேதனையில் விக்கித்து நின்றாள் மாலு.

"என்ன மாலு, நீ என்ன குழந்தையா? பறவைகளின் இயல்பு பறப்பது. அவை எழும்பி வானில் பறக்க முடியாமலிருந்தால் தான் நாம் பரிதாபப்பட வேண்டும்... அவை குஷியாகப் பறப்பது கண்டு நாம் சந்தோஷிக்க வேண்டாமா?.." என்று அவளைத் தேற்றினார் சிவராமன்.

தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் மாலு. அந்த அரையிருட்டிலும் அவள் விழிகளிலிருந்து வெளிவந்த நீர் கோடிட்டு கன்னப்பிரதேசத்தில் பளபளத்தது.
"ஆமான்னா.. நீங்க சொல்றது ரொம்ப சரி. பறவைகள் பறந்து திரிவது குழந்தைகள் ஓடி விளையாடற மாதிரிதான். ஆனால் என் மனசில் இவை வெறும் பறவைகளாகப் படலே."

சிவராமன் திடுக்கிட்டார். மாலு எதைச் சொன்னாலும் யோசித்து ஸ்பஷ்டமாகச் சொல்லும் பழக்கம் உள்ளவள். ஆதலால் இவள் உளறலாக எதையும் சொல்ல மாட்டாள் என்கிற உணர்வும் அவருக்கு இருந்தது.

எதுவும் பேசாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்கையில், மாலுவே தொடர்ந்தாள்: "கொள்ளை அழகுன்னா; கிருஷ்ண விக்கிரகம் மாதிரி ரெண்டு குழந்தைகள். தாழ்வாரத்திலேயே தவழ்ந்திண்டு வந்ததுகள், முத்தத்து மறப்பிலே மறைச்சிண்டு என்னைப் பாக்கறதுகள். எந்த முத்தம்ங்கறேள்?.. நம்ம ஜானகியோட அரியலூராத்து முத்தம்"

சிவராமன் சுவாரஸ்யமாக 'உம்' போட்டார்.

"ரெண்டு குழந்தைகளும் கொழுகொழுன்னு என்னமா இருந்ததுங்கறேள்?.. அசல் அந்த பாலகிருஷ்ணனே தான்! முத்தத்து மறப்பிலே, மயிலிறகு செருகின கிரீட அலங்காரத்தோட, நம்ப பெங்களூர் ஆத்து ஹால்லே ரவிவர்மாவோட 'ஆர்ட்'டை பிரேம் போட்டு மாட்டியிருப்போமே, அந்த மாதிரின்னா. அச்சு அசலா ஸ்வாமியே ஒண்ணுக்கு ரெண்டா குழந்தைகளா வந்த மாதிரி இருந்ததுன்னா..."

"ஓ----"

"அதுகளைத் தூக்கிக் கொஞ்சணும்ங்கற தவிப்பை என்னாலே அடக்க முடியலே. ரெண்டு அடிதான் வைச்சிருப்பேன்...'படபட'ன்னு சிறகடிச்சு ரெண்டும் புறாக்களாகி முத்தத்து மற்ப்பிலேந்து பறந்து போச்சு.. எங்கே குழந்தைகளைக் காணோம்ன்னு தேடறேன். எங்கே போச்சுன்னு தவியா தவிச்சு----பட்டுன்னு விழிப்பு வந்திடுத்துன்னா.. எல்லாம் கனவான்னு நம்பமுடியாம் பாத்தா, நீங்க ஜன்னல் பக்கத்லே நின்னுண்டிருக்கேள். என்னன்னு எழுந்து வந்தா, நான் கனவுலே பாத்த அந்தப் புறாங்களேதான்னா..
நிஜத்திலேயும் மாமரக் கிளைலே குலாவிண்டிருக்குகள்.. எது கனவு, எது நிஜம்ன்னு எனக்கு விளங்கலேயேன்னா..."


சிவராமன் மாலுவை ஆசுவாசப்படுத்தினார். "நீ கனவு கண்டதும் நிஜம். கனவில் கண்டதை நிஜத்தில் பார்த்ததும் நிஜம்" என்று சொல்லிவிட்டு, ஸ்விட்ச் தட்டி பெரிய சுவர் கடியாரத்தில் மணிபார்த்தார். "பாரு மணி நாலரை ஆச்சு. அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கச் சொல்லி கிருஷ்ணா சொல்லியிருக்கான். வாக்கிங் போக நீ ரெடியாகு" என்று தலையணையைத் தட்டி அடுக்கி வைத்தார்.

அவர்கள் தயாராவதற்குத் தான் காத்திருந்தது போல அழைப்பு மணி கிணுகிணுத்தது.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails