மின் நூல்

Sunday, May 25, 2008

ஒப்பில்லாத அப்பன்



ராகமாலிகை
தாளம்: ஆதி

பிலஹரி

பங்குனி சிரவணம் பரிசுத்தம்
விண்ணகரப்பன் விஸ்வரூப தரிசனம்
கோடி சூர்யப் பிரகாசம்

ஹம்ஸாநந்தி

ஒப்பில்லாத அப்பன் நம் ஒப்பிலியப்பன்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பன் என் விண்ணகரப்பன் என்று
நம்மாழ்வார் துதித்த செல்லப்பன் இவன்

சாருகேசி

வலக்கரம் காட்டும் தாமரைப் பூம்பாதம்
இடக்கரம் தொடும் தொடை அலங்காரம்
ஸ்ரீவைகுண்டம் இதுதான் என்ற துளசிஷேத்திரம்
பூலோக வைகுண்டம்; புரிந்து கொண்டோம்

சாரங்கா

உப்பில்லாத உணவு விரதமோ? வரதா!
உன் விளையாட்டோ? கொண்டல் வண்ணா!
மார்க்கண்டேயர் வளர் மகளை மணக்க வழியோ?
மகாலஷ்மி மனம்கவர் செல்வா! சொல்வாய்!


ஹிந்தோளம்

ஐப்பசி சிரவணம் ஐயனின் திருமணம்
பூமிதேவி கைத்தலம் பற்றும் கல்யாண கோலம்
வைகானஸ ஆகமம்; ஆத்மானந்த வைபவம்
வித்தாக நெஞ்சில் விழுந்து விழுதான வேதம்!

ஆனந்தபைரவி

ஆளவந்தாயோ? அடியார் ஆளவந்தார் தொண்டரடி
அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ?
பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்
பூரண சந்திர வதனா! வரதா! வைகுண்டநாதா!

(பங்குனி சிரவணம்)

ஒப்பிலியப்பன் திருக்கல்யாண அசைபடம்:
நன்றி: ஒப்பிலியப்பன்

Monday, May 12, 2008

இயற்கையே நீ தானே அம்மா!....


எடுப்பு

புவனேஸ்வரி தாயே
புதுகையில் அபயவரம் அனுகிரகித்தாயே.....

(புவனேஸ்வரி)

தொடுப்பு

புவனம் விழித்ததம்மா--உன்கருணை
பூவாய் குலுங்குதம்மா
பறவைக் கூட்டம் பாடிப் பறக்குதம்மா
கறவைப் பசுக்கள் கழுத்துமணி ஒலிக்குதம்மா..

(புவனேஸ்வரி)

புவனேஸ்வரி தாயே
புவனத்தை சிருஷ்டித்தாயே
இகம் பரமெலாம் உன் ஆட்சிதானே
இன்முகம் காட்டி இரட்சித்தாயே

இயற்கையே நீதானே அம்மா
இதயாகாசத்தில் ஒளிர்ந்தாயே
மாயை மறைந்ததே; மெஞ்ஞானம் தெரிந்ததே
தாயே தெய்வமே தடுத்தாட் கொள்வாயே

(புவனேஸ்வரி)

முடிப்பு

இத்தனை படைப்பும் உன் எழில்தானே அம்மா---அம்மா
இதை உணரத்தான் இப்பிறவியோ அம்மா

(புவனேஸ்வரி)
Related Posts with Thumbnails