மின் நூல்

Saturday, December 26, 2009

ஆத்மாவைத்தேடி....24 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

24. தனி உலகம் இது!

லேசாக வெள்ளி முளைக்கும் பொழுதே, மஹாதேவ் நிவாஸ் விழித்துக் கொண்டு விட்டது.

சூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம் எல்லாம் முடித்துக் கொண்டு கிருஷ்ண மூர்ததி, சிவராமன் தம்பதிகளுடன் காலை கோயில் தரிசனத்திற்கு கிளம்பும் பொழுது மணி ஆறாகி விட்டது.

மஹாதேவ் நிவாஸின் கிழக்குப்புற வாசலில் உடற்கூறு இயல் அறிஞர் உலக நாதனும் அவரைச் சூழ்ந்து இன்னும் சிலரும் படியிறங்கிக் கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. பக்கத்தில் வந்ததும் தான் அந்தக் கூட்டத்தில் மனவியல் அறிஞர் மேகநாதனும் இருப்பது தெரிந்தது. கிருஷ்ண மூர்த்தியும் மற்றவர்களும் அருகில் வந்ததும், எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். அப்பொழுது மேகநாதன், தம்முடன் இருந்த உளவியல் பேராசிரியர் தேவதேவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். "இன்றைக்கு உரையாற்றப் போவது இவர்தான்" என்று மேகநாதன் சொன்னார். கிருஷ்ண மூர்த்திக்கு முதலிலேயே மேகநாதனின் குழுவிலிருக்கும் தேவதேவனைத் தெரியும் என்றாலும், அவர்தான் அன்றைக்கு விரிவுரை ஆற்றப்போகிறார் என்று தெரியாது. தெரிந்து கொண்டதும், வழக்கமான வாழ்த்துக்களை தேவ தேவனுக்கு தெரிவித்தார். மேகநாதனை நோக்கி, "இதற்கான குறிப்புகளை ஒருங்கிணைப்பா ளர் குறிப்பேட்டில் குறித்துக் கொள்கிறேன்" என்றார்.

"நேற்று மாலை அவை முடிந்த பிறகு அடுத்த நாள் உரை பற்றி எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து விவாதித்தோம். அப்பொழுது இன்னும் பதினைந்து நாட்களுக்கான விவாதப்பொருளை ஒரு சார்ட் மாதிரி தயாரித்துக் கொண்டிருக் கிறோம். உங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் அது அப்ரூவ் ஆக வேண்டும். இன்று காலை அமர்வுக்கு சற்று முன்னால் நாம் கூடினால் அதைப் பற்றி முடிவெடுத்து விடலாம்" என்றார் மேகநாதன்.

"அப்போ எட்டரை மணிவாக்கில் உங்கள் அறைக்கு மற்ற
ஒருங்கிணைப்பாளர்களுடன் வந்து விடுகிறேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

"அப்படியே செய்து விடலாம்," என்று மேகநாதன் சொல்வதற்கும், சிவன் கோயிலின் வெளிப் பிராகார வெளியை அவர்கள் நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

தொடுத்த மாலை ஒரு குடலில் இட்டு மாலுவின் கையில் இருந்தது. அவளும் சிவராமனும் தேவாரப் பாடல்களை பண்ணிசைத்து பாடியபடி முன்னால் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த மற்றவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவே எல்லோரும் சேர்ந்திசைத்த அநதக் காட்சி பார்பபதற்கும் கேட்பதறகும் அற்புதமாக இருந்தது.

சன்னதியை நெருங்க நெருங்க பூங்குழலி, நிவேதிதா, சாமபசிவம், யோகி குமாரஸவாமி மற்ற குழுவினர் எல்லோரும் சன்னதிக்கு முன்னால் அமர்ந்து திருவாசகம் ஓதிக் கொண்டிருப்பது தெரிந்தது. பின்னால் வந்தவர்களும் அவர்களுடன் கலந்து கொள்ள அவர்கள் உற்சாகம் பீறிட்டது. கொண்டு வந்த பூக்குடலையை சநநிதிக்கு முன்னால் வைத்து விட்டு, மாலுவும் அவர்களுடன் அமர்ந்து கொண்டாள்.

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய தற்சிறப்புப் பாயிரத்தின் ஆரம்ப அடிகள் அவர்களின் சேர்ந்திசையில் அமுத மழையாகப் பொழிந்தது..

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க... (நமச்சிவாய்..)


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க.... (நமசிவாய)

மெதுவாக சீரான ஓசை லயத்துடன் பெண்கள் பகுதியிலிருந்து உச்சாடன அலையெனக் கிளம்பிய நாதவொலி, இரண்டடி இரண்டடியாக அவர்கள் பாடி முடிக்க, அதே அடிகளை ஆண்கள் பக்கம் திருப்பிப் பாட எல்லோருக்கும் திகட்டாத தேனஇசையாக அது தெரிந்தது.


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி.... (நமசிவாய)


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.... (நமசிவாய)

'முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்..' என்று மீண்டும் அந்த வரியைப் பாடி 'நமசிவாய..' என்று ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கண்களில் நீர் வழிந்தது. மெய் விதிர்த்து இறைவனின் அருளை அந்த அன்பை செவிவழி துய்த்து நெஞ்சுக் கூட்டில் நிரப்பிக் கொணட புளகாஙகிதம், அததனை பேரின் முகத்திலும் ஈடற்ற பிரகாசமாய் பிரதிபலித்தது.

பண்ணிசைப் பாட்டு முடிந்ததும் நெடியதோர் நீண்ட அமைதி அங்கு நிலவியது. அவரவர் மூச்சொலி கூட வெளியோசையாய் வெளிப்படா வண்ணம், அத்தனை பேரும் ஆழ்துயிலில் ஆழ்ந்துவிட்டதே போன்று அப்படியொரு நிசப்தம். இறைவனுடனான தங்களுக்கான தனிஉலகைச் சமைததுக் கொள்கிற சக்தியை அனைவரும் கைவரப் பெற்றிருந்தனர். தொடர்ந்த அவைக்கூட்ட அமர்வுகளில் அவர்கள் பெற்ற பலன் அங்கே கண்ணுக்குத் தெரிகிற வெளிப்பாடாய் வெளிப்படையாய்த் தெரிந்தது.

தீபாராதனைக்காக கண்டாமணி ஒலித்த பொழுது, பிரியமாட்டாமல் பிரிந்து வந்த உணர்வில் நினைவுலகுக்கு வந்தது போல அவர்கள் எழுந்து நின்றனர். வேறோரு உலகிலிருந்து பிய்த்துப் பிரித்தெடுத்து இங்கு தள்ளப்பட்டது போல பிரமித்து, விழித்து, திகைத்த நிலையில் கருவறையில் ஈசனுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் தொடர்ந்த தரிசனத்தின் தொடர்ச்சியில் மனமுருகி பிறவா யாக்கைப் பெரியோனைத் துதித்தனர்; கரம் குவித்து 'ஹர ஹர மஹாதேவா!' என்று ஒருசேர ஓங்கிக் குரல் கொடுத்து ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்ட உத்வேக மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பிரசாதம் வழங்கப்பட்டு அனைவரும் சன்னதியிலிருந்து வெளிப்பட்டு பிராகாரம் வருகையில் இன்றைக்கு என்னவோ அத்தனைபேரின் மனத்திலும் இனம்புரியாத சந்தோஷம் கூத்தாடியது.

நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பது போல அவர்களின் இந்த சந்தோஷத்திற்கும் அவர்களுக்கேத் தெரியாத ஒரு காரணம் இருந்தது.


(தேடல் தொடரும்)




Tuesday, December 22, 2009

ஆத்மாவைத் தேடி....23 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

23. சர்வைவர் சமோவா...

முதலில் அந்தப் பெண் தான் தமயந்தியின் அருகில் வந்து, "நீங்கள் தமிழ்நாடு தானே?.. உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?" என்று உரிமையுடன் அவள் கை பற்றினாள்.

பற்றிய அவள் கையை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்ளத் தயங்கி, லேசாக நெளிந்தாள் தமா. "ஆமாம், தமிழ்நாடு தான்.. திருச்சி பக்கம் அரியலூர்.. நீங்கள்?"

"நான் கோயம்புத்தூர். ஆர்.எஸ்.புரம்" எனறவள், அதற்குள் கிரிஜாவும் அவர்கள் அருகில் வந்துவிட, அவளைப்பார்த்து "இவங்க உங்க தங்கையா?" என்றாள்.

"ஆமாம், தங்கையேதான். ஆனால் மாமா பெண்" என்று சொல்லிச் சிரித்தாள் தமயந்தி.

அந்தப் பெண்ணும் சிரித்து விட்டு, கிரிஜாவைப் பாத்து "நீங்களும் இவங்க மாதிரியே அழகா இருக்கீங்க" என்றாள்.

"நீங்க மட்டும் என்னவாம்?.." என்று கிரிஜா அவள் பங்குக்கு சொல்ல,அந்த நிமிஷமே பெண்கள் மூவரும் கலகலப்பாகி விட்டனர்.

"எல்லாம் சரி.. உங்கள் பெயரை இன்னும் எங்களுக்குச் சொல்லலியே?" என்றாள் தமா.

"மாதுரி" என்று சொல்லி விட்டு லேசாக வெள்ளைப் பற்கள் தெரிய அவள் சிரித்தாள். அவள் சிரித்த அந்த ஒருவினாடிப் பொழுதில் இடதுபக்க வரிசையில் அவளுக்கு ஒரு தெத்துப்பல் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டாள் கிரிஜா. உடனே அந்தத் தெத்துப்பல்லும் சிரிக்கும் பொழுது இவளுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

தங்கள் கணவன்மார்களை இருவரும் மாதுரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். மாதுரியும் தன்கணவன் சுரேஷைக்கூப்பிட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.இன்னொருவர் அவள் அண்ணன் என்றும் கூட இருந்த பெரியவர் தனது பெரியப்பா என்றும் சொன்னாள். மாதுரியும் அவள் கணவனும் கொலம்பியாவில் பணியாற்றுவதாகவும், அண்ணனும், பெரியப்பாவும் இந்தியாவிலிருந்து டூரிஸ்டாக வந்திருப்பவர்கள் என்று சொன்னாள். "இலையுதிர் பருவகால சுற்றுலாவாக இந்தப் பகுதிக்கு எல்லோரும் வந்திருக்கோம்" என்று மாதுரி சொன்ன போது, "நாங்களும் அதே!" என்றாள் கிரிஜா.தூரத்தில் இருந்து பார்க்க மாதுரி வயதானவள் மாதிரித் தோற்றமளித்தாலும் நெருக்கத்தில் பார்க்கையில் அப்படி ஒன்றும் அவளுக்கு வயசாகி விடவில்லையென்று த்மயந்திக்குத் தோன்றிற்று.

சுத்தமாக நீள இருந்த மரபெஞ்ச்சைப் பார்த்ததும், அதைக்காட்டி,"இப்படி உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா?" என்றாள் மாதுரி.

கிரிஜா தமாவைப் பார்க்க, "ஓ..எஸ்.." என்றபடி தமா காருக்குச் சென்று டிக்கி திறந்து ஒரு தூக்குக் கூடையை எடுத்து வந்தாள். அதற்குள் தமாவின் ஆறு வயதுப் பையன் மணிவண்ணனுடன் நெருக்க்மாகி விட்டாள் மாதுரி..அவளது கணவன் விடியோ கேம் மாதிரி ஒரு பார்ஸலை காரிலிருந்து எடுத்து வந்து அவனுக்குப் பிரஸெண்ட் பண்ணியிருந்தார். பிரகாஷ், மாதுரியின் கணவர் சுரேஷூடனும், குமாருடனும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக்கொண்டு மரபெஞ்ச்சுக்கு வந்தனர்.. அவள் பெரியப்பா--அந்தப் பெரியவர்--ரிஷிக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.

தூக்குக் கூடையைத் திறந்தபடியே, "ஒண்ணு சொன்னா ஆச்சரியப்
படுவீங்க.. நானும் கிரிஜாவும் இன்னிக்கு அதிகாலையிலேயே உங்களைப் பார்த்து விட்டோம்!" என்றாள் தமா.

பளீரென்று வெட்டிய மின்னல் மாதிரி மாதுரியின் முகத்தில் ஒரு வியப்பு ரேகை வெட்டி விட்டுப் போனது. "அப்படியா?" என்று திகைத்தவள் "எங்கே பார்த்தீர்கள்?" என்று கேட்ட படியே, மெக்-டொனால்டின் ப்ரென்ச் ஃப்ரைஸ் பொட்டலத்தை எல்லோரும் சாப்பிடுவதற்கு வாகாகப் பிரித்து வைத்தாள்.

"எங்கே தெரியுமா?" என்று கிரிஜா அதற்குள் சொல்லாமல்
"சஸ்பென்ஸ்.." என்று சிரித்தபடி உருளைக்கிழக்கு குச்சி ஃப்ரைஸ் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். போட்டுக் கொண்ட அது, இன்னொன்று கேட்டு உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது.

"பாவம்டி.. சொல்லிடலாம்.. அவங்க திகைச்சுப் போயிட்டாங்க.." என்று ஃபாயில்ஸ் கவர் போட்டுச் சுற்றியிருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தாள் தமா.. "வெரைட்டியா சித்ரா அன்னம் தயாரித்துக் கொண்டு வந்தோம்.. உங்க டேஸ்ட்டுக்கு எப்படியிருக்கும்னு தெரியலே!" என்றவள், "இந்த தேங்காச்சாதம் எப்படியிருக்கு, சொல்லுங்க.." என்ற்படி, எல்லாருக்கும் கொண்டு வந்திருந்த தேங்காய்சாதத்தைக் கரண்டியில் எடுத்துப் பரிமாறினாள். கிரிஜா ஸ்பூன்களை எடுத்துப் பரப்பி வைத்தாள்.

"ப்ளீஸ்.. எங்கே எங்களைப் பாத்தீங்கன்னு சொல்லிடுங்க... என்னாலே இந்த சஸ்பென்ஸ எல்லாம் தாங்க முடியாது!" என்று மாதுரியின் கணவர், குமார் பக்கம் சிப்ஸ் பாக்கெட்டை நகர்த்தினார்.

"இன்னிக்கு அதிகாலைலே மேகக்கூட்டம் பாக்கலாம்னு எங்க காபின் ஸிடஅவுட்லேந்து பாக்கறச்சே, பக்கத்துப் பள்ளத்தாக்குப் பாதைலே நீங்கள்ளாம் நடந்து போயிண்டிருந்தீங்க!"

"நாங்களா?" என்று யோசனையுடன் இழுத்த மாதுரியின் அண்ணன், "கரெக்ட்.. அதிகாலைலே ஜாக்கெட் போட்டுண்டு வாக்கிங் கிளம்பிட்டோம்; எல்லாரும் கிளம்பினோம் என்றாலும் ஒரு வேலையா நான் உடனே எங்க கேபினுக்குத் திரும்பிட்டேன்" என்றார்.

"அப்போ நீங்க போட்டிண்டிருந்த ஜாக்கெட்டின் நிறம் நீலம் தானே?" என்று ஆவலுடன் கேட்டாள் கிரிஜா.

"வாவ்! எப்படி இப்படி கரெக்டா சொல்றீங்க?.."

"எங்க காபின்லேந்து தான் அந்தப் பாதையெல்லாம் கிளியரா தெரியுதே?.. இன்ஃபாக்ட் உங்களையெல்லாம் நாங்க பாத்திட்டு பெரிய ரகளையே ஆயிடுத்து," என்று சொல்லிச் சிரித்தாள் கிரிஜா.

"ரகளையா?.. ஓ, என்ன சொல்றீங்க?..." என்றார் மாதுரியின் கணவர் சுரேஷ்.

"சீ.. சும்மா இரு; உனக்கு எப்பவும் இப்படி தமாஷ் தான்!" என்று அவளை அடக்கி விட்டு அவர்கள் பக்கம் திரும்பி, "ஒண்ணுமில்லீங்க.. புடவை காஸ்ட்யூமோட இவங்களைப் பாத்துட்டோமா, உடனே இந்தியர்கள்னு தெரிஞ்சிடுத்து.. அடுத்தாப்பலே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவ்ங்கன்னு எங்களுக்குள்ளே விவாதம். கடைசிலே ஜெயித்தது என்னவோ கிரிஜாதான்.. அவதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தான் இவங்கன்னு கரெக்டா சொன்னா!" என்றாள் தமா.


"ஓ.. ஒண்டர்புல்!" என்று சொல்லிவிட்டு தெற்றுப்பல் தெரிய சிரித்தாள் மாதுரி..

"இப்போ நீங்களும் அவரும் சுவாரஸ்யமா ஏதோ டிஸ்கஸ் பண்ணிகிட்டு வந்தீங்களே?.. " சுரேஷைக் காட்டி கணவனிடம் கேட்டாள் தமயந்தி. "என்னன்னு தெரிஞ்சா எங்களுக்குத் தெரிஞ்சதை நாங்களும் சொல்வோம்லே!"

புளியோதரையை ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டே, "ஓ.. அதையாக் கேக்கறே?" என்று சிரித்தான் குமார். சிரித்த சிரிப்பில் அவனுக்குப் புரையேறி விட்டது..

"என்னங்க நீங்க, அவரைப் போட்டு.." என்று உதவிக்கு வந்தார் சுரேஷ். "இங்கே டி.வி.லே ஒளிபரப்பாகுற விளையாட்டுப் போட்டி 'சர்வைவர் சமோவா' ப் பத்தித் தான் பேசிகிட்டு வந்தோம்.. கடைசிலே ரஸல் தான் ஜெயிப்பார்ங்கறது உங்க கணவரோட கட்சி.."

"இல்லே.. ஷாம்போ தான் ஜெயிப்பாங்க, பாருங்க.." என்றாள் கிரிஜா. "ஏதாவது நடந்து ஷாம்போ ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு!"

"இல்லே.. பிரட் தான்" என்றாள் தமயந்தி, தயிர் சாத பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே.

"நீங்க என்ன சொன்னீங்க?" மாதுரி தன் கணவனைப் பார்த்துக் கேட்க, "என்னோட ஓட்டும் ரஸலுக்குத் தான்.. இதுலே குமாருக்கும் எனக்கும் ஒரே கருத்து தான்" என்றார் அவர்.

"அப்போ, பிரகாஷ் கருத்து என்னவோ?"

"இதுலே சொல்றத்துக்கு ஒண்ணுமில்லே; ஆட்டத்திலே நட்டாலி, மிக் எல்லாம் இருக்காங்க.. கடைசிலே மிஞ்சற் மூணு பேர்லே, என்ன விநோதம் வேணுமானாலும் ந்டந்து யார் வேணா ஜெயிக்கலாம்.. ஏன்னா, இந்த ஜூரிங்க என்ன செய்வாங்கன்னு யாரும் சொல்ல முடியாது.." என்றான் பிரகாஷ்.

"ஆளாளுக்கு ஒருத்தரைச் சொன்னா எப்படி? க்டைசிலே ஜெயிக்கப் போறது யாருங்கறது ஒன் மில்லியன் டாலர் க்வெஸ்டின் இல்லையா?" என்றார் மாதுரியின் பெரியப்பா.

"ஓ..ஓ... பெரியப்பா கூட இதப் பார்க்கறா?.. " என்று கிரிஜா கைகொட்டிச் சிரிக்க,

"பெரியப்பா என்ன, மணிவண்ணனைக் கேட்டால் கூடச் சொல்லுவான்" என்று பிரகாஷ் சொல்ல அவர்கள் சிரித்த சிரிப்பைப் பார்த்து அப்பொழுது தான் ஒரு டிரக்கில் வந்து இறங்கிய ஒரு அமெரிக்க குடும்பம, என்னவோ ஏதோ என்று இவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது.

சாப்பிட்டு முடிந்ததும், வேஸ்ட்டையெல்லாம் திரட்டி பக்கத்திலிருந்த டிராஷில் போட்டு விட்டு வந்தனர். காபினிலிருந்து கிளம்பும் பொழுது தான் ரிஷிக்கு கிரிஜா பருப்பு சாதம் ஊட்டி யிருந்தாள். அதனால் இப்போது ஜூஸ் பாட்டிலை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். அவன் பாப்-டார்ட் வேண்டுமென்றான். "உன்னோட கார் ஸீட்டில் இருக்கு; அப்புறம் எடுத்துக் கொடுக்கிறேன்" என்றாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ, சமர்த்தாக போதுமென்று ஜூஸ் பாட்டிலேயே ஆழ்ந்து விட்டது.

மாதுரி குடும்பம் அதிகாலையிலேயே கிளம்பி முடிந்த வரை எல்லா இடங்களையும் பார்த்து விட்டு இப்பொழுது கேபினுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களாம்.. இவர்கள் இப்பொழுது தான் மலைப் பாதையின் மேல் நோக்கிச் செல்வதால், இந்த இடத்திலிலேயே விடைபெற்றுக் கொண்டனர்.

வருந்தி வருந்தி மாதுரி கூப்பிட்டதினால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. "நாளைக்கு உங்களிடத்திற்கு வருகிறோம்" என்று தமா அவள் காபின் எண் வாங்கிக் கொண்டாள்.

"ஒன்பது மணிக்கு வந்து விடுங்கள்.. ஒன்றாகவே சேர்ந்து சாப்பிட்டு விடலாம்" என்றாள் மாதுரி.

"சரி.." என்று தமா சொல்லி விட்டாளே தவிர, நாளை என்ன செய்வது என்பது தீர்மானிக்க முடியாமல் இருந்தது.. முதலில் அப்பாவுடன் தில்லிக்குப் பேசி நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே அவள் மனசு பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

(தேடல் தொடரும்)














Saturday, December 19, 2009

ஆத்மாவைத்தேடி....22 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

22. மறுபடியும் அவர்கள்

ங்கியிருந்த கேபின் அற்புதமாக இருந்தது. மெயின் ரோடிலிருந்து உள்ளடங்கி இருக்கும் சாலையில் உயரே வளைந்து வளைந்து ஏற வேண்டியிருந்தது. கொஞ்ச தூரம் அப்படி ஏறித் திரும்பினால் அதற்கு மேல் போகமுடியாதவாறு பாதையை அடைத்துக் கொண்டு இரும்புக்கதவுகள் சாத்தப்படடிருந்தன. கதவு திறப்பதற்கான பாஸ்வேர்டை காரை விட்டு இறங்காமலேயே கைநீட்டி மெஷினில் பதிந்தால், அலிபாபா 'ஓபன் ஸீஸேம்' மாதிரி சாத்தியிருந்த இரட்டைக்கதவுகள் திறந்தன. கதவு தாண்டிய பாதையில் கொஞ்ச தூரம் ஏறித் திரும்பினால் ஒதுக்கப்பட்டிருந்த கேபின் வந்து விடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக பாதைச் சரிவில், செங்குத்துத் திருப்பத்தில் என்று நிறைய கேபிங்கள் தாம்.

உள்ளே போவதற்குத் தான் பாஸ்வேர்ட் தேவையாயிருந்தது. வெளியே வருவதற்கு அவசியம் இல்லை. உள்ளிருந்து வெளிச்செல்ல வரும் கார்கள் அருகில் வந்ததும் தாமாகவே கதவுகள் திறந்து கொண்டன. அதே மாதிரி கேபினின் மெயின் டோர் திறக்கவும் பாஸ்வேர்டைத் தான் பதிக்க வேண்டியிருந்தது.. 'செக்-இன்', 'செக்-அவுட்'களைக் கவனிக்க யாரும் கிடையாது.. வந்து தங்கிக் கொள்ள வேண்டியது; காலிபண்ணும் பொழுது போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.. இரகசிய வார்த்தைகள் மறந்து போய்விடாமல் இருக்க தமயந்தி பாஸ்வேர்ட்களை கார்ஸீட்டிற்கு பின்னாலேயே காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தாள். கான்டான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் கேபின் இருந்தது; ரோடுக்கு வந்து விட்டால் வெயினஸ்வில் தான்.

தில்லிக்குப் பேசிவிட்டு, எல்லோரும் சாப்பிட்டுக் கிளம்புவதற்குள் மணி பதினொன்று ஆகிவிட்டது. கேபினிலிருந்து கீழிறங்கும் பாதையில் இறங்கி சாலைக்கு வந்ததும் கேஸ் ஸ்டேஷனில் காருக்கு கேஸ் போட்டுக்கொண்டார்கள். சற்று தூரத்திலேயே சாலைக்கு உள்ளடங்கி இருந்த விஸிட்டர் செண்டரைப் பார்த்ததும் எல்லோருக்கும் சந்தோஷம். தமா கணவரைப் பார்த்து, "விவரமெல்லாம் தெரிஞ்ச்சிண்டு வந்து விடலாங்க" என்று காரை குறுக்குப் பாதையில் ஓட்டினாள். தமாவுக்குப் பின்னாலேயே காரை ஓட்டி வந்த கிரிஜாவும் காரை தமாவின் காருக்குப் பக்கத்தில் நிறுத்தினாள். கிரிஜாவிடம் சொல்லி விட்டு அவள் கணவன் பிரகாஷ், தமாவின் கணவன் குமாருடன் செண்டருக்குள் போனான். விஸிட்டர் ஸெண்டரில் போய் ப்ளூ ரிட்ஜ் பார்க்வே பற்றித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டனர். அங்கு முழுத்தகவல்கள் அடங்கிய கைடும், மேப்பும் கிடைத்தது மிகவும் வசதியாகிப் போனது.

விஸிட்டர் ஸெண்டரை விட்டு ரோடுக்கு வந்த்துமே, வலது பக்கம் திரும்பிய கொஞ்ச தூரத்தில், ப்ளூ ரிட்ஜ் பார்க் வேக்கு மலையேறும் பாதை வந்து விட்டது. நிறைய கொண்டை ஊசி வளைவுகள், உடனே உடனே என்று இல்லாமல் விரவி இருந்தன. இரண்டு பக்கமும் விதவிதமான மரக்கூட்டங்கள்; மஞ்ச மஞ்சரேன்று, கருஞ்சிகப்பிலென்று , சில இன்னும் மஞ்சளோ சிவப்போ அடையாமல் என்று-- இலைகளைச் சுமந்து கொண்டு வரிசை வரிசையாக சாலையின் இருபக்கமும் இருந்த மரக்கூட்டங்கள் பார்க்க பார்க்கப் பரவசம் ஊட்டின.

நீண்ட பாதையில் போகும் வழியிலேயே அங்கங்கே பிர்மாண்ட பள்ளத்தாககுகளைப் பார்க்க வசதியாக பாதையை அகலப்படுத்தி சின்னச் சின்ன கைப்பிடிச்சுவர் கட்டப் ட்டிருந்தது. அப்படிப் பட்ட இடங்களின் பெயர்களை கல்லில் பொறித்து அங்கங்கே பதிததிருந்தார்கள். அதைத் தவிர ஒரு கூட்டமே உட்கார்ந்து உணவருந்துகிற மாதிரி மர பெஞ்சுகள் வேறு. அங்கங்கே தங்கள் கார்களை நிறுத்தி, இறங்கி, பள்ளத்தாக்குகளைப் பார்த்து வியந்து கையோடு வைத்திருக்கும் காமிராக்களில் பார்க்கும் காட்சிகளை சிறைப்படுத்திக் கொண்டு என்று... எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பலர் நின்று கொண்டிருந்தனர். தமயந்தியும், கிரிஜாவும் தங்களுக்கு பார்க்க வேண்டும் என்று மிகவும் பிடிந்திருந்த இடங்களில் மட்டும் காரை நிறுத்திக் கொண்டிருந்தனர்.

அப்படித்தான் ஒரு வளைவு திரும்பி சற்று தூரத்தில் இருந்த பள்ளத்தாக்குப் பார்வையாளர் இடத்தில் காரை நிறுத்தலாம் என்று அந்த இடத்தை நெருங்கி வந்து காரைப் பார்க் செய்த போது அங்கு நின்று கொண்டு பள்ளத்தாக்குப் பகுதியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இந்திய குடும்பத்தைப் பார்த்ததும் தமாவும் கிரிஜாவும் திகைத்துப் போய்விட்டனர்.

சந்தேகமில்லாமல் இவர்கள் இன்று அதிகாலையில் தாங்கள் கேபினின் பக்கத்து மலைப் பாதையில் பார்த்தவர்கள் தான் என்று இருவருக்கும் நிச்சயமாயிற்று. இப்பொழுது கூட பின் பக்கம் பார்க்கையில் புடவை கட்டிய அந்தப் பெண்ணின் தோற்றம் தன் அம்மா மாலுவைப் போலவே இருந்தது கண்டு தமயந்திக்கு வியப்பு தாளவில்லை.

'இன்று காலையில் தான் அம்மாவுடன் போனில் பேசினோமே' என்கிற நினைப்பு தமயந்திக்கு மற்ற ஆச்சரியங்களை அடக்கிக் கொண்டு மேலோங்கி வருகையில், அந்தப் பெண்ணுடன் இருந்தவர்களை நெருக்கத்தில் பார்க்கையில் தங்கள் தந்தையைப் போலில்லை என்பது இருவருக்குமே நன்றாகவேத் தெரிந்தது.. இருந்தாலும் இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளூம் ஆவல் அவர்களை உந்தி முன்னால் செலுத்தியது.

இதற்குள் காரை விட்டு இறங்கிய இவர்களை பரிவுடன் பார்த்தபடி தயங்கியபடியே அவர்கள் நின்றிருந்தனர்.


(தேடல் தொடரும்)

Wednesday, December 16, 2009

ஆத்மாவைத்தேடி....21 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

21. காக்கைச் சிறகினிலே, நந்தலாலா!....

"எப்படிப்பா, இருக்கே?" என்று ஆதுரத்துடன் கிரிஜா தந்தையைக் கேட்டாள்.

"நன்னா இருக்கேம்மா. நீ எப்படியிருக்கே?.. குழந்தை ரிஷி எப்படியிருக்கான்?"

"நான், அவர், குழந்தை எல்லோரும் ஃபைன் அப்பா. ரிஷியை வர்ற வருஷம் மாண்டிஸேரி ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு நெனைக்கறோம். நேத்திக்கு அரியலூருக்குப் பேசினேன், அப்பா! அங்கே எல்லாரும் செளக்கியம். சுபா மன்னி செக-அப்புக்கு போயிண்டு வர்றாங்களாம்; பேபி வாகா நன்னா இருக்காம்."

"சந்தோஷம், கிரிஜா! நம்ம கையிலே என்ன இருக்கு?.. எல்லாம் அவன் பாத்துப்பான்.. போனவாரம் ஒருநாள் அர்ஜூன் பேசினான்.. அங்கே இருக்கற நிலவரமெல்லாம் சொன்னான். பாவம், உங்கம்மா.. நான் அங்கே இருந்தேன்னா அவளுக்கு யானை பலம் மாதிரி.. இப்போ, பாரு.. தனியாளாய் எல்லாத்தையும் சமாளிச்சிண்டிருக்கா.."

"அம்மா கிட்டேயும் பேசினேன். அம்மா என்ன சொன்னா தெரியுமா?"

"என்ன சொன்னா?"

"பாவம், அப்பா.. இங்கே அவர் இருந்து தனக்குன்னு கேட்டு எதையும் அனுபவிக்கலே; காலம் பூராவும் 'கதை சொல்றேன், கதை சொல்றேன்'னு அவர் காலம் போயிடுத்து.. இப்போ அவருக்கா தோணி மனசுக்குப் பிடிச்சதுன்னு போயிருக்கார். இப்ப இருக்கற இடம், அவருக்கும் பிடிச்சிருக்குப் போலிருக்கு. பிடிக்கறவரைக்கும் இருந்துட்டு வரட்டும்; இருக்கவே இருக்கு நம்ம பாடு; நாமா எதையும் சொல்லி புருஷாளைக் கவலைப்படுத்தக் கூடாது'ன்னு சொன்னா."

"கிரிஜா! என்னிக்கும் அவ சுபாவம் அப்படி; புதுசாவா திடீர்னு இன்னிக்கு மாறிடப் போறது? உங்களுக்கும் என்னோட அம்மா மாதிரியே அப்படியே உரிச்ச வைச்ச ஒரு அம்மா!... இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சிருக்கோம்னு தான் தெரியலே.. எப்படியெல்லாம் அந்த ஆண்டவன் அனுகிரச்சிருக்கார்னு ஒவ்வொரு விஷயத்திலும் நெனைச்சுப் பாத்து அவனைத் தொழறதைத் தவிர, வேறெதுவும் எனக்குத் தோணலைம்மா."

"நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம், அப்பா! எல்லாம் உங்க மனசுக்கு நல்லபடி நடக்கும்.. ஆனா எனக்கு எப்பவும் உங்களைப் பத்தின கவலை தான்.."

"நான் நன்னா இருக்கேம்மா.. எனக்கென்ன?.. நீ உன் உடம்பை.."

"ஏதோ இந்தியாவிலே வடக்கே கிழக்கேன்னு வேறே ஸ்டேட்லே இருந்தாக்கூட அடிக்கடி இல்லேனாலும் ஆறு மாசத்துக்கு ஒருமுறையாவது வந்து பாக்கலாம்.. பொண்ணாப் பொறந்தவாளுக்கே இப்படித்தான்னு நிர்ணயிச்சிக்குன்னாலும், அயல் தேசத்திலே வேறு இருக்க நேர்ந்திடுச்சா.. எல்லா உறவுகளையும் மறந்திட்டு இருக்க முடிலேப்பா.."

"வாழ்க்கைங்கறது அதான்ம்மா.. கிடைச்சதை சந்தோஷமா ஏத்துக்கணும்.. அதுலே சிறப்பா நமமளாலே என்ன செய்ய முடியும்னு பாக்கணும்."

"சொன்னா ஆச்சரியப்படுவே.. நேத்திக்கு ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?.. ராத்திரி சாப்பாடு முடிச்சிடடு, ரவுண்டா எல்லாரும் உட்கார்ந்திண்டு நம்ம ஊர்க்கதையெல்லாம் பேச ஆரம்பிச்சோம், பாரு!.. பாதி பேசிண்டிருக்கறச்சேயே, தமாவுக்கு அவ அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்து.. கண்லே நீர் முட்டறது; அவளை நான் தேத்தினாலும், என்னைத் தேத்திக்க முடிஞ்சாத் தானே?.. ராத்திரி பூரா உங்க ஞாபகம் தான்; வயசான காலத்திலே குடும்பத்தோட இல்லாம, இது என்ன டெல்லிலேன்னு ஒரே ஆதங்கமா இருந்தது.. யோசிச்சிண்டே படுத்திண்டிருந்தேன். தூக்கம் வர்லே.. தண்ணி குடிச்சிட்டுப் படுத்துக்கலாம்னு வெளிலே வந்தா, இந்த கேபின் பின்பக்கம், பால்கனிப் பக்கம் கண்ணாடி போட்டு தடுத்திருக்கும். அங்கே சேர்லே உட்காந்திண்டு, தமா வெளிப்பக்கம் வெறிச்சுப் பாத்திண்டிருக்கா.. 'என்னடி, தூங்கலியா'ன்னா, 'அப்பா--அம்மா ஞாபகம் வந்துடுத்துடி.. ஏதோ யோசிச்சிண்டு உட்கார்ந்திருக்கேண்டி'ன்னா. நானும் அவளோட் கொஞ்ச நேரம் பேசிண்டிருண்டிருந்து, படுக்கப்போறச்சே மணி மூணு.. "

"கிரிஜா!.. இங்கே நம்ம மனசைப் பத்தி ஒரு பேராசிரியர், மேகநாதன்னு பேரு, எவ்வளவு சொல்றார் தெரியுமா?.. பிரமாதம் போ! ஒண்ணைப் பத்தியே விடாது நெனைக்கிற நெனைப்பு, எண்ணம்ங்கறது ரொம்ப பலம் வாஞ்சதாம்; மனசாலேயே மானசீகமா வேண்டியவர்கள் உருவத்தைக் கூடப் பாக்கலாமாம். நான் சின்ன வயசிலே, அம்புலிலே எங்க அம்மாவைப் பாத்திருக்கேன்.. ராத்திரி வேளைலே வாசல் குறட்டிலே உக்காந்திண்டு பளிச்சினு தெரியற நிலாவை கண்கொட்டாமப் பாத்திண்டிருப்பேன்.. அம்மாமுகத்தை நெனைச்சிண்டு அந்த நிலாலே அம்மா தெரியறமாதிரி கற்பனை பண்ணிண்டு பாப்பேன்.. கண்ணாடிலே தெரியற மாதிரி அம்மா மூஞ்சியே நிலாலே தெரியும்.. ஊர்ந்து அம்மாவும் நெலாவோடேயே போற மாதிரி தெரியும்.. இப்போ கூட கண்ணை மூடிண்டு உக்காந்திண்டு உங்களையெல்லாம் நெனைச்சாப் போதும், ஒவ்வொரு சீனா சினிமாலே ஓடற மாதிரி, ஒவ்வொருத்தரா எனக்கு முன்னாடி நடமாடற மாதிரி தோணறது.. எல்லாமே ஆச்சரியமாத் தான் இருக்கு.." என்று தன் தந்தை சொல்லிக்கொண்டே வருகையில், இன்று காலை கண்ட நிகழ்ச்சியைப் பற்றி அவரிடம் தான் சொல்லாமலேயே, கண்ட காட்சிக்கு அவர் விளக்கம் சொல்கிற மாதிரி இருந்தது கிரிஜாவுக்கு.

"பாரதியாரும் இந்த மாதிரியான உருவெளிக்காட்சியை உணர்ந்திருக்கார் போலிருக்கு; அதான் கண்ணனை நினைச்சே இருந்த அவருக்கு, பாக்கற காக்கை, மரம் எல்லாம் நந்தலாலாவாத் தோணித்தோ என்னவோ.. " என்று அவர் சொன்ன போது, கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது.

"ரொம்ப நேரம் ஆயிட்டது, கிரிஜா! அப்புறம் பேசலாமா?" என்று கிருஷ்ண மூர்த்தி சொன்ன போது அவர் சொன்னதே மனசில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்த உணர்விலேயே அனிச்சையாய், "சரிப்பா.. அப்புறம் பேசலாம்.." என்று சொல்லியபடி போனை வைத்தாள்.

அடுத்த நாளே அவள் அவரைக் கூப்பிடுவாள் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாதிருந்தது.


(தேடல் தொடரும்)

Friday, December 11, 2009

ஆத்மாவைத்தேடி....20 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின அடுத்த கட்டத்தை நோக்கி....

20. பார்த்த காட்சி

தமயந்தியின் குரலில் ஒரு பதட்டம் இருந்தது. "ஆமாப்பா.. உங்களையெல்லாம் இங்கே பார்த்தோம்ங்கறது நிஜம். முதல்லே பாத்தது நான் தான். பாத்தவுடனேயே ஆச்சரியப்பட்டு சந்தோஷத்தோட கிரிஜா கிட்டே காட்டினேன்."

"கிரிஜாவா?"

"ஆமாம்'பா! நம்ம கிருஷ்ணா மாமா பொண் கிரிஜாதான். இந்த டூர் ப்ரோக்ராம் பிக்ஸ் ஆனவுடனேயே கிரிஜாவையும் அவ ஊர்லேந்து நேரா இங்கே வரச்சொல்லிட்டோம். அவளுக்கும் இப்போ வெக்கேஷன் பிரீயட்னாலே குடும்பத்தோட வந்திருக்கா..."

"அப்படியா, ரொம்ப சந்தோஷம். பின்னாடி அவா கிட்டே பேசறேன். நீ சொல்லு."

"இந்தப் பகுதி நார்த் கரோலினா ஸ்டேட்லே இருக்குப்பா; எங்க இடத்திலே இருந்து நாலுமணி நேர டிரைவ் டைம். நாங்க இங்க வந்து இன்னியோட நாலு நாள் ஆகப்போறது.ஆன்லைன்லே ஒரு வாரத்திற்கு தங்க கேபின் புக் பண்ணியிருந்தோம். கேபின்னா, தனி வீடு மாதிரி. ஒரு வீட்டுக்குள்ளே இருக்கற ஓவன், கேஸ், பிரிட்ஜ், ஃப்யர் ப்ளேஸ்னு அத்தனை வசதியும் இங்கே இருக்கு. கல்யாணம் முடிஞ்சு கட்டுசாதக் கூடை கொடுத்து அனுப்பற மாதிரி வந்து இறங்கியவுடன் அவசர சமையல்னா தேவையான குறைந்தபட்ச சமையல் சாமாங்கள் கூட இருக்கு. வந்து இறங்கினவுடனேயே பக்கத்து வால்மார்ட்டுக்குப் போய், தேவையான தெல்லாம் வாங்கிண்டு வந்திட்டோம். சமையல், சாப்பாடு எல்லாம் இங்கே தான்..

"ஓ ஃபைன்."

"காலம்பற பத்து மணிக்குள்ளே சாப்பாட்டுக் கடையை முடிச்சிண்டு கிளம்பிடுவோம். நேத்திக்கு ஸ்மோக்கி மவுண்ட்டன் போயிட்டு வந்தோம்; இன்னிககு ப்ளூ ரிட்ஜ் பார்க்வேன்னு பக்கத்லே இருக்கற மலைப்பகுதிக்குப் போறதா இருக்கோம்.. எங்க கேபினுக்குப் பின்பக்கத்திலே பெரிய தடுப்பு; நம்ம ஊர் பால்கனி மாதிரி. அங்கேயிருந்து பாத்தா, சுத்து வட்டாரம் பூரா பாக்கலாம். காலம்பற வேளைலே, பள்ளத்தாககு பகுதி மொத்தமும் வெள்ளை வெளேர்ன்னு பனி மூடிண்டு இருக்கற மாதிரி மேகக்கூட்டம் கத்தை கத்தையா படிஞ்சிருக்கும். அதைப் பாக்கறது கண்கொள்ளாக் காட்சி.

"ம்...."

"இன்னிக்குக் காலைலே எழுந்தவுடனே பள்ளத்தாக்கிலே மேகமூட்டத்தைப் பார்க்க ஆசையோட அந்த பின்பக்க ஸிடஅவுட்டுக்கு ஓடினேன். அப்போத்தான் பக்கத்து மலைச் சரிவு பாதைலே உங்களைப் பார்த்தேன். முதல்லே புடவை கட்டிண்டு அம்மா எடுப்பா தெரிஞ்சா; அம்மாக்கு கொஞ்சம் பின்னாடி நீ, உனக்கு பின்னாடி அந்தப் பெரியவர், அவருக்குப் பக்கத்திலே கிருஷ்ணா மாமான்னு---நான் உங்களையெல்லாம் பார்த்ததும், சந்தோஷத்திலே கத்திட்டேன். என்னவோ ஏதோன்னு ஓடிவந்த கிரிஜா கிட்டே காட்டி, பாக்கச் சொன்னேன். அவளுக்கு சரியாத் தெரியலே; பைனாக்குலரை எடுத்து வந்து பார்த்தா... 'ஆமாண்டி.. ஆச்சரியமா இருக்கு'ன்னு அவ சொல்லிண்டிருக்கறத்தேயே, முகடு மாதிரி நீட்டிண்டிருந்த ஒரு பக்கத்தைச் சுத்திண்டு நீங்க திரும்பி வர்ற மாதிரி தெரிந்சது.. திரும்பி வரட்டும், நன்னாப் பாக்கலாம்னு பார்த்திண்டே இருந்தோம். ஆனா திரும்பி வர்றச்சே, கிருஷ்ணா மாமா மட்டும் தான் வந்திண்டிருந்தார். மாமா பின்னாடி நீங்க வருவேள்னு பத்து நிமிஷத்துக்கு மேலே பாத்திண்டே இருந்தோம். கடைசி வரை வரவே இல்லே...

""நீங்க திரும்பி வராததைப் பாத்து எனக்கு கலவரமாப் போயிடுத்து. அடக்க முடியாம அழுகை அழுகையா வர்றது.. 'சீ! பைத்தியம், அழாதே! நீ வேறே யாரையாவது பாத்திட்டு உங்கப்பா--அம்மான்னு நைனைச்சிருப்பே'ன்னு என்னைத் தேத்தினார் இவர். 'இதோ இப்பவே டெல்லிக்கு போன் போட்டு பேசினாப் போச்சு'ன்னு இவர் சொன்னதினாலே, உங்களைக் கால் பண்ணினேன்; ஸாரிப்பா.." என்று மூச்சுவாங்க் அத்தனையையும் குழந்தை பாடம் ஒப்புவிக்கற மாதிரி சொல்லிக் கொண்டே வந்த தமயநதி முடிக்கும் பொழுது கேவினாள்.

"இதோ பார், தமா! எதுக்கு அழறே?.. நாங்க எல்லாரும் இங்கே செள்க்கியமா இருக்கறோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகலே.. ஓக்கே.. நீ ஃபோனை கிரிஜா கிட்டே கொடு.." என்று சிவராமன் மகளை ஆசுவாசப்படுத்தினார்.

கொஞ்ச நேரம் கழிச்சு, "மாமா.." என்று குரல் கேட்டது.

"கிரிஜா எப்படிம்மா இருக்கே?.. குழந்தை ரிஷி விளையாடிண்டிருக்கானா?"

"நாங்களெல்லாம் ந்னனா இருக்கோம், மாமா! நான் கூட பைனாக்குலர்லே பாக்கறச்சே நீங்கள்ளாம் அப்படியே தெரிஞ்சேள், மாமா! அப்பா கூட நீலக்கலர்லே சட்டை போட்டிருந்தார்" என்று கிரிஜா சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த ஹாலின் கோடியில் நீண்ட பெஞ்சில் அமரந்து மாலுவுடனும் ராம்பிரபுவுடனும் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பொழுது அவர் நீலக்கலர் சட்டை அணிந்திருந்தது சிவராமனை துணுக்குறச்செய்தது.

இருந்தாலும் தன்னை சரி பண்ணிக்கொண்டு, "நீயும் அதையேச் சொல்லி உங்கப்பாவைக் கலவரப்படுத்த வேண்டாம்.. என்ன, தெரிஞ்சதா? இதோ, உங்க அப்பா கிட்டே போனைக் கொடுக்கறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி, "கிருஷ்ணா..." என்று கூப்பிட்டார் சிவராமன்.

கிருஷ்ணமூர்த்தி அருகில் வந்ததும், "கிரிஜா பேசறா, பாரு!" என்று கிருஷ்ணமூர்த்தியிடம் போனைக் கொடுத்தார்.

(தேடல் தொடரும்)

Tuesday, December 8, 2009

ஆத்மாவைத் தேடி....19 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

19. பச்சையும் பழுப்பும்

ழுந்திருந்து நகர்ந்த கிருஷ்ணமூர்த்தி வாசல் கதவுக்கு போவதற்குள்ளேயே 'டொக், டொக்' கென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கதவு திறந்த கிருஷ்ணமூர்த்தி, வெளியே ராம்பிரபு நிற்பதைப் பார்த்ததும், முகம் மலர,"வா, ராம்பிரபு! உள்ளே வாயேன்" என்று நகர்ந்து ராம்பிரபு உள்ளே வருவதற்கு வழிவிடுகிற மாதிரி நின்றார்.

"பக்கத்து அறைக்கதவு பூட்டியிருந்ததும், இங்கே இருப்பாரோன்னு கதவு தட்டினேன் ... சிவராமன் சார் இருக்காரா, சார்?"

"இருக்காரே, என்ன விஷயம்?"

"அவருக்கு போன் கால் வந்திருக்கு சார்.. தமயந்தின்னு சொன்னாங்க.."

"ஓ--" என்று மாலு அதற்குள் கதவு பக்கம் வந்து விட்டாள். "வாங்க, ராம்பிரபு! தமயந்தி என் பொண்ணு தான்."

"அப்படியாம்மா.. வெளி ஹால் போனுக்கு கால் வந்திருக்கு; லைன்லே தான் இருக்காங்க.." என்று ராம்பிரபு சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே சிவராமனும் வெளிவந்து மாலுவைத் தொடர்ந்தார்.

படியிறங்கி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி ரிஸீவர் மல்லாக்க வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

ரிஸீவரை எடுத்து "ஹலோ--" என்றாள் மாலு. "நான் மாலு.."

"அம்மா.. தமயந்தி பேசறேன்."

"ஹாய்.. எப்படியிருக்கே, தமா?"

"நான் நன்னா இருக்கேன், அம்மா.. அப்பா எப்படியிருக்கார்?"

"ந்ன்னா இருக்கார்... என்ன விஷயம்?, இந்த ராத்திரிலே போன் பண்ணினே?"

"ராத்திரியா!.. ஓ, சாரி.. எங்களுக்கு காலம்பற இல்லையா?.. ரொம்ப நேரம் ஆயிடுத்தோ?.. இன்னும் படுத்திருக்க மாட்டேள்னு நெனைச்சேன்."

"இன்னும் படுக்கலே.. பேசிண்டு இருந்தோம்.."

"ஓ.. கிருஷ்ணா மாமா எப்படியிருக்கார்?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கார். அவர் மட்டுமில்லே.. வி ஆல் ஆர் வெரிமச் ஹேப்பி.. இங்கே வந்ததே எங்க லைப்லே ஒரு,.. தமிழ்லே ஒரு வார்த்தை சொல்லுவோமே, எஸ்.. ஒரு திருப்புமுனை மாதிரி இருக்கு."

"யூ மீன் turning point?.. ஓ.. லவ்லி.. இத்தனை வயசுக்கு அப்புறமும் ஒரு திருப்புமுனையா?" என்று சொல்லிவிட்டு, 'ஹஹஹஹ்ஹா.." என்று தமயந்தி சிரித்தாள்.

"ஆமாம், தமா! வாழ்க்கைங்கறதே உச்சத்துக்கும், கீழேயும் இறங்கி ஏறிண்டிருக்கற மலைப் பாதைன்னு ஆயிட்ட் பிறகு, திருப்புமுனைக்கு கேக்கவா வேணும்?'

" வேதாந்தமா, அம்மா?"

"வேதாந்தம், சித்தாந்தம்.. என்னவேணா வசதிக்கேத்த மாதிரி ஏதோ பேரிட்டிக்கலாம், தமா! மனசை மலர்த்தி வைச்சிண்டா எல்லாமே ஆனந்தமா இருக்கறது தான் அதிசயம்.."

"ஹை.. எங்க்ம்மான்னா எங்கம்மா தான்.. "

"எதுக்கு?"

"இப்படியெல்லாம் பேசறதுக்கு; கேக்கறவங்களையும் ஆகர்ஷிக்கறத்துக்கு."

"தாங்க்யூ.. ஏதாவது அவசர விஷயமா, தமா?"

"பாத்தியா.. உன்னோட பேசற ஜோர்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பதறி கவலைப் பட்டதே மறந்து போச்சுமா.."

"கவலையா?.. என்னடி சொல்றே?"

" ஒண்ணுமில்லேம்மா.. ஜஸ்ட் பேசணும்னு தோணித்து.. போன் போட்டேன்.. கொஞ்சம் அப்பாகிட்டே தாயேன்.."

"இந்தாங்க.. உங்க பொண்ணு பேசறா.." என்று ரிஸிவரை சிவராமனிடம் தந்தாள் மாலு.

"அப்பா.. எப்படிப்பா இருக்கீங்க?.. தமா பேசறேன்."

"நன்னா இருக்கேம்மா.. இங்கே வந்தது மனசுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கு.. வேறென்ன வேணும்?.. நீ எப்படியிருக்கே? மாப்பிள்ளை, குழந்தைகள் எல்லோரும் செளக்கியம் தானேம்மா?"

"எல்லாரும் செள்க்கியம்பா.. இப்போ எல்லாரும் வெயின்ஸ்வில்ங்கற இடத்துக்கு வந்திருக்கோம்பா.. இங்கே இப்போ ஃபால்ஸ் ஸீஸன் இல்லையா?.. செடி, கொடி, மரம் அத்தனையோட இலைகளும் பழுப்பாய்ப் போய் உதிர்ற இலையுதிர் காலம். அமெரிக்காலே இதை அனுபவிக்க வெளியே கிளம்பியாச்சு.. கூட்டம் கூட்டமா எத்தனை பேர், வரிசையா ரோடு கொள்ளாம எத்தனை கார் தெரியுமா?"

"சிலசமயங்கள்லே உங்க ரசனையே எனக்கு புரியலேம்மா.. பூத்துக் குலுங்க்றதை ரசிக்கறதை புரிஞ்சிக்க முடியறது.. இலைகள் உதிர்ந்து மொட்டையா எல்லாம் போகப்போறதை ரசிக்கிறதா?.."

"அப்படியில்லேப்பா.. பச்சைப் பசேல்னு இருந்த அத்தனையும் பழுப்பைப் பூசிண்டு ஒரே பழுப்புக் காடா மாறி நிக்கறது, எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?.. எல்லாம் வண்ண மாற்றம் தானே அப்பா?"

"இல்லே.. மனசுக்கு என்னவோ பச்சைனா அது அதன் செழுமையை, இளமையைக் குறிக்கறதாகவும், பழுப்புனா உதிர்ந்து போயிடற வயோதிகத்தைக் குறிக்கறதாகவும்.. மனுஷாளுக்கு கறுப்பு தாடி, வெள்ளையாயிடற மாதிரி.."

"......................."

"அதுசரி.. எப்போவுமே பச்சையா இருக்க முடியாது தான்; பழுப்பாறது இயல்புதான். நீ ஏத்துண்டாலும், ஏத்துக்கலையானாலும் அது காலத்தின் கட்டாயம். ஆனா, அதை ரசிக்கறது எப்படின்னு தான் தெரியலே."

"ஒருவிதத்தில் முதுமையின் அழகைக் கண்ணாறக் கண்டு களிக்கறதுன்னு வைச்சுக்கோயேன். அதை அலட்சியப்படுத்தாம, அது வாழ்ந்த வாழ்க்கைக்கு வணக்கம் சொல்றதுன்னு வைச்சுக்கோயேன்.. அப்படியே வரப்போற பச்சைக்கும் வாழ்த்துக்கூறல்.. 'ப்ழையன கழிந்து.. ' ஓ, ஸாரிப்பா.. நீ சொல்ற மாதிரி அடைந்த எதையும் இழக்க கஷ்டமாத்தான் இருக்கு."

"நான் அதுக்குச் சொல்லலே.. கண்ணதாசன் சொன்ன மாதிரியும் எடுத்துக்கணும் இல்லையா? 'வ்ந்தவரெல்லாம் தங்கி விட்டால்..?"

"வேறே பேசலாமே?.. நான் பயந்த மாதிரியே பேச்சுப் போறது.. ஓக்கே. லீவ் இட்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நாங்கெல்லாம் இங்கே உங்களைப் பாத்தோமே?.. நீ, அம்மா, கிருஷ்ணா மாமா, அப்புறம் ரொம்ப வயசான இன்னொருத்தர்--- நீங்க இப்போ டெல்லிலேந்து பேசறேள்; ஆனா, அரைமணி நேரத்துக்கு முன்னாடி, உங்க அத்தனை பேரையும் இங்கே நாங்க பாத்தோம்.. அச்சு அசாலா நீங்க எல்லாருமே தான்!.. ஆச்சரியமா இல்லை? நான் இப்போ உங்களைக் கூப்பிட்டதே, நீங்க டெல்லிலே தான் இருக்கேளான்னு நிச்சயப்படுத்திக் கொள்ளத்தான்."

"தமா.. நீ என்ன சொல்றே?" என்று சிவராமன் திகைத்தார்.


(தேடல் தொடரும்)

Wednesday, December 2, 2009

ஆத்மாவைத்தேடி....18 இரண்டாம் பாகம்

ஆன்மீகதின் அடுத்த கட்டத்தை நோக்கி....

18. தர்மம் தலை காக்கும்

சாயந்திர கோயில் தரிசனம் முடிந்து, சாப்பிட்டு அறைக்குத் திரும்பும் பொழுது ம்ணி எட்டுக்கு மேலாகிவிட்டது.

இன்று ஈஸ்வரன் கோயிலில் மாலுவின் பாட்டு அற்புதமாக இருந்தது.
பாபநாசம் சிவனின் "பராத் பரா பரமேஸ்வரா, பார்வதி பதே ஹரே பசுபதே.." கீர்த்தனையை வாசஸ்பதி ராகத்தில் மாலு பாடினாள்.. "புண்ணிய மூர்த்தி சுப்ரமணியன் தந்தையே.." என்று கடைசி வரியைப் பாடி, மீண்டும் பல்லவிக்குத் திரும்பும் பொழுதே, அதற்குள் பாட்டு முடிந்து விடுகிறதே என்கிற ஏமாற்றம் எல்லோர் முகங்களிலும் கவிந்து, இன்னும் பாடமாட்டார்களா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குள் மாலு அடுத்த பாட்டிற்கு தயாராகி, "நீ இரங்காயெனில் புகலேது அம்ப.." என்று அடாணா ராகத்தில் ஆரம்பித்த பொழுது எல்லோர் முகங்களிலும் பிரகாசம். "தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ, ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ.." என்கிற வரிகள் வரும் பொழுது அந்தப் பிரகாசம் பரவசமாக மாறியது.

சங்கீதத்திற்கு எந்த மொழியும் விலக்கல்ல; தடுத்து நிறுத்த வேலியும் அல்ல. அத்தனை பேரும் மெய்மறந்து கேட்டனர். கோயில் கண்டாமணி தீபாராதனை காட்ட ஒலித்த் பொழுது தான் நினைவுலகுக்கு வந்தனர். மனோகர்ஜி கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொள்ளக்கூட ஸ்மரணையற்று நின்றார்.

"சிவராம்ஜி! எங்கெங்கோ இருந்த நீங்களெல்லாம் ஒண்ணாச்சேர்ந்து இங்கே ஒரு லட்சியத்திற்காகக் கூடியிருப்பது, தெய்வ சங்கல்பம்
என்று தான் நினைக்கிறேன். எங்க அப்பா காலத்லே இப்படி ஒரு சதஸ் நடத்தணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். அவரோட அந்த ஆசை உங்க எல்லாருடைய ஒத்துழைப்பினாலும் இப்போ நிறைவேற ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்" என்றார் மனோகர்ஜி.

தீபாராதனைத் தட்டு அருகில் வருகையில், இவ்வளவு நல்ல மனம் படைத்த மனோகர்ஜியின் நல்வாழ்வுக்காக வேண்டிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் சிவராமன்.

அதை இப்பொழுது நினைத்துக் கொண்டு, மனோகர்ஜி கோயிலில் தன்னிடம் சொன்னதைச் சொன்னார் சிவராமன்."எத்தனை பேருக்கு இப்படிச் சொல்ல மனம் பக்குவப்பட்டிருக்கும்னு நினைக்றே?" என்றார் சிவராமன்.

"நானும அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன்" என்றாள் மாலு.

"அவர் அப்பாவைப் பத்தின நினைப்பு அவருக்கு அடிக்கடி வந்துடும். தந்தை ஆசைப்பட்டது அவர் காலத்லே முடியலே. மரணம் குறுக்கிட்டு அவர் பட்ட ஆசையைத் தட்டிப் பறிச்சிடுத்து. இப்போ தனயன், தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார்" என்றபடி கதவு திறந்தார் கிருஷ்ணமூர்த்தி.

"இப்படிப்பட்ட பிள்ளை ஒரு தந்தைக்கு கிடைக்கறது அபூர்வம் அல்லவா?'

"நிச்சயமா, மாலு! உலக ஷேமத்துக்காக அந்த ஆசைகள் இருந்தால் இன்னும் விசேஷம்."

"வாஸ்தவம் தான்," என்று கிருஷ்ணமூர்த்தி சொன்ன பொழுது அவர் குரலில் சிவராமன் சொன்னதை மனசாரப் புரிந்து கொண்ட திருப்தி இருந்தது. "மஹாதேவ்ஜியின் குடும்பத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்" என்று அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது, சுவாரஸ்யத்துடன் அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானாள் மாலு.

"அடிப்படையில் பரம்பரையாக இவர்கள் குடும்பம் வியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பம். மனோகர்ஜியின் தாத்தா மஹாதேவ்ஜி ஒருவிவசாயி. கடுமையான உழைப்பாளி. நிலத்தில் அவ்வப்போது சாகுபடி செய்வதில் சொந்த உபயோகத்திற்கு போக மிதமிஞ்சி இருப்பதை வண்டி கட்டி எடுத்துப் போய் வாரச்சந்தைகளில் விற்பாராம். யாருக்கு எந்த கஷ்டம் என்றாலும் ஓடிப் போய் உதவி செய்திருக்கிறார். சுற்று வட்டார மக்கள் அவரை வெகுப் பிரியமாக நேசித்திருக்கிறார்கள்.

"ஒரு நாள் அவர் நிலத்தில் கிணறு தோண்டுவதற்காக வெடிவைத்துப் பாறைகளைப் பிளக்கும் பொழுது பாறையோடு பாறையாக மழுமழுவென்று வேறொரு வஸ்துவும் பறந்து வந்தது. பதறிப் போய் பக்கத்தில் சென்று பார்க்கும் பொழுது அந்த வேறொரு வஸ்து, கல் விக்கிரகமாகப் புலப்பட்டது. அந்த சிவலிங்க் விக்கிரகம் தான், இந்த மஹாதேவ நிவாஸில் இருக்கும் சிவன் கோயில் மூலஸ்தான விக்கிரகம். மகாதேவ்ஜி காலத்திலேயே சிறு கோயில் மாதிரி எழுப்பி அதை ஸ்தாபிதம் பண்ணியிருக்கிறார்கள். அந்த சிறு கோயில் தான் தனித்தனி சந்நிதிகள், சுற்று மண்டபம் என்று இப்பொழுது பெரிய கோயிலாக எழும்பியிருக் கிறது. மஹாதேவ்ஜி காலத்திற்குப் பிறகு கோயிலைச் சுற்றிய பெருநில பாகத்தையே மாளிகையாக்கி, தாத்தாவின் நினைவாக அவர் பெயரையே மாளிகைக்கு சூட்டிவிட்டார் பேரன்!

" மஹாதேவ்ஜியின் மகன் குருதேவ்ஜி. அவர் காலத்தில் தானிய வியாபாரம் செய்திருக்கிறார். அவரது ஹோல்சேல் வியாபாரம். புராதன டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் அவரது தானியக்கிடங்கு இருந்திருக்கிறது. மனோகர்ஜிக்கு அவரது ஆறு வயதிலிருந்து தனது தந்தையைப் பற்றின ஞாபகம் இருக்கு. அவரைப் பற்றி நினைத்தாலே லாரிகள் நினைவுதான் முந்திக் கொண்டு அவருக்கு வருமாம். அப்படிக் கிடங்கின் முன்னால் லாரிகள் வரிசை கட்டி நின்றிருக்குமாம். தேசத்தின் பல பகுதிகளுக்கும் அவர் கிடங்கிலிருந்து ரயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் எல்லா வகையான தானியங்களையும் விநியோகித்திருக்கிறார். இலாபத்தில் பெரும்பகுதியை தர்ம காரியங்களுக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம். தர்ம் காரியம் என்றால், அவர் நோக்கில் பெரும்பாலும் தர்ம சத்திரங்கள் தான். ஹரித்வார், காசி, கயா என்று வடக்குப் பகுதிகள் என்று தான் இல்லை, ஹூப்ளி, புவனேஸ்வர், புனா, ஹாசன், உடுப்பி என்று தேசத்தின் பல பகுதிகளிலும் தர்ம சத்திரங்களைக் கட்டி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் திருத்தணியிலும், இராமேஸ்வரத்திலும் இவர் பெயரில் பெரிய சத்திரம் இருக்கிறது. இன்றைய தேதி வரை அத்தனையும் இலவசம் என்பது தான் விசேஷம்.இன்றும் மனோகர்ஜியின் புத்திரர்கள் தங்கள் வருமானத்திலிருந்து நிதி ஒதுக்கி இவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார்கள்.

"அடடா! கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்று வியந்தாள் மாலு.

"மனோகர்ஜி காலத்தில் தானிய வியாபாரம் முழுசாக மொத்த வியாபாரம் என்று இல்லாமல், ரிடெயில் மார்க்கெட் பக்கமும் கொஞ்சம் திரும்பியிருக்கு. தானியங்களைச் சுத்தம் செய்து சிறு பைகளில் அடைத்து தேசம் பூராவும் சப்ளை செய்திருக்கிறார்கள். இவரது 'மான் மார்க்' கோதுமை பைகள் பிரசித்தமானதாம். மனோகர்ஜியின் மகன்கள் காலத்தில் இப்பொழுதும் வியாபாரம் தான் என்றாலும் அது வெவவேறு விதமாக டைவர்ஸிஃவைடு ஆகிவிட்டது. ஒருநாள் என்னைக் காரில் அழைத்துச் சென்று தன் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அத்தனை பேரும் ரொம்ப நல்ல மாதிரி. தந்தை கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்."

"மனோகர்ஜியின் தந்தை குருதேவ்ஜிக்கு நண்பர் கிருஷ்ணமகராஜஜி. இருவரும் காசி சர்வ் கலா சாலையில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பிற்குப் பிறகு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ண மகராஜ்ஜியோ யோகம் பயில இமயமலை நாடினார். வியாபாரம் பிடிக்காமல் மனோகர்ஜியின் தாத்தாவும் கிருஷ்ண மகராஜ்ஜியைத் தேடி இமயம் சென்றார். இந்தக் கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்."

"கிருஷ்ணா! கேட்க கேட்க பிரமிப்பா இருக்கு.. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்றார் சிவராமன்.

"எல்லாம் மனோகர்ஜி சொன்னது தான்.. அதுவும் லேசில் சொல்லலே; ஏதாவது கேட்டால் பலசமயங்களில் லேசா சிரிச்சிண்டு பேச்சை மாத்திடுவார். அத்தனையும் துருவித் துருவிக் கேட்டு தெரிஞ்சிண்டது.. செஞ்சதை செஞ்சவுடனே மறந்திடுவார்.. இதெல்லாம் செய்யறதுக்குத் தான் பிறவி எடுத்திடுக்கிற மாதிரி, ஒரு போக்கு. தான் தான் இதைச் செய்கிறோம்ங்க்கற நினைப்பு கூட இல்லாத, அப்படி ஒரு ஆத்மா!" என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவர் அறை வெளிப்பக்கம் யாரோ நடமாடுகிற மாதிரி
சப்தம் கேட்டது.

"வெளியே ஏதோ சப்தம் கேட்டமாதிரி இல்லை?" என்று மாலு கேட்டாள்.

"இல்லை. உனக்கு பிரமையா இருக்கும்.." என்று சிவராமன் சொல்லிக் கொண்டே இருக்கையில், "எனக்கும் கேட்ட மாதிரி இருந்தது" என்று கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து கதவு பக்கம் நகர்ந்தார்.

(தேடல் தொடரும்)

Tuesday, November 24, 2009

ஆத்மாவைத்தேடி....17 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

17. பல்லுயிராய் நெடுவெளியாய் பரந்து நின்ற...

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு அவை மறுபடியும் கூடியது. கிடைத்த இந்த நேரத்தில், அத்தனைக் குழுக்களும் ஒன்று கூடி அமர்ந்து அடுத்தடுத்து வருபவனவற்றைப் பற்றி விவாதித்து வரிசைபடுத்திக் கொண்டனர். வரவிருக்கின்ற சதஸூக்கு முன்னான இந்த அமர்வுகளில், இனிக் கூடப்போகும் அமர்வுகளின் காலத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு இந்த வரிசைப்படுத்திக் கொள்ளல் அவசியமாக இருந்தது.

வேகமான விவரமான அலசலுக்குப் பின், மனம், அதைத் தொடர்ந்து ஆத்மா, பின் உபநிஷத்துக்களின் பார்வையில் மரணத்திற்கு பின்னான நிலைகள் என்று இவற்றைப் பற்றி விவரமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த முடிவாயிற்று.

அவரவர் மேற்கொள்ளும் தியானம் போன்ற சுயபயிற்சிகளால் மட்டுமே ஆத்மாவைத் தேடுதலான இந்த யக்ஞம் முழுமை பெறும் என்று மனோகர்ஜி அபிப்ராயப்பட்ட்தால் பேசுவதையும், விவாதிப்பதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்க பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. வரக்கூடிய நாட்களில் தினமும் மாலை வேளை அமர்வுகளை பயிற்சி வ்குப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானைக்கப் பட்டது.

இந்த பயிற்சி வ்குப்புகளில் அனுபவபூர்வமாக அறியக்கூடிய பலன்களையே (Results) ஆதாரமாகக் கொள்ள வேண்டுமெனறும், இப்படிப் பெறக்கூடிய பலன்களுக்கு ஏற்ப விவாதங்களில் பெறக்கூடிய முடிவுகளை தேவையானால் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

எல்லோரும் தமது இருக்கைகளில் அமர்ந்து விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேகநாதன் தனது உரையைத் தொடர்ந்தார். "முன்னால் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்," என்றவர் கிருஷ்ண மூர்த்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தி விட்டுத் தொடர்ந்தார். "வாழும் வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். எல்லாவற்றிலும் தானும் வாழ்ந்து கொண்டு என்பதை விட, எல்லாமும் தானே ஆகி என்கிற வார்த்தைத் தொடர் தான் சரியென்று நினைக்கிறேன். இறைவனின் படைப்பு என்பதே, எண்ணிக்கையில் அடக்க முடியாத இலக்கங்களாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டது தான் போலும். எல்லாவற்றிலும் நீக்கமற தன்னை நிறைத்துக் கொண்ட அவனின் செயலே, அவன் படைப்பாகிப் போனது. அவன் படைப்பிலிருந்து படைப்புக் கூறுகளாய் வெவ்வேறாய் அவனே ஜென்மமெடுத்தது தான் அதிசயம்.

"ஒன்றே பலவாகி பல்கிப் பெருகிய பேரதிசயத்தில், ஒன்றுக்கொன்று முரண்படுகிறதாகவும், அணுகுகிறதாகவும், நெருங்கி நேசிப்பதாகவும், விலகுவதாகவும்---வெவ்வேறான உணர்வுகளைப் படைத்து உலவவிட்டது தான் படைப்பின் பேரதிசயம். ஆழ்ந்து யோசித்தால், உயிர் வாழ்தலுக்கு இதுவே ஒரு விஞ்ஞானத் தேவையாகும்.

பலத்த அமைதியில் மேகநாதனின் குரல் எடுப்பாகத் தெரிந்தது. "ஆணும் பெண்ணும் அவனே ஆயினும் இவையே இருவேறு சக்தியாய் இணைந்து, இன்னொன்றாய் வெளிப்பட்டது இன்னொரு அதிசயம்! இன்னொன்று அவனே ஆன இன்னொன்றுடன் கூடி வேறொன்றாய் வெளிப்பட்டது போல வெளிக்குக் காட்டிக்கொண்டு, அந்த இன்னொன்றிலும் அவனே வெளிப்பட்டது தான் சூட்சுமாய் போயிற்று! அந்த இன்ன்னொன்று இவனே ஆன இன்னொன்றுடன் இணைந்து வெளிக்கு வேறொன்றாய்க் காட்டிக்கொண்டு.... இதுவே படைப்பின் பெருக்கத்திற்கு அறிவியல் ஆயிற்று.

அவையின் உன்னிப்பான கவனிப்பில் மேகநாதன் தொடர்ந்தார்:
"ஆறறிவு மனிதனில் என்று மட்டுமல்ல, ஊர்வன-பறப்பன்-நீந்துவன-உலாவுவன- செடி, கொடி, பாசி, பச்சைப் பசேல் என்று---எதையும் விட்டு வைக்கவில்லை, இந்த ஒன்று பலபடல். விதவிதமாய் வெளிக்கு வெளிப்படுதலே அவன் திருவிளையாடலாய் ஆயிற்று.

"எல்லாம் அவன் ஆட்டமாய் போய் விட்டதில், இது இன்னதுக்காக என்று புரிபடாமலே போயிற்று. ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் விளைவாய் ஒரு நோக்கம் இருந்தது தான் ஆச்சரியம்; கடைசியில் இந்த நோக்கங்களே வாழ்க்கையின் வண்ணப்பூச்சுகளாயிற்று.
வினைகளே விளைவுகளுக்கான, அவை கொடுக்கும் பலன்களுக்கான கேந்திரம் ஆயிற்று. இதுவும் அடிப்படையிலேயே ஒரு விஞ்ஞான உண்மைதான்.

"அவனே தானாகிப் போனதால், 'தானு'க்கு தன்னையே புரிந்து கொள்வது தான் இறுதி இலட்சியமாயிற்று. தன்னைப் புரிந்து கொள்ளலே, அவனைப் புரிந்து கொள்ளல் என்று வேதாந்தம் வியாக்கியானம் சொல்லிற்று.

மேகநாதனின் பார்வை அவையின் நட்டநடுவில் நிலைக்குத்தியது. "தோழியர் பூங்குழலி, நிவேதிதா குழுவினர் இதுபற்றி நிறைய குறிப்புகளைக் கொடுத்து அலசியிருக்கிறார்கள். எனது மனவியல் துறையினரும் அவர்களும் இந்தத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் ஒன்று சேர்ந்து உபநிஷத்துகள் காட்டும் வெளிச்சத்தில் இனி வரும் அமர்வுகளில் இவற்றைப் பார்ப்போம்.

"இன்று மாலை தனித்தனிக் குழுக்களாக ஒன்று கூடி எடுத்த முடிவுகளின் படி, இனி மாலை வகுப்புகள் தியானப் பயிற்சி வகுப்புகளாக அமையும். அதற்குப் பின் சிறிய இடைவேளைக்குப் பின்னான சிவன் கோயில் பின் மாலை தரிசனத்திற்கும் வசதியாக இது அமையும்" என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் சார்பாக அறிவித்துக் கொள்கிறேன்" என்று மேகநாதன் தனது உரையை முடித்துக் கொண்டார்.

மகிழ்ச்சி கலந்த கலகலப்புடன் அவை கலைந்தது.

(தேடல் தொடரும்)

Thursday, November 19, 2009

ஆத்மாவைத்தேடி....16 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

16. அலைகள் நான்கு

முந்தைய அமர்வின் தொடர்ச்சி உணவு இடைவெளிக்குப் பிறகு உற்சாகத்துடன்தொடர்ந்தது. பேராசிரியர் மேகநாதனின் உரையைத் தொடர்ந்து கேட்கும் ஆவலில், உணவு நேரம் முடிந்த் உடனேயே அவை நிரம்பிவிட்டது.

மேடையில் மேகநாதனும் ஆஜர். கிருஷ்ணமூர்த்தி மேடைக்கு வந்து தொடர்ச்சியை நினைவுறுகிற மாதிரி ஒரு சிற்றுரை ஆற்றினார்.

அவர் முடித்ததும் மேகநாதன் மைக்கைப் பற்றினார்: "மனிதனின் சுவாசத்திற்கும் அவனது எண்ண வேகத்திற்கும் சம்பந்தமிருக்கிறது என்று பார்த்தோம், அல்லவா?.. இப்பொழுது சுவாசத்தை சீராக்கி மனதை எப்படி அமைதிபடுத்தலாம் என்று பார்ப்போம்" என்று அவர் ஆரம்பிக்கும் பொழுதே சபையின் சுவாரஸ்யத்தைக் கவர்ந்து விட்டார்.

"மனித மூளையை ஆராய்ந்த உடற்கூறு இயல் அறிஞர்கள், உயிர்ப்புடன் இருக்கும் மனித மூளை வெளிப்படுத்தும் வீச்சைப் போன்ற அலைகளை (waves) கண்டு திகைத்துப் போனார்கள். அது பற்றி மேலும் ஆராய்ந்த பொழுது, மனித மனம் அந்தந்த நேரங்களில் இருக்கும் உணர்வு நிலைகளுக்கு ஏற்ப இந்த் அலைகளின் வீச்சுத் தன்மையும் இருப்பது தெரிய வ்ந்ததும், அதுவே மூளை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது,. மனவியல் துறையையும் பல மேம்பட்ட நிலைகளுக்கு எடுத்துச் செல்ல இந்தக் கண்டுபிடிப்பு பெரும் பங்காற்றியது. ரொம்பவுமே தான் யோசித்து அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த அலைகளுக்கு பெயரிட்டார்கள். அவர்களின் பெயர்த்தேர்வு, அவர்களின் கண்டுபிடிப்பைப் போலவே அருமையாக அமைந்து விட்டது.

"கோபத்திலும், பரபரப்பு டென்ஷனிலும் மனிதன் இருக்கும் பொழுது மூளைக்கு அதிகப் படியான ரத்தசப்ளை தேவைப்படும். இந்த நேரத்தில் மூளை வெளிப்படுத்தும் அலைவீச்சுக்கு பீட்டா (BETA) என்று பெயரிட்டனர். சிறிய சுற்றுகளாக அதே நேரத்தில் வேகத்துடன் வெளிப்பட்ட இந்த அலைவரிசை நிமிடத்திற்கு பன்னிரண்டு சுற்றுகளுக்கு மேலிருப்பது தெரியவந்தது.

"அடுத்து இதற்கு நேர்மாறான ஒரு நிலை. விழிப்பிலிருக்கும் மனிதன் அமைதியாக நிச்சலனமற்று இருக்கையில் எட்டிலிருந்து பதிமூன்று சைக்கிள் வேகத்தில் பெரியதாகவும், மெதுவாகவும் வெளிப்பட்ட அலைவரிசைக்கு ஆல்ஃபா (ALPHA) என்று பெயரிட்டனர்.

"அதற்கடுத்து வெளியுலகத் தொடர்புகள் அற்ற தூக்கநிலை. இந்த நேரத்தில் குறைந்த வேகத்தில் நான்கு முதல் ஏழு வரையிலான சைக்கிள் வேகத்தில் வெளிப்படுத்திய அலைகளுக்கு தீட்டா (THETA) என்று பெயரிட்டனர்.

"அதற்கும் அடுத்து மிகமிக அமைதியான மோனநிலையில்,வெளியுலக நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு அடி ஆழ தியானத்தில் இருப்பது போன்ற ஒரு நிலையில் வினாடிக்கு நான்கு சைக்கிளுக்கும் குறைவாக வெளிப்பட்ட அலைவரிசைக்கு டெல்டா (DELTA) என்று பெயரிட்டனர்.

"பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா.. எப்படிப் பெயர்த் தேர்வு?.. வெறும் பெயர் வைத்ததோடு வேலை முடியவில்லை. அதற்கு அடுத்த நிலையான கண்டுபிடிப்பு தான் முக்கியமானது" என்று சொல்லிவிட்டு, கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி, அவையை சுற்றிப் பார்த்தார்.

"பீட்டா நிலையில் எதையும் சரியாகச் செய்வதற்கோ, யோசிக்கவோ தகுதியற்று மனிதன் தத்தளிக்கிறான். உடல் ஆரோக்கியத்திற்கு இந்த நிலை ஏற்றதல்ல. இயல்பான நிலையில் ஒரு நிமிடத்திற்கு பதினாறிலிருந்து --பதினெட்டு முறை சுவாசிப்பதாகக் கொண்டால், ஒரு முறை சுவாசிப்பதற்கு நம் இதயம் நான்கு முறை துடிக்கிறது என்கிற கணக்கில் இயல்பான நிலையில் அப்பொழுது ஒரு நிமிடத்திற்கு அறுபத்து நான்கு முறை துடிப்பதாகக் கொள்ளலாம். இதுவே, மனம் படபடப்பான நிலையில் அவசர கதியிலான சுவாசம் அதிகரித்து அதே விகிதத்தில் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். ஆக, எல்லாவிதத்திலும் பீட்டா நிலை ஏற்புடையது அல்ல.

"இதுவா, அதுவா என்கிற குழப்பமான சூழ்நிலைகளில், யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தெரிகையில், யோசனைக்குத் தயாராகும் பொழுது ஆல்ஃபா நிலை ஏற்றது. வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட தியான நிலை அடைவதால் ஆழ்மனம் விழிப்புற்று சிந்தனை ஒருமுகப்படுத்தப் பட்ட நல்ல முடிவுகளை எடுக்கலாம். ஆனால் இயல்பான சாதாரண நிலையிலோ, பீட்டாவும் இல்லாமல் ஆல்ஃபாவும் இல்லாமல் இதற்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.

"அடித்துப் போட்டாற் போல் கனவற்ற தூக்க நேரங்களில் தீட்டா நிலை என்றால், யோகங்களால் சாத்தியப்படுகிற ஆழ்நிலை தியான சமயங்களில் டெல்டா நிலையும் இருக்கும்.

"உடற்கூறு சாத்திரம் ஓரளவுடன் நிறுத்திக் கொண்டதை மனவியல் சாத்திரம் நீட்டிக்கிறது. மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும், வழிநடத்துதலும் நம் கையில் இருப்பதால் வேலை சுலபமாயிற்று. பூட்டிய அறைக் கதவின் சாவி நம் கையில் கிடைத்த மாதிரி. வேண்டிய அலைகளுக்கேற்ப மன உணர்வுகளை வைத்துக் கொள்ளலாம் அல்லவா? இதனால் உடல் சம்பந்தப்பட்ட பல அறுவை சிகித்சைகளையும் தவிர்க்க முடியும் என்கிற ஞானம், மனவியல் கல்வியை மேலும் செழுமை படுத்த வேண்டும் என்கிற வாசல் கதவைத் திறந்து விட்டது.

"இந்த தேசத்து வேதகால ரிஷிகள் காட்டிய வழித்தடங்களை அறிந்து கொள்ள பிரயத்தனப்பட்ட போது, அவர்கள் இதையெல்லாம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்கிற முன் தகவல்களைத் திரட்டும் ஆர்வம் அதிகரித்தது.

(தேடல் தொடரும்)


Tuesday, November 10, 2009

ஆத்மாவைத்தேடி....15 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. எண்ணமும் அதன் விரிவும்.

"இப்பொழுது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்," என்று மேலும் பேசுவதற்கு விஸ்தாரமான தளத்தை அமைத்துக் கொண்ட மேகநாதன் தொடர்ந்தார்."சிக்கலாகி யிருக்கும் நூல்கண்டு போலத் தோற்றமளிப்பதை, நுனி என்று கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்திலிருந்து இழுத்துப் பார்க்கலாம். இப்பொழுது நம் கண்ணுக்கு தென்படும் ஒரு நுனி, 'எண்ணங்கள்" என்று தெரிவதால், இந்த எண்ண்ங்கள் என்றால் என்ன என்று யோசிப்போம்.

" மூளையின் செல்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்களே எண்ணங்கள் என்று சயின்ஸ் சொல்கிறது.. வழக்கிலோ, ஒரு விஷயத்தைப் பற்றிய தொடர்பான சிந்தனைகளை எண்ணங்கள் என்று சொல்கிறோம். இப்படிப்பார்த்தால், ஒன்று தெரிகிறது. ஒன்றின் தொடர்பான சிந்தனை விரிய விரிய எண்ணங்களின் நீட்சியும் அதிகரிப்பது தெரிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய நீட்சியை அதிகரிக்க அதுபற்றிய விவரங்களாகிய அறிவு தேவைப்படுகிறது. அது பற்றிய அறிவு அதிகமில்லாமலிருந்தால் எண்ண விரிவின் ஒரு ஸ்டேஜில் அது அறுந்து விடும். அப்படி அறுந்த இடத்தையே, அந்த விஷயத்தின் முடிவாகக் கொள்ளும். அந்த ஸ்டெஜூக்கு மேலும் அதுபற்றிச் சிந்திக்க முடிந்தவர், முந்தையவரை விட அந்த விஷயததில் அதிக அறிவு கொண்டிருப்பார். ஆக, ஒரு விஷயத்தில் ஒருவர் கொள்ளும் முடிவு என்பது, அவரைப் பொருத்தமட்டில், அவரவர் அதுபற்றிக் கொண்டிருக்கும் அறிவு பற்றியதாகிப்போகிறது... எப்பொழுது அது அறிவு பற்றியதாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுதே அதற்கு எல்லை--இதுதான் முடிவு-- என்ற ஒன்றில்லாமல் ஆகிவிடுகிறது.

மேகநாதன் முழு உற்சாகத்தோடு தான் சொல்ல நினைப்பதை விளக்க ஆரம்பித்தார். "நம்து உயர்நிலை வகுப்புகளில் கணக்குப் பாடத்தில் நேர்விகிதம், தலைகீழ்விகிதம் என்ற வகை கணக்குக்களைப் போட்டிருப்போம். உதாரணமாக, ஒரு வேலையை முடிக்க ஆகும் நாட்களும், அந்த வேலையைச் செய்ய அமர்த்தப்படும் ஆட்களும் தலைகீழ் விகிதமாகும். அதாவது வேலையைச் செய்யும் ஆட்களின் எண்ணிக்கைக் கூடினால், அந்தக் குறிப்பிட்ட
வேலையை முடிக்கக் கூடிய காலம் குறையும். ஆட்களின் எண்ணிக்கை குறைந்தால், அந்த வேலையை முடிக்கக்கூடிய காலம் அதிகமாகும். அதுபோல், ஒரு மோட்டார் வண்டி செல்லும் வேகத்திற்கு ஏற்ப, அது கடக்கும் தூரம் அமையும். வேகமாகச் சென்றால், ஒரு குறிப்பிட்ட காலஅளவில் அதிக தூரம் கடக்கும்; வேகம் குறைந்தால், அதே கால அளவுக்கு கடக்கும் தூரம் குறையும். ஆக வேகமும், தூரமும் நேர்விகிதமாகும்.

"இந்த மாதிரி ஒரு நேர்விகிதச் செயலாய் மனிதன் பரபரப்பாய் இருக்கும் சூழல்களில், சுவாசத்தின் வேகம் அதிகரித்து, எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். அதனால் ஒரு முடிவுக்கு வரமுடியாத ஒரு குழப்ப நிலையே நீடிக்கும். இந்த நேரங்களில் மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கினால் எண்ண வேகத்தை மட்டுப்படுத்தி ஒருமுகப் படுத்தலாம் என்று தெரிகிறது. அடுத்த கேள்வி, 'எதற்காக எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்' என்பது. இதற்கு ஒரே பதில் குழப்ப நிலையில் தறிகெட்டுத் திரியும் எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்துதல் மூலம் மனத்தை பரபரப்பிலிருந்து விடுவித்து அமைதி அடையச் செய்து தீர்மானமாகச் செயல்படலாம் என்பதே. புற நோக்கியான கண்களை மூடிக் கொண்டாலும், பல சமயங்க்களில் எண்ண ஓட்டத்தை அறவே கட்டுப்படுத்த முடியாதாகையால், மனத்தை அமைதிபடுத்துதல் மூலம் சுவாசத்தின் வேகத்தை சீராக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. மன்ம் அமைதி நிலையில் பரபரப்பில்லாமல் இருக்கையில், கண்கள் எதிலாவது நிலைக்குத்தி இருந்தாலும் பரவாயில்லை. அமைதியான நிலையில் மனத்தை வைத்துக் கொண்டு, எண்ணத்தை எது குறித்து நீங்கள் யோசிக்கிறீர்களோ, அதில் குவிமையப் படுத்த வேண்டும் என்பதே முக்கியம்.

"முடிவா என்னதான் சொல்றீங்க?"

"ம். யோசிக்கணும்."

"நானும் எத்தனை தடவை கேட்டுட்டேன்.. இன்னும் நீங்க சொல்லப்போறீங்க.."

"அதான் யோசிக்கணும்னு சொல்றேன்லே."

"அப்போ யோசிச்சுச் சொல்லலாம்லே."

"சொல்லலாம் தான்.. ஆனா, நீ எங்கே என்னை யோசிக்க விட்டே?"

"நான் என்ன செஞ்ச்சேன்?.. உங்களை யோசிக்க வேண்டாம்னு தடுத்தேனா?"

"தடுக்கலே.. ஆனா இப்படி 'என்ன சொல்றே ;என்ன சொல்றே'ன்னு பிடுங்கி எடுத்தா நா எப்படி யோசிக்க முடியும்?"

"நா கேக்கறது பிடுங்கலாப் படறதா?"

"படறதோ இல்லையோ, நிம்மதி இல்லாமப் பண்றது. ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள். இதுக்கு நடுவே சட்டுனு பதில் சொல்ல முடியறதா.. அதுவும், இது வாழ்க்கைப் பிரச்சனை. சுமதியோட எதிர்கால வாழ்வே இப்போ நாம எடுக்கற முடிவுலேதான் இருக்கு. கொஞ்சம் என்னைத் தனிமைலே விடறியா?.. சாதக பாதகங்களை யோசிச்சு, சாயந்தரத்துக்குள்ளே சொல்றேன்."

"---பெண்ணுக்கு வரன் தேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியருக்குள் நடந்த உரையாடல் இது. அமைதியாக யோசித்தால் ஆழ்ந்து யோசிக்கலாம் என்பது பெற்றவரின் எண்ணம்.

மேகநாதன் குரல், அவையில் அமர்ந்திருப்போரின் நிசப்தத்தில் எடுப்பாகக் கேட்டது. "ஆக, பலசமயங்களில் ஆழ்ந்து யோசிக்க, புறத்தொந்திரவுகள் இல்லாத ஒரு அமைதியான தனிமை தேவைப்படுகிறது என்று தெரிகிறது. இப்பொழுது சயின்ஸ்க்கு வருவோம்.

"மனித மூளையின் வலது பக்கமும் இடது பக்கமும் தனித்தனி செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

"இடது பக்கம், பார்த்தல், கேட்டல், உணர்வுகளை உணர்ச்சிகளாய் உணர்தல் என்று இப்படிப் பார்த்த, கேட்ட, உணர்ந்த செய்திகளைத் தொகுத்தல், தொகுத்தவ்ற்றை எண்ணங்களாக உருவாக்கிக் கொள்ளல் போன்ற செயல்பாடுகளின் நிலைக்களனாகத் திகழ்கிறது. உருக்கொண்ட எண்ணங்களை வலது பக்கத்திற்கு அனுப்புகிறது.

"இடது பக்கத்திலிருந்து பெற்ற முழுமையான எண்ணத்திரள்களைப் பதிவு செய்து கொள்கிற ஆற்றல் பெற்று அதுவே வலதுபக்க மூளையின் வேலையாகிப் போகிறது. இடதுபக்கத்திற்கு தேவைப்படும் பொழுதெல்லாம் அதற்குத் தேவையான தகவல்களை தான் பெற்ற சேமிப்புக் கிடங்கிலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கும் சிறப்பினையும் அது பெற்றிருக்கிறது. தகவல் கிடைக்கப் பெற்றதும், 'ஆ, ஞாபகம் வருதே' நிலை இதுதான்.

"இப்படிப்பட்ட ஒரு ஞாபகம் தான் ஆர்கிமிடிஸூக்கு குளிக்கும் பொழுது தண்ணீர்த் தொட்டியில் வந்தது.. வந்த அந்த ஞாபகம் தான், விஞ்ஞானத்தில் மிதப்புத் திறன் விதியாகிப் போனது.

(தேடல் தொடரும்)

Wednesday, November 4, 2009

ஆத்மாவைத் தேடி....14 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

14. யோசிப்பதற்கு முன்

மேகநாதனின் தொடர்ந்த உரைகள் எல்லோரிடமும் மிகுந்த ஆவலையும், ஈடுபாட்டினையும் ஏற்படுத்தியிருந்தது. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற சந்தேகங்களை தனித்தனியான வினாக்களாக எழுப்பினால், ஒரு முழுமையானத் தெளிவை அடைய முடியாதென்று அவர்கள் உணர்ந்ததினால், கலந்து பேசி அதற்கான ஒரு வழியைக் கண்டார்கள். முதலில் தனித்தனிக் குழுக்காளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஏற்படும் சந்தேகங்களை தங்களுக்குள்ளேயே பேசி, விடைகாண முடியாத வினாக்களை ஒருமுகப்படுத்திக் கொண்டனர்.

தேர்ந்தெடுத்த வினாக்களாக அவற்றை உருவாக்கிக் கொண்டு எல்லாக் குழுக்களும் ஒன்று கூடி தெளிவடைய முடியுமா என்று பார்த்தனர். இப்படிப்பட்ட கலந்துரையாடலில் பல வினாக்கள் அடிபட்டுப் போயின. அதற்குப் பின்னும் விடைதெரியாமல் எஞ்சியவற்றை முறைப்படுத்தி வ்ரிசைப்படுத்திக் கொண்டனர். இந்த வினாக்களை மட்டும் கூடப்போகும் அவையில் வைத்தால், அடுத்த கட்டத்திற்குப் போக எளிமையாக இருக்கும் என்கிற தீர்மானத்துடன் அவைக்கு வந்தனர்.

இவர்கள் அவையில் கூடுமுன்பே மேகநாதன் அவையில் மேடையில் தயாராக இருந்தார். கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் அமர்ந்ததும் ஒரு அசாத்திய அமைதி நிலவியது.

முதல் கேள்வி சிற்பககலை வல்லுநர் சித்திரசேனனிடமிருந்து வந்தது. அவர் அவைக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு கேட்டார்: "ஐயா, மனம் என்பது ஒரு தொடர்புச் சாதனம் என்று சொன்னீர்கள். வெளிப்பிரபஞ்சத்து சக்தியை உள்வாங்கி, உள்காந்த சக்தியோடு கலக்க, மனம் ஒரு தொடர்புச் சாதனமாக செயலாற்றுவதாகப் புரிந்து கொண்டேன். இந்த உள்வாங்கலில் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை மேலும் விளக்க வேண்டும்" என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.

"ரொம்ப சரி" என்று மேகநாதன் முறுவலித்தார். "அது பற்றி விவரமாகச் சொல்லவில்லை என்பதை உணர்கிறேன். இனி மேற்கொண்டு தொடரவிருக்கும் செய்திகளை இந்தக் கேள்வி--பதில் முறையிலேயே கொஞ்சமே நீட்டி விவாதித்தாலும் மற்ற செய்திகளையும் திரட்ட அதுவும் துணையாகிப் போகும்" என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார். "மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத சில சமாச்சாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக இதயமோ, நுரையீரலோ, சுவாசமோ மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை. ஓ.கே.?.. இந்த விஷயங்களை மட்டும் பிரித்தெடுத்துத் தனியே வைத்துக் கொள்வோம். இவை செயல்படுவதற்கும் எதுவோ காரணமாக இருக்க வேண்டும், அல்லவா?.. அது என்னவென்றும் பார்ப்போம்.

"மூளையை முன்மூளை, சிறுமூளை, முகுளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருப்பது போலவே, மனத்தையும் நினைவு மனம், ஆழ்மனம், அதீத மனம் என்று மூன்று கூறுகளாகப் பிரித்திருக்கிறார்கள். உங்கள் சிந்தனையில் நியாயமான ஒரு சந்தேகம் வரலாம். 'மனது' என்கிற ஒன்றே ஸ்தூலமாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கண்ணுக்குத் தெரியாத போது, அதை எப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று. உங்களது இந்த சிந்தனை நியாயமானதே. எஸ்... இந்தப் பிரிப்பெல்லாம், சில செயல்பாடுகளை யோசித்துப் பார்ப்பதற்கான, நமது வசதிக்காக ஏற்படுத்திக் கொள்ளும் சில ஏற்பாடுகளே. மூள்ளைக்கும், மனத்திற்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த மனம் என்ன, அதன் செய்ல்பாடு என்ன, அது செயல்படுதல் எப்படி என்பதையெல்லாம் அலசிப் பார்ப்பதற்கு, மூளையின் செயல்பாடாகிய யோசித்தல் அவசியம் இல்லையா?.. அதைத்தான் சொல்ல வந்தேன்.

"அடுத்து இந்த யோசித்தலுக்கு இன்னொன்றும் அவசியம். அது நாம் யோசிக்கும் விஷயம் பற்றி நாம் கொண்டிருக்கும் அறிவு; knowledge. நாம் சிந்திக்கும் எந்த விஷயம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், நாம் அந்த விஷயம் பற்றி சிந்திக்க முடியாது என்பது ஒரு அடிப்படை உண்மை. இன்னொன்று. ஒரு விஷயம் பற்றி குறைந்தபட்ச அறிவு ஏற்பட்ட பிறகே, அதுபற்றி மேலும் 'டெவலப்' செய்கிற மாதிரி, சிந்திக்க வேண்டும் என்கிற அவாவே நம்மிடம் ஏற்படுகிறது என்பதும் இன்னொரு உண்மை.

மேகநாதனின் பேச்சில் ஒரு தீஸிஸை விளக்குகிற அக்கறையும் ஆர்வமும் இருந்தது."ஆக, எதுபற்றியும் யோசிக்க அதுபற்றி குறைந்தபட்ச அறிவு வேண்டும். இந்த அறிவை புறத்தில் ந்டக்கும் நமது செயல்பாடுகளில் பெற்றுக்கொள்கிறோம். அதாவது படித்தல், கேட்டல், பார்த்தல் என்று நமக்கு ஏற்பட்டிருக்கின்ற வசதிகளினால். அதாவது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற தகவல்களைக் கொண்டு, அவற்றையே அடிப்படைகளாக வைத்துக் கொண்டு யோசிக்கிறோம்.

மேகநாதன் கைகளைப் பரக்க விரித்தார். "இதில் தான் விஷயம் இருக்கிறது. வழங்கப்பட்டத் தகவல்களின் மேல் நம்பிக்கை கொண்டு அல்லது அவற்றையே அடிப்படையாகக்கொண்டு பேசுவது , கிளிப்பிள்ளை பேசுகிற மாதிரி. பெற்ற தகவல்களின் தொடர்ச்சி; அவ்வளவுதான். இதில் புதுசாக ஒன்றும் இருக்காது. ஏனெனில் இது எங்காவது படித்து, கேட்டு, பார்த்துத் தெரிந்துகொண்டது தான். வேண்டுமானால், இந்தத் தகவலைக் கேட்காமல், படிக்காமல், பார்க்காமல், தெரிந்து கோளாமல் இருப்போருக்கு புதுசாக இருக்கலாம்.

ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்தது. இனி சொல்லப்போகிற விஷயங்களுக்கு முன்னோட்டம் தான்.." என்று சுவாரஸ்யத்துடன் தொடர்ந்தார் மேகநாதன்.

(தேடல் தொடரும்)

Friday, October 30, 2009

ஆத்மாவைத் தேடி....13 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

13. உத்தமனைக் காண வாரீர்!

மேகநாதன் மேலும் தொடர்ந்தார்: "பிரபஞ்ச காந்த வெளியில் வேண்டிய மட்டும் விதவிதமான சக்திகள் வாரியிறைந்து கிடக்கின்றன. இவை நமக்கு கிடைத்தற்கரிய செல்வம். இவற்றை தகுந்த முறையில் சகல உயிர்களின் மேன்மைக்கும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டிய கடப்பாடு நம் கையில் தான் இருககிறது.

"நான் சொல்லக்கூடியவை ஏதோ கற்பனைக் கதை போலத் தோற்றமளிக்கிறதோ என்கிற அச்சம் எனக்குண்டு. கொஞ்சமே நடைமுறைப் படுத்திப் பார்த்தால் அத்தனையும் நிதர்சன உண்மைகள் என்று உங்க்களுக்குப் புரியும். இதுவரை கண்டறிந்துள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அத்தனையும் இதுவரை இல்லாத ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக நமக்கு பிரமை உண்டு. மின்சாரத்திலிருந்து ஒவ்வொன்றாக நீங்கள் நினைத்துப் பார்த்தால், அத்தனையும் இயற்கையின் மடியில் ஏற்கனவே இருந்த செல்வங்கள் என்று புரியும். மழையில் இருந்து மந்தமாருதம் வரை இயற்கையில் ஏற்கனவே பொதிந்துள்ளகொடைகள் " என்று சொல்லி விட்டு மேலும் தொடர்வதற்கு முன் கையிலிருந்த காகிதக் கற்றைகளை பக்கம் வாரியாகச் சரிப்படுத்திக் கொண்டார் மேகநாதன்.

"இன்னொன்று. கண்டுபிடிப்புகள் அத்தனையும் மனிதனின் சுகபோக வாழ்க்கைக்காக என்கிற தவறான கருத்தும் பரவலாக ஏற்பட்டு விட்டது. சுகத்திற்காக என்ற எண்ணத்தினால் தான்
அத்தனையையும் காசாக்கி விட்டோம். இது என்றால் இவ்வளவு செலவு என்று தான் யோசிக்கிறோம். 'ஸ்விட்சைத் தட்டினால் வெளிச்சம்' என்கிற சாத்தியத்திற்கு தாமஸ் ஆல்வா எடிசன் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்கிற உணர்வு இல்லாது போய்விட்டது.
அந்த இல்லாத உணர்வே இயற்கையை இன்னும் புரிந்து கொள்ள முடியாத உணர்விற்கு ஆட்படுத்தியிருக்கிறது. இன்றைய அவசரத்தேவை, இயற்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். அதன் செல்வத்தை கப்ளீகரம் பண்ணாமல் அத்தனை உயிர்களும் தங்கள் தேவைக்கு அமைதியாக அனுபவிக்க வேண்டியது. வெட்ட வெட்ட தங்கம் என்கிற மாதிரி, அழித்து விடாத அமைதியான அனுபவிப்பால், இன்னும் இன்னும் இயற்கை நமக்கு
வாரிவழங்கக் காத்திருக்கிறது.

"எங்கும் எதிலும் இறைவனைக் காண்பதே விஞ்ஞானம் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். விறகில் நெருப்பு உள்ளது என்று அறிந்துகொண்ட அறிவு தான் ஞானம். அந்த நெருப்பை உபயோகப் படுத்திக் கொண்டு வளம் பெறுவது விஞ்ஞா னம். இறைவன் இருக்கிறார் என்பதை உணர்வது ஞானம். அவருடன் பேசுவது, கலந்து ஆனந்தம் பெறுவது விஞ ஞானம். இறைவனே பிரபஞ்சமாகவும், உயிர்களாகவும் திகழ்கிறார் என்பதைத் தரிசிப்பது விஞ்ஞான்ம் என்பார் பரமஹம்சர்" என்று சொன்ன போது மேகநாதனின் குரல் தழுதழுத்தது.

தொடர்ந்து பேசுகையில் அவர் குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. "முதலில் இயற்கையில் இறைவனைக் கண்டு, பின் இயற்கையின் எச்சமாகிய தன்னில் இறைவனைக் காணுதல ஒரு யோகமாகும்.

உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில்
உத்தமனைக் காண்" என்பது ஒளவையார் சொன்னது.

"---இதனால் எனக்கு என்ன பயன்?" என்று ஒரு செயலைச் செய்வதற்கு முன் ஒவ்வொன்றிற்கும் அத்னால் எனக்கு ஆவதென்ன என்று கேட்கும் உலகுக்கு, ஒள்வையார் சொன்னது இது. ஒரே ம்ட்டை அடி! 'உன் உடம்பினில் உள் உறையும் உத்தமனைக் காண்பது தான் நீ உடம்பு பெற்ற பயனே; அப்படிக் காணத்தவறின், பிறவி எடுத்ததே வீண்' என்கிறார் அவர்.

"பெற்ற பேறும், வீணும் பேறு பெற்றவர்க்கேத் தெரியும். வியாபாரத்தில் நஷ்டம் என்பது லாபம் அடைந்தவனுககே தெரியும் என்பது போல. இலாபத்தையே அடையாதார் அந்தப் பேற்றையே அடையாதாராய், இதுதான் இயல்பு போலும் என்கிற எண்ணமே அவரிடத்தில் பதிந்து இருக்கும். நாளாவட்டத்தில் செககுமாடு போல அதுவே படிந்தும் போய்விடும்.

"'உத்தமனைக் காண்பதால் எனக்கு என்ன பயன்?'---என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க
கேள்வி. எந்தக் கேள்வியுமே தான் ஞானத்தை அடைய ஆரம்பப்படி என்றாலும், கேட்கும் வெற்றுக் கேள்விகளே ப்தில்களைத் தந்துவிடாது. உள்ளத்தில் எழும் கேள்விகள், எந்நேரமும் அந்த உள்ளத்தையே துளைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு துளைத்தலின் பொழுதும், எழுந்த கேள்விக்குப் பதில் தேடுவதை நோக்கி ஓரடியாவது எடுத்து வைத்திருக்க வேண்டும்.

"இன்னொருவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்த்து 'என்ன பயன்' என்கிற கேள்வியே எக்காலத்தும் இருந்து கொண்டிருந்தால், இன்னொருவர் பதில் சொன்னாலும் அந்த பதிலுக்கு கேள்வியாய் இன்னொரு கேள்வி எழும். தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் கேள்விக்கு, தனக்கே பதில் கிடைத்தால், அந்தக் கேள்வியே தன்னுள் முடங்கி நல்ல பதிலாகிப் போகும்.

"இன்னொன்று. பிறரிடம் பதிலை எதிர்பார்த்துக் கிடக்கையில், பதிலே பயனாய்த் துய்த்தவ்ர்கள் கூட்டம் பல்கிப் பெருகி, அவர்கள் பதில் சொல்லக் கூட நேரமின்றி, தான் அடைந்தப் பல்னைப் பெருக்கிக் கொள்ளும் வேலையில் மூழ்கிப் போவ்ர். பயனடைந்தோர் கூட்டம் பெருகப்பெருக, பயனடையாதோர் பின்னுக்குத் தள்ளப்படுவர்.

"அத்னால் வாழ்க்கை என்பது கேள்விகளால் நிரம்பியது என்பது மட்டுமல்ல, உள்ளத்துள் எழும் கேள்விகளுக்கு நல்ல பதில்களைப் பெறுவதும் நம்மிடமே இருக்கிறது என்று தெரிகிறது. 'ரொம்ப சரி. தன்னுள் கேள்விகளே எழாதவ்ன்?' என்று கேட்டால், 'சாரி, டெட் வுட்டுக்கு சமம். இந்த நிலை அவன் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகிப் போகும்' என்று தான் சரிததிரம் சொல்கிறது," என்றவர், மிகவும் அர்த்தத்துடன் அவையைச் சுற்றிப் பார்த்தார்.

அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்து, அடுத்த கால்மணி நேரத்தில் அமைய்ப்போகும் அடுத்த அமர்வுக்கு, வழக்கம் போல கீழ் தளத்திற்கு வந்து விடுங்கள். அந்த அமர்வை, 'கேள்வி--பதில்' அமர்வாக வைத்துக் கொள்ளலாமா?" என்று புன்னகையுடன் கேட்க, அவையே கலகலப்புடன் எழுந்திருந்தது.

பூங்குழலியும், சிவராமனும் எதுபற்றியோ ஆழ்ந்து விவாதித்தபடி, அவைக்கு வெளியே வந்தனர். பாதி வழியில் குறுக்கிட்ட மாலுவைப் பார்த்து, "நன்னா பாடினீங்க.. உங்கள் குரல்வளம் அற்புதம்" என்றார் பூங்குழலி.

(தேடல் தொடரும்)

Wednesday, October 28, 2009

ஆத்மாவைத் தேடி....12 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

12. மனம் என்னும் தொடர்புச் சாதனம்

மாலு பாட்டைப் பாடி முடித்ததும் அவையே கரகோஷத்தில் அதிர்ந்தது.

அந்த கரகோஷ ஒலி அடங்கும் வரை காத்திருந்து விட்டு, மாலுவைப் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டே மேகநாதன் கேட்டார். "அற்புத்மாகப் பாடினீர்கள், மாலு! இப்படி இராகத்தோடு இந்தப் பாட்டைப் பாடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை நான் தெரிவ்து கொள்ளலாமா?"

மாலு பலமாகச் சிரித்தே விட்டாள். "என்னவோ தோணித்து, பாடணும்னு. எதுவும் மனசிலே தோணித்துன்னா, உடனே அதைச் செஞ்சிடறது என்னோட வழக்கம். அத்னால் தான் உங்கள் அனுமதி கேட்டு உடனே செஞ்சிட்டேன்."

"ஓ.. வெல். மன்சிலே தோணித்துன்னு சொன்னீங்களே.. அதான் இங்கே முக்கியம். தப்பா நினைக்க மாட்டீங்கன்னா, இன்னொரு கேள்வி. நான் உங்களைப் பாட வேண்டாம்னு சொல்லி இருந்தா, என்ன செஞ்சிருப்பீங்க?.."

"என்ன செஞ்ச்சிருப்பேன்?" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிற மாதிரி கேட்டு விட்டு, "என்ன செஞ்ச்சிருப்பேன்னா, சபைலே நாலு பேருக்கு கேக்கறமாதிரி தானே நீங்கப் பாடக் கூடாதுன்னு சொல்லியிருபபீங்க.. எனக்குள்ளேயே பாடிக்க எந்த ஆட்சேபணையும் இல்லே தானே.. அதனாலே, லேசா முணுமுணுக்கற மாதிரி எனக்குள்ளேயேப் பாடிண்டிருப்பேன்."

"அற்புதம், மாலு! நீங்க உணர்றதை அழகாச் சொல்லீட்டீங்க" என்று மன்சார சிலாகித்தார் மேகநாதன். "மாலு சொன்ன இதைத்தான் நானும் சொல்ல வந்தது. மாலுவுக்கு முன்னாலேயே ப்ழக்கப்பட்டப் பாடல் இது. பல தடவை முன்னாலேயே அவங்க பாடி ரசிச்ச பாடல்! சங்கீத ஞானத்தோடு பாடக்கூடியப் பழக்கம் இருக்கறதினாலே, முன்னே பலதடவை அவங்களும் இந்தப் பாட்டைப் பாடி இருக்கிறதினாலே, இந்தப் பாட்டைப் பத்தி நாம இங்கே பிரஸ்தாபிக்கிற பொழுது இராகத்தோடு அந்தப் பாட்டை அலங்கரிக்கணும்ன்னு அவங்க மனசு விரும்பறது. டெக்னிக்கலாக ச் சொல்லணும்னா, இராகம் மூலமா அந்தப் பாட்டோடு தொடர்பு கொள்ள் அவங்க மனசு விரும்பறது.

" மனசு! மனசு! மனசு! இங்க இந்த மனசோட அழகு அற்புதமாப் பிரகாசிக்கிறது! விருப்பப் பட்டதைச் செய்யப் பழகிய மனசு, பாட வேண்டாம்னு நான் தடுததிருந்தாலும், எனக்குள்ளே
பாடியிருப்பேன்னு அவங்க சொல்றாங்களே, அதான் ஒண்டர்புல்! அதான் ஆட்டமேட்டிக்கா நடக்கும்! நாட்டியம் ஆடறவங்களா இருந்தா அவங்க பாதங்கள் ஜதி போட்டிருக்கும்! மன்சின் விருப்பும், வெறுப்பும், வலியும், வேதனையும், குஷியும், கொண்டாட்டமும், அவலமும், ஆனந்தமும்அளவில் கொள்ளமுடியாத விஸ்தாரமானவை. இவற்றை எல்லாம் பின்னால் பார்க்கலாம்.

"இப்போதைக்கு வெளியே வியாபித்திருக்கிற பிரபஞ்ச காந்தசக்தி, நமக்குள் இருக்கிற வெளிகாந்த சக்தியின் எச்சமான உள்காந்தசக்தி, இரண்டையும் தொடர்பு படுத்துகின்ற மனசு--இந்த மூன்று விஷயங்க்களை கவனமாக நினைவில் கொள்ளுங்கள். பிரபஞ்ச சக்தியை தலைவனாகக் கொண்டு, 'தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று சொன்னானே, கம்பன், அந்தக் கம்பனும் தன் உள்காந்த சக்தியைச் சரணாக்கி தலைவனிடத்து சமர்ப்பித்துத் தான் தனது காவியத்தை தொடர்ந்து பாடத் தொடங்குகிறான். மனமாகிய இணைப்புத் தொடர் மூலம், பிரபஞ்ச சக்தியை விரும்பி வேண்டிப்பெற்று, உள்காந்த சக்தியின் வலிமையை மேலும் கூட்டிப் பிரகாசிக்கச் செய்கிறான். இதுதான் வெளிப்பிரபஞ்ச சக்தி இறை சக்தியாய் நம்முள் தேங்கி வெளிப்படும் ரகசியம்.

"'உள் போந்தவை எல்லாம் வெளிப்பட வேண்டும்; வெளிப்பட்டவை எல்லாம் உள்வாங்க வேண்டும்' என்பது விஞ்ஞான உண்மை. மனமாகிய தொடர்புச் சாதனத்தைப் பிரயோகித்து
வெளிப் பிரபஞ்ச சக்தியை நாம் உள்வாங்க வேண்டும்.. அது ஒன்றே நம் வேலையாகிப் போகும்.. பிரபஞ்ச சக்தியை மனசால் தொடர்பு கொண்டு வேண்டிப் பெறுதலை, இறை வழிபாடு என்று சொன்னால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?" கைகளை மார்புக்கு நேராகக் குவித்து அபிநயத்துக் காட்டினார் மேகநாதன்.

மேகநாதனின் நீண்ட உரையை உள்வாங்கிக் கொண்ட உற்சாகத்தில் அவையே ஸ்தம்பித்து நின்றது.

(தேடல் தொடரும்)

Saturday, October 24, 2009

ஆத்மாவைத் தேடி....11 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

11. காந்த வெளி

வழக்கத்திற்கு மாறாக இந்தத் தடவை அவைக்கூட்டம் மஹாதேவ் நிவாஸின் மேல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் மேல்கூரை இல்லாமலேயே இருந்ததினால், அவையில் அமர்ந்திருந்தோர் தலைக்கு மேலே வெளிர் நீலநிற ஆகாயம் நிர்மலமாகத் தோற்றமளித்தது.

எப்படித்தான் அப்படிப்பட்ட ஒருமுக எண்ணம் அத்தனை பேரிடமும் குவிந்தது என்றுத் தெரியவில்லை. இது, மனம் பற்றி மிக மெலிதாக பிரயோகிக்கப்பட்ட ஒரு சிந்தனைத்துளி தான்; அது பரவலாகப் பெரிதாகி அத்தனை பேரையும் பற்றிக் கொண்டது தான் ஆச்சரியம். அதன் விஸ்வரூபம் எல்லோரிடம் பூரித்துக் கிளம்பிய ஆனந்தத்திலிருந்து வெளிப்படையாகத் தெரிந்தது.

நிவேதிதா கையில் ஒரு கற்றைக் காகிதத்துடன் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தியைக் கண்டவுடன்,தன் கையிலிருந்த காகிதக்கற்றைகளைப் புரட்டி அவரிடம் காட்டி ஏதோ சொல்ல, கிருஷ்ணமூர்த்தியின் முகம் பிரகாசமடைந்தது. நிவேதிதா கொடுத்த பேப்பரை வாங்கி தனது ஃபைலில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

இந்த சமயத்தில் தான் மனவியல் அறிஞர் மேகநாதன் அவைக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தார். அவரைக் கண்டதும் ஒரு யுகபுருஷனைப் பார்த்து பரவசப்பட்ட சந்தோஷத்துடன் அவை குதூகலித்து அடுத்த நிமிஷமே மெளனமாயிற்று. கிருஷ்ணமூர்த்தி மேடைகருகில் மேகநாதனை சந்தித்து தன்னிடமிருந்த கோப்பை அவரிடம் கொடுத்தார். புன்முறுவலுடன் மேகநாதன் அதைப் பெற்றுக்கொண்டார்.

சரியாக ஒன்பது மணி. சிவன் கோயில் காலை வழிப்பாட்டை முடித்துக்கொண்டு மாலு கிழக்குப்பகுதி வழியாக அவையுள் நுழைந்தாள். அவள் நடந்து வந்ததில் ஒரு அசாத்திய அமைதியும் முகத்தில் திருப்தியும் தெரிந்தது. அவளுக்கு முன்னாலேயே வந்து சிவராமன் வேறொரு இடத்தில் அமர்ந்திருந்தார்.

"நேற்று விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?" என்று புன்முறுவலுடன் அவையைப் பார்த்தார் மேகநாதன்.

அவையின் உற்சாகம் அவர்களின் ஆமோதிப்பில் கலகலத்தது.

"நல்லது. இந்த அமர்வின் இறுதியிலும் அதற்காக நேரத்தை ஒதுக்கி நம் ஒருவொருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களையும் தெளிந்து கொள்ளலாம். உங்களுக்குள் 'ஏன் இப்படி?' என்று கிளர்ந்தெழும் சில வினாக்கள், அதைப் பற்றி யோசிக்கும் எனக்கும் சில உண்மைகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்குமாதலால், உங்களுக்கேற்படும் ஐய வினாக்களை எக்காரணங்கொண்டும் கேட்காமல் இருந்து விடாதீர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 'ஆத்மா'வைப் பற்றி உலகுக்குப் பிரகடனம் பண்ண மனோகர்ஜி ஏற்பாடு செய்திருக்கும் நிகழவிருக்கும் சதஸிற்கு முன்னாலான இந்த அமர்வின் அர்த்தமும் அதுதான். முழுமையான கருத்துக்களை முன்வைக்கப் போகும் இந்த சதஸுக்கான வரைவுகளுக்கான முனேற்பாடான அமர்வுகள் இவை. இந்த அமர்வுகளில் தாம், துறைதோறும் நாம் சில வரைவுகளை வரைந்து கொண்டு சதஸில் வைக்கப்போகிறோம். ஆகவே இந்த உரைக்கு பின்னாலான நமது வினாக்களும், அவற்றிற்கான விடைகளும் இறுதி வரைவுகளைத் தயாரிக்க மிக மிக முக்கியமானவை" என்று ஒரு முகவுரையாற்றி மேற்கொண்டு பேசத் தொண்டையைச் செருமிக் கொண்டார் மேகநாதன்.

"இந்த மகாதேவ் நிவாஸின் மேல்தளப்பரப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரணமே இது தான். மேல் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தை அண்ணாந்து பாருங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் சமுத்திரம் போலவேயான பரந்து கிடக்கும் ஆகாயப்பரப்பு. பஞ்சுப்பொதிகளைப் போலத் தோற்றமளிக்கும் மேகக்கூட்டங்கள். அவை ஊர்ந்து மெல்ல நகரும் விநோதம்! அவை ஊர்வதால், ஆகாயத்தின் எல்லையே அதுவல்ல என்றுத் தெரிகிறது. கீழே இந்த மேகக்கூட்டங்கள் என்று இந்த மேகக்கூட்டங்களுக்கு மேலே போய் ஒரு விமானத்தில் பயணிக்கையில் அதற்கும் மேலே காணப்படுகின்ற பரந்த ஆகாயத்தின் பரப்பே ஏகாந்த வெற்றுவெளியாகத் தான் தென்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் கூரையாகத் திகழும் அகண்ட வெளியெங்கணும் காந்த சக்தி நீக்கமற நிறைந்து பரவி விரவிக் கிடப்பதினால் தான் சூரியனும், சந்திரனும் இவை போன்ற இன்னபிற கிரகங்களும் ஒன்றிற்கொன்று முட்டி மோதிக்கொள்ளாமல், ஒரு பிரபஞ்ச விதிப்படி (Universal Law) இயங்கிக் கொண்டிருக்கின்றன.

"பிரபஞ்சக் கோட்பாட்டில் பூமி என்பது மிகச்சிறிய ஒரு துகள். அந்தத் துகளில் துள்ளித் திரியும் மனிதன் என்னும் துணுக்கு போன்றத் துகளிலும் அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் நீட்சி நிரம்பி, பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு போன்ற காந்தத்துகளாக மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆக, மனிதனும் பிரபஞ்ச காந்த சக்தியின் ஒரு துணுக்கு என்பது உண்மை.

"மின் வேதியியல் அடிப்படையில் மூளை இயங்குகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்தின் முடிவென்றால், அந்த அதன் இயக்கத்திற்கு மூலகாரணமாக இருப்பது பிரபஞ்ச காந்தசக்தியின் ஒரு துகளாக நாமும் திகழ்வதே. இதயம் போன்ற முக்கியமான உறுப்புகள் இயங்குவதற்கும் அந்த பிரபஞ்ச சக்தி நம்முள் வியாபித்திருப்பதே காரணம். உடலின் உள்ளார்ந்த உறுப்புகளின் நில்லாத இயக்கத்திற்குக் காரணமாதலால், உயிரின் இயக்கத்திற்கும் காரணம் இதுவே. இதுவே காரணம் என்று சுலபமாக சொல்லிவிடுவதைத் தாண்டி, அந்த பிரபஞ்ச காந்தசக்தியின் தொடர்பு இருக்கிறவரை உயிர் இயக்கம் இருப்பதாகவும், தொடர்பு துண்டிக்கப்படுகையில் அல்லது சக்தியிழந்து தொடர்பிலிருந்து விடுபடுகையில் உடல் இயக்கம் ஒடுங்கி மரணம் சம்பவிப்பதாகவும் கொள்ளலாம்."

அவை முச்சூடும் அமைதி ஆட்கொண்டு அத்தனை பேரும் மேகநாதன் ஆற்றும் உரையை மிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கையில், நோட்ஸ் எடுப்பவர்களின் வசதிக்காவும் நின்று நிதானித்து அவர் தொடர்ந்தார். "ஆக, பிரபஞ்ச வெளியின் தொடர்ச்சியான ஒரு கூறாகத்தான் மனிதன் ஜீவித்திருக்கிறான். பிரபஞ்ச சக்திக்கும், மனிதனுக்கும் ஒரு தொடர்புச்சாதமாக அவன் மனம் திகழ்கிறது. தனக்குத் தேவையான சக்தியை பிரபஞ்ச சக்தியிடமிருந்து பெறுகின்ற ஆற்றல் மனதுக்கு உண்டு. பிரபஞ்ச பேராற்றலையே இறைவனாக, இறைசக்தியாகக் கொண்டால், அந்த சக்தியை சிந்தாமல் சிதறாமல் நம்முள் உள்வாங்கிக் கொள்வதற்கு மனமே முழுமுதல் சாதனமாகிப் போகிறது. இன்று இதைப்பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

"அதற்கு முன், பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தலைவனாக வரித்துப் பாடிய தமிழ்க்கவிஞன் ஒருவனின் பாடலைப் பார்ப்போம். அந்தக் கவிஞனின் பெயர் கம்பன்; கவிஞர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியாகப் போற்றப்பட்டவன். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் கதையை தமிழில் இராமகாதையாக வடித்தவன். அந்த இராமகாதையின் இறைவாழ்த்துப் பாடலாக பிரபஞ்ச சக்தியை இறைவனாக, தன் தலைவனாக வாழ்த்தி தனது 'இராமகாதை'யை எப்படித் தொடங்குகிறான், பாருங்கள்!..

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
-- என்று மேகநாதன் கவிச்சக்ரவர்த்தியின் அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "நான் இராகத்தோடு அந்த அருமையான பாடலை இந்த அவையில் பாடலாமா?" என்று அனுமதி கேட்டு நாட்டை ராகத்தில் இராமகாதையின் அந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலை மாலு பாடினாள்.

அவையே மெய்மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

(தேடல் தொடரும்)

Sunday, October 4, 2009

எஸ். ஏ. பி. யின் "நீ"

சிறுகதையோ அல்லது புதினமோ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை எழுதும் எழுத்தாளர்களில் தான் பலவிதம் என்றால், இவற்றை வாசிக்கும் வாசகர்களிலும் பலரகம். எந்தப் புத்தகத்தையாகவது குறிப்பிட்டு "இதைப் படித்திருக்கிறீர்களா?" என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். நாமே கொஞ்சமும் எதிர்பார்த்திராத பலதினுசுகளில் பதில் வரும். "என்னத்தை எழுதிக் கிழிச்சிருக்கான்?" என்பதிலிருந்து "நாலு பக்கத்துக்கு மேலே நகர முடியலே; வெறும் குப்பை!" என்று ஒரேயடியாக கைகழுவி விடுபவர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமானால், 90% பேர் 'இது இப்படியான கதை' என்கிற அளவில் தான் புரட்டியிருப்பார்கள்.

ஒரு முழு நாவலையே நாலே வரிகளில் சொல்லி விடுவோரே பெருவாரியான வாசகர்கள். மகாபாரதத்தைக் கூட ஒரே வரியில் சொல்லக் கூடிய எமகாதகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது முக்கியமில்லை. 200 பக்க நாவலை எழுதியவர், எடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியாமல், எழுதிய அந்தக் கதையை எப்படி நகர்த்திச் சென்றிருக்கிறார் என்பதை ரசித்துப் படிப்பவர் வெகுசிலரே. அந்த வெகுசில ரசனையாளர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவர்கள் எதுகுறித்தும் பேசவும் எழுதவும் விமரிசிக்கவும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். இவர்கள் இளைஞர்களாய் இருப்பார்களே ஆயின், இவர்களே எதிர்கால தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

குந்தலாவின் உள்ளத்தைக் கண்ணன் கவர்ந்தது இப்படி நேரவேண்டும் என்று விதித்திருந்ததைப் போல யதேச்சையாய் நடந்த சம்பவம்.

ஒருதடவை பார்த்த பார்வையிலேயே கண்ணனின் நெஞ்சத் தடாகத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்தவள் சகுந்தலா. ஊட்டிக்கு தோழிகளுடன் சுற்றுலா வந்திருந்த சகுந்தலாவை பாதி பிக்னிக்கில் எதிர்பாராமல் மறுபடி சந்திக்கிறான் கண்ணன். இதுவரை தான் நான் உங்களோடு.. இனி அமரர் எஸ்.ஏ.பி.யின் எழுத்துக்கள் உங்கள் கூட வரும். மனிதர் எவ்வளவு இயல்பாய், லாவகமாய் கதையை நடத்திச் செல்கிறார், பாருங்கள்:

ஜ.ரா.சுந்தரேசனிலிருந்து சுஜாதாவரை எத்தனையோ எழுத்து மன்னர்களின் மனம் கவர்ந்தவர் என்றால், சும்மாவா...

*********

பிறகு, "நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா?" என்றாள், சகுந்தலா.

"ஓ," என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.

"நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்," என்றாள் சகுந்தலா.

"நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்!" என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.

சகுந்தலா அவளை கையமர்த்தினாள். "கொஞ்சம் பொறேன்?.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்."

"அதற்குப் பத்து கேள்வி எதற்கு!" என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். "ஒரு கேள்வி போதுமே? 'நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டால் போயிற்று!"

"அதுதானே நடக்காது!" என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. "நீங்கள் கேட்கிற கேள்விக்கு, 'ஆமாம், இல்லை' என்று மட்டும் தான் பதில் சொல்வேன்!"

"அப்படியா? ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது," என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.

"அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும்? எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?" என்று சவால் விட்டாள் சகுந்தலா.

உற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். "ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது!" என்று விதி வகுத்தாள்.

"நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா?" என்றான், கண்ணன்.

சகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

கண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, "என்ன இது! இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்?" என்று புகார் செய்தான்.

"உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்," என்றாள் சகுந்தலா.

"ஓஹோ என்றானாம்! இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்?.. சரி, சொல்லுங்கள், ஆணா?"

"உம்," என்றாள் சகுந்தலா.
"ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்."
"ஆமா."
"சுமாராக என்ன வயதிருக்கும்?"
சகுந்தலா மெளனம் சாதித்தாள்.
"அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று?" என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.
"மறந்துவிட்டேன்," பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.
"டாக்டரா?"
"இல்லை."
"வக்கீலா?"
"இல்லை."
"இஞ்ஜினியரா?"
"இல்லை."
"எழுத்தாளரா?"
"இல்லை."
"ஓவியரா?"
"இல்லை."
"நடிகரா?"
"இல்லை."
"பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா?" என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.

"சகுந்தலா, "இல்லை," என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.
அவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், "அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன? நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!" என்று மன்றாடினான்.

"நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்!" என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.

ஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.

"உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும்? ஐந்தா?" என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.

ஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. "ஒன்பது" என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. "ஒருகாலும் இல்லை! ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது!" என்று கூச்சலிட்டான்.

"அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்," என்று புன்னகை செய்தாள்.

"இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா?" என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்."தமிழரா?"

"ஆம்," என்றாள் சகுந்தலா.

"இரண்டே கேள்வி பாக்கி," என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.

பளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ? பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ? பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, "பட்டதாரியா?" என்றான்.

"இல்லை," சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே!

கடைசியாக ஒரு கேள்வி: "பிரம்மசாரியா?"

"ஆம்," என்றாள் சகுந்தலா.

கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது.

"நான் நினைத்தது யாரை?" என்றாள் சகுந்தலா.

"நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்," என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.

சகுந்தலா தயங்கினாள். பிறகு, "காமராஜ நாடார்," என்றாள்.

கண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது!

"அடே! என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே!" என்று ஒருத்தி பாராட்ட, "நல்ல ஆளாகப் பிடித்தாய்!" என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, "இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை!" என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே? 'முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்," என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

அப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.


--- "நீ" யில் எஸ்.ஏ.பி.



புத்தகம் கிடைக்குமிடம்:

மணிமேகலை பிரசுரம்,
தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை-17

தொலைபேசி: 044-24346082

Tuesday, September 15, 2009

ஆத்மாவைத் தேடி...10 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


10. ஆக்ஞை கிடைத்தது


னோகர்ஜியின் அன்பு சிவராமனை நெகிழச் செய்தது. 'இன்னும் சில நாட்கள் கூட இங்கு தங்கமுடியுமா என்று கேட்கிறாரே? நாட்கள் என்ன, ஆயுசு பூராவும் இங்கேயே இரு என்று சொன்னாலும் அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இருந்து விடலாமே?.. இந்த எளியோனுக்கு ஜோதிஸ்வரூபமாய் தரிசனம் காட்டிய பெருமான் உறையும் புண்யபூமி அல்லவா, இது?.. மாலுவும் சந்தோஷப்படுவாள். தினமும் பூத்தொடுத்து உமையொருபாகனுக்கு மாலைசூட்டி மகிழ்வாள்.' என்று பலவாறாக அவர் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.

"என்ன சிவராம்ஜி?.. மெளனமாகி விட்டீர்கள்?"

""பொறுத்துக் கொள்ள வேண்டும், ஐயா! ஏதேதோ யோசனை.. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன். நாம் இப்படி அமர்ந்து கொண்டு பேசலாமா?" என்று மண்டபத்தின் கிழக்குப் பக்கம் தாழ்வாக இருந்த படிகளில் ஏறினார் மனோகர்ஜி.

ஏறியவர், அப்பொழுது தான் மாலுவைப்பார்த்தார் போலும். "அடேடே! நீங்களும் இங்கே தான் இருக்கிறீர்களா?.. ரொம்ப நல்லதாப் போச்சு.." என்று மாலுவுக்குக் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு மற்றவர்களையும் உட்காரச்சொன்னார்.

மாலு மட்டும் ஏனோ சுற்றி நடக்கும் செயல்களில் கவனம் ஒன்றாமல், நினைவில் இடறிவிட்டுப் போன ஏதோ ஒன்றை நினைத்துப் பார்க்கிற தோரணையில் அமர்ந்திருந்தாள். மனோகர்ஜி அவளிடம் கேட்டது கூட நெஞ்சில் உறைக்காத ஆழ்ந்த சிந்தனை.

மனோகர்ஜியும் அதை அவ்வளவு கவனித்தாகத் தெரியவில்லை. அவர் பாட்டுக்க தனது வழக்கம் போல சந்தோஷ வெளிப்பாடுடன் மனசில் இருப்பதைக் கொட்ட ஆரம்பித்தார். "நான் எதிர்ப்பார்த்தை விட எல்லாக்காரியங்களும் சிறப்பாக அதன் அதன் போக்கில் அது அது நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு. எல்லாம் இறைவனின் சித்தம்" என்றவர் சிவராமனை உற்றுப்பார்த்தார். அவர் தீட்சண்யப் பார்வையின் தீர்க்கத்தை எதிர்கொள்ளமுடியாமல் சிவராமன் லேசாகத் தலைகவிழ்த்தார்.

ஆனால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லப்போகிறார் என்கிற தவிப்பில், "ஜி! எது என்றாலும் நீங்கள் தயங்காமல் சொல்லலாம். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதை நிறைவேற்ற நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.

இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் பக்கம் திரும்பினார் மனோகர்ஜி. "கிருஷணாஜி! உங்களுக்குத் தெரியாததா?.. இப்பொழுதெல்லாம் எனக்குன்னு தனிப்பட்ட முறைலே எந்த விருப்பமும் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஐயனின் விருப்பம்" என்று கர்ப்பக்கிரகம் இருக்கும் திசை நோக்கிக் கும்பிட்டார் மனோகர்ஜி.

"ஐயனின் விருப்பமா?.. அது என்னவோ?" என்று ஆவலுடன் அவரைப் பார்த்தார் சிவராமன்.

"அந்த அற்புதத்தைச்சொல்கிறேன்,கேளுங்கள்!"என்று சொல்ல ஆரம்பித்தார் மனோகர்ஜி."அதை உடனே உங்களுக்குச் சொல்லவேண்டுமென்றுதான் உங்களைத் தேடிக் கொண்டு வந்தேன். இன்று காலை பொழுது புலர்வதற்கு கொஞச முன்னாடி இது நடந்தது.இதை நான் கனவில் கண்ட மாதிரி நிச்சயமா தெரியலே. தூக்கம் கலைந்து, எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நான் இருக்கையில் நிழல் போல என் கண்ணுக்கு முன்னாடி நடமாடற மாதிரிதான் இது நடந்தது..." என்று சொல்லிவிட்டு மார்புகூடு நிமிர்த்தி நீண்ட சுவாசத்தை வெளிவிட்டார் மனோகர்ஜி.

வெற்று வெளியைத் துழாவிப் பார்க்கிற தோரணையில் மனோகர்ஜி ஆகாயப்பிரதேசத்தை அண்ணாந்து பார்த்து விட்டு, அரைக்கண்களை லேசாக மூடியபடி, தன் நினைவிலிருக்கும் தோற்றத்தையும் அது சம்பந்தமான செய்தியையும் மீட்டு எடுக்கிற லயிப்பில் சொல்ல
ஆரம்பித்தார்: "வயலின் வைச்சிருப்போம்ல, அந்த மாதிரி சின்னப் பெட்டி இல்லே.. இது பெரிய பெட்டி.. அந்தப்பெட்டி பக்கத்லே திடகாத்திரமா திறந்த மார்பிலே யக்ஞோபவீதம் தரித்து யாரோ நிக்கற மாதிரித் தெரியறது. இதுவரை மசமசன்னு இருட்டா இருந்த அந்தப் பிரதேசமே, ஒரு நொடியில் நெடியோனாய் நின்று கொண்டிருந்த அந்த வாலிபனின் தேஜஸ்ஸில் ஜெகஜோதியாத் தெரியறது. அந்த வெளிச்ச ஒளிலே கண்கூசக்கூச அந்த வாலிபனை நிமிர்ந்து நேரடியா பாக்கறத்துக்கு எனக்கு சக்தியில்லாம லேசா தலையைத் தூக்கறச்சேயே அந்த முகலாவண்யம் என் நெஞ்சு முழுக்க பரவசமாய் பற்றி உடம்பே லேசாயிடுத்து, கிருஷ்ணாஜி... ஹோ.. நான் என்ன புண்ணியம் செஞ்சேன்,ஜி!" என்று குரல் தழுதழுத்துக் கம்மத் தொடர்ந்தார் மனோகர்ஜி.. "ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே திருநாமம் துலங்க மந்தகாசச் சிரிப்போட.. கீழே குனிஞ்சு நிமிர்ந்த வேகத்லே, கையிலே கோடி சூரியபிரகாசத்தோட பளபளக்கற கோதண்டம்... மகாப்பிரபோன்னு கைதூக்கி கும்பிட யத்தனக்கையிலேயே, சிற்சபை ஆனந்தத் தாண்டவம்! தசரதக்குமாரனாய் ஜகஜ்ஜோதியாய் இருந்தவன் இடத்தில் இப்போது ஆடலரசனின் அற்புதத் தோற்றம்!.. முன்னே பார்த்த அந்த வாலிபனைப் போலவே இருக்கு.. ஓவியத்து எழுத முடியா உருவத்தானின் மதிமுக ஸ்ரீசூர்ணம் பார்த்த நினைவு மாறி இப்போ திருவெண்ணீறு வெள்ளி உருக்காய் தகதகக்க...

"சிவனும், ராமனும் ஒரே தோற்றமாய் சிவராமனாய் மனசைப் பிடித்து ஆட்டிய ஆட்டத்தில் அழுதுவிட்டேன்,ஜி! இந்த ஏழைக்கு இப்படி ஒரு இரட்டை அதிர்ஷ்டமா என்று அதிர்ந்து போனேன்.. யோசிக்க யோசிக்க வட்டவட்டமாய் முடிவில்லாமல் கலைந்து கலைந்து முடிவில் கலைந்தே போன நினைவுகளை ஒண்ணு சேக்க படாதபாடுபட்டேன். லேசாகப் பொழுது விடிகையில் பொறிதட்டிய மாதிரி அந்த நினைப்பு வந்தது.. நினைவில் நம்ம சிவராம்ஜியின் பெயரை யாரோ உச்சரிக்கிற மாதிரி இருந்தது. அவரும் நடக்கப்போகிற இந்த சதஸ்ஸில் முழுப்பங்கெடுத்துக் கொண்டு நடத்தித்தர ஆக்ஞை கிடைத்ததாக நான் நினைக்கிறேன்" என்று குரல் தழுதழுக்க மனோகர்ஜி ஆனந்தம் கண்களில் உந்தித்தள்ள சிவராமனை நோக்கினார்.

'நான் இங்குவர இறைவனின் சித்தம் இதுதானோ' என்று சிவராமன் நெகிழ்ந்து போய் மனோகர்ஜியை கண்கள் பளபளக்கப் பார்த்தார்.

(தேடல் தொடரும்)

Monday, August 31, 2009

ஆத்மாவைத் தேடி.... 9 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

9. யாதுமாகி நின்றாய்

ழக்கமாக காலை உணவு நேரம் முடிந்தவுடன் கொஞ்ச நேரம் தாமதித்துத்தான் அவை தொடங்கும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக, காலை உணவு நேரம் முடிந்து கொண்டிருக்கையிலேயே இன்னொரு பக்கம் அவை நிரம்ப ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு மனவியல் அறிஞர் மேகநாதனின் உரை அனைவரையும் கவர்ந்திருந்தது. அதுவும் தவிர, நேற்றைய உரையின் தொடர்ச்சியாய் விட்டுப் போனவற்றை ஒன்று விடாமல் தொடர்ச்சியாக மேகநாதனிடம் கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்கிற ஆவலும் அனைவரிடமும் இருந்தது.

மனவியல் துறையைச் சிறப்புப் பாடமாக ஏற்று, அதில் துறைபோகிய ஞானம் உடைய மேகநாதனுக்கும் ஆரோக்கியமான விவாதங்களைக் கிளறும் இப்படிப்பட்ட ஒரு மேடை மிகவும் பிடித்திருந்தது. அதுவே அவரது அதீத உற்சாகத்திற்கும் காரணம் ஆயிற்று.

நேற்றைய அமர்வின் தொடர்ச்சியை தொடரும் முன், விட்ட இடத்தை நினைவுபடுத்திவிடலாம் என்பதும் மேகநாதனின் உத்தேசம். அதே யோசனையில் மைக்கைப் பிடித்தவர்,மூளையிலுள்ள நியூரோன்களில் ஏற்படும் ரசாயன மின்மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, 'மனம்' என்பது பற்றி உத்தேசமாக பல விவரங்களைச் சொல்வதை விட விஞ்ஞானபூர்வமாக அதை நிறுவுவதிலிருந்து நாம் நழுவக்கூடாது என்றார். இந்த நிரூபணத்தில் நமக்கு வெகுவான அக்கறை இருப்பதால், இதற்குப்பின் கூடவிருக்கிற சதஸ், இதற்கான வேண்டிய வழிவகைகளைச் செய்ய உறுதிபூணவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

அவையின் ஏகோபித்த சம்மதம் இதற்குக் கிடைத்தவுடன் அவர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது."நாம்வாழ நேர்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மனத்தின் உணர்வுகளால் அமைகிறது என்று பார்த்தோம். இந்தப் பகுதியில் யாருக்கும் சந்தேகம் இல்லையென்றே நினைக்கிறேன்" என்று குரலை உயர்த்திச் சொன்னவர், மேலும் தொடர்ந்தார்: "புலன் உறுப்புகளால் பார்க்குமொரு காட்சி, அது சம்பந்தப்பட்ட உணர்வுகளால் மனத்தை ஆட்டுவிக்கிறது. அந்த ஆட்டுவிப்பிற்கு ஏற்ப நாம் செயல்படுகிறோம். ஓக்கே?.. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வருவோம். பார்க்கும் காட்சிக்கும், அந்த காட்சி பற்றி நாம் கொள்ளும் உணர்விற்கும் சம்பந்தப் பட்டது மனத்தின் ஆட்டுவிப்பு. தீயைக் கண்டால் கையை இழுத்துக் கொள்வதற்கும், அந்தத் தீயே ஒரு சிகரெட்டின் நுனியில் இருந்தால் பதறாமல் உதடு கவ்வி இழுப்பதற்கும் கொள்ளும் உணர்வு போல. மனம் என்பது செயல்படுவதற்கு மறைமுகமாக இருக்கும் ஒரு அரூபக் கருவியே தவிர,உணர்வுதான் வெளிச்செயலாய் மனதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பது தான் இதில் உள்ள விசேஷம். அடுத்து இந்த உணர்வுகள் என்றால் என்னவென்று பார்ப்போம்" என்று தான் சொன்னது கேட்பவர்களுக்குப் புரிந்ததா என்று அறிகின்ற ஆவலில் அவைச் சுற்றிலும் நோட்டமிட்டார்.

பிறகு திருப்தியுடன் தொடர்ந்தார்: "உதாரணமாக தாயைக் கண்டால் பாசம், மனைவியிடத்து மோகம், பிள்ளைகளிடத்து அன்பு என்பது உலக இயல்பு. தாயிடமிருந்து பிரிந்த சதைப் பிண்டமாதலின் பாசமும், மனைவியிடத்து சுகித்த மயக்கத்தால் மோகமும், தன்னின் கூறுகளாகையால் அன்பும் உணர்வுக் கயிறுகளாகி மனசைக் கட்டிப்போடுகிறது. இதெல்லாம் அடிப்படையான உணர்வுகள்.. தான் ஆடாவிட்டாலும், சதையாடும் சங்கதிகள்.

"இறைவனுடனான நமது உறவும் எல்லா உறவுகளையும் போன்றதே.. இந்த ஜென்மத்து உறவாகிய தாயின் பாசம், கல்பகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தன்னிடமிருந்து விடுபட்ட சங்கதிகளின் மேல் இறைவனுக்கு இருக்கிறது. அந்த நேசம் தான் வெம்மையாகவும், தண்மையாகவும்,வெயிலாகவும், மழையாகவும், உணவாகவும், உயிரை இயக்கும் சக்தியாகவும் வெளிப்படுகிறது.. அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்; மற்றபடி மற்ற எல்லாச் சமாச்சாரங்களும் டிட்டோ..டிட்டோ...

"எல்லா உறவுகளைப் போலவுமே இறைவன் பற்றி நாம் கொண்டிருக்கும் 'அறிவு' தான், இறைவனுடான நம் பந்தத்தை நெருக்கியும், விலக்கியும் வைத்திருக்கிறது. அதனால் தான் இந்த உறவும் எல்லா உறவுகளைப் போலவுமே நமது மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் காரணமாகிப் போகிறது.

"எந்த உறவும் மகிழ்ச்சியைக் கொடுக்குமெனில் உடலுக்கு, உணர்வுகளுக்கு ஆரோக்கியமானது; ஆரோக்கியத்தை சுகிப்பதும், விலக்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.ஆரோக்கியத்தை நேசித்துக் கொள்வோருக்கு கொடுப்பினை; தள்ளுவோருக்கு வாழ்க்கையே தண்டனை!

"எல்லாவற்றிலும் முக்கியமானது, மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல். ஏன்?.. இதுதான் உடலின், மனதின் ஆரோக்கியத்திற்கு உரமாகிப் போகும் என்பதினால்.

"புதுசாக ஒரு சட்டையை வாங்கி அணியும் போதே மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது; அன்று பூராவும் அந்த சந்தோஷம் நீடித்தது. காசு கொடுத்து வாங்கி அந்த சட்டையை அணிந்தது தான் என்வேலையாகிப் போயிற்று. ஆனால், இந்த உடைகளுக்குப் பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கரிசல் காட்டில் பஞ்சை விளைவித்து,அதன் கொட்டை நீக்கி பஞ்சுப் பொதி சுமந்ததிலிருந்து ஆரம்பித்து தையற்கலைஞர் வரை... எல்லோரது உழைப்பும் தான்; இத்தனைக்கும் நடுவே, உயிராய் வளர்ந்த அந்த பஞ்சு விளைச்சலை மட்டும் வசதியாய் மறந்து போய்விடுகிறோம்.. அந்த உயிர் செழித்து வளர்ந்தால் தான், இதற்குப் பின்னால் ஆன அத்தனை பயன்பாடுகளும்..

"ஒன்று சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.. உயிர்கள் எப்படி இயங்குகின்றன, அவற்றை இயக்கும் சக்தி எது என்பதற்கு அறிவு பூர்வமாக விடை கிடைக்காதவரை அப்படிப்பட்ட ஒரு சக்தி இல்லை என்று அறிவுலகம் ஏற்றுக்கொள்ளாது.. தனி மனிதர்கள் அறிவுலகத்தோடு ஒத்துப் போகிறார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். அது அவர்கள் அது பற்றி கொண்டிருக்கும் அறிவு சம்பந்தப்பட்டது.

"எந்த ஒத்துக் கொள்ளலுக்கும் அவரவர் மனமொப்பி ஏற்றுக்கொள்ளல் அவசியம். இருக்கு என்பதற்கு மட்டுமில்லை, இல்லை என்பதற்குக் கூட" என்று மேகநாதன் அவையை ஒருமுறைச் சுற்றிப் பார்க்க கிருஷ்ணமூர்த்தி மெல்ல எழுந்திருந்து மேடையை நோக்கி வந்தார்.

(தேடல் தொடரும்)

Friday, August 28, 2009

விமரிசனக்கலையும் கதையின் கதையும்

ப்பொழுதெல்லாம் விமரிசனம் என்பது குறித்து நாம் நிறையவே பேசுகிறோம்.. சாதாரணமாக ஒன்றைப் பற்றியதான 'அபிப்ராயம்' மாதிரியான கருத்தைச் சொல்லுதல் என்கிற நிலைமாறி, இப்பொழுது விமரிசனம் என்பதே ஒரு துறையாகவும் உருக்கொண்டிருக்கிறது.

சொல்லப் போனால், விமரிசனம்என்பது ஒரு கலை. எல்லாக் கலைகளுக்கும் படைப்பாக்கம் என்பது எப்படி அடிப்படை அம்சமாக இருக்கிறதோ, அதே போன்றதான படைப்பின் நேர்த்தியும்,அழகும் விமரிசனத்திற்கும் தேவை.

என்றைக்கு விமரிசனத்தை ஒரு கலையாக ஏற்றுக்கொண்டு விட்டோமோ, அன்றைக்கே விமர்சகனும், எல்லாக் கலைஞர்களைப் போல ஒரு கலைஞன் தான்; அவன் ஒரு கலைஞனாக இருப்பதால் தான் எந்தக் கலைப்படைப்பையும் அவனால் நேசிக்க முடிகிறது.. ரசிக்க முடிகிறது.. இந்த நேசித்ததில், ரசித்தலின் விளைவான வெளிபாடு தான், அந்த ரசிப்பு குறித்தான அனுபவப் பகிர்வாகத்தான் அது குறித்தான அவனது விமரிசனமே முகிழ்க்கும்.

அதனால் தான் பலசமயங்களில் கலைப்படைப்புகளைப் பற்றி, கலைஞர்களல்லாத வெறும் பண்டிதர்கள் பேசும் பொழுது, அது குரங்கு கைப் பூமாலையாகிப் போகிறது. எல்லாக் கலைகளும் 'துறை'களாகிப் போனதின் விபரீதம் இது. அழகுணர்ச்சியும், அடிப்படை புரிதலில் விளைவான புளகாங்கிதமும் வற்றிப்போனதின் விளைவு இது. அதனால் தான் அத்தன்மைத்தான விமர்சன ஆர்ப்பாட்டங்களெல்லாம்,வெற்று உரைகளாக, வெறும் விவரக்குறிப்புகளாக இருக்கும். கலைஞனின் நெஞ்சத்து ஓலங்களை, மகிழ்ச்சியின் சாரல்களைத் தரிசிக்க வக்கில்லாத போக்கு இது. போகட்டும்..

மனசார ஒப்புக்கொள்ள வேண்டுமானால், படைப்புகள் குறித்தான விமரிசனம் என்பதே பிற்காலத்துச் சமாச்சாரம் தான்; அப்பட்டமான மேற்கத்திய சரக்கு.

சின்னக் குழந்தையின் தத்தித் தத்தி நடக்கும் தளர் நடைபோல தமிழில் சிறுகதைகளின் தோற்றமும், புதின வடிவங்களும் முகிழ்க்கத் தொடங்கிய பொழுது, அவற்றைப் பற்றிய விமரிசனக் கருத்துக்களாய் அபிப்ராயங்களும் வெளிப்பட்டன.

தமிழில் ஒரு காலத்தில் இந்த விமரிசனக்கலை கொடிகட்டிப் பறந்தது. இலக்கியமும்,விமரிசனமும் கை கோர்த்து இரட்டைக் குழந்தைகளாய் பவனி வந்தன. ஒன்றின் வளர்ச்சி இன்னொன்றையும் சார்ந்திருந்தது. க.நா.சு., 'எழுத்து' சி.சு.செல்லப்பா, சொல்லியே ஆக வேண்டிய விமரிசனக் கலைஞன் வெங்கட் சாமிநாதன், கனகசபாபதி, வல்லிக்கண்ணன், தி.க.சி., என்று வரிசைபடுத்திச் சொல்லலாம். இந்த வரிசை எந்தத் தரவரிசையுமல்ல.. இதில் வெங்கட்சாமிநாதனின் விமரிசனம் பற்றி, விமரிசனத்தைக் கலையாகச் செய்த-- இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், தெருக்கூத்து என்று சகல மட்டத்திற்கும் தூக்கிச்சென்ற-- அந்தக் கலைஞன் பற்றி தனியே எழுதியாக வேண்டும்.

கலாபூர்வமான படைப்புகளையெல்லாம் இப்பொழுது பார்க்கமுடியவில்லை. ஓரிரண்டு பேர் அழுக்குகளிலிருந்து மேலெழும்பி தலைதூக்கி இனம் கண்டு கொள்ளப்பட்டாலும், அவர்களும் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்கிற கதையாய் திரையுலகு பக்கம் திரும்பி விட்டனர். சிலர் அங்கேயும் குப்பை கொட்ட முடியாமல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டேன்' என்று குமைந்து சோர்ந்து விட்டனர்.

தமிழ்கூறும் நல்லுலகில், கலைவளர்ச்சி சகல துறைகளிலும் வரட்சியாய்ப் போய் நெடுங் காலமாகிவிட்டது. நிஜங்கள் போய் நிழல்கள் நர்த்தனமிடும் காலம் இது. அது ஒரு கனாக்காலம்; நெஞ்சத்து உணர்வுகள் கலைரூபங்களாய் படைத்த காலம் போய், சம்பவங்களைப் புனையும் காலமாகிப் போய்விட்டது! இலக்கியத்தின் பெயரும் புனைவிலக்கியமாம்!

'கல்கி'யில் வெளிவந்த அகிலனின் 'பாவை விளக்கு' நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர், உமா. உருக்கமாகப் படைக்கப்பட்ட உமாவின் மேல் 'பாவை விளக்கு'படித்த வாசகர்கள் உயிரையே வைத்திருந்தனர். கதையின் இறுதிப்பகுதிகளில், 'உமா'வை அகிலன் சாகடித்து விடுவாரோ என்று கலங்கி, வாசகர்கள் அனுப்பி வைத்திருந்த நூற்றுக்கணக்கான தந்திகளும், ஆயிரக்கணக்கான தபால்களும் 'கல்கி' காரியாலயத்தை அதிரச்செய்தன. 'உமாவைக் கொன்று விடாதீர்கள்' என்று அவை அகிலனை மன்றாடின.

'கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!

அன்று 'பேசும்படம்' 'குண்டூசி' பின்னால், பாலு சகோதரர்களின் 'கலை' சந்தாமாமா பிரசுரத்தின் 'பொம்மை' என்று சினிமாவுக்கே ஆன சினிமாப் பத்திரிகைகள் நான்கே உண்டு. இன்றோ,தமிழ்கூறும் நல்லுலகில் வெளிவரும் அத்தனை வெகுஜனப் பத்திரிகைகளும் சினிமாப் பத்திரிகைகளே! விளம்பரம் போக, மீதம் இருக்கும் அரை,கால் இண்டு இடுக்குகளில் போனால் போகிறதென்று 'ஒரு நிமிடக் கதைகளும்', 'ஒருவரிக் கதை'களும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.

எப்படி இருந்த தமிழ்க் கதையுலகம் என்று எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.
Related Posts with Thumbnails